Total Pageviews

Showing posts with label Movie Review. Show all posts
Showing posts with label Movie Review. Show all posts

Monday, May 14, 2018

14.05.18 INSIDE EDGE: Amazon Prime Serial – ஒரு பார்வை


“BREATHE” என்ற மற்றொரு அமேசான் ப்ரைம் சீரியலைப் பற்றி என்னுடைய கருத்தை முன்னம் தெரிவித்திருந்தேன். INSIDE EDGE அதே ஃபார்முலாவைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட இன்னொரு ‘ஹாட்’ சீரியல். (அல்லது இதுதான் அண்ணனா என்று தெரியவில்லை.)

ஐ. பி. எல்-லைப் போல இந்தத் தொடரில் பி. பி. எல் (POWER PLAY LEAGUE) கிரிக்கெட் போட்டிகள். நிதி நெருக்கடியில் தவிக்கும் மும்பை மாவரிக்ஸ் பெண் உரிமையாளர் (அடிக்கடி புகைத்துக் கொண்டு) தன்னுடைய அணியைத் தக்கவைத்துக் கொள்ள இன்னொரு ‘ஃபைனான்சியரை’த் தேடுகிறார். அங்கே ஒரு வில்லன் உள்ளே நுழைகிறார். வில்லன் சொல்வதற்கெல்லாம் (பல குறுக்கு வழிகளுக்கு) விருப்பமில்லாமல் மும்பை மாவரிக்ஸ் உரிமையாளர் ஆடுகிறார். ஒவ்வொரு போட்டியும் ஃபிக்ஸ் ஆகிறது. மேட்ச் ஃபிக்சிங், ஸ்பாட் ஃபிக்சிங் இரண்டும் வெற்றிகரமாகச் செய்யப்படுகிறது. பெயர் தெரியாத கிராமத்திலிருந்து வரும், ஆனால், திறமையான, பந்து வீசும் ஓரு விளையாட்டு வீரரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருப்பமில்லாமல் அவருடைய கனவுகளை பகடையாக்கி மேட்ச் ஃபிக்சிங் நடக்கிறது. இதில் ஒன்றிரண்டு விளையாட்டு வீரர்களும் உடந்தை. ‘பெட்டிங்’ பன்னாட்டு அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய்க் கணக்கில் நடக்கிறது. இதில் நேர்மையான கேப்டன், ஏதோ ஒரு தவறை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் கோச் போன்ற பலர் பலியாகின்றனர். பெரிய கனவில் விளையாடும் தடாலடி பேட்ஸ்மேன் வாயு ராகவன் – இவருக்கு எல்லா (நல்ல) பழக்கங்களும் உண்டு – செக்ஸ், பாட், தண்ணீர், முன்கோபம், ஆத்திரம், இத்யாதி – ஒவ்வொரு மேட்சின் போக்கையும் மாற்றியமைக்கக் கூடியவர் – இவர்தான் இறுதி ‘PLAY-OFF’ –ல் கடைசி பலியாக வேண்டும். இவரும் மேட்ச் ஃபிக்சிங்கில் விழுந்தாரா, இல்லையா இதுதான் சஸ்பென்ஸ்.

விறுவிறுப்புக்குக் குறைவில்லை என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவேண்டும். ஆனால், சென்சார் போர்டு என்று தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருந்தால் அவர்களின் கத்திரியிலிருந்து இந்த சீரியல் தப்பித்திருக்குமா என்பது முக்கியமான கேள்வி. நெகடிவாகவும், குரூரமாகவும், செக்ஸ் சமாச்சாரங்கள் கொஞ்சம் தாராளமாகவும் இருந்தால்தான் ஒரு படமோ, சீரியலோ வெற்றியடைய முடியும் என்று யாரோ தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும். அதை முழுவதுமாக பின்பற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவில் வெளி வந்திருக்கும் பல வெற்றிகரமான சீரியல்களை பைத்தியம் போல தொடர்ந்து பார்க்கும், ஏங்கித் தவிக்கும் பல இளைஞர்களுக்கு (வயதான என்னையும் சேர்த்து) INSIDE EDGE சீரியல் நல்ல தீனி.

முடிவுரை: இந்த சீரியலையும் பார்த்த பிறகு இந்தியாவில் ஆண்டு தோறும் நடக்கும் ஐ. பி. எல் மேட்சுகளை, ஏதோ உண்மையில் போட்டி போடுகிறார்கள் என்று நம்பி வேறு வேலையே இல்லை என்பது போல பார்க்கும் லட்சக் கணக்கான மக்களைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.  லலித் மோதி ஓடி ஓளிந்த நாட்களுக்குப் பிறகு நான் ஐ. பில் எல் மேட்சுகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

Monday, May 22, 2017

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

2015-ல் வெளி வந்து தேசிய விருது பெற்ற, பல திரைப்பட விழாக்களில் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னமேயே பங்கு கொண்ட ஒரு தமிழ் படம். நேற்று எதேச்சையாக கண்ணில் பட்டது. பார்த்தேன்.

