Total Pageviews

Thursday, December 02, 2021

நானும் ஆங்கிலமும்




ஆங்கிலத்தில் என் ஈடுபாட்டின் துவக்கம்

    எனக்கு ஆங்கிலத்தில் ஒரு ஈடுபாடு எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பில் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். நான் நெல்லையில் ஷாஃப்ட்டர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் சமயம் எங்கள் சமஸ்கிருத ஆசிரியர் திரு. வெங்கடராம ஷாஸ்த்ரிகள் அவர்களின் மகன் ராமசுப்பிரமணியன் எனக்கு அறிமுகமானார். சுருக்கமாக எல்லோரும் அவரை ஆர். வி என்றழைப்பார்கள். அவர் என்னை விட இரண்டு மூன்று ஆண்டுகள் சீனியர் என்று நினைவு. நாங்கள் அடிக்கடி நெல்லை டவுண் மார்க்கெட் பகுதியில் காய்கறி மார்க்கெட்டின் மாடியில் அமைந்திருந்த அரசு பொது நூலகத்தில் சந்தித்துக்கொள்வோம்.

    டவுணில் கீழரத வீதியில் அமைந்திருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் இணைந்திருந்த பொது நூலகத்தில் பொதுவாகத் தமிழ் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். அங்கிருந்த பல துப்பறியும் மர்ம நாவல்களையெல்லாம் படித்தாகி விட்டது. அதனால், ஆங்கிலப் புத்தகங்களைத் தேடி அரசு பொது நூலகத்துக்கு வருவேன். அங்கேதான் ஆர். வியைச் சந்தித்தேன். அவர் தான் எனக்கு முதன் முதலாக ஆங்கிலத்தில் ஏர்ள் ஸ்டேன்லி கார்ட்னர் (Earl Stanley Gardner) எழுதிய பெரி மேசன் (Perry Mason) நாவல்களை அறிமுகப்படுத்தினார். ஐ. ஏ. எஸ் தேர்வுகளுக்காக ஆர். வி தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்த சமயம் அது. அவரேதான் எனக்கு Wilfred Funk எழுதிய Thirty Days to a More Powerful Vocabulary என்ற புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். பெரி மேசன் துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. தொடர்ந்து பொது நூலகத்தில் இருந்த எல்லா பெரி மேசன் நாவல்களையும் படிக்கத் தொடங்கினேன். வில்ஃப்ரெட் ஃபங்கின் புத்தகம் எனக்கு பல புதிய வார்த்தைகளையும் அதன் பிரயோகத்தையும் அறிமுகப்படுத்தியது.

    அந்தத் தாக்கத்தினால் நானும் சொந்தமாக என்னுடைய ஆங்கிலப் பாடங்களை எழுதத் தொடங்கினேன். ஆங்கிலத் தேர்வுகளில் என் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விடைகளை எழுதினேன். ஆசிரியர் வகுப்பில் போர்டில் எழுதிப் போட்ட விடைகளைத் தவிர்த்தேன். அதனால், என்னுடைய ஆங்கிலப் பாட விடைத்தாளில் பல தவறுகள் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டினார். அவர் எழுதிப்போட்ட விடைகளை எழுதாததற்கு என்னைக் கண்டித்தார். ஆனால், விடைத் தாள்களை என்னிடம் தனியாகக் கடைசியாகக் கொடுக்கும்போது மட்டும் என்னைப் பாராட்டத் தவறியதில்லை. நான் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையே அவர் விரும்புவது போல எனக்குத் தோன்றியது. அதனால், ஆங்கிலப் பாடத்துக்கு சொந்தமாக விடைகளை அளிப்பதை என் கல்லூரி நாட்களிலும் தொடர்ந்தேன். வழிகாட்டுப் புத்தகங்களைத் தவிர்த்தேன். சொந்தமாக எழுதும்போது பல தவறுகள் இருந்ததால் ஆங்கிலப் பாடத்தில் எனக்குக் குறைவான மதிப்பெண்களே கிடைத்து வந்தது.

