Total Pageviews

Showing posts with label Memoirs. Show all posts
Showing posts with label Memoirs. Show all posts

Friday, March 24, 2017

இந்த வார நாட்க்குறிப்பு 24.03.17: இன்று என் தகப்பனாரின் 44-ஆவது நினைவு தினம்.

இந்த வார நாட்க்குறிப்பு
24.03.17: இன்று என் தகப்பனாரின் 44-ஆவது நினைவு தினம்.

இன்று, என் தகப்பனார், காலம் சென்ற திரு டீ. என். நடராஜன் அவர்களின் 44-ஆவது நினைவு தினம். உடல் நலக் குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவதிப்பட்டு 1973 ஏப்ரலில் தனது 54-ஆவது வயதில் காலமானார்.

அவர் காலமான சமயத்தில் நான் டில்லியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் காலாமன செய்தியே எனக்கு சுமார் 5-6 மணி நேரத்துக்குப் பிறகுதான் தந்தி மூலமாகத் தெரிய வந்தது. உடனடியாக விமானம் மூலம் சென்னைக்குப் பறந்து செல்ல பல நண்பர்கள் என்னை விழைந்தனர். வேலை பார்க்கத் தொடங்கி மூன்று வருடங்களே ஆகியிருந்தன. படிப்பதற்கு நான் வாங்கிய கடன், தகப்பனார் உடல் நலக் குறைவினால் முழுச் சம்பளம் இல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்திருந்த சமயங்களில் குடும்பத்தை நடத்த வாங்கிய கடன், மாதா மாதம் வீட்டுச் செலவுக்குப் பணம் இப்படி என்னுடைய வருமானத்தைச் செலவழித்ததில் என்னுடைய நிதி நிலைமை  நெருக்கடியில் ஓடிக்கொண்டிருந்தது. விமானம் மூலம் சென்னையை அடைந்தாலும் அங்கிருந்து திருநெல்வேலி போய்ச் சேருவதற்கு இன்னொரு பன்னிரண்டு மணி நேரம் ஆகும். அதுவும் டாக்சி வைத்துக் கொண்டால்தான். அதையெல்லாம் கருத்தில் கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு என்னால் இறுதிச் சடங்குகளுக்கு உடனேயே வர முடியாததை வீட்டுக்கு மறு தந்தி மூலம் தெரியப்படுத்தினேன். இறுதிச் சடங்குகள் என் தம்பியை வைத்து நிறைவேறின. நான் அன்றிரவு ஜி. டி. எக்ஸ்ப்ரஸ் பிடித்து சுமார் 40 மணி நேரம் கழித்து சென்னை போய்ச் சேர்ந்து பின்னர் அன்று மாலை மீண்டும் ஒரு பஸ் பிடித்து என் தகப்பனார் இறந்த நான்காம் நாள்தான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். என் அம்மாவைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கு அப்பொழுது சுமார் 43 வயதுதான் ஆகியிருக்கும்.  நீண்ட காலம் அவர்கள் விதவையாக கழிக்க வேண்டியிருப்பதை நினைத்து வருந்தினேன். மனதை மீண்டும் கல்லாக்கிக் கொண்டு என் அழுகையை கூடிய வரை மறைத்து மீதமிருந்த குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானேன்.

என் தகப்பனாரை நினைவு கூறும் பொழுது முக்கியமாக ஒரு சில விஷயங்கள் எனக்குத் தோன்றின.

முதலாவது … ஆங்கில மொழியின் மீது பற்று. ஆங்கிலப் புத்தகங்கள், செய்தித் தாள்கள் படிப்பது இரண்டும் எனக்கு என் தகப்பனாரிடமிருதுதான் வந்திருக்க வேண்டும்.  நாங்கள் வசித்த பகுதியில் தினமும் ‘தி ஹிந்து’ செய்தித்தாளை பல செலவுகளுக்கிடையேயும் சந்தா கட்டி வாங்கிப் படிப்பார். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வரி கூட விடாமல் தினமும் படித்து விடுவார். அவர் அந்தக் காலத்து எஃப். ஏ (F.A). பின்னால் வந்த Pre-University-க்கு சமம் என்று நினைவு.) பிற்காலத்தில் ‘தி ஹிந்து’ செய்தித் தாளை இன்றும் கூட (படிக்கப் பிடிக்காவிட்டால் கூட) தொடர்ந்து படித்து வரும் எனக்கு இப்படித்தான் ஒரு ‘படிப் பழக்கம்’ ஏற்பட்டது என்று நினைக்கிறேன்.  

