Total Pageviews

Showing posts with label Perceptions. Show all posts
Showing posts with label Perceptions. Show all posts

Tuesday, May 27, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 4 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி


3-2-1 என்ற மனதை வயப்படுத்தும் பயிற்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பெர்ஸனாலிடி என்றால் என்ன?

ஒருவருடைய நடை, உடை, உயரம், நிறம், பாவனை, பேசும் முறை, பழகும் முறை, வசிக்கும் வீடு, இவைகளையே பெர்ஸனாலிடியாக பொதுவாக நினைத்துக் கொள்கிறோம். ‘அவன் பயங்கர கருப்பு.’ ‘அவள் ரொம்ப குள்ளம்’ ‘அவர் ஒரு குண்டு’ ‘அவர் போடற உடையைப் பார்க்கணுமே’ ‘அப்பா! எவ்வளவு  நகைகள், கழுத்திலே’ இப்படி பல கருத்துக்களை ஒருவரை சந்திக்கும்போது மனதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். இதுதான் அவருடைய பெர்ஸனாலிடி என்றும் மனதுக்குள் தீர்மானித்துக் கொள்கிறோம்.

ஆனால், ஒருவருடைய நடை, உடை, பாவனை ஒருவரின் பெர்ஸனாலிடியின் அடையாளமே தவிர அவரது பெர்ஸனாலிடி அல்ல. பெர்ஸனாலிடி என்பது ஒருவரது அடிப்படையான, மையப்பகுதியான தன்னைப் பற்றிய கருத்தும் அதை சுற்றியிருக்கும் அதைப் பின்னி பிணைத்திருக்கும் குணாதிசயங்களும், தனிப்பண்புகளும்தான். .

பெர்ஸனாலிடி எப்படி உருவாகிறது?

நீங்கள் உங்களைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
நீங்கள் அடுத்தவரைப் பற்றிக் கொண்டிருக்கிற அபிப்பிராயம்
அந்த அடுத்தவர் உங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பார் என்கிற உங்களது அபிப்பிராயம்

அதேபோல்,

அடுத்தவர் தன்னைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
அடுத்தவர் உங்களைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
நீங்கள் அவரைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பீர்கள் என்கிற அவரது அபிப்பிராயம்

இந்த ஆறு அபிப்பிராயங்களின் மோதலில் ஏற்படுவதுதான் ஒருவரது பெர்ஸனாலிடி.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு ஊருக்கு புதியதாக ஒரு குடும்பம் மாறி வந்திருக்கிறது. நல்ல வசதியான குடும்பம். ஆனால், அவர்கள் குடி வந்திருக்கிற இடமோ பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கிற ஒரு பகுதி. அவர்கள் வீட்டில் ஒரு பையன். நல்ல வளர்ச்சியான எடுப்பான தோற்றமுடையவன். கொஞ்சம் பருமன் வேறு. புதிய குடியிருப்பு. கூடி விளையாடுவதற்கு அந்தப் பையனுக்கு யாருமில்லை. அந்த பகுதியில் வசிக்கும் மற்ற பையன்களில் சிலர் ஒல்லி, நொடிசல், பலர் சாதாரணத் தோற்றம், எளிமையையும், வறுமையையும் பிரதிபலிப்பவர்கள். இந்த புதுப் பையனை விளையாடக் கூப்பிடலாம்தான். ஆனால், எப்படி கூப்பிடுவது என்று அங்குள்ள மற்ற பையன்களுக்கு தயக்கம். ‘அவங்கல்லாம் பணக்காரங்கப்பா. நம்மகூட எல்லாம் விளையாட மாட்டாங்க.’ என்ற நினைப்பு. இருந்தாலும், ஒரு நாள் அந்த புதுப் பையனை விளையாடக் கூப்பிடுகிறார்கள். ‘இவங்ககூடெல்லாம் நான் போய் எப்படி விளையாடறது? நான் எவ்வளவு வளர்ச்சியா இருக்கிறேன். அவங்கல்லாம் ரொம்ப சின்ன பையன்கள் மாதிரி இருக்காங்களே.’ என்று நினைத்து அந்த புதுப் பையன் அவர்கள் கூட விளையாட மறுத்து விடுகிறான். ‘பாரு, ரொம்ப இறுமாப்பு, அந்த புதுப்பையனுக்கு. பணக்காரங்களே இப்படித்தான்’ என்ற முடிவுக்கு மற்ற பையன்கள் வருகிறார்கள். பிறகு அவனைக் கூப்பிடுவதேயில்லை. புதுப் பையனுக்கோ, ‘இன்னொரு தடவை கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்தான். ஆனா, அவங்கதான் என்னை ஒதுக்கிவிட்டாங்களே’ என்று ஆதங்கம்.

