Total Pageviews

Showing posts with label Neelakantan's Diary. Show all posts
Showing posts with label Neelakantan's Diary. Show all posts

Sunday, October 15, 2017

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

15.10.17 தென்காசியிலிருந்து ஒரு முதல் தகவல் அறிக்கை

காலத்தின் கட்டாயத்தால் சுமார் பத்து மாதங்கள் அமெரிக்காவில் ஓட்டிவிட்டு தென்காசிக்குத் திரும்பியவுடன் அன்றாடத் தேவைகளுக்காக மார்க்கெட்டுக்கு விசிட் அடித்ததில் நான் கற்றுக் கொண்டவை இதோ.

அதற்கு முன்…

கடந்த பத்து மாதங்களில் என்னை பாதிக்காதவை என்று பட்டியலிட்டால்.. .
     1.      நவம்பர் 2016-ல் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லாததாகியது
  2.     மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணமடைந்த நாளையொட்டி எங்களுடைய அமெரிக்கப் பயணமே நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்குப் பிறகு நடந்த பல சுவாரசியமான திடீர் திருப்பங்கள், திகில்கள், நகைச்சுவைகள் கலந்த பல அரசியல் நாடகங்கள்
     3.     ஜி. எஸ். டி அறிமுகப்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட பல குழப்பங்கள்
  4.     பல சேவைகளுக்கு ஆதார் இணைப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற கவலைகள்
   5.     நடிகர் கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வருவார்களா, வர மாட்டார்களா, அவர்கள் வந்து விட்டால் இனி தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா – இப்படி மக்களுக்கு கவலைகள் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு நிறைய கவலை.
  6.     எல்லா பத்திரிகைகளிலும் எதிரொலித்த கொசு, டெங்கு பற்றிய பயமுறுத்தல்
      7.     நீட் தேர்வு பற்றிய சர்ச்சைகள், போராட்டங்கள்
    8.     திருமதி சசிகலாவை யார் யார் சந்தித்தார்கள் போன்ற சுவாரசியமான தகவல்கள்
    9.     முக்கோண அரசியல் கட்சி இப்பொழுது இரு கோணமாக வளைந்து நிற்பது
    10.  மழையில்லை, தண்ணீரில்லை, மின் வெட்டு, கொசு, குப்பைகள், விலை உயர்வு, ஃபோன் கனெக்ஷன், இன்டெர்னெட் கனெக்ஷன் சரியில்லை, கேபிள் டீ வியில் பல சேனல்கள் சரியாகத் தெரியவில்லை போன்ற புகார்கள்

இப்படி பல. அமெரிக்காவில் கழித்த பத்து மாதங்களில் ஒரு தாயின் வயிற்றில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக இருப்பது போல எந்தக் கவலையுமற்று இருந்தோம்.

சரி, இங்கே இப்பொழுதுள்ள ரியாலிடி செக்...

கடந்த இரண்டு நாட்களில் நான் தெரிந்து கொண்டது…
     1.     நாங்கள் வழக்கமாக வாங்கும் பலசரக்குக் கடையில் எந்த மாற்றமுமின்றி முன் போல பணம் பரிமாற்றம் மூலம் மட்டுமே வியாபாரம் நடந்து வருகிறது. டெபிட், கிரெடிட் கார்ட் தேய்ப்பதற்கான வசதி கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கேட்டால், இந்த ஊருக்கு அதெல்லாம் சரிப்படாது சார் என்றார் கடைக்காரர். எல்லோர் கையிலும் 500 ரூபாய் நோட்டுத் தாள்கள் புரண்டு கொண்டிருக்கிறது. எல்லா சில்லரை வியாபாரிகளும் பொதுவாகப் பணமாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள்.
    2.     ஒரு சில மக்களே ஜி. எஸ். டியை வரவேற்கிறார்கள். பெரும்பாலும் பில் இல்லாமல் வரி கொடுக்காமலே பொருட்களை வாங்கிப் பழகி விட்டதால் இன்று வரி போட்டால் ஆத்திரப்படுகிறார்கள். கறுப்புப் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் பழைய முறையே பலருக்கும் பிடித்திருக்கிறது.
  3.     ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் சொன்னார், ‘எப்ப நோட்டுக்களை செல்லாததாக்கினாங்களோ அப்பதிலிருந்தே எங்க வியாபாரம் படுத்துடிச்சு, சார்’ என்று. ‘ஏன்யா, அதுக்கும் நீ ஆட்டோ ஓட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்,’ என்று கேட்டால் எனக்கு பொருளாதாரம் சொல்லிக் கொடுக்கிறார்.
     4.     நிலம், வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி விற்பது படுத்து விட்டது. விலையும் குறைந்திருக்கிறது. வாங்குவதற்கும், விற்பதற்கும் யோசிக்கிறார்கள். கறுப்புப் பணம் இல்லாமல் வாங்குவதும் விற்பதும் இன்றும் முடியாதே. ஒரு வியாபாரி சொன்னது, ‘வெள்ளை சட்டை, கரை வேட்டியோட சுத்தினவங்க எல்லாருடைய கொட்டமும் கொஞ்சம் அடங்கியிருக்கு சார்.’
   5.     இன்னொரு வியாபாரி சொன்னது, ‘சார், முன்னெல்லாம் எங்க கடை முன்னால பில் இல்லாம லாரிகளில் சரக்கு வந்தா ஏதோ பெயருக்கு ஃபைன் போடுவாங்க, கொஞ்சம் கையில பணம் வாங்கிப்பாங்க. அவ்வளவுதான். இப்பல்லாம், பில் இல்லாம பிடிச்சாங்கன்னா, லாரியோட அதிகாரிங்க கொண்டு போயிடறாங்க.’ பில் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கு இப்பொழுது வியாபாரிகளிடையே கொஞ்சம் பயம் இருக்கிறது.
     6.     நல்ல தரமான அரிசி 10 மாதம் முன்பு கிலோவுக்கு 56 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இன்று அதே அரிசி 60 ரூபாய். 8% விலை உயர்வு. பல பொருட்களின் விலையேற்ற இறக்கங்கள் குறிப்பிடும் படியாக இல்லை.
   7.     தினந்தோறும் வீட்டுக்குப் பால் கொடுப்பவர் இப்பொழுது பசும்பால் மட்டுமே கொடுக்கிறார். எருமை வைத்து கட்டுப்படியாவதில்லையாம்.
     8.     பி. எஸ். என். எல் ஊழியர்கள் ஒரே நாளில் என்னுடைய வீட்டு தொலைபேசி, இன்டெர்னெட் வசதியை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். புகாருக்கு உடனே கவனம் கொடுத்த பி. எஸ். என்.எல்-லை பாராட்டியே ஆக வேண்டும். பல தனியார் நிறுவனங்களின் போட்டி இருப்பதால் பொதுவாகவே அவர்களது செயல்களில் வேகம் தெரிகிறது. 4-ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் பி. எஸ். என். எல் போட்டி போட்டு 420 ரூபாய்க்கு 90 நாட்களுக்கு சிம் கார்டு கொடுக்கிறார்கள் என்று டீலர் சொல்கிறார்.
    9.     வீட்டுக் குழாயில் தண்ணீர் ஆறு மாதத்துக்கும் மேல் வருவதில்லையாம். மாதா மாதம் குடி நீர் கட்டணம் மட்டும் சரியாக வாங்கிக் கொள்கிறார்கள். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போக வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.
   10.  டெங்குக் காய்ச்சலுக்கென்று வீடு வீடாக நிலவேம்புக் கஷாயம் கொண்டு வந்து கொடுத்தார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஆனால், விடுமுறை என்பதினாலோ என்னவோ நேற்று பஞ்சாயத்து அதிகாரிகளைக் காணோம்.

இன்னும் ஆறு மாதம் ஓட்டியாக வேண்டும். பல உருப்படியான திட்டங்களோடு வந்திருக்கிறேன். நவம்பர் 14-ஆம் தேதி அரசுப் பள்ளிகளுக்காக ஒரு வினாடி-வினா போட்டியும், நவம்பர் 18-ஆம் தேதி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்காக இன்னொரு வினாடி-வினா போட்டியும் எங்கள் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்னும் சில திட்டங்கள் மனதில் உள்ளன. இறைவன் அருளால் நிறைவேறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

வாழ்க தென்காசி, வளர்க தமிழகம். ஜெய் ஹிந்த்!


Monday, October 09, 2017

10.10.17 மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல்

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல் ஒரு உயர்ந்த குணம் என்பதை எல்லோரும் சொல்வார்கள். ஆனால், நம் எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா? இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நானும் பல முறை முயன்று பார்த்திருக்கிறேன். என்னாலும் முடியவில்லை. ஏன் என்று ஆராய்ந்து பார்த்து வருகிறேன்.

முதலில் நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் என்னாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்படியாக இருக்க முடியும். நானே ஏதோ ஒரு வித வருத்தத்தில், ஏமாற்றத்தில், மன அழுத்தத்தில், குற்ற உணர்ச்சியில் இருந்தால் என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவ்வப்பொழுது வரும் கொஞ்சம் மகிழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை. வருத்தமும் அப்படித்தானே! அவ்வப்பொழுது வரும், போகும். அதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. மூழ்கி விடுகிறோம்.