    அங்கங்கே நான் படித்த படைப்புகளின் தாக்கத்தை மனதில் கொண்டு பள்ளியின் ஆண்டு மலரில் கட்டுரைகள் சொந்தமாக எழுதினேன். அவை வெளியானதில் எனக்கு மிகவும் பெருமை. ஆசிரியர்களும் பாராட்டினார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் தெருவில் வசித்த என்னை விட வயதில் சிறியவனான முத்துசாமி என்ற நண்பனுக்காகவும் ஒரு கட்டுரையை எழுதிக்கொடுத்தேன். I became a ghost writer then. அந்தச் சின்ன சம்பவத்தை சமீபத்தில் ஒரு நாள் முத்துசாமியுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டபோது நினைவுபடுத்தினான்.

    மேலும் மேலும் புதிய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். ஏர்ள் ஸ்டேன்லி கார்டனருக்கு அடுத்ததாக அகதா க்றிஸ்டி, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போன்றவர்களின் கதைககளைப் படித்தேன்.

    இடையில் ஆர். வி காவல் துறையில் ஐ. பி. எஸ்-சில் (IPS) தேர்வாகியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Deputy Inspector General -ஆக பணி ஓய்வு பெற்றார். ஆனால், அவர் ஐ. பி. எஸ்-சில் சேர்ந்த பிறகு அவருடன் எனக்குத் தொடர்பு அற்றுப்போய் விட்டது.

ஆங்கிலத்தில் என்னுடைய ஆர்வம் கூடுகிறது

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பாடப் புத்தகங்களே எனக்கு ஆங்கிலத்தில் ஆர்வத்தை இன்னும் கூட்டியது. ஆங்கிலப் பாடங்களை நடத்திய விரிவுரையாளர்களும் என்னுடைய ஆர்வத்தைக் கூட்டும்படியாக சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களில் எனக்கு நினைவில் நிற்பவர்கள் திரு. தேவதாஸ் என்பவரும் திரு. அருளானந்தம் என்பவரும். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எனக்குப் பாடமாக இருந்தன. அந்த நாடகங்களை விரிவுரையாளர்கள் வாசித்துக் காட்டி விளக்கம் சொன்ன விதம் என்னை ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மீது ஒரு பெரிய ஈடுபாட்டை உண்டாக்கியது. அதனால், என்னுடைய பாடத்தில் இல்லாத பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாக, Twelfth Night, Midsummer Night’s Dream, Othello, Hamlet, Merchant of Venice, King Lear போன்ற பல நாடகங்களின் தொகுப்பைப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் படித்தேன். ஆங்கிலத்தின் மீது எனக்குத் தொடர்ந்து ஈடுபாடு கூடிக்கொண்டே போனது.

    அதே போல பெர்னார்டு ஷா எழுதிய பிக்மாலியன் என்ற ஆங்கில நாடகம் எனக்குப் பாடமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் அதுவும் ஒன்று. ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice என்ற கதையும் பாடமாக இருந்தது. ஏதோ ஒரு வருடம் பல பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு பாடப் புத்தகமாக இருந்தது. அதில் J. B. Priestly, Aldos Huxley, P. G Woodhouse, Bertrand Russel, H. G. Wells போன்ற பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் என்னை ஈர்த்தன. Sesame and Lillies என்ற நூலை எழுதிய John Ruskin அவர்களின் எழுத்துக்கள் என்னைப் பலமாகப் பாதித்தன. என்னுடைய ஆங்கிலப் படைப்புகளிலும் அவரைப் போலவே பல வரிகளை தொடர் வரிகளாக, நீளமாக எழுதி வரும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அதை இன்றும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. S. T Coleridge எழுதிய A sight to dream of, not tell என்ற முக்கியமான வரிகள் அடங்கிய Christable, John Milton எழுதிய Paradise Lost, William Wordsworthu எழுதிய Daffodils போன்ற கவிதைகள் என் கவனத்தைக் கவிதைகள் பக்கமாகவும் திருப்பி விட்டன.