ஒரு (குறும்புக்காரன் என்று தெரிந்து கொள்ளாத) ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவனை ஆசிரியை அவனுடைய இடக்கான குறும்புப் பேச்சுக்காக வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து விடுகிறாள். மாணவன் மயங்கிக் கீழே விழுந்து தலையில் அடி. பள்ளியினர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்சினையாகிவிடும் என்று பயந்து அந்த ஆசிரியை மெர்லினை கொஞ்ச நாட்களுக்கு அவளுடைய கணவருடன் தலைமறைவாக இருக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். மாணவனுடைய நிலைமை மோசமாகி கோமா நிலைக்கு சென்று விடுகிறது.

ஒரு பள்ளி மாணவனை ஆசிரியை அடிக்கலாமா அடிக்கக் கூடாதா? பெரிய சர்ச்சை. ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை பெரிதாக்க முயற்சிக்கின்றனர். விசாரணை நடக்கிறது.

இறுதியில், சர்ஜரிக்குப் பிறகு மாணவன் பிழைத்து விடுகிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே ஏற்பட்ட ஒரு முளைக் காயத்தினால்தான் அப்படி மயங்கி விழுந்தான். ஆசிரியை அடித்தது ஒரு விபத்து. அவள் அடித்ததினால் மயங்கி விழவில்லை என்பது நிரூபணம் ஆகிறது. ஆனால், ஆசிரியை தன் தவறை வெளிப்படையாக ஊடகங்கள் முன்னே ஒப்புக்கொள்கிறாள். ‘ஒரு மாணவனை வளர்ப்பதற்குத்தான் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அந்த மாணவனை தன்னுடைய பிள்ளையாக நினைத்து அவனை திருத்தி, நல் வழிப்படுத்தி அவன் வளர்ச்சிக்கு உதவுவதுதான் ஒரு ஆசிரியையின் கடமை,” என்று சொல்லி தன் தவறை ஒப்புக்கொள்ள்கிறாள்.

ஒரு சமூகப் பிரச்சினையை மிகவும் ஜாக்கிரதையாக இயக்குனர் பிரம்மா கையாண்டிருக்கிறார். ஆரம்பத்தில் படம் மெதுவாகப் போவது போல உணர்ந்தாலும் மாணவன் அடி வாங்கி கீழே விழுந்த பிறகு விறுவிறுப்பாகப் போகிறது. பல இடங்களில் மனதைப் பிசைகிறது. முக்கியமாக, ‘சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா’ பாடலை பல காட்சிகளோடு இணைத்துக் காட்டும் இடங்களில் கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.


படத்துக்கு எல்லா நடிகர்களும் புதியவர்கள். கதா நாயகி ராதிகா பிரசித்தா பல மேடை நாடகங்களை எழுதி, இயக்கி நடித்தும் இருக்கிறார்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தோன்றுகிறது. படத்தில் வரும் எல்லா கதாப் பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கொஞ்சம் சினிமாத்தனத்தை தவிர்க்க முடியாமல் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் தேசிய விருது பெறுவதற்கு மிகவும் தகுதியான ஒரு படம். படத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுக்கள். 

Sunday, May 14, 2017

பவர் பாண்டி (தமிழ் திரைப்படம்)

பவர் பாண்டி (தமிழ் திரைப்படம்)

பல  நாட்கள் கழித்து, ஆர்ப்பாட்டமில்லாத, விரசமில்லாத, ஒரு தமிழ் படத்தைப் பார்த்த திருப்தி ‘பவர் பாண்டி’ படத்தைப் பார்த்தபோது கிடைத்தது. ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திலிருந்து ஒரு நல்ல இயக்குனர் என்ற இடத்துக்கு தனுஷ் உயர்ந்திருக்கிறார். (கமலஹாசன் தன் படத்தில் இதைப் பின் பற்றலாம்,) இள வயது பாண்டியாக தன்னையும், காதலியாக மடோனாவையும் காட்டிய தனுஷ், முதிய வயது பாத்திரத்துக்கு ராஜ் கிரனையும், ரேவதியையும் காட்டி வித்தியாசமாகச் செய்திருக்கிறார். இடையிடையே கொஞ்சம் சினிமாத்தனமும் காட்டியிருக்கிறார். அதைச் செய்யாமல் படம் ஓடாது என்ற கணிப்புக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. பல சிறிய கதாப் பாத்திரங்களை கையாண்ட விதம் நன்றாக இருக்கிறது. உதாரணத்துக்கு, மடோனாவுக்கு உறவினராக வரும் உடல் பருமனான ஒரு கிராமத்துப் பெண். ராஜ் கிரனுக்கு நண்பனாக வரும் பக்கத்து வீட்டுப் பையன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் – அதாவது ரேவதியை அறிமுகப்படுத்திய பிறகு – படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உண்மையிலேயே மனதைத் தொடுகிறது.