பள்ளியின் ஆங்கிலப் பாடங்களை நான் வீட்டில் படிக்கும் சமயம் என்னை பாடங்களை உரக்கப் படிக்க சொல்வார். அடிக்கடி என்னைத் திருத்துவார். அப்பொழுது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இன்றைக்கும் ஆங்கில மொழியின் மீது எனக்கு அதீதமான காதல் இருப்பதற்கு அன்றைக்கு ஆங்கிலப் பாடங்களை உரக்கப் படிக்கச் சொல்லி அவர் என்னை பல இடங்களில் திருத்தியது ஒரு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது, ஹிந்திப் பாடல்களின் மீதும், ஆங்கில திரைப்படங்களின் மீதும் எனது மோகம் என் தகப்பனாரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். அவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களைப் அதிகம் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், பல ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அன்றைய காலங்களில் 1950-களின் முடிவிலும் 1960-களின் ஆரம்பங்களிலும் திருநெல்வேலியில் வார இறுதியில் மட்டும் காலைக் காட்சி நேரத்தில் ஒரு சில ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களை திரையிடுவார்கள். அப்படித்தான் லாரல் மற்றும் ஹார்டியின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். வெகு சில ஆங்கிலப் படங்களே வழக்கமான காட்சி நேரங்களில் திரையிடுவார்கள். MY FAIR LADY, JERRY LEWIS MOVIES, ALFRED HITCHKOK MOVIES, JAMES BOND MOVIES, CLEOPATRA – இப்படி ஒரு சில படங்கள். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என் தகப்பனாருக்கு மிகப் பிடித்த இயக்குனராக இருந்திருக்க வேண்டும். ஹிட்ச்காக்கின் PSYCHO படத்தை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் விமரிசனமும் செய்திருக்கிறார். பிறகு ஒரு சமயம் அதே ஹிட்ச்காக்கின் BIRDS படம் திரையிடப்பட்ட போது (திருநெல்வேலி பார்வதி தியேட்டர் என்று நினைவு) வீட்டுக்குத் தெரியாமல் நான் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு திரையரங்கத்தில் போய் உட்கார்ந்தால் வீட்டுக்குத் தெரியாமல் அவரும் அந்தப் படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு முந்தைய வரிசையில் அமர்ந்திருந்தார். இருவருக்கும் ஒரு நிமிட அதிர்ச்சி, ஆச்சரியம். படம் முடிந்த பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் சேர்ந்தே வீடு வந்து சேர்ந்தோம்.

அது போல, கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களின் வீடுகளில் அன்றைய காலக் கட்டத்தில் ரேடியோ இருப்பது அரிது. ஹிந்தித் திரைப்படப் பாடல்களைக் கேட்பதில் தீவிர விருப்பம் என் தகப்பனாருக்கு இருந்ததால் பல செலவுகளுக்கிடையே நெல்லை சந்திப்பில் நெல்லை லாட்ஜுக்கு அருகேயிருந்த ஒரு ரேடியோ கடையிலிருந்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபிலிப்ஸ் ரேடியோ டிரான்சிஸ்டர் ஒன்றை வாங்கினார். 200 ரூபாய் விலை என்று ஞாபகம். மாதா மாதம் 30 ரூபாய் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் வீட்டுக்கு வந்து திருப்பி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். எங்கள் வீட்டில் அன்று முதல் அடிக்கடி ஹிந்திப் பாடல்கள் எங்கள் டிரான்சிஸ்டரில் ஒலிக்கத் தொடங்கின. இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பப் பட்ட ‘ஜெயமாலா’ என்ற ராணுவ வீரர்களின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார். அந்தப் பழக்கம் பின்னால் எனக்கும் தொற்றிக் கொண்டது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற ஹிந்திப் படம் அவருக்கு மிகவும் விருப்பமான படம். பல முறை தியேட்டரில் பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பல ஹிந்திப் பாடல்களை விசில் மூலமாக இசைப்பார். ஆனால், ஹிந்திப் படங்களைப் போல் தமிழ்ப் படங்களையோ தமிழ்ப் பாட்டுக்களையோ விரும்பிப் பார்த்ததோ கேட்டதோ கிடையாது.

மூன்றாவது, நான் பத்தாவது படித்து மாவட்டதிலேயே மூன்றாமிடம் பெற்ற போது என்னை ‘இந்தியா சிமெண்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் குடும்பத்தில் ஒருவரிடம் கூட்டிச் சென்றார். (திரு. நாராயணன் என்று நினைக்கிறேன்.) தாழையூத்தில் சங்கர் நகரில் அவரது வீடு இருந்தது. அவருடன் என் தகப்பனாருக்கு எப்படி அறிமுகம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு சங்கர் பாலிடெக்னிக்கில் சேர்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், என்ன காரணமோ தெரியாது நான் பாலிடெக்னிக்கில் சேரவில்லை. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தி வந்தேன். பண வசதி அதிகம் தேவைப்படும் என்று தெரிந்தும் நேர்முகத் தேர்வுக்கு என்னை சென்னைக்குக் கூட்டிக்கொண்டு போனார். யாருடைய சிபாரிசும் எனக்கு இருக்கவில்லை. பிற்காலத்தில் சென்னைப் பல்கலையின் பிரபலமான துணை வேந்தராக இருந்த திரு. மணிசுந்தரம் (என்றுதான் நினைக்கிறேன்) அவர்களது தலைமையில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது என்று ஞாபகம். (தவறாகக் கூட இருக்கலாம்.)  ஆனால், எனக்கு பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி. யூ. சி படிப்பதற்குச் சேர்த்து விட்டார். (கொஞ்சம் முரணாகவும் இருக்கலாம். பி. யூ. சிக்குப் பிறகு பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேனா அல்லது பத்தாவது முடித்துப் போனேனா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.)

அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நான் விடுமுறையில் வீட்டுக்கு வந்த பொழுது அவர் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அப்பொழுது ஏதோ பேச்சுக்கு நடுவே என்னிடம் “உன்னுடைய படிப்புக்கு என்னால் அதிகமாக உதவ முடியவில்லையே’ என்று கூறி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். ‘அதைப் பற்றி இப்பொழுது என்ன? எல்லாம் படித்து முடித்தாகி விட்டதே!’ என்று சமாதானப் படுத்த முயற்ச்சித்தேன். எனக்கும் மனது வேதனைப் பட்டது ‘அப்பாவை அதிகமாக காயப்படுத்தி விட்டேனோ’ என்று.