அந்த புதுப்பையன் ஆரம்பத்திலேயே இறங்கி வந்து விட்டால், ‘எவ்வளவு நல்ல பையன், இவ்வளவு பணம் இருந்தும் எவ்வளவு எளிமையாக எல்லோருடனும் நட்பாக இருக்கிறான். அதனால், அவன் ஒரு நேசமான பெர்ஸனாலிடி’ என்று மற்றவர்கள் கருதுவார்கள். விளையாட மறுப்பதினால், ‘பண கர்வம் பிடித்த ஒரு பெர்ஸனாலிடி’ என்பார்கள்.

இப்படி அபிப்பிராயங்களை ஒட்டியே ஒருவருடைய பெர்ஸனாலிடி என்ன என்பதை மற்றவர்கள் எடை போடுவார்கள். இருப்பது ஒன்றுதான். ஆனால், அவரவர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படியே அவர்கள் பெர்ஸனாலிடியாக மற்றவர்களுக்கு தோற்றமளிப்பார்கள்.

காந்திஜி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மிகப்பெரிய தியாகி என்று நினைப்பவர்களும் உண்டு. இல்லை, ஒற்றுமை என்கிற பெயரில் இந்துக்களையே மற்ற மதத்தினருக்கு விற்று விட்டவர் என்று நினைத்த ஒரு கும்பலும் உண்டு. அதனால்தான் அவரை சுட்டுக் கொன்றார்கள். காந்திஜியின் பெர்ஸனாலிடி என்ன?

ராவணன் என்கிற பாத்திரம் ராமாயணத்தில் சீதையை தூக்கிச் சென்ற ஒரு அரக்கன் என்று நினைப்பவர்களும் உண்டு. அதே சமயம் சீதையை மிகவும் விரும்பினாலும் ஒரு முறைகூட அவளை தொட்டது கிடையாது. அரக்கனாக இருந்தும் எவ்வளவு உத்தமன் என்று விவாதிப்பவர்களுன் உண்டு. ராவணனின் பெர்ஸனாலிடி என்ன?


இரண்டும் உங்கள் பார்வையி்ல்தான் இருக்கிறது. உங்களுடைய அபிப்பிராயங்களிலேயே ஒருவரின் பெர்ஸனாலிடியை நீங்கள் முடிவு செய்கிறீர்கள். 
                                          …… தொடரும்

Tuesday, May 13, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 3 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

மாணவர் உலகம் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட என்னுடைய கட்டுரைத் தொகுப்பின் பகுதி இது.


ரோஜாச் செடிகளில் முள்ளிருக்கிறது என்று நாம் குறைபட்டுக் கொள்ளலாம். அல்லது முட்புதர்களுக்கு நடுவேகூட ரோஜா மலர்கிறது என்று மகிழ்ந்து கொள்ளலாம்.” – ஆப்ரஹாம் லிங்கன்

இன்று நாம் சாதனையாளர்களாக கருதும் பலரும் கூட பல முறை வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆயிரக்கணக்கான முயற்சிகள் செய்து தோல்வியடைந்திருக்கிறார்..தன் தோல்விகளைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா, “ஒரு மின்சார விளக்கு ஏன் வேலை செய்வதில்லை என்பதை பத்தாயிரம் வழிகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.” என்று.