நான் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் ஒரு கருவியாக இருப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அந்த நேரங்களில் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நான் முயன்று எதையும் செய்யத் தேவையில்லை. என்னுடைய சொல்லும், செயலும் மற்றவர்களுக்குத் தானாகவே மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால், நானே ஏதோ ஒரு காரணத்துக்காக வருத்தமாக இருந்தால் அந்த நேரத்தில் என்னுடைய சொல்லும் செயலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. பல நேரங்களில் அவர்களுக்கும் வருத்தத்தைத் தான் கொடுக்கும்.

அதனால் நான் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது? நான் செய்யக்கூடியது எல்லாமே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? நேற்று எனக்குப் பிடித்த ஒரு பாட்டை கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் அதே பாட்டைக் கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா? தெரியாது. இது ஒரு பிரச்சினை.

எந்த ஒரு காரியமும் எல்லா நேரங்களிலும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. என்னுடைய மகிழ்ச்சி பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. நேரம், இடம், சூழல், மனம் இப்படி பல விஷயங்கள் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.

அப்படியானால், என்னால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாதா?

முடியும்.

எப்படி?

நானே அந்த மகிழ்ச்சியாக இருந்தால்…அது எனக்குத் தெரிந்திருந்தால்…
ஒரு விளக்கொளிக்கு தான் ஒளி வீசுகிறோம் என்ற நினைப்பு இருக்குமா? அந்த ஒளி விளக்கு தான் தான் என்ற விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு எப்பொழுது வரும்? தானாகவே வருமா அல்லது நாம் அதைத் தேட வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


(ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய நிர்வாண ஷட்கம் பாடலை சமீபத்தில் இன்னொருவர் பாடக் கேட்டு, மனம் லயித்து ஈர்ர்க்கப்படு ‘சிதானந்த ரூப சிவோஹம் சிவோஹம்’ என்ற அந்தப் பாடலையும் அதன் அர்த்தத்தையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடலைக் கேட்டு விடுவேன். அதனுடைய தாக்கம் தான் இந்தப் பதிவு.)

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்

08.10.17 நானும் ஹிந்தி திரைப்படப் பாடல்களும்
            
     வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இருக்கும் அடையாளங்களில் அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் அசை போடுவதும் ஒன்று என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒன்று அந்த நினைவுகளை எதிர்பாராமல் தூண்டிவிடும்.
            
                         நேற்று எதேச்சையாக முக நூலில் ஒரு நண்பர் ‘ஆர்ஸு’ என்ற ராஜேந்திரக் குமார் – சாதனா நடித்த படத்திலிருந்து ‘ஹஜி ரூட்கர் அப் கஹான் ஜாயியேகா’ என்ற லதா மங்கேஷ்கரின் பாடலை பதிவு செய்திருந்ததைக் கேட்டு நினைவுகள் ராக்கெட் வேகத்தில் திருநெல்வேலியில் ரத்னா தியேட்டரில் இந்தப் படம் 1965-ல் திரையிடப்பட்ட காலத்தை நோக்கி விரைந்தது.
            
                          அன்றைய காலங்களில் ஒரு சில குறிப்பிட்ட பிரபல ஹிந்திப் படங்கள் மட்டுமே திருநெல்வேலியில் திரையிடப்படும். அது போன்று திரைக்கு வந்த படங்களில் ‘ஆர்ஸூ’-வும் ஒன்று. திரைக்கு வந்த ஹிந்திப் படங்களும் அதிக பட்சம் ஒரு வாரம் ஓடும். ‘ஆர்ஸூ’ படத்தில் எனக்குப் பிடித்த சங்கர் – ஜெய்கிஷன் இசை. ஒரு வாரமே ஓடிய இந்தப் படத்தை நான் (எனது இன்னொரு கல்லூரித் தோழரும் கூட) ஐந்து முறை பார்த்திருக்கிறேன். ஆர்ஸூவில் ஒவ்வொரு பாட்டும் ஹிட். மனதைத் தொடும். கொஞ்சம் காதல் உணர்ச்சி இருந்தால் மனதைப் பிசையும். (இன்று அதே ‘ஹஜீ ரூட்கர்’ என்ற அருமையான பாடலைப் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது என்ற நினைப்பு மேலோங்கி நிற்கிறது. நடிகர் நடிகையர் அங்கே இங்கே ஒன்றிரண்டு அடி நகருகிறார்கள். வயலினும் சித்தாரும் ஒலிக்கும் பொழுது பியானோவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மேற்குடி மக்களின் தாம்பீக வாழ்க்கை. வாயில் பைப். அவ்வளவு தான்.)
            
                             என் மனம் உடனே ‘பீகி ராத்’ என்ற இன்னொரு ஹிந்திப் படத்துக்குத் தாவியது. இதில் ரோஷன் அவர்களின் இசை. ஒவ்வொரு பாடலும் ஹிட். இதில் இறுதியாக வரும் ‘தில் ஜோ ந கஹ சகா’ என்ற பாடலுக்காகவே திருநெல்வேலி ராயல் தியேட்டரில் ஓடிய ஏழு நாட்களில் ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.
            
                           இன்னொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் அது 1964-ல் வெளி வந்த ராஜ் கபூரின் ‘சங்கம்.’ என் நினைவுப் படி அந்தக் காலத்தில் மிக அதிக நாட்கள் திருநெல்வேலியில்  ஓடிய படம் இது தான். சுமார் ஒரு மாதம் ஓடியது. இந்தப் படத்தையும் அதன் பாட்டுக்களுக்காகவே பல முறை – எத்தனை முறையென்று நினைவில்லை – பார்த்திருக்கிறேன்.

             இந்தப் படம் லக்ஷ்மி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த போது எனக்கு முக்கியமான தேர்வுகள் கல்லூரியில் ஆரம்பித்திருந்ததாக நினைவு. முதல் தேர்வு ஆங்கிலம். தேர்வுக்கு முந்தின நாள் ஐயப்பனுக்கு விசேஷமான நாள். எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு ஐயப்பன் கோவில். மாலை மூன்று நான்கு மணிக்கெல்லாம் கோவிலில் விசேஷத்தை முன்னிட்டு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலி பரப்பத் தொடங்கி விட்டனர்.

     எனக்கோ பின் புலத்தில் இசை ஓடிக் கொண்டிருந்தால் படிப்பதில் கவனம் செலுத்த முடியாது. பாடல்கள் நிற்பதாகத் தெரியவில்லை. பார்த்தேன். திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நேரே லக்ஷ்மி தியேட்டரை நோக்கி நடந்தேன். சங்கம் படம். அந்தக் காலத்து தரை டிக்கெட் – 31 பைசா – கிடைத்தது. அந்த வகுப்பு டிக்கெட்டுக்கு எங்கள் நண்பர்களிடையே வைத்த பெயர் ‘சுண்டல்’. 31 பைசாவை சுண்டிவிட்டு டிக்கெட் வாங்கி ‘தோஸ்த் தோஸ்த் நா ரஹா’ பாடல் வரை படம் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். பின்பு இரவு 12 மணி வரை தேர்வுக்குப் படித்தேன். அடுத்த நாள் தேர்வும் நன்றாகவே எழுதியிருந்தேன். பொதுவாக பாட சம்பந்தமாக நான் மெத்தனமாக இருக்க மாட்டேன் என்று வீட்டில் தெரியும். அதனால் என்னை எதுவும் குற்றம் சொன்னதில்லை.  இறுதித் தேர்வுக்கு முந்தின நாள் துணிச்சலாக திரைப்படம் பார்த்த மேதாவிகளில் நானும் ஒருத்தன்.

    அது போன்று ‘ராஜ்குமாரி’ என்று ஒரு படம் வந்தது. அதிலும் சங்கர் ஜெய்கிஷன் இசை. (உண்மையில் சங்கரின் இசை). குப்பைப் படம். ஆனாலும், ‘ஆஜா, ஆயே பஹார் தில் ஹை’ என்ற பாட்டுக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன்.


      திடீரென்று நினைவுகள் அறுந்து விட்டன……..

Saturday, September 30, 2017

30.09.17 நவராத்திரியும் நானும்

30.09.17 நவராத்திரியும் நானும்

நவராத்திரி கொலுவில் மட்டும் என்றில்லை, பொதுவாக எந்த பூஜைகளிலும் முன்பெல்லாம் நான் அதிக ஈடுபாடு காட்டியது கிடையாது. நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் வீட்டிலும் கொலு வைத்தது உண்டு. எங்கள் அம்மாவுக்கு கொலு, பஜனை, பாட்டு, கச்சேரி இதிலெல்லாம் நிறைய ஆர்வம் உண்டு. ஒரு காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் கொலு வைப்பதும் நின்று போய் விட்டது. ஆனால், திருமணமான பின்பு என் வீட்டிலும் இதுவரை கொலு வைத்ததில்லை.

அடிக்கடி மாற்றல் நடக்கும் வங்கி வேலையில் இருந்ததால் நவராத்திரி நேரத்தில் பல ஊர்களில் இருந்திருக்கிறோம். அசாம் கௌஹாத்தியில் இருந்த சமயம் பல துர்கா பூஜா பந்தல்களுக்குப் போய் வந்த ஞாபகம் இருக்கிறது.