பல இடங்களில் வரும் டயலாக்குகள் இன்றுள்ள யதார்த்தத்தை காட்டுகிறது. 
உதாரணத்துக்கு:

‘உன் பையனுக்காக வாழறே, உன் பேரனுக்காக வாழறே, உனக்காக எப்போ வாழப் போறே’ என்ற அர்த்தத்தில் வரும் டயலாக்.

ராஜ் கிரனின் பையன் ப்ரசன்னா ஆஃபீசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கூட வேலை பார்க்கும் ஒருவருக்கு அவருடைய அம்மா ஃபோன் செய்கிறார். பையன் உடனேயே, நான் இப்போ ஒரு மீட்டிங்கல இருக்கேன். பின்னால கூப்பிடுகிறேன் என்று ஃபோனை கட் செய்கிறார். அப்பொழுது, ப்ரசன்னா ‘என் தந்தையைப் புரிந்து கொள்ளாமல் நான் தொலைத்தது போல நீயும் நடந்துக்காதே, அம்மாவிடம் பேசு. மீட்டிங்ல இருந்தா என்ன?’ என்ற அர்த்தம் தொனிக்கும் டயலாக்.

அதே போல, ப்ரசன்னா தன் அப்பாவைத் தேடி இன்னொருவர் வீட்டுக்கு வரும் பொழுது அந்த இன்னொருவரின் அப்பா, ‘ஆமாண்டா, அப்பா வீட்டுல இருக்கும் போது அவர் சாப்பிட்டாரா, அவருக்கு ஏதேனும் தேவையா..அப்படின்னல்லாம் கேட்காம அப்பா தொலைஞ்ச போது லோ, லோன்னு அலையுங்கடா’ ன்னு அர்த்தம் தொனிக்கும் டயலாக்.

‘உன் மனசுல நான் இருக்கேனா,’ என்று ராஜ் கிரன் ரேவதியை கேட்கும் போது, ‘இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, அதைப் புர்ஞ்சுக்கோ’ன்னு வரும் டயலாக்.

ரேவதியின் பெண்ணாக  நடிக்கும் திவ்ய தர்ஷினி, ‘சின்ன வயசுல ஒரு பெண்ணோட கணவர் இறந்துட்டா வேறொரு துணையைத் தேடிக்கறதல தப்பு இல்லைன்னு நினைக்கிற இந்தக் காலத்துல அறுபது வயதானா மட்டும் அதே போல ஒரு துணையைத் தேடறது தப்புன்னு ஏன் தோன்றுகிறது’ என்ற அர்த்தத்தில் கேட்பது.

இப்படி பல இடங்கள்.

ஷான் ரோல்டன் இசை வித்தியாசமாக, காதைக் கிழிக்காமல், பாட்டுக்களின் வரிகள் கேட்கும் படியாக நன்றாக இருக்கிறது.

பல இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையே இன்றைக்கு நடக்கும் மௌன யுத்தத்தை பிரதிபலிப்பதாகப் படம் அமைந்திருக்கிறது. கஷ்டப்பட்டு தன் குழந்தைகளின் வாழ்வுக்காக பெற்றோர்கள் (முக்கியமாக அப்பாக்கள்) பல தியாகங்கள் செய்து வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் குழந்தைகள் பெரியவர்களான பிறகும், அப்பா ஓய்வெடுத்துக் கொண்ட பிறகும் அப்பா, அம்மாவுக்கென்று ஒரு வாழ்க்கையை அவர்களின் அடையாளம், முக்கியத்துவம், குறையாமல் அவர்கள் விருப்பம் போல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா என்ற யதார்த்தமான கேள்வியை கையிலெடுத்து படம் எடுத்திருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் பல இளைஞர்களும் நியூக்ளியர் ஃபாமிலி முறையையே விரும்புகிறார்கள் போலத் தோன்றுகிறது. அப்படியே அப்பா, அம்மா அவர்கள் கூடவே இருந்தால் அவர்களின் சின்னச் சின்ன தேவைகளையும், விருப்பங்களையும் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்பது போலவும் தோன்றுகிறது. குழந்தைகள் வளர்ந்த பிறகு அப்பா, அம்மாவால் அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாமல தவிக்கிறார்கள் என்பது போலவும் தோன்றுகிறது. 

ஒரு பக்கம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் மீதுள்ள பாசம். இன்னொரு புறம் தனக்கு வேண்டிய சுதந்திரம், மரியாதை, அடையாளம் இவற்றை விட்டுக் கொடுக்க முடியாதது. இந்த இரண்டுக்கும் நடுவே பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள் என்பதை நானும் உணர்கிறேன்.


வயதான அப்பா, அம்மாக்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இளைஞர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.