வின்சென்ட் வா கோ என்பவர் ஒரு பிரபல டச்சு ஓவியர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரது ஓவியங்களில் ஒன்றை மட்டும்தான் அவரால் விற்க முடிந்தது. வெறுத்துப்போய் பல ஓவியங்களை தீயிலிட்டு எரித்து விட்டார். ஏமாற்றங்களால் விரக்தியடைந்து பாதிக்கப்பட்ட அவர் தன்னுடைய வாழ்க்கையையே விரைவில் முடித்துக்கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னே, அவரது ஓவியங்கள் மிகப் பிரபலமாயின. நான்கு ஓவியங்கள் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ஐநூறு கோடி ரூபாய்க்கு) விலை போனது.

ஸ்டீஃபன் கிங் என்பவர் பிரபல திகில் கதைகள் எழுத்தாளர். அவரது முதல் கதை ‘கேரீ’யை முப்பது முறை பதிப்புக்கு அனுப்பி முப்பது முறையும் திருப்பிப் பெற்றதில் விரக்தியடைந்து அந்த கதையையே தூக்கி குப்பையில் விட்டெறிந்தார். ஆனால், அவரது மனைவி அந்த ஃபைலை எப்படியோ காப்பாற்றி 31-ஆவது முறையாக பதிப்புக்கு அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். அந்தக் கதைப் புத்தகம் முதல் பதிப்பிலேயே முப்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாயின. அவரது பல கதைப் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்கப்பட்டிருகின்றன.

‘ஹாரி பாட்டர்’ கதைகளை எழுதி இன்று கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஜே.கே. ரௌலிங் என்பவர் வெற்றியடைவதற்கு முன்னால் விவாகரத்து வாங்கிக்கொண்ட, அரசாங்கம் அளித்த பல நலத்திட்டங்களின் மூலமே வாழ்க்கையை ஓட்டிய ஒரு பெண்மணி. “என்னுடைய தோல்விகள் என்னை அதள பாதாளத்திற்கு எடுத்துச் சென்றன. அந்த அதளபாதாளம்தான் என் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு அடிக்கல்லாக பயன்பட்டது” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்தபோது கூறினார்.

கஜனி முகம்மதை எடுத்துக்கொள்ளுங்கள். சோம்நாத் கோவில் மீது முப்பது முறை படையெடுத்து தோல்வியடைந்திருக்கிறார். அவரது முப்பத்தொன்றாம் முயற்சியே வெற்றியடைந்தது.

இப்படிப் பல சரித்திரங்கள்……

உங்களது வெற்றிகள் என்பது, உங்களது முயற்சிகளின் பலன்களை –வெற்றி தோல்விகளை  - நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

வாழ்க்கை என்பது நீங்களாகவே உங்களுக்காகவே கட்டிக்கொள்கிற ஒரு வீடு. அதை எப்படி கட்டிக்கொள்கிறீர்கள் என்பது தான் உங்களது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும். இன்டெர்நெட்டில் படித்த ஒரு கதை. ஐரோப்பாவில் ஒரு மரத்தச்சர். மிகத் திறமைசாலி. பல வருடங்கள் தன்னுடைய முதலாளிக்காக பல மர வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறார். வெகு வருடங்களாக வேலை பார்த்து அலுத்துப் போனதில் ஓய்வு பெற விரும்பி தன் முதலாளியிடம் தன் மனதை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் முதலாளியும், ‘சரி, நீங்களும் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், ஓய்வெடுக்கும் முன்னே ஒரே ஒரு வீடு மட்டும் கட்டிக்கொடுத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள். செலவைப் பற்றி கவலைப்படவேண்டாம்.” என்று கூறியிருக்கிறார். மரத்தச்சருக்கோ வெகு கோபம். ஆனால், முதலாளியின் உத்தரவை தட்டிப் பழக்கமில்லை. வேலையை ஒத்துக்கொண்டு, ஏனோதானோ என்று ஒரு மர வீட்டை ஒரு மாதிரியாக கட்டிமுடித்து சாவியை தன் முதலாளியிடம் கொண்டு கொடுக்கிறார். சாவியை வாங்கிக்கொண்ட அந்த முதலாளி,. “இந்த வீட்டை உனக்கு ஒரு வெகுமதியாய் கொடுப்பதற்காகவே உன்னை கட்டச் சொன்னேன். உனக்காக உள்ள வீட்டை உன்னைவிட வேறு யார் சிறப்பாக கட்ட முடியும்?”என்று கூறி வீட்டுச்சாவியை அந்த தச்சரிடமே கொடுத்து விடுகிறார். தச்சர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார். “அடடா, இந்த வீடு எனக்காகவே கட்டப்படுகிறது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அப்படித் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு அருமையாக பார்த்துப் பார்த்து கட்டியிருப்பேன்.” என்று தன்னை நொந்து கொள்கிறார்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படித்தான். இது நம்முடைய வாழ்க்கை என்பதை உணராமல் யாருக்கெல்லாமோ வாழ்வதாக நினைத்துக்கொண்டு நமது வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அந்த அபிப்பிராயம்தான் உங்கள் வாழ்க்கை. உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. நீங்கள் என்ன சாய்ஸ் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்தான் உங்களது நாளைய தினத்தை தீர்மானிக்கப்போகிறது. வெற்றியடைவதையே உங்கள் சாய்ஸாக தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்திருக்கிறது. உங்கள் பெர்ஸனாலிடியைப் பொறுத்திருக்கிறது.