பின்னர், 1998-ல் ஸ்ரீஅம்மா பகவானின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் என் தகப்பனாரோடு கொண்டிருந்த உறவைப் பற்றி தீவிரமாக மனதுக்குள் அலசி ஆராய்ந்து ஆத்மார்த்தமாக என் தகப்பனாரின் ஆத்மாவிடம் என்னுடைய பல தவறுகளுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டேன். பிறகுதான் எனக்கே நிம்மதி வந்தது.

அவர், இன்று எந்த உலகத்தில் இருந்தாலும் என்னுடைய குறைகளையும், தவறுகளையும் மன்னித்து மனதில் கொள்ளாமல் என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ்த்தும் படி பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.


இந்தக் கட்டுரையை என் தகப்பனாருக்கே சமர்ப்பிக்கிறேன். 

Monday, February 27, 2017

What I found in my laptop: உறவுகளைப் பற்றி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது கண்ணில் பட்டது. கொஞ்சம் சரி செய்து கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி வணக்கம். 

26.02.17 
உறவுகளைப் பற்றி

நீ யார்?”
நான் ராமசாமி
அது உன் பெயர். நீ யார்?”
நான் சந்திரசேகரின் பையன்.”
நீ யார்?”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. “நான் சுந்தரம் அவர்களின் பேரன்.”
நீ யார்?”
விஜயின் சகோதரன்.”
நீ யார்?”
நான் யாரென்று எப்படி புரியவைப்பது. “நான் ஒரு மாணவன்.”
நீ யார்?”
மீண்டும் குழப்புகிறாரே? “நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன்.”
நீ யார்?”
நான் ஒரு இந்தியன்.”
நீ யார்?”
நான் ஒரு தமிழன்,”
இப்பொழுது உங்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருப்பவன்,”
ஒரு ஆண்

இப்படிப் பல பதில்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

வேறொரு நபரோடு, அல்லது ஒரு கூட்டத்தோடு, அல்லது ஒரு தொழிலோடு, அல்லது வேறொன்றோடு நம்மை உறவு (தொடர்பு) படுத்திக்கொள்ளாமல் நம்மால் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது. வேறொன்றும் இல்லையென்றால் நான் யார் என்று எனக்கே தெரியாது. நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன். இன்னாருடைய சகோதரி. இன்னாருடைய மாமாஒரு தமிழ்நாட்டுக்காரன்ஒரு சென்னைவாசி. லயோலா கல்லூரியின் மாணவன். விப்ரோ கம்பெனியில் வேலை பார்ப்பவன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முயற்சி செய்து பாருங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வீர்களென்று.

சிறிய ஆனால் மகத்தான இந்த உண்மையை எனக்கு ஒரு மகான் உணர்த்தினார். அது வரை நான் இதைப் பற்றி யோசித்தது கிடையாதுபெரும்பான்மையானவர்கள் என்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உறவுகள் இருக்கும் வரைதான் நான் இருக்கிறேன். உறவுகள் இல்லையென்றால் நானில்லை. தொடர்பு இருக்கும் வரைதான் உறவுகள் நீடிக்கும். சார்ந்தே தோன்றியிருக்கிறோம். சார்ந்தே மறைகிறோம். Everything in this world is dependently arising and dependently ceasing.

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெரிந்து கொண்டிருந்தால் நமது உறவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உறவுமுறைகள்தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இந்த உலகத்தில் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருக்கின்றன.

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்." என்று பாடியிருக்கிறார் பாரதியார். நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் விவசாயி. கஷ்டமோ நஷ்டமோ நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிடுகிறார். பயிர் விளைந்தவுடன், தனது தேவைக்கு மேலான விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே ஒரு வியாபாரி இவருடன் பேரம் பேசி ஒரு விலைக்கு அந்த விளைச்சலை வாங்கிக் கொள்கிறார். அலுவலகம் போய் வரும் இன்னொருவர் அந்த விளைச்சலை தனது வீட்டிற்காக வாங்கிக் கொண்டு போகிறார். அவருடைய மனைவி அந்த விளைச்சலை உணவாக சமைக்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். குப்பை சேருகிறது - உள்ளேயும் வெளியேயும். நகராட்சியிலிருந்து குப்பை அள்ள மற்றொருவர் வருகிறார். குப்பையை எங்கேயோ கொண்டு கொட்டுகிறார். நாட்பட நாட்பட அந்த குப்பை உரமாகிறது. அந்த உரத்திலிருந்து சத்தை எடுத்துக்கொண்டு வேறொரு செடி வளர்கிறது. மரமாகிறது. பூ பூக்கிறது. காய் காய்க்கிறது. காய் மீண்டும் உணவாகிறது. பூவை வேறொருவர் பறிக்கிறார். அதை கோவிலில் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு அர்ச்சகர் அந்த பூவைக்கொண்டு ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அந்த ஆண்டவன் மகிழ்ந்து பக்தனுக்கு நல்லது செய்கிறார். இப்படி எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருமே விவசாயிகளாகவே, அல்லது வணிகர்களாகவே அல்லது அலுவலகம் செல்வோர்களாகவே,  ஆண்களாகவே அல்லது பெண்களாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது இந்த பூமி முழுவதும் கடலாக இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?