    முன்னம் ஆர். வி அவர்கள் சொன்னதை நினைவில் வைத்து Arthur Conon Doyle எழுதிய The Hound of the Baskervilles போன்ற ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல்களை கல்லூரி நூலகத்தில் படித்திருக்கிறேன். அதே போல இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய இரண்டாம் உலகப் போரின் நினைவுகள் அடங்கிய பல பகுதிகளைக் கொண்ட புத்தகத்தைப் படித்தேன்.

என்னுடைய பிரத்யேக அகராதி

    பாளையங்கோட்டையில் கல்லூரியில் படிக்கும் சமயம் ஒரு பெரிய தடியான நோட்டுப் புத்தகத்தில் நான் படித்த புத்தகங்களிலிருந்து நான் கண்ட புதிய வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதத் தொடங்கினேன். அந்த நோட்டுப் புத்தகத்தையும் பின்னால் நான் சென்ற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறேன். எனக்கு அது ஒரு குட்டி அகராதி போல என்னுடனேயே பல ஆண்டுகள் இருந்து வந்தது. பின்னர் ஒரு சமயம் அந்த நோட்டுப் புத்தகம் சென்னையில் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததில் அழிந்து போய் விட்டது.

ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்

    கல்லூரியில் படிக்கும் சமயம் ஆங்கிலத்தில் பேசவும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என்னையும், நெல்லை வடிவேலு மற்றும் இன்னொரு சக மாணவனையும் (பெயர் நினைவில்லை) பல போட்டிகளுக்கு கல்லூரியின் முதல்வர் திரு. வேதசிரோன்மணி அனுப்பி வைத்தார். அதனால், பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதில் கல்லூரிக்கும் சரி, எனக்கும் சரி பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன.

    முக்கியமாக பாளையங்கோட்டை ரோட்டரி கிளப் நடத்திய விவசாயம் தொடர்பான தலைப்பில் நடந்த ஒரு போட்டியில் நான் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். எனக்கு ஏழெட்டு புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன. அதில் முக்கியமாக ஜவஹர்லால் நேரு எழுதிய Discovery of India, H. G Wells எழுதிய Time Machine, ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகம் போன்ற புத்தகங்கள் இருந்தன.  அந்தக் காலத்தில் அந்தப் புத்தகங்களையெல்லாம் படிக்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. அந்தப் போட்டியில் நான் பேசியது பின்னால் இந்தியன் வங்கியில் சேரும் சமயம் நான் விவசாயத்தைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை நேர்காணல் உறுப்பினர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. நேர்காணல் உறுப்பினர்கள் நான் எழுதிய கட்டுரையை ஒட்டியே ஒரு சில கேள்விகளைக் கேட்டபோது என் கட்டுரையை ஆழமாகப் படித்திருக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அது ஏதேச்சையாக எனக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி.

    மதுரை காமராஜ் பல்கலையில் இன்னொரு முக்கியமான பேச்சுப் போட்டிக்கு என்னை அனுப்பினார்கள். மதுரா கல்லூரியில் வைத்துப் போட்டி நடந்தது. நான் நன்றாகப் பேசியிருந்தும் பெண் போட்டியாளர் என்ற ஒரே காரணத்துக்காக இன்னொரு பேச்சாளருக்குப் பரிசு கொடுத்தார்கள். அரசல் புரசலாக எனக்கு இது தெரிய வந்தது.

நான் வாங்கிய முதல் ஆங்கில அகராதி

    பின்னர் 1970-ல் இந்தியன் வங்கியில் சேர்ந்த பிறகு குன்னூர் கிளையில் என் முதல் மாதச் சம்பளத்தைக் கையில் பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் எங்கள் வங்கிக்கு அருகே இருந்த ஒரு புத்தகக் கடையில் ஆக்ஸ்ஃபோர்டு பிரசுரத்தின் ஆங்கில அகராதி ஒன்றை எனக்கே எனக்காக முப்பது ரூபாய்க்கு வாங்கி அதன் முதல் பக்கத்தில் “This is for improving my English” என்று எழுதி நானே கையெழுத்து போட்டுக்கொண்டது. அந்த அகராதி இருபது வருடங்களுக்கும் மேலாக என்னுடனேயே பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக அதுவும் சென்னை வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது.