அது சரி, உங்களைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் உங்களுக்கு எப்படித் தோன்ற ஆரம்பித்தது?

மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்கு பெரும்பாலும் நீங்கள் பொறுப்பல்ல., உங்கள் பெற்றோர்களே முதற்காரணம்.  நான் இப்படிச் சொல்வதை பெற்றோர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

புதியதாகப் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்பத்தில் அதனது சுமார் ஒரு வயது வரை ‘தான்’ என்று உணர்வு இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது தான் வேறு மற்றவை வேறு என்று பகுத்து, பிரித்துப் பார்க்கும் மனப்பான்மை குழந்தைப் பருவத்தில் ஒரு வயது வரை பொதுவாக இருப்பதில்லை. அதுவரை எல்லாமே அதற்கு ஒன்றுதான். ஆனந்த நிலை. பிறகு படிப்படையாக, ‘இது என்னுடையது, இது என்னுடையதல்ல’ என்ற உணர்வு பிறக்கிறது. அந்தப் பருவத்தில், பெற்றோர்கள் அந்த குழந்தையை எப்படி நடத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எப்படி வளர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு அனுபவத்திற்கும் அந்த குழந்தை ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த அனுபவம் தொடரும் பொழுது, அந்த அபிப்பிராயத்தை உறுதி செய்துகொள்கிறது அல்லது மாற்றிக்கொள்கிறது. தான் கேட்டது, பார்த்தது, அனுபவித்தது இவைகளின் மொத்தக் கலவையின் மேல் தான் உருவாக்கிக்கொண்ட அபிப்பிராயம்தான் சுய அபிப்பிராயம்.

“நீ ராணி மாதிரி வருவே” என்று அடிக்கடி பெற்றோர்களின் புகழ்ச்சியைக் கேட்டு வளரக்கூடிய குழந்தை தன்னை ஒரு ராணியாகவே பாவித்துக்கொள்ளும்.

“ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என்று புலம்பல்களைக் கேட்டு வளரும் குழந்தை தன்னை ஒரு பாரமாகவே நினைத்து வளரும்.

“நீ ஒரு நோஞ்சான இருக்கியே, இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது” என்பதை அடிக்கடி கேட்டு வளரும் குழந்தை ஒரு தாழ்வு மனப்பான்மையுடனேயே, ‘இது என்னால் முடியாது’ என்ற எண்ணத்துடனேயே வளரும்.

‘இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. சும்மா முயற்சி பண்ணு.” என்று ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தை ஊக்குவித்தால் முயற்சி செய்து பார்க்கும்