நவராத்திரி பூஜையில் முழு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்ரீஅம்மா பகவானின் இயக்கத்தில் இருந்த சமயத்தில்தான்.  நவராத்திரிக்கு முன்பு அமாவாசையன்று பித்ரு ப்ரீதி பூஜையோடு தொடங்கும். முதல் மூன்று நாட்களுக்கு துர்கா பூஜாவாகவும், இரண்டாவது மூன்று நாட்களுக்கு லக்ஷ்மி பூஜாவாகவும், மூன்றாவது மூன்று நாட்களுக்கு சரஸ்வதி பூஜாவாகவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  முக்கிய சங்கல்பத்தோடு சிறப்பாக பூஜைகள் செய்து வந்தோம். பூஜைகளை ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே, ஆனால் கூட்டாக ஒரே இடத்தில் வைத்து, செய்வார்கள். வேதத்தின் ஒரு சில பகுதிகளையாவது இன்று நான் தெரிந்து வைத்திருப்பதற்கு ஸ்ரீஅம்மா பகவானுடன் நாங்கள் கொண்ட தொடர்பின் பாதிப்பே காரணம். அந்த நாட்களில் பூஜை முறைகளை ஓரளவு நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.

தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்வதற்கு பல வீடுகளிலிருந்து என் மனைவிக்கு அழைப்பு வரும். கடந்த பத்து ஆண்டுகளில், என் நினைவு சரியாக இருந்தால், இரண்டே இரண்டு முறை மட்டும் கொலு வைத்திருந்த வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முறை கொலுவில் பாடியிருக்கிறேன். மற்றபடி என் மனைவி கொண்டு வரும் சுண்டல்களை ரசித்து உண்டதைத் தவிர நான் தீவிரமாக நவராத்திரி பண்டிகையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை.  

ஆனால், இசையில் ஈடுபாடு இருந்ததால், நவராத்திரி சமயத்தில் மூன்று முறை தென்காசியில் பல மாணவ, மாணவிகளை இணைத்து அவர்களுக்கு ஒரு இசையாசிரியர் மூலமாக பல பாடல்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை மேடையேற்றி ஒரு குழுவாக பாட வைத்த அனுபவம் மிகவும் இனிமையான, மனதுக்கு நிறைவு கொடுத்த அனுபவம்.  நாங்கள் வசித்த பகுதியில் இயங்கி வந்த ஒரு மகளிர் மன்ற உறுப்பினர்களையும் இதே போல பயிற்சி மேற்கொள்ள வைத்து அவர்களையும் அதே நிகழ்ச்சிகளில்  மேடையேற்றியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம், வயலின் பக்க வாத்தியத்துடன் நடத்திக் கொடுத்தது கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கும், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி, இந்த நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளின் ஒன்றிரண்டு வீடியோக்களை ‘மேலகரம் வீடியோ’ என்று தேடினால் யூடியூபில் காணலாம்.

2016-ல், திருவள்ளுவர் கழகத்துடன் இணைந்து இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டு  நாங்கள் ஊரில் இல்லாவிட்டாலும் எங்களது ஏற்பாட்டில் ஒரே ஒரு கர்னாடக சங்கீத நிகழ்ச்சி மட்டும் அதே திருவள்ளுவர் கழக நவராத்திரி நிகழ்ச்சிகளில் நடந்தது.

2016-ல் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது. 2015 நவராத்திரியின் போது அமெரிக்காவில் என் மகள் தன் குழந்தைகளை ஒரு சில வீடுகளுக்கு நவராத்திரியின் போது கொலு பார்ப்பதற்குக் கூட்டிக்கொண்டு போயிருந்திருக்கிறாள். பள பளக்கும் விளக்கொளியில் கொலுவின் அழகு,  பல இனிய குரல்களின் பாட்டுக்கள், பல விருந்தினர்கள் குடும்பத்தோடு வந்து போவது, புதுப் புது ஆடைகள் இவற்றைக் கண்டு மயங்கிய என் பேரக் குழந்தைகள் அடுத்த ஆண்டு ‘நம் வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்தியதால் என் மகளும் 2016-ல் தன் வீட்டில் கொலு வைக்கத் தொடங்கினாள்.

அதற்குத் தோதாக ஜூன் 2016-ல் இந்தியா வந்த என் மகள் கொலுவுக்குத் தேவையான பல பொம்மைகளை பலவித சைஸில் அள்ளிக்கொண்டு சென்று விட்டாள். 2016-ல் என் மகள் வீட்டில் வைத்த கொலுவை புகைப்படத்தில் தான் எங்களால் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு கொலுவுக்காக சிகாகோவில் என் மகன் வீட்டிலிருந்து ஃபீனிக்ஸில் என் மகள் வீட்டுக்கு ஒரு பறக்கும் இரண்டு வார ‘விசிட்’ அடித்தோம். பொதுவாக கொலுவில் ஆர்வம் காட்டியிராத நானும் ‘எப்படித்தான் இங்கே நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் பார்க்கலாம்’ என்று எண்ணத்தோடு கலந்து கொண்டேன்.

1998-2006-ல் ஸ்ரீஅம்மா பகவான் பூஜைகளில் கலந்து கொண்ட அனுபவத்தில் கொலுவின் ஆரம்ப அலங்காரங்களை என் மனைவியின் உதவியுடன் நான் செய்து முடித்தேன். ஓரளவு நன்றாகவே வந்திருந்தது. எனக்கே ஆச்சரியம். ‘ஃபைன் டியூனிங்’ மனைவியும் என் மகளும் கவனித்துக் கொண்டார்கள்.

கொலுப் பொம்மைகளை எல்லாம் இறக்கி வைத்த பின்னர் பேரக் குழந்தைகளுக்கு ஒரே ஆர்வம். நான் தான் இதைச் செய்வேன், இங்கே வைப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி, சண்டை. பொம்மைகளை உடைத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எங்களுக்கோ பதற்றம். ஒரு மாதிரியாக அவர்களை சமாளித்து என் மகள் கொலுப் பொம்மைகளை தட்டுகளில் அடுக்கி மற்ற சில அலங்காரங்களைச் செய்து மெருகூட்டி நவராத்திரிக்கு கொலுவைத் தயார் செய்துவிட்டாள்.

கொலுவுக்கு ஒரு இருபது முப்பது வீடுகளிலிருந்து அழைப்பு. ஒரு நாள் எங்கள் வீட்டிலிருந்தும் எல்லோருக்கும் அழைப்பு இருந்தது. இங்கே ஃபீனிக்ஸில் பரந்து விரிந்திருக்கும் சேண்ட்லர் என்ற பகுதி ஒரு மினி மைலாப்பூர் போல. ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (முக்கியமாக இன்டெல் – யாரைக் கேட்டாலும் இன்டெல்லில் வேலை செய்வதாகச் சொல்வார்கள்) மூலைக்கு மூலை இருப்பதால் ஒரே தமிழ், தெலுங்கு, கன்னட, கேரள இளைஞர்கள், இளைஞிகளின் குடியிருப்புகள். தாய் மொழியில் பேச வராத பல குழந்தைகளும் கர்னாடக சங்கீதத்தை மட்டும் ஆங்கிலத்தில் பாட்டை எழுதி வைத்துக்கொண்டு ர, ல, ழ, ள- வை சரியாகவே உச்சரித்து (கொஞ்சம் மழலைக் குரலோடு) நன்றாகவே பாடுகிறார்கள். பரத நாட்டியம், மிருதங்கம், வீணை, கீ போர்டு எல்லாம் கற்று வருகிறார்கள். ஒரு சிறு பெண் ஹிந்துஸ்தானியை ஒரு கை தேர்ந்த பாடகி போல கைகளை ஆட்டி ஆட்டிப் பாடினாள். எல்லா வீடுகளிலும் கொலுவை அலங்கரித்திருக்கும் பாணி மிகவும் ஈர்ப்பதாக இருந்தது.

எல்லோர் வீட்டிலும் இரவு முழு உணவு தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சுண்டல் ஒரு சில வீடுகளில் மட்டும்தான். எல்லோர் வீட்டிலேயும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். வெள்ளி, சனி,  ஞாயிறன்று மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை ஒவ்வொரு வீடாக சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம். எல்லா இடங்களிலும் விருந்தாளிகளுக்கு நல்ல வரவேற்பு. எல்லோரிடமும் ஒரு நட்பு உணர்வு. விருந்தோம்பல்.

இரண்டு வீடுகளில் ஒரு விசேஷ பூஜை ஏற்பாட்டுக்குச் சென்றிருந்தோம். இங்கே ‘ஆத்ம வேத கண’ என்ற பெயரில் ஒரு சேவை நிறுவனத்தின் உறுப்பினர்கள் அழைப்பு கொடுத்த வீடுகளுக்குச் சென்று வேதத்தை ஓதுகிறார்கள். வேதம் ஓதுவதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. ஆண், பெண் இரு பாலாருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள். நன்றாக ஸ்பஷ்டமாக அவர்கள் வேதம் படிப்பதைக் கேட்பதற்கு மனதுக்கு நிறைவாக இருக்கிறது. ஒன்பது இரவுகளை குறிக்கும் விதமாக ஒன்பது சுக்தங்களைப் படிக்கிறார்கள். பூஜையை வீட்டுக்குரியவரை வைத்தே செய்ய வைக்கிறார்கள். சுருக்கமாகவும் இருந்தது. ஒரு நல்ல உணர்வை கொடுப்பதாகவும் இருந்தது. ஒரு சிறிய வீடியோ இணைத்திருக்கிறேன்.


அப்படியாக, இந்த ஆண்டு நவராத்திரி இனிமையாக ஒரு புது அனுபவமாக அமைந்தது. என் மகள், மருமகன், அவர்கள் குழந்தைகளுக்கு நன்றி.