ஆங்கிலத்தை வளர்ப்பதற்கு புத்தகங்கள் படிப்பது அவசியம்

    வங்கியில் சேர்ந்த பிறகு வேலைப் பளுவுக்கு நடுவேயும் பல ஆங்கில நாவல்களைத் தொடர்ந்து படித்து வந்தேன். Nevil Shute, Arthur Haily, Irving Wallace, Ayn Rand, Robert Ludlum, Leon Uris, Frederick Forsyth போன்ற பல ஆங்கில எழுத்தாளர்களின் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். பின்னர் வந்த காலங்களில் இன்று வரை Jeffrey Archer, Michael Crighton, Alistair Maclean, Clive Cussler, David Baldacci இப்படிப் பல எழுத்தாளர்களின் மர்ம நாவல்களைப் படித்திருக்கிறேன். ஒரு சில எழுத்தாளர்கள் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.

    அப்படியாகப் பல புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்ததினால் ஆங்கிலத்துடன் என்னுடைய தொடர்பு தொடர்ந்து இருந்து வந்தது. ஆங்கிலத்தில் என்னால் நன்றாகப் பேச முடிந்திருந்தாலும் அலுவல் காரணமாகத் தமிழ், ஹிந்தி மொழிக்கலப்புடன் பேசிப் பேசி வந்ததில் என்னுடைய ஆங்கிலப் புலமை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிப்போனது உண்மைதான்.

நான் ஆங்கிலப் பேச்சாளரானேன்

    பின்னர் 2006-ல் நான் துபாயிலிருந்து பணி ஓய்வு பெற்று தென்காசியில் குடிபுகுந்த பின்பு பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக Personality Development பற்றிப் பேசச் சொன்னார்கள். அப்பொழுதுதான் என்னால் ஒரு பேச்சாளராகவும் மாற முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். பேச வேண்டியதைப் பற்றி முன் கூட்டியே என்னைத் தயார் செய்துகொண்டு நூற்றுக்கும் மேலான மாணவர்கள் முன்பு மைக்கைப் பிடித்து என்னால் பேச முடிந்தது. பாரத்தின் முதல்வரும் ஆசிரியர்களும் என்னுடையப் பேச்சை பாராட்டத் தொடங்கவே தொடர்ந்து அந்தப் பள்ளியிலும் வேறு சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் Personality Development, Motivation போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் பாடம் நடத்தியிருக்கிறேன்.  நாளாவட்டத்தில் எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பேசத் தொடங்கினேன். மேடையில் ஏறி நின்று ஓரு பெரிய கூட்டத்தைக் கண்டால் சாதாரணமாக வரக்கூடிய பயம் எனக்குப் பொதுவாக என்றுமே இருந்ததில்லை.

    தொடர்ந்து என்னுடைய ஆங்கிலப் பேச்சுக்களுக்காக Personality Development, Motivation, Communication Skills, Leadership Development பற்றிய நூல்களை இன்றும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்கத் துவங்கினேன்

    இதற்கிடையில் திரு. ராமகிருஷ்ணன் என்ற என் மனைவியின் நெருங்கிய உறவினர் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் பல காலமாக அதைத் தன் தொழிலாகச் செய்து வந்தார். தன்னிடம் இருந்த ஒரு சில பயிற்சிப் புத்தகங்களையும் எனக்குக் கொடுத்து பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலத்தில் பேசுவதற்குச் சொல்லிக்கொடுக்க ஊக்குவித்தார். ஆரம்பத்தில் எனக்கு அது பற்றிய பல சந்தேகங்கள் இருந்தாலும் அவருடைய உந்துதலால் பல பள்ளிகளில் பல ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறேன்.  இருநூறுக்கும் மேலான ஆசிரியர்களும் முன்னூறுக்கும் மேலான மாணவர்களும் அந்தப் பயிற்சியை என்னிடம் எஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன்

    பணி ஓய்வு பெற்று அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வந்த சமயத்தில்தான் இண்டெர்னெட்டில் என் வலைப்பக்கத்தில் (Blogging) எழுதும் பழக்கம் ஆரம்பித்தது. எனக்கென்று தனியாக ஒரு வலைப் பக்கத்தை பதிவு செய்துகொண்டேன். அதில் தொடர்ந்து எழுத ஆரம்பித்ததில் என்னுடைய எழுத்திலும் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது.