இப்படி பல கருத்துக்களை பெற்றோர் நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது கூறக்கேட்டிருப்போம். அந்த கருத்துக்களை பெரும்பாலும் பெற்றோர்கள் தன்னிச்சையோடில்லாமல் அன்பினால், குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தினால், அல்லது சில சமயம் தங்களுடைய விரக்தியினால் கூறியிருப்பார்கள். ஆனால், அந்த வார்த்தைகளுக்கு குழந்தைகள் தங்களுக்குள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும், அந்த அபிப்பிராயம் நேர்மறையாகவோ, எதிர் மறையாகவோ அமையலாம். எதிர் மறையாக அமைந்தால் அது தன் குழந்தையை பாதிக்கக் கூடும் என்ற விழிப்புணர்ச்சி பெற்றோருக்கு இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் கவனமாக பேசுவார்கள். கவனமாக வளர்ப்பார்கள். நேர்மறையான அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஆனால், பெற்றோர்களுக்கோ இன்று ஏகப்பட்ட பிரச்சினைகள். இதையெல்லாம் நுண்ணிப்பாக கவனிப்பதற்கு நேரமில்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. அவர்கள் சூழ்நிலை அப்படி.

அதன் பிறகு, வளரும் பருவத்தில் பெற்றோர்களைத் தவிர்த்து, உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், தினம் தினம் நாம் சந்திக்கும் நபர்கள் இவர்களுடன் நாம் பழகும்போது நமக்கு ஏற்படும் அனுபவத்தையொட்டி நாம் தொடர்ந்து நமது அபிப்பிராயங்களை புதிது புதிதாக அமைத்துக்கொள்கிறோம், அல்லது மாற்றிக்கொள்கிறோம்.

இப்படி நமக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு நாம் கொடுத்துக்கொண்ட அர்த்தங்கள் தான் நமது அபிப்பிராயங்கள், நமது பெர்ஸனாலிடி, நமது வாழ்க்கயும் கூட.

இந்த அபிப்பிராயங்கள் நமது ஆழ்மனதில் போய் உட்கார்ந்து கொள்கின்றன. நம்மை ஆட்டிப் படைக்கின்றன. விழிப்பு நிலையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட, நமது ஆழ்மனதில் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள், கவலைகள், அச்சங்கள், வருத்தங்கள் இவைகள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன.

அப்படியானால், நமது ஆழ்மனதில் நாம் ஏற்படுத்திக்கொண்ட இந்த கருத்துக்களை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கும் பயிற்சி இருக்கிறது. எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுக்கப் போகிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

                                                                    ………. தொடரும்

Wednesday, April 16, 2014

பெர்ஸனாலிடி - பகுதி 2 - அபிப்பிராயங்களைப் பற்றி

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி?

பகுதி 2 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

“தத் த்வம் அஸி” – ஆதி சங்கரர் (“நீ அதாகவே இருக்கிறாய்.”)
உங்கள் மனப்பான்மைதான் உங்கள் எதிர்காலம்

உங்கள் எண்ணங்கள்தான் வார்த்தைகளாகவும் பின்பு உங்கள் நடத்தைகளாகவும், உங்கள் பழக்க வழக்கங்களாகவும்,  நீங்கள் மதிக்கக்கூடிய உயர்ந்த கருத்துக்களாகவும், முடிவாக உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியாகவுமாகிறது. எனவே உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். – மஹாத்மா காந்தி


உங்களது வெற்றியைத் தீர்மானிக்கப் போவது  உங்களுடைய அறிவோ அல்லது திறமைகளோ மட்டுமில்லை. அதற்கும் மேலாக உங்களது மனப்பான்மைதான் (ATTITUDE) உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்