Tuesday, August 22, 2017

23.08.17 இன்றைய நாட்குறிப்பு - சிஸ்டம் சரியில்லை

23.08.17 இன்றைய நாட்குறிப்பு

நீட் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடக்க வேண்டும் என்பது இறுதியாகி விட்டது. எல்லா மானினலங்களும் இதே போல விலக்கு கேட்பார்கள் என்ற காரணம் காட்டி தமிழக அரசின் அவசரச் சட்டத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சரியான முடிவு.

“இங்கே தான் சிஸ்டம் சரியில்லையே” என்று ரஜினிகாந்த் கூறியது திடீரென்று நினைவுக்கு வந்தது.

நாடு முழுவதிலும், முக்கியமாக, தமிழ் நாட்டில் கடந்த காலங்களில் லஞ்சமும் ஊழலும் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தது என்றால் அதற்குக் காரணம் மக்களின் மனப்பான்மை மட்டும்தானா? இல்லையென்றே நினைக்கிறேன். நமது சிஸ்டம் பொதுவாக எங்கேயும் சரியில்லை என்பதும் உண்மைதான். குறைபாடுகள் நிறைந்த சிஸ்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னமும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திரு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பல புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினாலும் சிஸ்டத்தை சரி செய்ய அதிகம் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் பலமாக ஷாக் அடிக்கும்.

மோடி அவர்கள் பிரதமரான பிறகு சிஸ்டத்தை சரி செய்வதற்கும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். அதனால், பல இடங்களில் ஷாக் அடிக்கிறது. உதாரணத்துக்கு:
ஜி. எஸ். டி முறையை அறிமுகப்படுத்தியது; அதிக மதிப்புள்ள ரூபாய்த் தாள்களை செல்லாததாக்கியது; ஆதார் எண்ணை பல இடங்களிலும் இணைக்க வற்புறுத்தியது; எல்லா வர்த்தகங்களையும் டிஜிட்டல் முறையில் நடைபெற வழி வகுப்பது … இப்படி ஒரு சில

இன்னும் ஆலோசனையில் இருப்பது: மத்திய மானிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது; பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் நவம்பருக்கு மாற்றி நிதியாண்டை ஜனவரி – டிசம்பருக்கு மாற்றுவது; அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளை வெளிப்படையாக்குவது … இப்படி ஒரு சில.

எல்லா சிஸ்டத்தையும் ஒரேயடியாக மாற்ற முடியாது. எல்லா சிஸ்டமும் ஓரிரவில் சரியாகாது. ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம். சிஸ்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எல்லாம் சிறந்தது என்றும் சொல்லி விட முடியாது. எல்லாம் பரிட்சை செய்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் வருவதுதான் நீட் தேர்வுகளும். மருத்துவப் படிப்புக்கு எல்லா இடங்களிலும் நடக்கும் ஊழல்கள் எல்லோருக்கும் தெரியும்தான். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு சிஸ்டத்தை சரி செய்யும் ஒரு முயற்சியே நீட் தேர்வுகள். இதற்கும் குறுக்கு வழி கண்டிப்பாக கண்டு பிடிப்பார்கள்.

வருமான வரியை முழுவதுமாக எடுத்து விட வேண்டும் என்ற திரு சுப்பிரமணிய சுவாமியின் கருத்து எனக்கு ஏற்புடையதாக  இருக்கிறது. இந்த வருமான வரிக்கு பயந்துதானே பலரும் அரசை ஏமாற்றுகிறார்கள். வருமான வரித்துறையில் இருப்பவர்களும் ஒன்றும் சத்திய சீலர்கள் இல்லையே. ஒரு பத்து வருடத்துக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்து விட்டால் பதுங்கியிருக்கிற பணமெல்லாம் வெளியே வந்து விடும். எவ்வளவோ முன்னேற்றத் திட்டங்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தலாமே. இன்றும் அமெரிக்காவில் கூட பல தொழிலாளிகள் தங்களது சேவைக்கு பணமாகவே பெற்றுக் கொள்கிறார்கள். கண்டிப்பாக வரிக் கணக்கில் வராது என்று நினைக்கிறேன். ஆனால், அவர்கள் மொத்த ஜனத்தொகையில் மிக மிக சிறிய பகுதியினர்தான். அதனால் பெரியதாக பாதிப்பு ஏதும் கிடையாது. ஆனால், பில் இல்லாமல் எந்தப் பொருளும் வாங்க முடியாது.

ஜி. எஸ். டி-யை படிப்படியாக எல்லாத் தரப்பு வர்த்தகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நாளாவட்டத்தில் வந்து விடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வர்த்தகப் பரிவர்த்தனையும் டிஜிட்டல் மயமாக்கி விட்டால் வரியேய்பு செய்வது கஷ்டம்.  வளர்ந்த நாடுகள் போல எந்த வர்த்தகப் பரிவர்த்தனையானாலும் பில் இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும்.


சிஸ்டத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம்தான்…

21.08.17 இன்றைய நாட்குறிப்பு - சூரிய கிரஹணம்

21.08.17 இன்றைய நாட்குறிப்பு

1918-க்குப் பிறகு அமெரிக்காவில் 12 மானிலங்களில் தெரியும் அளவுக்கு முழு சூரிய கிரஹணம் நிகழ்ந்தது. மற்ற இடங்களில் முழுமையடையாத கிரஹணம் மற்றுமே தெரிந்தது. ஹவாயில் காலையில் சூரிய உதயத்துடன் இந்த கிரஹணம் ஆரம்பித்தது. இந்த சூரிய கிரஹணத்தைப் வேடிக்கை பார்ப்பதற்கு வேலை நாளாக இருந்தும் அமெரிக்காவில் பல இடங்களிலும் கூட்டம். சிகாகோவில் காலை 11.30 அளவில் வெளியே சூரிய அஸ்தமனம் போன்ற இருட்டு தொடங்கி விட்டது. மதியம் 1.19-க்கு முழு கிரஹணம் தெரியும் என்று அறிவித்தார்கள். தொலைக் காட்சிகளில்தான் இதைப் பார்க்க முடிந்தது. பிறைச் சந்திரன் போல தோற்றத்தோடு ஆரம்பித்து, சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து பின்னர் ஒரு மோதிரம் போல சூரியனின் விளிம்பு மட்டும் தெரிந்து, பின்னர் பூ இதழ்கள் போல சூரியனைச் சுற்றி ஒளிக் கதிர்கள் பரவி, தலையில் கிரீடம் வைத்தது போல ஒரு தோற்றம் ஒரு சில வினாடிகளே தோன்றி பின்னர் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்து….காணக் கண் கொள்ளாக் காட்சி. ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே சென்று சூரிய கிரஹணத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னமும் தீரவில்லை.

ஜூலை 2, 2019-ல் அமெரிக்காவின் தென் பகுதியிலும், தென் அமெரிக்காவிலும், பசிஃபிக் கடல் பகுதியிலும் மீண்டும் முழு சூரிய கிரஹணம் காணப்படும் என்று அறிகிறேன்.

கடைசியாக இந்தியாவில் முழு சூரிய கிரஹணம் பார்த்தது 1980 ஃபிப்ரவரியில். அப்பொழுது சண்டிகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். ஊரே அடங்கிப் போயிருந்தது. யாரும் – ஈ, காக்கை கூட - பொதுவாக வெளியே காணவில்லை. இப்பொழுதுள்ள விழிப்புணர்வு அப்பொழுது கிடையாது. கிரஹணத்தைப் பற்றிய பல பழங்கால நம்பிக்கைகளுடனேயே மக்கள் (என்னையும் சேர்த்து) வாழ்ந்து வந்த காலம் அது. கிரஹணத்தின் போது எதுவும், தண்ணீர் கூட, சாப்பிடக் கூடாது. கிரஹணம் முடிந்தவுடன் குளித்து பெற்றோர் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரஹணத்தின் போது பல கேடு விளைவுகள் நடை பெறலாம் என்ற பலத்தை நம்பிக்கை இருந்து வந்தது. (கிரஹணத்தையொட்டிதான் தமிழ் நாட்டில் ஒரு கட்சியின் இரண்டு துண்டுகள் ஒன்றிணைந்தன, இது நல்லதா, கெட்டதா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.)

அதற்கும் முன்பு எப்பொழுது பார்த்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. சிறு வயதில் ஒரு முறை பார்த்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் ஒரு கண்ணாடித் துண்டை எரியும் விளக்கிலிருந்து கிளம்பும் கரியை படிய வைத்து அந்தக் கறுப்புக் கண்ணாடி கொண்டு முழுமையடையாத சூரிய கிரஹணத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. அப்பொழுது கூலிங் கிளாசஸ் எல்லாம் எங்களில் யாருக்கும் கிடையாது. பெற்றோர்களும், பெரியவர்களும் கிரஹணத்தின் போது எது செய்யலாம், செய்யக்கூடாது என்பதில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்துதான் அதிகமாக பசிக்கும். ஆனால், சாப்பிட முடியாது.

அடுத்த முழு சூரிய கிரஹணத்தை பார்க்க இருப்பேனா…தெரியாது?


Friday, June 30, 2017

30.06.17: Personal Diary: Risk Taking – Story of Elon Musk

29.06.17: Risk Taking – Story of Elon Musk

‘Risk Taking’ is defined as the act or fact of doing something that involves danger or risk in order to achieve a goal. So, it is about taking a risk to achieve a goal, not just for the thrill of it - which might fall under adventure. Risk taking doesn’t necessarily mean doing things haphazardly, without applying one’s mind.