நமக்கு உணவு தேவைப்படுகிறது. உணவு(உற்பத்தி)க்கு மழை, வெயில் தேவை. மழைக்கு மேகங்கள் தேவை, மேகங்களுக்கு நீர் தேவை. வெயிலுக்கு சூரியன் தேவை. குழந்தைக்கு அம்மா தேவை. அம்மாவுக்கும்  குழந்தை தேவை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படைப்பில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உறவு கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இப்படி ஒன்றோடொன்று சார்ந்திருக்கிற உறவுகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் பார்த்தால்........?

பல உறவுகளில் விரிசல்கள். ஓட்டைகள். காயங்கள், உடைசல்கள். பெரும்பாலும் நம்மால் பிறரை சகித்துக்கொள்ள முடியவில்லை. நமது அஹங்காரம் மேலோங்கி நிற்கிறது. 'நான்' என்ற நினைப்பு பல உறவுகளை பிரித்து விடுகிறது. மற்றவர்களை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணமும் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணமுமே மேலோங்கி நிற்கின்றன. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. பல உறவுகளில் சண்டை, சச்சரவு, அதையும் மீறி பகை. நம்பிக்கையின்மை, பொறாமை, குறை கூறுதல்  நிறைந்திருக்கின்றன. நம்மால் ஏன் மற்றவர்களுடன் - நமது மிக நெருங்கிய உறவுகளுடன் கூட - ஒத்துப் போக முடிவதில்லை.

பல உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறோம். ஒன்று நாம் காயப்பட்டவர்களாக இருக்கிறோம் (victim) அல்லது தியாகிகளாகிவிடுகிறோம் (martyr).

கணவன்மனைவி, அப்பாஅம்மா, குழந்தைகள், சகோதர சகோதரிகள், தாத்தாபாட்டி, பேரன்பேத்தி இப்படி நமது நெருங்கிய உறவுகளில் கூட நமக்கு பல குறைகள் இருக்கின்றன. இந்த குறுகிய வட்டத்திற்குள் கூட நல்ல உறவு கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மற்றவரை புரிந்து கொள்ளும் முயற்சி பலருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. மற்றவர்களின் நிலையில் நம்மை நிறுத்தி யோசிப்பதென்பது மிக அரிதாக இருக்கிறது. நமது நிலையிலிருந்தே எல்லாவற்றையும் எடை போடுகிறோம்.

ஒரு உதாரணத்திற்கு: பல வீடுகளில் கணவனுக்கு  அலுவலகத்திலும் மனைவிக்கு அடுப்படியிலும் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருவருமே அவரவர்கள் இடத்தில் வேலை செய்தால்தான் அடுத்தவர் சௌகரியமாக இருக்க முடியும். இருவருடைய வேலையிலும் கஷ்டங்கள் இருக்கின்றன. எதுவுமே எளிதான சமாச்சாரம் இல்லை. மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவிக்கு மாலையிலாவது கொஞ்சம் வெளியே போனால் தேவலை என்று தோன்றுகிறது. இரண்டு முரண்பட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து இருவருமே மீள முடிவதில்லை.

வசதியில்லாத ஒரு தம்பி. தனிக்கட்டை. கூடப்பிறந்தவர்கள் மூன்று நான்கு பேர்கள். தம்பியின் வயதான காலத்தில் அவரை யார் கவனிப்பது? அவரை கவனித்துக் கொள்வதால் தனக்கு என்ன லாபம் என்று பல குடும்பங்களில் கணக்கு போடுகிறார்கள்.
               
பெற்றோர்கள் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பல குழந்தைகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

குறைகள் இல்லாத உறவு முறைகளை எங்கே காண முடிகிறது. பல உறவுகள் தள்ளி நின்று அழகு பார்த்துக்கொள்ளும் வரை சரியாகத்தான் இருக்கிறது. கிட்ட வந்தால் பிரச்சினைதான்

உறவு முறைகளில் நாம் எல்லோரும் காணத் துடிப்பது அன்பு மட்டுமே. ஆனால், நாம் பொதுவாக காண்பதென்னவோ மிஞ்சியிருக்கும் காயங்கள், ரணங்கள், குற்ற உணர்ச்சிகள், பொறாமை, கோபங்கள், குறைகள், போன்றவை தான். இந்த உணர்ச்சிகளெல்லாம் இல்லாமலேயே நம்மை அந்த கடவுள் படைத்திருக்க முடியாதா? முடியாது என்று சொன்னால் கடவுளுக்கு அவ்வளவுதான் சக்தி என்று ஆகி விடும். முடியும் என்று சொன்னால், அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்ற கேள்வி எழும். இந்த உணர்ச்சிகளெல்லாம் இயற்கையானதுதானா? இயற்கையாக இருந்தால் மாற்ற முடியாதா?

உணர்ச்சி பூர்வமாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நமக்குத் துணை, தொடர்பு, சார்ந்திருத்தல் தேவைப் படுகிறது. அந்த துணைக்காக, தொடர்புக்காகத்தான் பல விதமாக ஏங்குகிறோம், பல காரியங்களைச் செய்கிறோம். இந்த தேவைகளே உறவை உருவாக்குகின்றன. உறுதிப் படுத்துகின்றன.