நமது அறிமுகப் பகுதியில் பெர்ஸனாலிடியை தீர்மானிப்பவை எவை என்பதில், நமது உடல் மற்றும் மன வலிமை முதலாவதாக வருவதாகவும் அடுத்ததாக நமது அபிப்பிராயங்கள்  வருவதாகவும் பார்த்தோம். வலிமையைப் பற்றி பகுதி 1-ல் சொல்லிவிட்டேன். இந்தப் 2-ஆம் பகுதியில் அபிப்பிராயங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். மிகவும் முக்கியமான, ஆனால் புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் கடினமான பகுதி இது. எவ்வளவு எளிதாக இதைச் சொல்ல முடியுமோ அவ்வளவு எளிதாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஆபிரஹாம் லிங்கன் ஒரு மரக்குடிலில் பிறந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் 34 வயதான தாயை இழந்தார். இளம் பருவத்தில் பள்ளிக்கூடம் என்று சென்றது மொத்தமே சுமார் ஒரு வருடம்தான். தனது 21-ஆம் வயதில் வியாபார முயற்சியில் தோல்வி அடைந்தார். 22-ஆம் வயதில் உள்ளூர் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 26-ஆம் வயதில் காதலியின் திடீர் மரணத்தால் மனதுடைந்தார். பின்பு, வேறொரு பெண்ணுடன் திருமணமான பின் இவருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் ஒன்று மட்டுமே பிழைத்தது. தானாகவே சட்டப் புத்தகங்களைப் படித்து வக்கீலானார். வக்கீல் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் அரசியலில் புகுந்து செனட் என்கிற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீஃபன் டுக்ளஸ் என்பவரோடு போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து அதே ஸ்டீஃபன் டுக்ளஸ்ஸை அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் பலத்த எதிர்ப்புகளுக்குகிடையே தோற்கடித்து ஜனாதிபதியானார். ஜனாதிபதி ஆனதும், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகளை எதிர்த்த தென் மாநிலங்கள், தனியே பிரிந்து உள்நாட்டுப் போரைத் துவக்கின. தன்னுடைய தன்னம்பிக்கையாலும், வாதத் திறமையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையினாலும், போர் யுக்திகளினாலும், உள்நாட்டுப் போரை வென்றார். இரண்டாவது முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இவரது அடிமைத்தனத்தை ஒழிக்கும் கொள்கைகளை’ விரும்பாத ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எத்தனை தோல்விகள். எத்தனை சவால்கள். எத்தனை எதிர்ப்புகள். லிங்கன் எப்படி சமாளித்தார்?.