Generally, most people are averse to taking risks primarily because of fear; fear of losing something valuable, fear of the unknown, fear of failure, etc. It can also be due to our wanting the mental comfort of guarantee of the results or security. Or, for lack of self-confidence and inappropriate perception about one’s capabilities.

However, history has proved time and again that the successful people had always taken risks towards what they wanted to achieve in their life. They have learnt lessons from their failures. Also, for most people, success doesn’t just fall on one’s laps; they have to go for it – which might involve risks.

Some of the consequences of not taking risks are:
·         Unforeseen missed opportunities
·         We would never be able to overcome our sense of fear – whatever that be
·         Compromising on what one could want or what one could have achieved
·         Losing an opportunity to learn from our actions
·         Loss of self-confidence

I have marveled at some of the successful personalities for their ability to take risks. Of course, theirs were calculated risks, weighing the risk-reward relationship. To gain something, one also has to forego something. No pain – no gain.   That is why, whenever I come across information about such personalities, I make it a point to learn more about them and write about them. Knowing about them becomes my inspiration too.

In retrospect, I wondered whether I was a risk taker. Of course, yes. I took several small, but significant, risky decisions. I have gambled about the choices before me several times, and every time, they became life-changing decisions. To name only a few…

I ventured into my post graduation studies with just five hundred rupees in my bank account, not even speculating what I would do for the second month’s hostel expenses.

I ventured to forego my passion for science and became a banker, an area totally alien to me.

I agreed willingly to every workplace transfer between north and south of India and worked with people of different languages, cultures, and attitude. Calculated risk-taking used to be a part of my work culture. I had made mistakes and learnt valuable lessons from them.

I consciously gave up a lucrative banking career in search of opportunities in the wilderness of private sector, and then, consciously chose to work in an environment which offered no guaranteed regular income, that too, in a foreign land.

Having lived in many big and metropolitan cities and having been used to the best of comforts of life, I chose to live in a village environment for my retired days.

Every time, there was a hard choice to make.

Period.

Coming back to successful personalities, earlier I wrote about Richard Branson, his commercial ventures, philosophies, and successes. Here is another story I liked, about Elon Musk, known for his ventures into space exploration and developing solar power systems and electric cars. He is ranked 21st in the Forbes list of the World’s Most Powerful People.

Read on about Elon Musk, in the next part….


Tuesday, June 27, 2017

27.06.17 இந்த வார நாட்குறிப்பு: ஜி.எஸ்.டி பற்றி

27.06.17 இந்த வார நாட்குறிப்பு: ஜி.எஸ்.டி பற்றி

ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அமுலுக்கு வருவது நிச்சயம் என்றாகிவிட்ட நிலையில் பாமரத்தனமான ஒரு சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா?
          1.     இனி எல்லா மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் வாங்குகிற கட்டணத்துக்கு உண்மையான ரசீது கொடுப்பார்களா?
          2 .   பல பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களிடம் பல விதங்களில் கட்டணங்கள் வசூலிப்பது நின்று விடுமா அல்லது வசூலிக்கும் கட்டணங்களுக்கு ரசீது கொடுக்கப்படுமா?
          3.     இனி, காலி நிலங்களையோ அல்லது வீடுகளையோ விற்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் பரிமாற்றமாகும் முழுப் பணமும் பத்திரங்களில் குறிப்பிடப்படுமா அல்லது முன்னம் போல் 60% ரொக்கமாக பணம், 40% வங்கி காசோலையாக பெறப்படுமா? 60% கணக்கில் வராது.
          4.     பெரிய பலசரக்குக் கடைகளில் இன்னமும் ஒரு அழுக்குத் தாளில் வாங்கிய பொருளுக்கு கையெழுத்து புரியாதமாதிரி ஒரு பில் கொடுத்து வருகிறார்களே, இது தொடருமா?
          5.     பல ஹோட்டல்களில், விடுதிகளில் ரொக்கப் பணமாகவே கொடுப்பதற்கு வற்புறுத்துவதை நிறுத்தி விடுவார்களா?
  
அடிப்படையில் எந்த விதத்தில் ஜி.எஸ்.டி கறுப்புப் பணம் புழல்வதைத் தடுக்கும் என்று புரியவில்லை.

விஷயம் அறிந்தவர்கள் விளக்குவார்களா?


Sunday, June 04, 2017

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள் ..தொடர்ச்சி

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள்

பொதுவாக நமது வருத்தங்களை ஒரு சில வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது, நாம் ஒரு பொருளை விரும்பியிருப்போம் அல்லது ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டிருப்போம். அதை அடையவில்லையே என்று வருத்தப்படலாம். அல்லது ஒரு பொருளை வெறுத்திருக்கலாம் அல்லது அதை விரும்பத்தகாதது என்று கருதி ஒதுக்க நினைத்திருக்கலாம். ஆனால், நாம் எதை வெறுத்தோமோ அல்லது ஒதுக்கி வைக்க நினைத்தோமோ அது நம்மோடு விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று வருத்தப்படலாம்.

இரண்டாவது, ஒரு காரியத்தைச் செய்திருப்போம். பின்னர் அதன் விளைவுகளை கவனித்த பிறகு அதை ஏண்டா செய்தோம் என்று வருத்தப்படலாம். அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய விட்டுப்போயிருக்கலாம். அதை செய்திருக்கலாமே என்று வருத்தப்படலாம்.

மூன்றாவது, பல காரியங்களை ஒரு எதிர்பார்ப்போடு செய்திருப்போம். அந்தக் காரியங்கள் நாம் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் எதிர்மறையாக, நம்மை பலமாகப் பாதிக்குமளவில் முடிந்திருக்குமானால் நமக்கு ஏமாற்றம் மட்டுமல்லாமால் மிகுந்த வருத்தத்தையும் கொடுத்திருக்கும்.

அடுத்ததாக, தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில பழக்கங்களுக்கு அடிமையாகியிப்போம். அந்தப் பழக்கங்களால் பல தீய பலன்கள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். நாம் ஏன் அந்தப் பழக்கங்களுக்கு அடிமையானோம் என்று வருத்தப்படலாம்.

எனக்கு முக்கியமாக தோன்றும் அடுத்த விஷயம் … பலர் இளைய வயதில் காதல் வயப்பட்டிருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில், எல்லாம் அண்ணா, தங்கை பாசம் போலத்தான் தோன்றியிருக்கும். நாளாவட்டத்தில் அது காதலாக மலர்ந்திருக்கும். ஒரு நல்ல நட்போடு கூடிய காதல் பல காரணங்களினால் நிறைவேறாமல் போயிருக்கலாம். காதலை கை விட்டிருக்கலாம். அதனால், ஒரு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்து வாட்டிக்கொண்டிருக்கலாம். இருவரும் வெவ்வேறு வழி சென்று அவரவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம். காதல் சொல்லி வருவதில்லை. தானாக ஏற்படுவது. இன்று நமது வாழ்க்கை எப்படியிருந்தாலும், அந்த காதலின் இனிய நினைவுகள் நம்மை வாட்டி துன்பத்துக்கு ஆளாக்கலாம். காதலிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே! காதலைத் துறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே!

இறுதியாக தோன்றுவது … நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அறியாமையால் ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். அதனால் பல கெடுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். நமது அறியாமையை நினைத்து வருத்தப்படலாம்.

இப்படியெல்லாம் அலசும்போது எனக்குத் தோன்றியது … இந்தக் கணம்  நம்முடைய அந்திம நேரமாக இருந்தால்  நம்முடைய மிகப் பெரிய வருத்தங்கள் என்று எவற்றைச் சொல்லலாம்?

1. முதலாவதாக எனக்குத் தோன்றுவது நமது உறவுகளை சரியாக வைத்துக் கொண்டிருக்கலாமே என்பதுதான். உறவுகளால் நாம் எவ்வளவோ காயப்பட்டிருப்போம். இருந்தும் உறவுகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். நம்முடைய அஹங்காரத்தினால் பல உறவுகளை பல விதமாக சிதைத்திருக்கிறோம். மற்றவர்களைத் தெரிந்தே காயப்படுத்தியிருக்கிறோம். மற்றவர்கள் காயப்பட்டிருப்பது தெரிந்தும் அதைப் பற்றி நாம் கவலை கொண்டதில்லை. பல நேரங்களில்  நாம் காயப்பட்டதின் நினைவாக உறவுகளை வெட்டியிருக்கிறோம். பலரை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. வெறுப்பும், கோபமும் மேலோங்கி நிற்கிறது. எல்லாமே ‘நான்’ என்ற நினைப்பினால்தான். இந்த எண்ணத்தை விட்டொழிக்க முடிந்ததில்லை. கூடப் பிறந்ததோ என்னவோ? இந்த ‘நான்’ என்ற நினைப்பை கொஞ்சம் தளர்த்தியிருக்கலாமோ? ‘நான்’ என்ற அஹங்காரத்தை விட்டிருக்கலாமே? ஒவ்வொரு நெருங்கிய உறவையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எவ்வளவு காயப்பட்டிருக்கிறோம், எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறோம் என்பது தெரிகிறது. இந்தக் கடைசி நேரத்தில் ஒரு சிலரிடமாவது மன்னிப்புக் கோரியிருக்கலாம். அல்லது அவர்கள் நமக்கு ஏற்படுத்தியிருக்கிற காயத்துக்கு மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் இன்று இல்லையே, என்ன செய்வது? நாம் அவர்களிடம் எப்படி மன்னிப்பு கோருவது? அவர்களை நாம் மன்னித்து விட்டோம் என்பதை அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

2.  . நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருப்பதற்கு பல விதமாக முயற்சி செய்து வந்திருக்கிறோம். பல தியாகங்களைச் செய்திருக்கிறோம். நமது சக்திக்கு மீறி முயன்றிருக்கிறோம். எல்லாம் அவர்கள் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும். அதே நேரத்தில் நாமும் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் என்பது மட்டும் மறந்து போய் விடுகிறது. நமது மனைவியை, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு முயன்றோமோ அதில் ஒரு சில அளவாவது நமது தாய், தந்தையரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு முயன்றிருக்கலாமே? அவர்களும் நம்முடைய மகிழ்ச்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய வயதான காலங்களில் அவர்களுக்கு நாம் துணை கொடுத்திருக்கிறோமா? அவர்களின் தேவைகளை, அற்ப ஆசைகளை நிறைவேற்ற ஏதேனும் செய்திருக்கிறோமா? அவர்கள் மனதில் குறைகளில்லாமல் அல்லது குறைகளைக் குறைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறோமா? குறைந்த பட்சம் அவர்கள் குறைகளைத் தெரிந்து கொள்ளவாவது முயற்சித்திருக்கிறோமா? அவர்களுக்கு நாம் ஒரு நல்ல பையனாகவோ பெண்ணாகவோ இருந்திருக்கிறோமா? இல்லையே.  