அன்பு, பாசம் என்பது ஒரு புறமிருந்தாலும் அதற்கும் கீழே ஒவ்வொருவரின் தேவை அடி மனதிலிருந்து வேலை செய்கிறது. பொதுவாக, வெகு சிலரைத் தவிர எதிர்பார்ப்புகளில்லாத   நிபந்தனைகளில்லாத அன்பையோ, பாசத்தையோ கொடுக்க முடிவதில்லை. It looks almost impossible to give or receive unconditional love to or from anyone. We all have expectations from our love, though many are subtle and unstated.

இந்த சார்ந்திருக்கும் நிலை தொடரும் வரை உறவுகள் விரிவதில்லை. சார்ந்திருக்கும் தேவை எங்கே அற்றுப் போய் விடுகிறதோ அங்கே உறவுகள் நீடிப்பதில்லை. சார்ந்திருப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உறுதி படுத்திக்கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், என் அஹங்காரம் தடுக்கிறதே? என்ன செய்வது?


Tuesday, November 22, 2016

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு



கடந்த வாரம் முழுவதும் எங்கே திரும்பினாலும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாததின் தாக்கத்தைப் பற்றியே இருந்தது. பல இடங்களில் சகஜ நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. சராசரி மக்களுக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அந்த அளவு பணம் பொதுவாக கிடைத்துக் கொண்டிருந்தது என்றுதான் தோன்றுகிறது. அடிமட்ட மக்களுக்கு அதுவும் கிராமப் புற மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வங்கிகளின் சேவையை அதிகமாக பயன்படுத்தாதவர்களுக்கு சில சங்கடங்கள் இருந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வரவேண்டும் (inclusive banking) என்ற அரசாங்கத்தின் அடிப்படை எண்ணம் மோடி ஆட்சி வந்த பிறகு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தூங்கியவர்கள் இப்பொழுது அவஸ்தைப் படுகிறார்கள். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அடிமட்ட ஏழை மக்கள் தான்.

இருந்தும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற மோடியின் அறிவிப்பிற்குப் பிறகு பொதுவாக எந்த வங்கியிலும் ரகளை நடக்கவில்லை. (பல அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன போலத் தோன்றுகிறது) ஒரு சில சங்கடங்களுக்கிடையே பெரும்பாலான மக்கள் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும், கீழ்மட்ட மக்களிடையே கொஞ்சம் தேவையில்லாத பீதி இருப்பதும் தெரிகிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் எதிர்மறையாக கருத்துக்களையே பரப்பி வருவதாகத் தெரிகிறது.

தங்கள் வங்கிக் கணக்குகளை பதுக்கல்காரர்களுக்கு வாடகைக்கு கொடுத்த பல சாமானிய மக்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பணப் பரிமாற்றத்துக்கு விரல்களில் மை வைக்க ஆரம்பித்த பிறகு பல வங்கிகளில் நீள வரிசைகள் மறைந்துவிட்டன.

வட இந்தியாவில்தான் அதிகமான எதிர்ப்புகள் இருப்பது போலத் தோன்றுகிறது. அங்கேதான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் போலும். முக்கியமாக பின் தங்கிய மானிலங்களான உ.பி, பிஹார் போன்ற இடங்களில். அங்கேதான் படிக்காதவர்களையும், ஏழைகளையும் வைத்து அரசியல் செய்வது இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாமல் போனதிலிருந்து பல எதிர்க் கட்சிகளுக்கு ஏழை பாழைகள் மீது அதீதமாக கருணை பொங்கி வழிகிறது. பா.ஜ.க அரசாங்கத்தை அடி, அடியென்று அடிப்பதற்கு இன்னொரு ஆயுதம் அவர்கள் கையில் கிடைத்திருக்கிறது. வழக்கம் போல நாடாளுமன்றம் செயல்படாமல் செய்திருக்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க பாராளுமன்றத்தை வேறு பல காரணங்களுக்காக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இனி எதிர்காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தொடரும் என்று  நம்புவோமாக.

இவ்வளவு ரகளையிலும் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ரொம்பவும் அடக்கி வாசித்து வருகிறார். ஓரளவு நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று முனைபவர்களில் அவரும் ஒருவர் என்று நான் நம்புகிறேன். துணிச்சலாக மதுவிலக்கை அமல் படுத்தியிருக்கிறார். ஆனால், லாலுக் கட்சியுடன் கூட்டணிதான் நெருடலாக இருக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தில் தென்காசி வருவதற்கு நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே நின்றிருந்துவர் பழைய ஒரு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விருதுநகருக்கு ஒரு டிக்கட் கேட்டார். டிக்கெட் பத்து ரூபாய்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். டிக்கெட் கௌண்டரில் இருந்த பெண்மணி எந்த எதிர்ப்பும் சொல்லாமல் டிக்கெட்டையும் கொடுத்து மீதிப் பணத்தையும் நூறும் பத்துமாகக் கொடுத்தார்.  விருதுநகருக்கு டிக்கெட் வாங்கியவர் கண்டிப்பாக விருதுநகருக்கு பயணப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். யாருக்கு உதவி செய்யவோ அல்லது கமிஷனுக்காகவோ 500 ரூபாயை மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் நான் எழுதி வெளியிட்ட “THE PATH” என்ற கதைப் புத்தகத்தின் முதல் பிரதி www.pothi.com-லிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது. புத்தகத்தின் அட்டை மிக நன்றாக வந்திருந்தது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தென்காசி சுந்தரம் பிரஸ் ப்ரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி. THE PATH நூலை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

                                                            … மீண்டும் சந்திக்கலாம்.



