Total Pageviews

Friday, March 19, 2021

19.03.2021 நானும் பரீட்சைகளும்

 19.03.2021 நானும் பரீட்சைகளும்

சிறிய வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் மாணவனாக நான் இருந்து வந்திருக்கிறேன். பள்ளி நாட்களிலும் சரி கல்லூரி நாட்களிலும் சரி வகுப்பில் முதல் இடத்தில் (தவறிப்போனால், இரண்டாம் இடத்தில்) எப்போதும் இருந்திருக்கிறேன். அந்தப் பெருமை, இறுமாப்பு இன்று வரை எனக்கு உண்டு.

ஆனால், நான் ஒரு புத்திசாலி என்று என்னைப் பற்றி என்றும் நினைத்தது கிடையாது. கடுமையாக உழைக்கத் தயாராக இருப்பவனாகவே என்னைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் படித்த ஒரு சில மாணவர்கள் என்னை விட அதிக புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள்.

அனுபவம் 1

அது போன்ற ஒரு நிலையில் - நான் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ - சரியாக நினைவில்லை – படிக்கும் நேரம் திருநெல்வேலி டவுணில் எங்கள் தெருவில் ஒரு ஹிந்தி டீச்சர் இருந்தார். நன்றாகச் சொல்லிக்கொடுப்பார். குடும்பப் பெண்மணி. பல மாணவர்களை தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தி வந்த பரீட்சைகளுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து தயார் செய்து அனுப்பி வந்தார். அவரிடம் நான் ஹிந்தி கற்றுக்கொள்வதற்குச் சேர்ந்தேன்.

நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற முறையில் ‘ப்ராத்மிக்’ என்ற முதல் நிலை பரீட்சையைத் தாவி இரண்டாம் நிலையில் இருந்த ‘மத்யமா’ பரீட்சையை நேராக எழுதலாம் என்று அந்த டீச்சர் கருதினார்.  

நானும் ஒத்துக்கொண்டேன். என்ன, கொஞ்சம் கூடுதலாகக் கடினமாக உழைக்க வேண்டும்.

நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணமும் உண்டு.

எங்கள் தெருவில் இருந்த ஒரு தொடக்கநிலைப் பள்ளியில் நான் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். நல்ல பள்ளிக்கூடமாக இருந்தும் ஏனோ அந்தப் பள்ளிக்கு “ஊசை வடைப் பள்ளி” என்ற ஒரு பட்டப்பெயர் நிலவி வந்தது. அந்தப் பள்ளி என்னை இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு உயர்த்தி அனுப்பியது. அதாவது இரட்டை உயர்த்தல். (Double promotion). மிகவும் அரிதாக இது போல அன்றெல்லாம் வழக்கம் இருந்து வந்தது.

அப்படிக் கிடைத்த இரட்டை உயர்த்தலால் பின்னால் எஸ். எஸ். எல். சி பரீட்சை எழுதும்போது எனக்கு பரீட்சை எழுதும் வயதுக்கான தகுதி இல்லை என்பது போல ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மாதங்கள் கணக்கில் நான் தப்பித்து விட்டேன்.

இரட்டை உயர்த்தல் பெற்ற மாணவன் என்ற இறுமாப்பும் எனக்கு சிறிய வயதிலிருந்தே இருந்து வந்தது. அதனால், அபரிதமான தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. பரீட்சையில் தோல்வி என்பது எனக்குக் கிடையாது என்ற இறுமாப்பும் இருந்தது.

அதனால், நேராக ஹிந்தி பிரச்சார சபாவின் மத்யமா பரீட்சை எழுதுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. பரீட்சைக்கு என்னைத் தயார் செய்துகொண்டு எழுதினேன்.

Straight pass…

எனக்கு மீண்டும் பெருமிதம். அதே பெருமையில் அடுத்த பரீட்சையான ராஷ்ட்ர பாஷா பரீட்சையை எழுதினேன். நன்றாகத்தான் படித்திருந்தேன். எழுதியிருந்தேன்.

ஆனால், நான் வெற்றி பெறவில்லை. முதன் முறையாகத் தோல்வியைத் தழுவினேன். பெரிய அவமானமாக இருந்தது.