3. ஒவ்வொருவரும் அவரவர் குழந்தைகளை அவரவர்களுக்குத் தெரிந்த மாதிரிதான் வளர்த்து வருகிறார்கள். பலர் குழந்தைகளை அடித்து வளர்த்திருக்கிறார்கள். அடி வாங்கிய அந்தக் குழந்தைகளுக்கு அதனால் என்ன விதமான மனக் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைப் பற்றி அந்த பெற்றோர் அதிகமாக என்றும் யோசித்ததில்லை. கண்டிப்புடன் வளர்க்கிறோம் என்று சொல்லி நியாயப்படுத்தியிருக்கிறோம். குழந்தைகளைப் புரியவைப்பது மிகவும் கடினம்தான். எல்லா நேரங்களிலும் காரண காரியங்களைச் சொல்லி புரியவைக்க முடியாதுதான். அவ்வளவு பொறுமையும்  நேரமும் நம்மில் பலருக்கு இல்லை. நம் குழந்தைகளை அடித்து வளர்த்தது தவறோ என்ற ஒரு குற்ற உணர்வு இன்று நம்மைத் தாக்குகிறது.

4. அன்பு, பாசம், உதவி என்ற போர்வையில் நெருங்கிய சிலருக்கு ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். ஒரு சில நேரம் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்திருப்போம். அப்பொழுது அதன் பின் விளைவுகளைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. இன்று யோசித்துப் பார்த்தால் நம்முடைய அன்பினால், பாசத்தினால், உதவியால் எவ்வளவு கெடுதல் செய்திருக்கிறோம் என்று புரிகிறது. அன்று அப்படி செய்திருக்க வேண்டாமோ?

 5. ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் நம்மில் பலரும் மனைவியை ஒரு பெரிய பொருட்டாக மதித்து வந்ததில்லை. அவர்கள் கருத்துக்கு, ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு பெரிய மரியாதை ஒன்றும் செய்ததில்லை. அவர்களை அடக்கியே வைத்திருந்திருக்கிறோம். ஆனால், அவர்களோ வாயில்லாப் பூச்சிகளாக, அமைதியாக, பொறுமையாக நாம் செய்த பல கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். வயதாகும் பொழுதுதான் அவர்களின் அருமை புரிகிறது.  நாம் அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து வருத்தப்படுகிறோம்.

எனக்கு முக்கியம் என்று தோன்றிய ஒரு சில விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். கண்டிப்பாக எனக்கும் இந்த விஷயங்களில் வருத்தம் உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதனால்…

அந்திம நேரம் வரைக் காத்திருப்பானேன்… இந்த நிமிடம் முதலே அதற்குப் பரிகாரம் தேடலாமே? நம்மை,  நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாமே? இப்பொழுதே முயற்சியை தொடங்கி விடலாமே?


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…

Monday, May 29, 2017

28.05.17 ஓடி ஓடி தியேட்டருக்குப் போய் பார்த்த படம்

28.05.17

பதினோறு மணியாயிடுச்சு…பதினொண்ணு இருபத்தைஞ்சுக்குப் படம். இன்னிக்கு ஞாயிறு.  தியேட்டர்ல கூட்டம் வேற இருக்கும். தியேட்டரை கண்டுபிடிச்சு போய் சேரச்சே லேட் ஆயிடும். சீக்கிரம் கிளம்புங்க,” என்று மனைவி விரட்டிய பிறகு சுறுசுறுப்பாகி கிளம்பி விட்டேன்.

பையன் அவனுடைய காரைக் கொடுத்து விட்டான். வழியையும் சொல்லி விட்டான். அங்கங்கே வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகையைப் பார்த்துக் கொண்டு காரின் வேகத்தை அங்கங்கே சமப்படுத்திக்கொண்டு பையன் சொன்ன வழியில் சரியாகச் சென்று தியேட்டர் வாசலில் நிறுத்தி விட்டேன். கார் நிறுத்துமிடத்தில் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நல்ல கூட்டம் இருக்கும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு வேக வேகமா தியேட்டருக்குள் நுழைந்தோம்.

மணி 11.20. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் எங்களுக்கு முன்னே ஒரே ஒரு குடும்பம் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே தொங்கிக் கொண்டிருந்த மின் பலகையில் நாங்கள் பார்க்க வந்த படத்தின் பெயரைக் காணோம். ஒரு வேளை வலையில் பார்த்த செய்தி தவறாக இருக்குமோ என்று ஒரு பதைபதைப்பு.

நாங்கள் பார்க்க வந்த படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கத்துக்கு வேகமாக ஓடினோம். ஆரம்ப சீனை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.  

1 முதல் 9 வரையுள்ள அரங்கங்கள் வலது பக்கம். 10 முதல் 16 வரை இடது புறம். ஆம். அந்தக் காம்ப்ளெக்சில் 16 அரங்கங்கள். எங்களுடையது 11-ஆவது அரங்கம்.

அரங்கத்தின் நுழைவாயிலில் யாரும் எங்களை செக் செய்யவில்லை. உள்ளே விளம்பரப் படங்கள் தொடங்கி விட்டன. ‘அப்பாடா, படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை,’ என்று ஒரு நிம்மதி.

அரங்கத்தில் அரையிருட்டு. கடைசி வரிசையில் தெற்கிந்திய இளம் தம்பதிகள் இரண்டு பேர். மூன்றாவது வரிசையில் வடக்கிந்திய குடும்பத்திலிருந்து ஒரு நாலு பேர். எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் அரங்கத்தில் மொத்தம் எட்டு பேர். சுமார் முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கம். எப்படித்தான் இவர்களுக்கு கட்டுப்படியாகிறதோ தெரியவில்லை.

“ஆஹா, நமக்காகவே ஸ்பெஷல் ஷோ போலிருக்கு” என்று நினைத்துக் கொண்டேன்.

விளமபரப் படங்கள், வரக் கூடிய படங்களுக்கான ட்ரெயிலர்கள் எல்லாமாக ஒரு பத்து நிமிடங்கள் ஓடின. படம் ஆரம்பிப்பதற்கான ஸ்லைடு போட்டாகி விட்டது. இருட்டில் தடவிக்கொண்டு இன்னும் ஒரு ஐந்தாறு பேர். ஆக மொத்தம் அரங்கத்தில் 13-14 பேர்.

டைட்டில் போட்டாகி விட்டது. “பாகுபலி 2 – முடிவு” ஹிந்தி டப்பிங் படம்.

சுமார் 2 மணி 50 நிமிடங்கள் இடைவெளிக்காகக் கூட நிறுத்தாமல் ஓடியது. முடிவும் போட்டாகி விட்டது. படத்தில் இணைந்த பல இத்யாதிகளின் பெயர்கள் வரிசையாக வேகமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இடையே ஒரு சிறிய டயலாக், “மஹேந்திர பாகுபலியின் பையன் தான் வருங்காலத்தில் மகிஷ்மதியின் மன்னராக வருவானா?” என்று. அதற்கு பதில் டயலாக். “அந்த சிவனைத் தவிர யாருக்குத் தெரியும்?” என்று. பூடகமாகச் சொல்கிறார்களோ, “பாகுபலி 3” வருமா, வராதா என்று அந்த சிவனுக்குத்தான தெரியும் என்று.

“பாகுபலி 2 – முடிவு” - படம் ரேட்டிங் 60% - கம்ப்யூட்டர்கள் நன்றாக நடித்திருக்கின்றன.

முடிவுரை: இந்தப் படம் ரிலீசாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தீவிர விருப்பம் நேற்று வரை எனக்கு வரவில்லை. சும்மா இல்லாமல் என் பையன் நேற்று, “ நாளைக்கு லீவு நாள்தான். நீங்கள் இரண்டு பேரும் வேண்டுமானால் பாகுபலி 2 படத்தை பார்த்து விட்டு வாருங்கள். உங்கள் ஒபினியனைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் நாங்கள் இருவரும் போய் வருகிறோம்,” என்று கூறி விட்டான்.