என் முதல் புத்தகம்

  


 
தென்காசியில் வசித்து வந்த சமயத்தில்தான் ஆங்கிலத்தில் ஒரு முழு நாவலை எழுத ஒரு மையக் கருத்தும் பிறந்தது. அதே சமயம் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருந்தேன். ஏழு சிறுகதைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வடிவமைத்து பாரத் மாண்டிசோரி பள்ளியில் உதவி முதல்வராக இருந்த திருமதி. உஷா ரமேஷ் அவர்களிடம் கொடுத்தேன். அவர் அதைப் படித்து விட்டு என்னுடைய கதைகளையும், நான் எழுதிய விதத்தையும் வெகுவாகப் பாராட்டினார். அதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனையையும் கொடுத்தார். பள்ளியின் முதல்வரான திருமதி. காந்திமதிக்கும் என்னுடைய எழுத்துக்களும், கருத்துக்களும், எழுதிய விதமும் பிடித்திருந்தது. புத்தகத்தை வெளியிட்டால் பள்ளியில் என்னுடைய புத்தகத்தை ஒரு Nondetailed book-ஆகத் தன் மாணவர்களைப் படிக்க வைப்பதாகச் சொன்னார். குற்றாலத்தில் பராசக்தி மகளிர் கல்லூரியில் 
டாக்டர் திருமதி. ராஜேஸ்வரி முதல்வராகப் பதவியேற்ற சமயம் அது. அவர்களிடமும் என் புத்தக வரைவைக் காட்டினேன். அவரும் படித்து விட்டு என்னுடைய கதைகள் மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். அவரையே என்னுடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதிக்கொடுக்கக் கேட்டேன். உடனேயே ஒப்புக்கொண்டு முன்னுரை எழுதிக்கொடுத்தார்.

    2011-ஆம் ஆண்டு தென்காசி மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் தலைப்பு “Short Stories for Young Readers: Book 1” என்னுடைய முதல் புத்தகத்தின் ஒரு சில கதைகளை திரு. ராமகிருஷ்ணனும் படித்துப் பார்த்து அதை எப்படி எடிட் செய்யலாம் என்ற தனது வலிமையான கருத்துக்களைக் கொடுத்திருந்தார். அந்தப் புத்தகத்தின் சுமார் 150 பிரதிகளை பாரத் மாண்டிசோரி பள்ளி தனது ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் மாணவர்களுக்காக வாங்கிக் கொண்டது. மேலும் புதிய புத்தகங்களை உருவாக்குமாறும் அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் புத்தகங்கள் வெளியிட்டேன்

    நான் சிறுகதைப் புத்தகங்கள் வெளியிட்டதில் பாரத் மாண்டிசோரி முதல்வர் திருமதி. காந்திமதி கொடுத்த ஊக்கத்தின் பங்கு மிகப் பெரியதுஅதே போல என்னுடைய ஒவ்வொரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்து தனது கருத்துக்களை எனக்குத் தெரிவித்த திருமதி. உஷா அவர்களுடைய உதவி என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. என்னுடைய முதலாவது சிறுகதைப் புத்தகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் இரண்டு புத்தகங்கள் “Short Stories for Success for Young Readers: A New Lexicon Unfolded” மற்றும் “Short Stories for Young Readers: for Personality Development – Book 1” என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டேன். பாரத் மாண்டிசோரிப் பள்ளி என்னுடைய எல்லா சிறுகதைப் புத்தகங்களையும் ஆண்டு தோறும் தங்கள் பள்ளி மாணவர்களுக்காக வாங்கி வருகிறார்கள்.