“சீச்சி, இந்தப் பழம் புளிக்கும்” என்று ஹிந்தி பரீட்சைகளையே உதறித் தள்ளினேன். அதன் பின்பு ராஷ்ட்ரபாஷா பரீட்சையை மீண்டும் எழுத முயற்சிக்கவில்லை. என்னுடைய இறுமாப்பு இடம் கொடுக்கவில்லை.

அதன் பிறகு நான் எஸ். எஸ். எல். சி பரீட்சையில் மதிப்பெண்கள் வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.

பி. எஸ். சி இளநிலை பட்டதாரி படிப்பில் மாவட்டத்தில் “D” (DISTINCTION – 75% AND ABOVE) பெற்ற இரண்டு மாணவர்களில் நான் ஒருவனாக இருந்தேன்.

பின்னர், திருச்சியில் செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் எம். எஸ். சி படித்து முதல் வகுப்பில் பாஸ் செய்தேன். பல்கலைக் கழகத்தின் அறிவிக்கப்படாத தர வரிசையில் நான்காம் இடத்தில் இருந்ததாக அதிகாரமற்றத் தகவல்கள் எனக்குக் கிடைத்தன.  

அனுபவம் 2

அதற்கடுத்து, வங்கியில் 1970-ல் அதிகாரியாக சேர்ந்தவுடன் மீண்டும் ஒரு பரீட்சைக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. CAIIB என்ற ஒரு வங்கித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் என் சம்பளத்தில் ஒரு படி (increment) – மாதத்துக்கு முப்பது ரூபாய் – கிடைக்கும் என்று ஒரு விதி இருந்தது. அந்த முப்பது ரூபாய் அன்று எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஒவ்வொரு அதிகாரியும் கண்டிப்பாக அந்த CAIIB பரீட்சையை விரைவில் பாஸ் செய்யவேண்டும் என்று வங்கியும் எதிர்பார்த்தது.

CAIIB பரீட்சையில் இரண்டு பகுதிகள். ஒவ்வொன்றிலும் ஐந்து பாடங்கள் - தாள்கள். CA படிப்பது போன்று மிகவும் கடினமான பரீட்சை CAIIB பாஸ் செய்வது அவ்வளவு சுலபமில்லை. தேர்வு விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது.  நான்கில் ஒருவரே பாஸ் செய்து வந்தனர் என்று நினைவு.

என்னுடன் வேலை பார்த்து வந்த கௌரிசங்கர் என்ற நல்ல நண்பர் – என்னை விட வயதில் மூத்தவர் - என் அண்ணனைப் போல நான் கருதும் இனிய நண்பர் – வங்கியில் சேருவதற்கு முன்பாக திருச்சியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தவர் – என்னை நன்றாக ஊக்குவித்தார்.

நானும் சரி, கௌரிசங்கரும் சரி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்கள். வங்கித் தொழிலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தும் குடும்ப நிலையைக் கருதியும், கூடுதல் வருமானத்திற்காகவும், எதிர்காலத்தில் பதவி உயர்வுகளையும் மனதில் கொண்டும் வங்கியில் சேர்ந்தவர்கள். என்னைப் போல மேலும் பலர் அன்று இருந்தனர்.

நானும் கௌரிசங்கரும் கோயம்புத்தூரில் ராஜா வீதிக்கு அருகில் ஒரு லாட்ஜில் ஒரே அறையில் தங்கி வந்தோம். இருவரும் தினமும் மாலை வேளைகளில் அந்த லாட்ஜின் மொட்டை மாடிக்குச் சென்று CAIIB பரீட்சைக்குத் தயார் செய்தோம். அதற்காக, பயிற்சி வகுப்புகள் எதிலும் சேரவில்லை. நன்றாகவேத் தயார் செய்தோம். புரியாத கடினமான பாடங்களையும் எப்படியோ புரிந்துகொண்டு தயார் செய்தோம். கௌரிசங்கர் நல்ல புத்திசாலி. கல்லூரியில் விஞ்ஞானத்தில் படித்திருந்தாலும் எப்படியோ புதிய பாடங்களை என்னை விட நன்றாக, எளிதாகப் புரிந்து கொண்டவர். என் சந்தேகங்களுக்கு அவரே எனக்கு குரு.