இன்னொரு மாதம் பொறுத்திருந்தால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வலையில் இதைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். (பணம் கொடுத்து வைத்திருக்கிறோம் சில வலைத் தளங்களுக்கு. ஓசியில் இல்லை) தியேட்டரில் பார்த்து 1500 கோடி இலக்கை எட்டுவதற்கு எங்களாலான காணிக்கையை கொடுத்து வந்துவிட்டு ஜன்ம சாபல்யம் தீர்ந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


பின் குறிப்பு: பாகுபலி 1-ஐ வலையில் தான் (நல்ல பிரதி) ஒரு மாதம் முன்பு பார்த்திருக்கிறேன்.  நன்றாக இருந்தது. Technically Superb. 2 is a continuation of the same trend with minor differences.

Sunday, May 28, 2017

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு ....

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு எல்லோருமே எழுத்தாளராகி விட்டார்களோ என்று தோன்றுகிறது. முக நூலைத் திறந்தால் பக்கம் பக்கமாக ஓடுகிறது பதிவுகள். இதைத் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் வேறு. பலருக்கும் நூற்றுக்கணக்கான முகநூல் நண்பர்கள். யார் எழுதியதைப் படிப்பது, பார்ப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினை.

அதிலும், மடிக் கணினி ஒரு விதமாகவும், ஐ-ஃபோன் ஒரு விதமாகவும், ஐ-பேட் ஒரு விதமாகவும் பலருடைய பதிவுகளைக் காட்டுகின்றன. செட்டிங்க்ஸில் இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு பதிவையும் படிப்பவர்களின் – அதுவும் முழுவதுமாகப் படிப்பவர்களின் – எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று தெரிகிறது. வெறும் பொழுது போக்குக்காக மட்டும் முக நூலா? கருத்துக்களைச் சொல்வதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் இல்லையா? மாற்றுக் கருத்துக்களை ஒரு மரியாதையுடன் சொல்லவும் ஏற்கவும் முடியுமா? எல்லாவற்றையும் ட்விட்டரில் இருப்பது போல இரண்டு வரிகளில்தான் சொல்ல வேண்டுமா? 

முன்பெல்லாம் காசு கொடுத்து பத்திரிகைகள் வாங்கும் பொழுது ஏதோ நமக்குப் பிடித்த ஒன்றிரண்டு பத்திரிகைகளை மட்டும் வாங்குவோம். விரும்பி படிக்கவும் செய்வோம். எல்லாப் பத்திரிகைகளும் இலவசமாக தினம் தினம்  நமது வீட்டு வாசலில் கிடந்தால் எத்தனை பத்திரிகைகளை திருப்பிப் பார்ப்போம்? அந்த நிலைதான் இன்றைய முக நூல் வாசம் என்று தோன்றுகிறது.


எழுதுபவர்கள் ஏராளம். படிப்பவர்கள் வெகு சிலர் என்ற நிலையில் முக நூலில் இன்னமும் எழுதி வருவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? ஓன்றும் புரியவில்லை.

Saturday, May 27, 2017

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

கடந்த வாரம் Harvard’s Graduate School of Education-ன் Dean-ஆகப் பணிபுரிந்த James E. Ryan என்பவர் எழுதிய “Wait, What? And Life’s Other Essential Questions” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் Bronnie Ware என்ற ஒரு நர்ஸ் எழுதிய The Top Five Regrets of the Dying என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மரணத் தறுவாயில் இருக்கும் பல நோயாளிகளைப் பராமரித்து வந்த Bronnie Ware அந்த நோயாளிகளின் மிகப் பெரிய வருத்தங்கள் என்ன என்பதை கேட்டறிந்து அதைப் பற்றியே ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் இருக்கும் பலரும் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வருத்தம் என்று குறிப்பிட்டிருப்பது எது என்று தெரிந்தால் எல்லோரும் ஆச்சரியப்படக்கூடும்.

ஒரு பொருளை அடைய விரும்பி அதை அடைவதற்கு வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு சிறிய முயற்சியைக் கூட ஆரம்பித்து வைக்கவில்லை என்பதுதான் அவர்களின் மிகப் பெரிய வருத்தம். இது எவ்வளவு பெரிய உண்மை என்பது கொஞ்சம் யோசித்தால் தானாகத் தெரியவரும்.

நாம் எல்லோரும் பல பொருட்களுக்கு, பல சிறிய அல்லது பெரிய குறிக்கோளுக்கு ஆசைப்படுகிறோம். ஆனால், அதை அடைவதற்காக என்ன முயற்சி செய்தோம் என்று பார்த்தால் பொதுவாக எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டோம். வெறும் ஏக்கத்தோடேயே வாழ்க்கையை ஓட்டியிருப்போம். மற்றவர்கள் அதே பொருளை அல்லது இலக்கை அடையும் பொழுது அவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் பட்டிருப்போம் அல்லது குற்றம் குறை கண்டிருப்போம். இது என்னால் இயலாது என்று முயன்று பார்க்காமலேயே அல்லது முயற்சிக்க ஆரம்பிக்காமலேயே முடிவுக்கு வந்திருப்போம். அல்லது பல காரணங்கள் காட்டி நம்மால் ஏன் இயலவில்லை என்பதை நியாயப்படுத்தியிருப்போம். வெளி உலகத்தை, மற்றவர்களை, நமது சூழ்னிலைகளைக் குற்றம் கூறியிருப்போம்.

ஆனால், வயதான பிறகு நிதானமாக யோசிக்கும் பொழுது  வாழ்நாள் முழுவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்த தருணத்தில் முயற்சி செய்வது என்பது பல காரணங்களுக்காக உண்மையிலேயே முடியாததாக இருக்கலாம். அல்லது தாமதமாக இருக்கலாம். மரணம் நெருங்கி விட்டால் வேறொன்றும் செய்ய இயலாமல் நம்மை நாமே வருத்திக்கொண்டு துன்பப்படுகிறோம்.

ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குறிக்கோளுக்கு ஆசைப்பட்டால் அதைப் பற்றி ஏதேனும் செய்ய வேண்டும். எவ்வளவுதான் மனதுக்குள் திட்டம் தீட்டினாலும், அதைப் பற்றி ஆலோசித்தாலும், பேசினாலும், எழுதினாலும் செயலில் இறங்காமல் ஒரு காரியமும் நிறைவேறாது. நாம் எடுக்கும் செயல் சரியாக வரும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால், செயலில் இறங்காமல் அந்தக் காரியத்தை நோக்கி நாம் நகரவும் மாட்டோம். குட்டை போல ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்போம். ஒரு ஆறு போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது எங்கேயும் நிற்காது. எத்தனை தடுப்புகள் வந்தாலும் அதை தாண்டியோ, தன் பாதையை மாற்றியோ பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். அது போலத் தான் நாமும் எதற்கு ஆசைப்பட்டாலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

முதலில் ஆசைப்பட்டதை நோக்கி செயலில் இறங்க வேண்டும். அதற்காக எதையும் யோசிக்காமல் செயலில் இறங்க வேண்டும் என்ற அர்த்தமில்லை. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். ஆனால், சிந்திப்பதை மட்டுமே ஒரு செயலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. செயலிலும் இறங்க வேண்டும். ஆயிரம் மைல் தூரப் பயணமானாலும் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.

ஓரளவு சிந்தித்து, திட்டமிட்டு செயலில் இறங்க வேண்டும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும். இலக்கையல்ல.

“சிந்தித்துப் பார்த்து செயலை மாற்று, தவறு சிறிதாய் இருக்கையில் திருத்திக்கோ” என்று ஒரு கவிஞர் திரைப்படத்தில் பாடியிருக்கிறார். எவ்வளவு உண்மை!

ஒரு குறிக்கோளை அடைவது அல்லது ஆசைப்பட்டதை அடைவது என்பது ஒரு முடிவு அல்ல. ஒரு செய்முறைதான். Achieving what one desires is not an end by itself. It is just a process in life. It is the process that makes life interesting, and not the end by itself. இந்த செய்முறைதான் வாழ்க்கையை இனிதாக்குகிறது. முடிவு அல்ல.

இன்றைய மாணவர்களும், சிறுவர்களும், இளைஞர்களும் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். நீங்கள் எதற்கேனும் ஆசைப்பட்டால் அதைப் பற்றிய ஏதேனும் ஒரு செயலில் இறங்குங்கள். Take the first step. Make the Beginning.

இதை நானும் என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மரணத் தறுவாயில் இந்த விஷயத்தில் மட்டுமாவது எனக்கு எந்த வருத்தமும் இருக்காது என்பதை  நிச்சயமாக நம்புகிறேன்.


அப்படியானால் வேறு விஷயங்களில் வருத்தமிருக்குமா என்று கேட்டால்….இந்தக் கணம் என்னுடைய கடைசி மூச்சுக்கான சமயமாக இருந்தால்… கண்டிப்பாக 5 வருத்தங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அவை என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Sunday, May 14, 2017

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

ஒவ்வொரு வாரமும் எனக்கேற்படும் அனுபவங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களையும் பதிய வேண்டும் என்றுதான் இந்தப் பகுதியை ஆரம்பித்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒவ்வொரு வாரமும் எழுதுவதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதன் பின்னணியைப் பற்றி ஒரு சில வரிகள்:

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு நேரகுழந்தை கவனிப்பு.’ (Baby Sitting). அது போக கிடைக்கும் சிறிது நேரத்தில் என்னுடைய கவனத்தை எனக்குப் பிடித்த ஒரு சில விஷயங்களில் சிதறவிட்டு விடுகிறேன். கீ போர்ட் வாசிக்கக் கற்றுக் கொள்வது, புத்தகங்கள் வாசிப்பது, கதை, கட்டுரை எழுதுவது, இந்திய பங்குச் சந்தையில் வாங்கி விற்பது, உடற் பயிற்சி.. இப்படியாக பல மரம் பார்த்தவனாக இருப்பதால் ஒரு மரத்தையும் முழுமையாக வெட்ட முடியாமல் நிற்கிறேன்.