Saturday, October 22, 2016

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

ஒவ்வொரு வாரமும் அந்தந்த வாரத்தில் ஏற்பட்ட சில சுவையான அனுபவங்களைப் பற்றியும் என்னை பாதித்த செய்திகளைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கலாம் என்று கடந்த வாரம் இந்தத் தொடரை ஆரம்பித்தேன். இது இரண்டாவது வாரம். பார்க்கலாம் எத்தனை வாரங்கள்தான் எழுத முடிகிறது என்று.

கடந்த வாரமும் நான் எழுதி வெளியிட்ட இளைஞர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்காக பல பள்ளிகளுக்கு விஜயம் செய்தேன். மதுரைக்கு வெளியே சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுவாக மதுரை நகரத்தில் பெரிய ஏமாற்றமே எனக்குக் கிடைத்தது. மதுரையில் பெரிய பள்ளிகளில் முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இதை அவர்களின் நஷ்டமாகவே நான் கருதுகிறேன்.

திருத்தங்கல் மற்றும் விருதுநகர் சென்று திரும்பும்பொழுது நாலு வழிச்சாலையில் கும்பகோணம் டிகிரி காஃப்பி என்ற விளம்பரப் பலகை என்னை ஈர்த்தது. இந்தப் பலகையை பல இடங்களில் நான் பார்த்திருந்தாலும் எங்கேயும் அந்த காஃபிக்காக நான் நின்றதில்லை. ஒரே ‘ப்ராண்டின்’ பல காஃப்பிக் கடைகள். நல்ல விளம்பர யுத்தி – அமெரிக்காவில் மேக் டோனால்ட், ஸ்டார் பக்ஸ், பர்கர் கிங்  போன்று. எந்தக் கிளைக்குப் போனாலும் ஒரே தரத்தில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம்மூர் சரவண பவனும் இதே யுத்தியைத்தான் கடைபிடிக்கின்றனர். காஃபி – சிக்கரி கலந்ததுதான் – நன்றாகவே, சூடாக இருந்தது. பெரும்பாலும், பல ஹோட்டல்களில் காஃபி நமது டேபிளுக்கு வரும்பொழுது ஆறிக் குளிர்ந்திருக்கும். நான் காஃப்பி சாப்பிட்ட இடத்தில் பலர் குடும்பத்தோடு அமர்ந்திருந்தனர். குறைந்தது பத்து – பன்னிரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. காஃபிக் கடையின் ஒரு மூலையில் ஒரு பெண்மணி சுடச் சுட பஜ்ஜி, வாழைப்பூ வடை தயார் பண்ணிக்கொண்டிருந்தார். என் நாக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஜ்ஜியும், வடையும் மிகச் சுவையாகவே இருந்தன.

இந்த degree coffee- க்கு ஏன் அப்படியொரு பெயர் என்பதைப் பற்றி இணைய தளம் ‘கோரா’வில் பல வித விளக்கங்கள் படிப்பதற்கு சுவையாக இருந்தது. அதில் ஒன்று 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் ஒரு முறை தஞ்சாவூரின் கலெக்டருக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு சமையற்காரர் அளித்த காஃபியை அவர் மிகவும் விரும்பி அருந்தியிருக்கிறார். அதற்குப் பிறகு அதே போன்ற காஃபியையே தனக்கு எல்லா இடங்களிலும் வழங்க வேண்டும் என்று decree (order) போட்டிருக்கிறார். அதனாலேயே அந்த காஃப்பிக்கு கும்பகோணம் டிக்ரி காஃபி என்று பெயராம்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒரு பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் பாதையோரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சில குடும்பங்கள் ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிசி’ல் செய்யப்பட்ட அழகிய கொலு பொம்மைகளை விலைக்காக வைத்திருந்தார்கள். அதில் நான்கைந்து பொம்மைகளை வாங்கிக்கொண்டேன். பல பத்தாண்டுகளாக தமிழ் நாட்டிலேயே இப்படி பாதையோரத்தில் வசித்துக்கொண்டு அவர்கள் பொம்மைகள் தயாரித்து வருவதாக அங்கே என்னுடன் பேரம் பேசிய சிறுவன் கூறினான். அவனுக்கு பன்னிரண்டு வயதிருந்தால் அதிகம். அவனுடன் நான் ஹிந்தியிலேயே பேசினேன்.  ஒரு சிறுவனுடன் பேரம் பேசுவதற்கு எனக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. இருந்தும் இரட்டிப்பாக விலை சொல்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். பேரம் பேசியதில் சுமார் நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொண்டான். ‘ஏம்பா, நீ பள்ளிக்குப் போவதில்லையா’ என்று கேட்டதற்கு ‘ஓ, போகிறேனே, எங்கள் ராஜஸ்தானில். அப்பப்போ விடுமுறை எடுத்துக்கொண்டு விடுவேன்’ என்றான். கூடவே ஒரு சிறுமியும் வந்து விட்டாள். பொம்மைகளை வாங்கிக்கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பும்பொழுது அந்தச் சிறுவன் ‘சார், டீக்கு பணம் கொடுங்க சார்’ என்றான். அவன் கேட்ட விதம் மனதை நெருடியது. ‘ஏம்பா, எல்லாத்துக்கும் சேர்த்துதானே பணம் கொடுத்தேன்’ என்றேன். ‘இல்லை, சார். அந்தப் பணம் அந்தப் பெரியவருக்குப் போய் விட்டது. எனக்கு டீ குடிப்பதற்குப் பணம் கொடுங்க சார்’ என்றான். ஒரு முப்பது ரூபாயைக் கொடுத்த போது ‘ரொம்ப நன்றி, சார்’ என்றான். காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது இது போன்ற உழைப்பாளிகளிடம் பேரம் பேசியது தவறோ என்று என் மனம் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டியது.