பொதுவாக, பலரும் பாடம் பாடமாக எழுதித்தான் CAIIB பரீட்சையை எழுதி வந்தார்கள். ஆனால், நாங்கள் இருவரும் CAIIB பரீட்சையில் முதல் பகுதியில் எல்லா 5 தாள்களையும் ஒரே முயற்சியில் பாஸ் செய்யத் தீர்மானித்து உழைத்தோம்.

CAIIB முதல் பகுதி 5 தாள்களையும் ஒரே முயற்சியில் எழுதினோம். ஆவலுடன் பரீட்சை முடிவுகளுக்குக் காத்திருந்தோம். முடிவுகளும் வந்தன.

இருவரும் ஒரே முயற்சியில் CAIIB பரீட்சையின் முதல் பகுதியில் பாஸ்.

வானத்துக்கும் பூமிக்கும் என்று குதித்தேன். மிகப் பெரிய வெற்றி. எங்களுடன் வேலை பார்த்த பலருக்கு எங்கள் மேல் பொறாமை. முதலாவது ஊக்கப் படி முப்பது ரூபாய் எனக்குக் கிடைத்தது. பெரு மகிழ்ச்சி.

அதே சூட்டில், இரண்டாம் பகுதிக்கும் தயார் செய்யத் தீர்மானித்தோம். எல்லாப் பாடங்களுமே எங்களுக்கு முற்றிலும் புதியதான பாடங்கள். புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தது என்பதால் ஐந்து தாள்களையும் ஒரே தவணையில் எழுதும் விஷப் பரீட்சை வேண்டாம் என்று தீர்மானித்து இரண்டு தவணைகளாக எழுத முடிவெடுத்தோம். முதல் தவணையில் மூன்று தாள்களை முயற்சித்தோம். என்னென்ன பாடங்கள் என்பது இப்பொழுது மறந்து விட்டது.

கடினமாக உழைத்து CAIIB பரீட்சையின் இரண்டாம் பகுதியின் மூன்று பாடங்களுக்கான தாள்களை எழுதினோம். முடிவுகளுக்காக ஒரு மூன்று மாதம் காத்திருந்தோம். அதீத தன்னம்பிக்கையோடு, மீதமிருந்த இரண்டு தாள்களுக்கும் தொடர்ந்து தயார் செய்ய ஆரம்பித்தோம். தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தோம்.

முடிவுகளும் வெளியாயின. மூன்று பாடங்களில் Commercial Law பாடத்தில் 49 மதிப்பெண்கள் பெற்று நான் தோல்வியுற்றேன். குறைந்த பட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

துவண்டு விட்டேன். இரண்டாம் முறையாக பரீட்சையில் ஒரு தோல்வியைச் சந்தித்தேன். கௌரிசங்கர் வெற்றி பெற்று விட்டார்.  

அதிர்ஷ்டவசமாக, கௌரிசங்கர் ஊக்குவித்ததால் மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் மீதமுள்ள மூன்று பாடங்களுக்கான (தோல்வியடைந்த பாடத்தையும் சேர்த்து) பரீட்சைக்குத் தயார் செய்யத் தொடங்கினேன். மீண்டும் கடினமாக உழைத்துப் படித்தேன். பரீட்சையையும் எழுதினேன்.

ஆனால், மீண்டும் அதே Commercial Law பாடத்தில் 48 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்றேன். பரீட்சையில் தோல்வியின் தாக்கத்தை உணர்ந்தேன். அந்தப் பரீட்சை மிது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

“இனி இந்தப் பரீட்சையை நான் எழுத மாட்டேன். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும். எனக்கு ஒத்து வராதது. மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் எந்தப் பலனும் இல்லை,” என்ற முடிவுக்கு வந்தேன்.