ஸ்டீஃபன் ஹாக்கிங் – இவர் ஒரு சக்கர நாற்காலி விஞ்ஞானி. தற்போது 71 வயதான இவருக்கு அவருடைய 21-ஆம் வயதில் அமியோட்ரோபிக் லேடரல் ஸ்க்லோரோசிஸ் (ALS) என்கிற பயங்கரமான வியாதி இருப்பதாக கண்டறியப்பட்டது. தன்னுடைய உடலூனத்தைப் பொருட்படுத்தாமல் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் இயற்பியலிலும், அண்ட முழுமை இயலிலும் (COSMOLOGY) இதுவரை யாருமே கண்டறியாத சில உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். இவரின் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தும் இரண்டாம் உலகப்போரினால் பல கஷ்டங்களுக்குட்பட்டு மிக சாதாரண குடும்பஸ்தர்களாகவே இருந்தனர். இவர் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று இவரின் பெற்றோர்கள் ஆசைப்பட்டபோதிலும், ஹாக்கிங்கின் ஆர்வம் இயற்பியலிலும் விண்வெளியிலுமே இருந்தது. இளமையில் நல்ல அறிவாளியாக இருந்தபோதிலும் வகுப்பில் ஒரு சாதாரண பின்தங்கிய மாணவராகவே இருந்தார். பள்ளிப் படிப்பைவிட வெளி விளயாட்டுக்களிலேயே இவரது மனம் சென்றது. தனது 16-ஆம் வயதில் சில நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து வீணாக்கப்பட்ட பொருட்களிலிருந்து அடிப்படையான சில கணக்கீடுகளுக்கு (CALCULATIONS)  விடை காண, ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கினார். 1963-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் தனக்கு சில உடல் உபாதைகள் இருப்பதை கவனித்தார். பேச்சு குழற ஆரம்பித்தது. நடை தளர்ந்து அடிக்கடி கிழே விழ ஆரம்பித்தார். ஆரம்பத்தில், ஹாக்கிங் தனது உடல் உபாதையை பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே பல சோதனைகளுக்குப் பிறகு அமியோட்ரோபிக் லேடரல் ஸ்க்லோரோசிஸ் – அதாவது தசைகளை இயக்கும் நரம்பு மண்டலம் முழுவதுமாக பழுதடைந்து போதல் – இருப்பதாக கண்டறியப்பட்டு, இன்னும் இரண்டரை வருடங்கள்தான் இவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இருப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்ட – அதுவரை எதையுமே விளையாட்டாக எடுத்து வந்த – ஹாக்கிங் ஒரு புதிய தீர்மானத்துக்கு வந்தார். மருத்துவ மனையில் அவருடன் ஒன்றாக அறையில் இருந்த, லுகேமியாவால் (LEUKEMIA) பாதிக்கப்பட்ட இன்னொரு இளைஞரை விட தன்னுடைய நிலைமை எவ்வளவோ மேல் என்று கூற ஆரம்பித்தார். “எனக்கு வியாதி வருவதற்கு முன்புவரை வாழ்க்கை எனக்கு மிகவும் போரடித்தது” என்று கூறினார். தன்னுடைய ஆராய்ச்சிகளில் இன்னும் முனைப்பு காட்டத் தொடங்கினார். இவரது நீண்டகால ஆராய்ச்சியினால்,  1970-களில் விண்வெளியில் கருப்புக் குழிகளைப் (BLACK HOLES) பற்றிய புதிய உண்மைகள் தெரிய வந்தது. இவரது கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பாராட்டியது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல பெரிய பல்கலைக் கழகங்கள் இவரை  நடமாடும் (VISITNG) பேராசியராக நியமித்தன. இவரது உடல் நிலை இன்னும் மோசமாகத் தொடங்கியது. பிறர் உதவியில்லாமல் இவரால் எதுவுமே செய்யமுடியாத நிலை. இதற்கு நடுவே காதல் திருமணம், ஒரு பெண் குழந்தை வேறு. இன்றைக்கும், இவர் மூளையிலும், கண்களிலும் ஏற்படும் மிக நுண்ணிய அதிர்வலைகளை பேச்சாகவோ, எழுத்தாகவோ மாற்றக்கூடிய கம்ப்யூட்டரின் உதவியாலேயே இவரது ஆராய்ச்சிகளும், புத்தகங்களும், விரிவுரைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் விஞ்ஞான உலகத்தில் ஐஸக் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனிக்கு சமமாக ஒரு விஞ்ஞானி மதிக்கப்படுகிறார் என்றால், அவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். இவரது துணிவுக்கு இன்னொரு அத்தாட்சி: 2007-ல் அவரது 65-ஆம் வயதில் உடல் பாதிக்கப்பட்ட நிலையிலும் இவர் இரண்டு மணி நேரத்துக்கு, மாற்றியமைக்கபட்ட ஒரு போயிங் விமானத்தில் சக்கர நாற்காலியில்லாமல் புவியீர்ப்பு சக்தியிலிருந்து விடுபட்ட எடையின்மைத் தன்மையை பரிசோதிக்கும் ஒரு சோதனையில் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். விண்வெளியில் சுற்றுப் பயணம் செய்ய ஒரு முதல் பயணியாகவும் தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இவரது அன்றாட வாழ்க்கை சக்கர நாற்காலியும், கம்ப்யூட்டரும்தான்.

உடலூனமுற்ற ஹாக்கிங் ஒரு சாதனயாளரானது எப்படி?

சற்று யோசித்துப் பாருங்கள்.

இப்படி பலர். தொழிலதிபர் திருபாய் அம்பானி, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ், விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், கண் பார்வையற்று, காது கேளாமையுடன் வாழ்க்கையை ஓட்டிய உலகப்புகழ் பேச்சாளர் ஹெலன் கெலர், இன்று உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட KFC-யின் உரிமையாளர் கர்னல் ஸாண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா, இப்படிப் பலர் …… மிக மிக நீண்ட பட்டியல் – இவர்கள் சாதனையாளர்களானது எப்படி? இவர்களின் வெற்றிக்கு எது முக்கியமான உறுதுணையாக இருந்தது? உலகப் புகழ் வாய்ந்த பெர்ஸனாலிடியாக இவர்கள் மாறியது எப்படி?
இவர்கள் எல்லோருமே அடிப்படையில் சாதாரண குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள் இல்லை. ஆதரவற்ற நிலையில், பல சவால்களை எதிர்கொண்டு, பல தடங்கல்களைத் தாண்டி, போராடித்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே அடிப்படையில் நல்ல அறிவும், திறமையும் உடையவர்கள்தான். ஆனால் இவர்களின் சாதனைகளுக்கு இவர்களின் அறிவும் திறமையும் உதவியிருந்தாலும்கூட இவர்களின் மனப்பான்மையே வெற்றிக்கு வித்திட்டது. இவர்கள் தங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். தன்னால் முடியும் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்தார்கள். தனது எதிர்காலம் கண்டிப்பாக பிரகாசமாக இருக்கும் என்று நம்பினார்கள். வெற்றியடைய தனக்கு எல்லா தகுதிகளும் இருப்பதாக நம்பினார்கள். தங்களது குறைபாடுகளை தடங்கல்களாக எடுத்துக்கொள்ளவில்லை. சவால்களைக் கண்டு அஞ்சி ஓடவுமில்லை. எதிர்ப்புகளைக் கண்டு அச்சப்படவில்லை. தொல்விகளைக் கண்டு மனம் சோர்ந்துவிடவில்லை. தடங்கல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. இவைதான் அவர்களின் வெற்றியின் ரகசியம்.

தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றி ஒரு சுவையான செய்தி. அரைகுறையாகவே காது கேட்கும் திறனுடைய இவரை “இவருக்கு படிப்பு வராது, இவருக்குச் சொல்லிக் கொடுப்பது மிகக் கடினம்.’ என்று கூறி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இவர் படித்ததெல்லாம் இவரின் அம்மாவிடம்தான். ஃபோனோகிராஃப், சினிமா படம் பிடிக்கும் கேமிரா, மின்சார விளக்கு போன்ற 1093 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர். 1914-ல் இவரது 67-ஆம் வயதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள இவரது தொழிற்சாலை தீக்கிரையாகியது. தொழிற்சாலைக்கு அவசியமான போதுமான காப்பீடும் இல்லை. அவரது வாழ்நாளின் முழு முதலீட்டையும் இழந்ததைப் பற்றி பெரியதாக கவலைப்படாமல், அவர் கூறியது என்ன தெரியுமா? “ரொம்ப நல்லதாகப் போய்விட்டது. என்னுடைய தவறுகள் எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. பேரிடர்களிலும் நன்மைகள் உள்ளன. இனி, புதியதாக எல்லாவற்றையுமே தொடங்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த அந்தக் கடவுளுக்கு நன்றி.” எப்படி இருக்கிறது? அந்த மனப்பான்மை நம்மில் எத்தனை பேருக்கு வரும்?

ஆதலினால், மீண்டும் சொல்கிறேன். உங்களை உருவாக்குவது உங்கள் மனப்பான்மைதான். உங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான். ‘எனக்குத் திறமை இருக்கிறது. தகுதி இருக்கிறது. இது என்னால் முடியும்.” என்கிற உங்களைப் பற்றிய நீங்களே கொண்டுள்ள அபிப்பிராயங்கள்தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கிறது. உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் நேர்மறையாக இருக்கும்பொழுது, தானாகவே அறிவையும், திறமையையும் நீங்கள் தேடிச்சென்று அடைவீர்கள்.

ஆனால், அறிவும், திறமையும் மட்டும் இருந்து, சரியான மனப்பான்மையும், உங்களைப் பற்றிய சரியான அபிப்பிராயங்களும் உங்களுக்கு இல்லையென்றால், வெற்றியடைந்தால் கூட அது தாற்காலிகமாகவே இருக்கும். சீக்கிரமே உயர் நிலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. வெற்றி பெற்ற பலர் அவர்களது மனப்பான்மையினாலேயே அழிந்திருக்கிறார்கள். அதிலும் சிலர், தங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு, தன்னம்பிக்கையினால் மீண்டும் எழுந்து வந்திருக்கிறார்கள்.

ஒருவருக்குத் தன்னைப் பற்றிய நம்பிக்கையும், அபிப்பிராயமும் எப்படி உருவாகுகிறது என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.


                                                                           ………… தொடரும்

T.N.NEELAKANTAN

www.tnneelakantan.com


இதன் முந்தைய பகுதிகளைப் படிப்பதற்கு www.thiruvaadhirai48.blogspot.com என்கிற blog-ல் பார்க்கவும்