ஒரு அவசர வேல நிமித்தமாக மீண்டும் தென்காசிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. வீட்டிற்குச் சென்று பார்த்தால் கிணற்றில் தண்ணீரில்லை. குழாயின் ஆழத்துக்கும் கிழே தண்ணீர் இறங்கி விட்டது. அடுத்த வாரம் தென்காசிக்கு நிரந்தரமாக மீண்டும் திரும்பும்பொழுது எப்படி சமாளிப்பது என்ற கவலை தொற்றிக் கொண்டது. யாரிடம் பேசினாலும் தண்ணீர் பிரச்சினையைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மூன்று மாதமாக தென்காசியில் சொட்டு மழை இல்லை. விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன. வடகிழக்கு பருவ காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் வீணே கடலில் கலக்கிறது. மழை பெய்யாத காலங்களில் பல ஏரிகளையும், குளங்களையும் சீர் செய்யலாம்.  மழை பெய்யும் பொழுது உதவியாக இருக்கும். மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ இதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் இருப்பது போலத் தெரியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி வீட்டுக்குள் யாருக்கும் குடிதண்ணீர் கிடைக்காதது பற்றி இரண்டு முறை பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கதை தமிழ் நாட்டின் பல இடங்களில் நடக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு எது எதைப் பற்றியெல்லாமோ கவலைப்பட வேண்டியிருக்கிறது … தேர்தல்கள், காவிரி மேலாண்மை வாரியம், தலைவர்/தலைவியின் உடல் நிலை அல்லது அவர்களின் குடும்பப் பிரச்சினை … இப்படிப் பலவற்றின் நடுவே சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை கவனிப்பதற்கு எங்கே நேரம். தமிழ்நாட்டின் தலையெழுத்து.

அன்றைக்கு ஜெயகாந்தன் எழுதிய ‘பிரம்மோபதேசம்’ என்ற இரண்டு  நீண்ட சிறு கதைகள் அடங்கிய புத்தகத்தைப் இந்த வாரத்தில் படித்து முடித்தேன். அதில் முதல் கதை ‘பிரம்மோபதேசம்’. இதில் சாஸ்திரங்களை கடுமையாக பின் பற்றும் ஒரு பிராமணரின் மகள் சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞனுடன் அவரை மீறி திருமணம் செய்துகொள்ள முனைப்படுகிறாள். அதே நேரத்தில் கோவிலில் தேவாரம் பாடும் எந்த ஜாதியையோ சேர்ந்த இன்னொரு இளைஞருக்கு அவருடைய கட்டுப்பாடான, நெறி தவறாத பண்புகளைக் கண்டு அந்த பிராமணர் பூணுல் அணிவிக்கிறார். ஜெயகாந்தன் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் பிராமணக் குடும்பங்களைப் பற்றியது என்று ஞாபகம். பிராமண குடும்பங்களில் பல அவலங்களைப் பற்றி துணிந்து எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை மிக அதிகமாக ரசித்தவர்களும் பிராமணர்கள்தான் என்பது என் கருத்து. பிராமணர்களின் பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அப்படி கதைகளை அமைத்தாரா அல்லது பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களை எதிர்ப்பதாக நினைத்து எழுதினாரா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். மேலும் கம்யூனிசத்தை மிகவும் விரும்பியவர் அவர். இரண்டாவது கதை ‘இலக்கணம் மீறிய கவிதை’ இதில் ஒரு வேசி தன் தொழிலின் நிர்பந்தத்துக்காக செய்யக்கூடிய பல செயல்களை மீறி எப்படி அதே தொழிலில் தனக்குப் போட்டியாக இருக்கும் இன்னொருத்திக்கு உதவி செய்கிறாள். அந்த வேசியால் ஈர்க்கப்பட்ட இலக்கணத்தை மீறி கவிதை எழுதும் ஒருவர் எதிர்பாராமல் அதற்கு எப்படி துணை போகிறார் என்பது பற்றிய கதை. ஜெயகாந்தன் பல கதைகளில் வேசிகளைப் பற்றியும் வாழ்க்கையில் தடம் புரண்ட சில குடும்பப் பெண்மணிகளைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்.

இரண்டு கதைகளும் இன்றைக்கும் படிப்பதற்கு நன்றாகவே இருந்தது.

