Pages

Friday, June 01, 2018

01.06.18 - “ஸாரி…”


சமீபத்தில் ‘தி ஹிந்து’ ஆங்கிலச் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. ஒரு நிறுவனம் ஒரு தவறு நடந்ததை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் என்கிறார் இந்தக் கட்டுரையை எழுதியவர்.

உதாரணமாக அவர் சொல்வது, சமீபத்தில் …
  1.     ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் அமெரிக்க பாராளுமன்ற கமிட்டியின் முன் வாடிக்கையாளர்கள் தகவல்கள் கசிந்ததுக்கு மன்னிப்பு கேட்டார்.
   2.     2ஜி வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று உயரதிகாரிகளிடம் ரிலையன்ஸ் நிறுவத்தின் உரிமையாளர் அனில் அம்பானி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.
  3.     ஒரு ஊழியரை நீக்கும் பொழுது அவரை நடத்திய விதம் மனித நேயமில்லாமல் குரூரமாக இருந்ததாகக் கருதியதால் மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா மன்னிப்புக் கேட்டார்.

இந்த மூன்று உதாரணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
     1.     இந்த மனிதர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள் அல்ல. பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்கள்.
      2.     மிக மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
    3.     இவர்கள் மன்னிப்பு கேட்டது காதும் காதும் வைத்தாற் போல ஒரு தனி அறையில் அல்ல. உலகம் முழுவதுக்கும் தெரியும் படியாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர்.

தவறு நடந்து விட்ட நேரத்தில் மன்னிப்பு கேட்பது என்பது ஒரு மிகப் பெரிய ஆயுதம். எதிராளியை பலவீனப்படுத்தக் கூடியது. சமரச உணர்வுகளை பரப்பக் கூடியது.

யார் சரி, யார் தவறு என்பது முக்கியமில்லை. ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது அல்லது ஒரு விஷயத்தைப் பேசும் பொழுது மற்றவர் காயப்பட்டு விட்டார் என்று உணர்ந்தவுடனேயே மன்னிப்பு கேட்டு விட்டால், கேட்டவருக்கும் நிம்மதி. காயப்பட்டவருக்கும் நிம்மதி.

என்னுடைய அலுவலக வாழ்க்கையில் ஒரு சுவையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வங்கியின் கிளை மேலாளராக பணி புரிந்த போது ஒரு நாள் ஒரு பெண் ஊழியர் என்னுடைய ஏதோ ஒரு உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்து விதண்டாவாதம் பண்ணிய போது எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்கள் முன்னே நீண்ட நேரம் சரமாரியாக அவருடைய தவறை சுட்டிக்காட்டி அந்த ஊழியரை திட்டிவிட்டேன் (scold). கிளையே ஸ்தம்பித்து விட்டது. அதுவரை அப்படி நான் கோபப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை. என் நிலைக்குத் திரும்பிய போது என்னுடைய அறைக்கு வந்து விட்டேன்.

சிறிது நேரத்துக்குப் பிறகு என்னுடைய அறையில் எல்லா ஊழியர்களும் ஒன்று சேர்ந்து கூடிவிட்டனர். எதற்குக் கூடினார்கள் என்பது எனக்கு உடனேயே புரிந்து விட்டது. அவர்கள் வாய் திறப்பதற்கு முன்னேயே நானே என் தவறை ஒப்புக்கொண்டேன். மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி பொது மக்கள் முன்னே அவ்வளவு தூரம் கோபத்தில் அந்தப் பெண் ஊழியரை திட்டியிருக்கக்கூடாது என்று நானே ஒத்துக் கொண்டேன். என் மனதிலிருந்து பாரமும் உடனேயே இறங்கி விட்டாற்போல உணர்ந்தேன்.

அவர்கள் எல்லோரும் சேர்ந்தார் போல என்னைப் பற்றி கோஷம் போடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு மிகப் பெரிய ஷாக். அவர்களிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஊழியர்களின் ஒரு பிரதிநிதி மட்டும் என்னிடம் சொன்னார், “சார், நாங்களும் ரொம்பக் கோபமாகத்தான் உள்ளே வந்தோம். ஆனால், நாங்கள் எங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கு முன்னேயே நீங்கள் எங்களிடம் மன்னிப்புக் கேட்டு எங்களை நிராயுதபாணியாக்கி விட்டீர்களே! நாங்கள் வருகிறோம். தயவு செய்து இது போல ஒரு நிலை எதிர்காலத்தில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” இப்படிச் சொல்லிவிட்டு எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கலைந்து சென்று விட்டனர்.

ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக என்னிடம் வந்தபோது நான் என்னுடைய செயலை அவர்கள் முன்னே நியாயப்படுத்தவில்லை. அந்த பெண் ஊழியர் செய்த தவறை மீண்டும் சுட்டிக் காட்டவில்லை. என்னுடைய தவறை மனதார ஒப்புக் கொண்டேன். அடுத்தவரின் மனம் புண்பட்டிருக்கிறது எனக்குத் தெரியும். என்னுடைய செயலால், சொல்லால் அடுத்தவர் மனம் புண்பட்டது என்று  உணர்ந்தவுடனேயே நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அதுதான் முக்கியம்.

அன்றைக்கு நேர்ந்திருக்க வேண்டிய ஒரு பெரிய பூகம்பம் அப்படியே அடங்கிப் போய் விட்டது.

பொதுவாகவே தவறு நேர்ந்த இடத்தில் மன்னிப்புக் கேட்பதை என்றுமே ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறேன். சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றில்லை.

ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பெரிதும் தடையாக இருப்பது நமது ஈகோதான்.


No comments:

Post a Comment