அந்த நேரத்தில் நானும் கௌரிசங்கரும்  கோயம்புத்தூர் கிளையிலிருந்து பிரிந்து விட்டோம். வெவ்வேறு கிளைகளுக்குச் சென்று விட்டோம். ஒரு வேளை நாங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்திருந்தால் நான் மீண்டும் முயற்சித்திருப்பேனோ என்னவோ?

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு CAIIB பரீட்சையை மீண்டும் தொடர நான் முயற்சிக்கவில்லை. ஒரு வேளை முயற்சித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேனோ என்று தெரியாது அதனால் அடுத்த சுமார் நான்கு ஆண்டுகளுக்கு எனக்குக் கிடைக்கவிருந்த ஊக்கப் படியும் கிடைக்காமல் போனது.

இடையில் எனக்குத் திருமணம் ஆனது. ஓரு குழந்தையும் பிறந்தது. வீட்டின் செலவுக்கும் அதிக பணம் தேவைப்பட்டது.

1976-ல் என் மனைவிதான் என்னிடம் பேச்சை எடுத்தாள். விட்டுப்போன அந்த Commercial Law பாடத்தை மீண்டும் படித்து எழுதி முடித்து விட்டால் இன்னொரு முப்பது ரூபாய் சம்பளம் உயருமே, நீங்கள் ஏன் எழுதக்கூடாது என்று என்னைக் கேட்க ஆரம்பித்தாள்.

இருதலைக் கொள்ளியாகத் தவித்தேன். என் தன்மானமும் அகம்பாவமும் என்னை விட்டுப்போன ஒரு பாடத்தில் பரீட்சையை எழுதி முடிக்கத் தடுத்தன. ஆனால், முப்பது ருபாய் மாதா மாதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற நப்பாசை ஒரு பக்கம் என்னை இழுத்தது.

எதற்கும் இருக்கட்டும் என்று பரீட்சைக்கு பதிவு செய்வதற்கான பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், பரீட்சைக்குப் படிக்கவில்லை.

என் மனைவி என்னை தொந்திரவு செய்ய ஆரம்பித்தாள். படிக்காமல் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று என்னை துளைத்து எடுத்தாள்.

பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த சமயம்.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. Commercial Law பாடத்துக்குத் தேவையான Bare Act சட்டப் புத்தகங்களை மட்டும் எடுத்து வைத்து சட்டங்களை மட்டும் ஒரு பார்வை பார்த்து ஓட்டினேன். விவரமான விளக்கங்கள் எதையும் படிக்கவில்லை.

குருட்டு தைரியத்தில் மீதமிருந்த ஒரே பாடத்தின் - Commercial Law-வின் - பரீட்சையையும் எழுதி முடித்தேன். முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று உதாசீனமாக இருந்தேன்.

முடிவுகளும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளி வந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. 51 மதிப்பெண்கள் பெற்று நான் பாஸ் செய்திருந்தேன்.

தோற்றாலும் 48 அல்லது 49 மதிப்பெண்கள். வெற்றி பெற்றாலும் – சரியாக தயார் செய்யாவிட்டாலும் 51 மதிப்பெண்கள். அந்தப் பரீட்சையைப் பற்றி நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று அந்த நாட்களில் எனக்குப் புரியவில்லை.

அடுத்த முப்பது ரூபாய் ஊதிய உயர்வும் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.

அனுபவம் 3

காலம் 1997 – 2006. வங்கியை விட்டு வெளியேரி நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் நிதி ஆலோசகராகப் பணி புரிந்த காலம்.

2000-ஆண்டு என் மகள் அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டாள். என் மகனும் இன்ஜினியரினிங் முடித்து விட்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று படித்து அங்கு அவனுக்கும் வேலை கிடைத்து விட்டது. நானும் மனைவியும் மட்டும் துபாயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் அமெரிக்கா சென்று வந்தோம். பல இடங்களுக்குச் சுற்றினோம். எனக்கும் அமெரிக்காவில் குடிபுகுந்து விடலாம் என்ற நப்பாசை தோன்றத் தொடங்கியது.