அடுத்ததாக நான் படித்துக்கொண்டிருப்பது “HEALTHY MIND, HEALTHY BODY: NEW THOUGHTS ON HEALTH” என்ற ராமகிருஷ்ண மடத்தின் வெளியீட்டில் வந்த ஒரு புத்தகம். இன்னும் முடிக்கவில்லை.  உடம்பு ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமான மனது தேவை என்பதைப் பற்றி எங்கள் அம்மா பகவானின் பல நிகழ்ச்சிகளில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பழி தீர்க்கும் மனோபாவம், குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வெட்க உணர்ச்சி, தன்மானமின்மை, இப்படி மனதின் பல வியாதிகள்தான் உடம்பில் பல பகுதிகளில் வியாதிகளாக பெரும்பாலும் தோன்றுகின்றன என்பதை நான் முழுவது நம்புகிறேன். ஆனால், மனதின் வியாதிகளிலிருந்துதான் விடுபட முடியவில்லை. ஒரு சில ஆன்மீக வகுப்புகளுக்குப் போகும்பொழுது ஏதோ கொஞ்சம் இந்த வியாதிகளிலிருந்து விடுபடுவதுபோலத் தோன்றுகிறது ஆனால் அந்த வகுப்புகள் முடிந்து மீண்டும் அன்றாட அல்லல் வாழ்க்கையில் உழலும்போது மீண்டும் இந்த வியாதிகள் தங்கள் பலத்தைக் காட்டுகின்றன. நிரந்தரமாக விடுதலையடைவதற்கு பயிற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு நாளில் பல வேலைகளுக்கு நடுவே இந்தப் பயிற்சிகளுக்கு மட்டும் நேரம் ஒதுக்குவதற்கு முடிவதில்லை. நம்முடைய முக்கியத்துவங்கள் எவை என்பதைப் பற்றி நாம் பொதுவாக சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். தினப்படி வாழ்க்கையை ஒரு விழிப்புணர்ச்சியோடு நடத்தி வருவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது மீண்டும் மனதில் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்கிறேன். தீர்மானத்தைத் தொடரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாக தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்து வருகிறேன். முன்பெல்லாம் தூர்தர்ஷனின் ஒரு சேனல் மட்டுமே இருந்த காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரங்கள் நடு நடுவே வருவதில்லை. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளை மட்டும் இந்தியாவில் இருக்கும் பொழுது தவறாமல் பார்த்து விடுவேன். முன்பெல்லாம் திரைப் படங்களை மிகவும் விரும்பிப் பார்த்தவன் நான். ஆனால், இப்பொழுது வெளியாகும் பல படங்கள் என்னை ஈர்ப்பதில்லை. ஒரு சில பிரபலங்கள் நடித்த ஒரு சில படங்களைப் பார்த்த போதிலும் அவற்றில் பெரும்பாலும் குறைகளையே அதிகமாக கண்டிருக்கிறேன். ‘உனக்கு வயதாகி விட்டது. உன்னுடைய ரசனை மாறிப் போனால் யாரைக் குற்றம் சொல்ல முடியும்’ என்று சென்னையில் வசிக்கும் என் தம்பி சொல்கிறான். நேற்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகு உடனடியாக வேறு எதுவும் செய்வதற்க்கு இல்லாத நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை ‘ஆன்’ செய்ததில் ‘ராசுக்குட்டி’ என்ற பாக்கியராஜ் படம் ஓடிக்கொண்டிருந்தது. பல பாக்கியராஜ் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். பொதுவாக பல படங்களில் ஒன்றும் அறியாத சாது போல வருவார். ஒரு பெண்ணை விரும்புவார். பல குழப்பங்கள் வரும். நடு நடுவே நன்கு சிரிக்கக்கூடிய விரசமில்லாத (ஒரு சில நேரங்களில் விரசமான) நகைச்சுவைக் காட்சிகள் வரும். பல வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும். இப்படி ஒரு கூட்டுக் கலவையாக ஜனரஞ்சகமாக படம் போகும். அப்படித்தான் ‘ராசுக்குட்டி’யும் இருந்தது. பொழுது போனது தெரியவில்லை. பாக்கியராஜைப் போல விசுவின் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
          
          மதுரை நகரம் எனக்குப் பிடிக்காது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இருந்தும், மதுரை ஒரு அதிசயமான ஊர் என்பதை நான் ஒத்துக்கொண்டாக வேண்டும். கடந்த வாரத்தில் ஒரு நாள் என் பேரனுக்காக பொம்மை வாங்க இணையதளத்திலிருந்து ஒன்றிரண்டு பொம்மைக் கடைகளின் விலாசத்தைத் தெரிந்துகொண்டு மதுரை ஊருக்குள் சென்றேன். ‘அப்பப்பா!’ மேல ஆவணி மூல வீதியிலும் அதற்கருகிலும்தான் எவ்வளவு கடைகள். எவ்வளவு சந்துகள். வித விதமாக என்னென்னவோ பொருட்கள் வாங்கலாம். எல்லாவற்றையும் கூட வாங்கலாம் என்று கவரக்கூடிய கடைகள். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. கையை இறுக்கக் கட்டிக்கொண்டு பல ஈர்ப்புகளையும் தாண்டி (நான் தேடிய பொம்மைகள் கிடைக்கவில்லை.) வேறு ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். டில்லியில் அஜ்மல்கான் ரோட்டிலும் சாந்தினி சௌவுக்கிலும் இது போன்ற ஈர்ப்புகளை அனுபவித்திருக்கிறேன்.

                                                                                    … தொடரும்