ஒரு குறு நாவல் தமிழில் எழுதி முடித்திருக்கிறேன். இன்னமும் வரைவு வடிவத்தில்தான் இருக்கிறது. ஒரு முறையாவது சரி பார்த்த பிறகு நண்பர்களுக்கு அந்த நாவலை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.

47 ஆண்டுகளுக்கு பிறகு நான் கல்லூரியில் படித்த கெமிஸ்ட்ரியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எடுத்துக் கொண்ட தலைப்பு: “அணுவுக்குள்ளே” (Inside the Atom). Quantum Mechanics இப்பவும் எனக்குப் புரியவில்லை. அணுவைப் பற்றி நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதலாமா என்றும் எண்ணம்.

பவர் பாண்டி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டம் அதிகமில்லாத மனதைத் தொடும் படம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு தனுஷுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த வார இறுதியில் தென்னிந்திய நொறுக்குத் தீனிகள் வாங்க வேண்டும் என்று அருகாமையிலிருக்கும் (சுமார் ஐந்தரை கி.மீ தூரம்) இந்தியன் ஸ்டோர்ஸுக்கு சைக்கிள் மிதித்து சென்று வந்த பிறகு முதுகுத் தண்டின் கீழ் புறம் பிடித்துக் கொண்டதில் இரண்டு நாள் முழு நேர ஓய்வு. நான் வாங்கி வந்த தின் பண்டங்களுக்காக டாக்டருக்கு ஐம்பது டாலர்கள் தண்டம் கட்டும் படியாகி விட்டது. என்ன செய்வது நாக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
சென்ற வாரம் The Fourth Industrial Revolution என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு பலர் பாராட்டு தெரிவித்திருப்பது எழுத்தாளன் என்ற முறையில் திருப்தி. சந்தோஷம்.

கடந்த வாரம் படித்த செய்திகளில் என்னை ஈர்த்தவை சில.

முதலாவது,

செய்தி: Uttar Pradesh government considering 'no school bag' Saturdays in schools
உத்திரப் பிரதேசத்தில் பள்ளிகளில் சனிக் கிழமையன்று புத்தகச் சுமையை பள்ளிக்குத் தூக்கிப் போக வேண்டிய அவசியமில்லாத ஒரு முறையை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். நல்லதுதான். பல மெட்ரிக் பள்ளிகளில் வாரம் ஒரு நாள் co-curricular activities-க்கு ஒதுக்கியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, வழக்கமான பாடங்களைத் தவிர்த்து இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே, மற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் மாணாக்கர்களை ஈடுபடுத்துகிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்றைய மாணவர்களுக்கு, சிறிய வகுப்புகளிலிருந்தே critical thinking, analytical ability, communication skill, interpersonal skill, language skill, creative thinking போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே போல சிறு வயதிலிருந்தே இன்டெர்னெட்டிலிருந்து தகவல்கள் சேகரித்து அதை ஒரு சிறிய presentation –ஆகக் கொடுக்கப் பழக்க வேண்டும். தான் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல பழக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சொந்த முனைப்பு வளரும்.

இரண்டாவது,
செய்தி: Now, each block to get generic med store
ஒவ்வொரு கிராம வட்டாரத்திலும் ஜெனரிக் மருந்துக் கடைகளை மத்திய அரசு திறக்க உத்தேசித்திருக்கிறது. ஒரு புதிய மருந்தை ஆராய்ந்து கண்டு பிடித்து, அதை பரிசோதனைக்குள்ளாக்கி, அரசாங்க அங்கீகாரம் பெற்று சந்தைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. பல  நூறு கோடி டாலர் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைக் கொண்டுவந்த பின்பு செலவு செய்த பணத்தையும் அதன் மேல் தனக்கு வேண்டிய லாபத்தையும் சம்பாதிக்காமல் என்ன செய்யும்? அதில் தவறு எப்படிக் காண முடியும்? இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் அந்த மருந்தை பயன்படுத்தும் பொழுது முதலீடு செய்த பணத்தையும் லாபத்தையும் நிச்சயமாக ஒரு சில ஆண்டுகளில் மீட்டு விடலாம். அதன் பிறகு எல்லாமே லாபம்தான். அப்படிப்பட்ட சமயத்திலாவது மருந்து விலையைக் குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஒவ்வொரு கம்பெனியும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் மார்க்கெட்டிங் செய்யும் பொழுது நிறைய லாபம் அடைய முயற்சிக்கிறார்கள். ஜெனரிக்கான மருந்துகளை விற்றால் அவ்வளவு லாபம் கிடைக்காது. பொது மக்களுக்காக வட்டாரம் தோறும் ஒரு ஜெனரிக் மருந்துக் கடையை ஆரம்பிக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. ஆனால், அரசே வியாபாரம் செய்யத் துவங்கினால் உருப்படாது.

அடுத்தது,
செய்தி: தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தடங்கலில்லாமல் எல்லா இடங்களிலும் மின்சார வசதி கிடைக்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் இன்றைக்கு எதுவுமே இயங்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலவிய மின் கட்டுப்பாடு, மின் தடை வரலாறு காணாத அளவு இருந்தது. பலர் கடும் தொல்லைக்கு ஆளாகினர். புதிய தொழில்கள் வேறு மானிலங்களுக்குச் சென்று விட்டன. தொழிலதிபர்கள் தமிழ் நாட்டைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. எப்பொழுதும் மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததால் தமிழ் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் உதய் திட்டத்தில் பல மானிலங்கள் சேர்ந்த பின்னும் தமிழ்நாடு முரண்டு பண்ணியது. சமீபத்தில் தான் சேர்ந்து கொண்டது. வரும் காலத்திலாவது தமிழ் நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். 85000 கோடி ரூபாய் கடன் எப்படி உதவப் போகிறது என்று பார்ப்போம்.

அடுத்ததாக
செய்தி: அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்..க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே..செங்கோட்டையன் பேட்டி
அமைச்சரின் ஒப்புதல் படி இது வரை தமிழகத்தில் பாடத் திட்டங்கள் சி.பி.எஸ். பாடத் திட்டத்துக்கு நிகராக இருந்ததில்லை என்பதை தெளிவாக்குகிறது. அதாவது சி.பி.எஸ்.இயின் உயர்ந்த தரம் தமிழகத்தில் இல்லை என்பதை நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது சரி செய்தால் நல்லதுதான். இனி மேலாவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யும்.

இறுதியாக..
செய்தி: The lowdown on the directive to RBI on bad loans
பல வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக மாறி வாராக் கடன்கள் அபாயகரமாக ஏறிக்கொண்டே இருக்கின்றன. 1990-களில் என்று ஞாபகம். இது போன்றே ஒரு நிலை நீடித்தது. வாராக் கடன்களால் பல வங்கிகள் திண்டாடிக் கொண்டிருந்தன. இந்த  வாராக் கடன்களால் பல வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ, கோர்ட், பணி நீக்கம், தண்டனை, ஜெயில் என்று அவதிப் பட்டிருக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் கொடுக்கும் நியாயமான அதிகாரிகளுக்கு கொடுக்கும் கடன் திரும்ப வருமா, வராதா என்று என்றுமே ஒரு பதட்டம்தான்

Past performance is not a guarantee for future என்று மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு விளம்பரத்தில் போடுகிறார்கள். அது போலத் தானே வங்கிக் கடன்களும். ஓரு மனிதரின், அல்லது ஒரு நிறுவனத்தின் பழைய ரெக்கார்டுகளைப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணிப்பும் செய்துதான் கடன் கொடுக்கிறார்கள். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால் அந்த அதிகாரியின் பாடு திண்டாட்டம்தான். கடன் கொடுப்பதில் பல அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்

இந்த வாராக் கடன்களைப் பற்றி நடுவில் கொஞ்ச காலம் அதிகமாக யாரும் பேசவில்லை. எல்லா வங்கிகளும் வாராக் கடன்களை கணிசமாக குறைத்து விட்டதாக பறைசாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது மீண்டும் அது பற்றிய பரபரப்பு தலை தூக்கியிருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்க அனுமதி கொடுக்கும் பொழுதே அப்பொழுதெல்லாம் கை நடுங்கும். இன்றைக்கு பல நூறு கோடி ரூபாய் கடன்கள் சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிறது

அன்றைக்கு consortium என்ற முறை இருந்தது. ஒரு நிறுவனத்துக்கு பல வங்கிகள் இணைந்து கடன் கொடுக்கும் பொழுது எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இந்த நல்ல வழி முறை இடையில் கைவிடப்பட்டது. ஒரு நிறுவனம் எத்தனை வங்கிகளிடம் வேண்டுமானாலும் கடன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. வங்கிகளின் வழிமுறைகளை  நான் மறந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கு நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.

இறுதியாக..

அட, இன்னுமா முடிக்கவில்லை.


ஆமாம். ஒரே ஒரு கனவைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அதைத் தனியாக இன்னும் ஒரு சில நாட்களில் எழுதுகிறேன்.