ஆனால், அமெரிக்கா சென்று வேலை பார்க்க வேண்டுமென்றால் அதற்கான படிப்புத் தகுதி வேண்டும். அதனால் பென்சில்வேனியா மானிலத்தில் இருந்த பிரபலமான ப்ரையன் மார் பல்கலையில் CHARTERED FINANCIAL PLANNER (CFP) பட்டத்துக்குத் தகுதி பெறும் ஆரம்ப பாடங்களுக்கு தொலைவழிக் கல்வியில் சேர்ந்து கொண்டேன்.

இதுவும் நமது CA போன்று கடினமான பரீட்சைதான். ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் CFP பரீட்சை எழுத தகுதியுடையவன் ஆவேன். என்னுடைய 56-57-ஆவது வயதில் விழுந்து விழுந்து தயார் செய்து ஒவ்வொரு பாடமாக பரீட்சை எழுதினேன். எல்லாம் கம்ப்யூட்டர் வழி ஆன்லைனில் பரீட்சை எழுத வேண்டும். ஒவ்வொன்றிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன்.

அதனால் CFP பரீட்சை எழுதுவதற்குத் தகுதியுடையவன் ஆனேன். அதற்குத் தேவையான பதிவுகளையும் முடித்துக்கொண்டேன். அமெரிக்காவில் சென்று எழுத வேண்டும். ஆனால், நான் முதலில் தகுதித் தேர்வுகள் எழுதியது போல கம்ப்யூட்டர்கள் முலம் அல்ல, பேப்பர் – பென்சில் பரீட்சை.

நன்றாகவே தயார் செய்திருந்தேன். ஏற்கெனவே வங்கியில் பணி புரிந்திருந்ததால் புதிய பாடங்களைப் புரிந்து படிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை. அதுவும் அமெரிக்க சட்டமுறைகள், விதிமுறைகளைப் பற்றிப் படிக்க வேண்டும்.

இருந்தும் எனக்கு ஒரு குறைபாடு தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தது. வருகிறது. ஏதோ ஒரு காரணத்தால் எனக்கு விரல்கள் நடுக்கம் (HAND TREMOR) 1988-89-களில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக்கொண்டு வருகிறது. அதனால், என்னால் வேகமாக எழுத முடியாது. பேப்பரில் பென்சில் பேனாவை வைத்தால் கை நடுங்கத் தொடங்கிவிடும். மருத்துவ ரீதியாக இதை சரி செய்வது கடினம் என்று  நரம்புயியல் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். A KIND OF DISCONNECT BETWEEN BRAIN ANS FINGERS. FINGERS UNABLE TO COPE WITH THE SPEED OF MY MIND.

CFP பரீட்சையையும் எழுதினேன். என் கை விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. வேகமாக என்னால் பரீட்சை எழுத முடியவில்லை. அதனால் எனக்கு எல்லா கேள்விகளுக்கு பதில் எழுதி முடிக்க முடியவில்லை. ஒரு மாதிரியாக எழுதி முடித்தேன். இறுதியில் RANDOM MARKING தான் பண்ண முடிந்தது.

இந்தப் பரீட்சையிலும் நான் பாஸ் செய்யவில்லை. பரீட்சைகளில் என்னுடைய மூன்றாவது தோல்வி. என் குறைபாடுகள் எனக்குத் தெளிவாகத் தெரிந்ததினால் ஒரு மாதிரியாக மனதை ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டேன்.

அதே அமெரிக்க பல்கலையில் இன்னும் மூன்று பாடங்களுக்கான தேர்வு எழுதினால் எனக்கு CHARTERED FINANCIAL CONSULTANT (CFC) என்ற பட்டம் கிடைத்திருக்கும். ஆனால், மீண்டும் எழுத எனக்கு மனம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

முடிவுரை

இருந்தும் என் அஹம்பாவத்திற்கும் இறுமாப்புக்கும் எல்லையே இல்லை என்பதை இன்று நான் உணர்கிறேன். அதனால், நான் திருந்திவிட்டேன் என்று பொருளில்லை.

நான் ஒரு முடியாத ஒரு WORK IN PROCESS .

முழுமையை, நிறைவைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

“பூர்ணமத: பூர்ணமித; பூர்ணாத் பூர்ணம் உதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே |

ஒம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி ஹி ||”

No comments:

Post a Comment