    பாரத் பள்ளியைப் போலவே தென்காசியில் எம். கே. வி கே மெட்ரிக் மேல்னிலைப் பள்ளி, சுரண்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்னிலைப் பள்ளியும் என்னுடைய புத்தகங்களை ஓரிரு ஆண்டுகளுக்கு வாங்கிக்கொண்டார்கள். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி மாவட்டங்களில் முப்பதுக்கும் மேல் பள்ளிகளில் என்னுடைய புத்தகத்தை தங்கள் நூலகங்களுக்காக வாங்கிக் கொண்டார்கள்.

என் முழு நீள நாவல்கள்

    2011-ல் என்னுடைய சிறுகதைப் புத்தகம் எழுதிவரும் போது ஒரு முழு நீள ஆங்கில நாவல் எழுதும் ஒரு கருவும் என்னுள் உருவாகியிருந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெறுவதாக என் கற்பனையில் உதித்ததுதான் What if Our Dreams Come True! An Uncommon Meeting with Lord Siva. எழுதி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகின. இந்தப் புத்தகத்தை பங்களூரில் Pothi.com இணையதளத்தில் அச்சு வடிவத்தில் வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து Lonely மற்றும் The Path என்ற தலைப்பில் இரண்டு ஆங்கில நாவல்களை வெளியிட்டேன். 2020-ல் Lonely II என்ற இன்னொரு நாவலை அமேசானில் வெளியிட்டேன்.

என் பொது அறிவுப் புத்தகங்கள்

    இடையில் என் கவனம் மாணவர்களின் நலனுக்காக பொது அறிவுப் புத்தகங்களை எழுதுவது பக்கம் திரும்பியது. நான் தென்காசியில் குடிபுகுந்த பிறகு மாணவர்களுக்காக பொது அறிவு சம்பந்தமான வினாடி-வினாப் போட்டிகள் நடத்தி வந்தேன். அந்தப் போட்டிகளுக்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டிப் புத்தகம் இருந்தால் மாணவர்கள் இன்னும் சிறப்பாகப் போட்டியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்தைத் தொடர்ந்து I want to know about … India, its States, and Important Cities என்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றிய பல புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை ஐந்து பகுதிகளாக வெளியிட்டேன். பின்னர், “Solar System,’ மற்றும் “Fundamentals of chemistry, Atom, and what is inside the Atom” என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்கள் தயாரித்து வெளியிட்டேன். 2020-21-ல் “Human Body and Health” என்ற தலைப்பில் இன்னொரு புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பயணம் தொடர்கிறது

    அப்படியாக என்னுடைய ஓய்வு நேரங்களை பயனுள்ளதாகச் செலவிட முயற்சி செய்து வந்திருக்கிறேன். இந்தப் பகுதியை எழுதும் இந்த நேரம் என்னுடைய வயது 73-ஐத் தாண்டியிருக்கிறது. வயதான காலத்தில் வாழ்க்கையில் ஒரு பிடிமானம் கிடைப்பதற்கு இதுபோன்ற முயற்சிகள் உதவி வருகின்றன. என்னுடைய வாழ்க்கை வீணாக வெறும் பொழுதுபோக்கில் மட்டும் செலவிடப்படவில்லை என்ற ஒரு மன நிம்மதியும் ஏற்பட்டு வருகிறது.

    இருந்தும் ஆங்கிலத்தில் நான் ஒன்றும் பெரிய மேதாவி அல்லது திறமைசாலி என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஏதோ, ஆங்கிலத்தின் மேல் எனக்கு இருக்கும் ஒரு மோகத்தால் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

முக்கியமான ரகசியம்

    ஒரு முக்கியமான ரகசியம் என்னவென்றால், இன்றும் ஆங்கிலத்தில் எனக்கு இலக்கணம் தெரியாது, பிடிக்கவும் பிடிக்காது. இலக்கணத்தில் எனக்கு சந்தேகம் வந்தால் ஒன்று என் மனைவியிடம் கேட்பேன் அல்லது இண்டெர்னெட்டில் தேடுவேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது முதலிலேயே நிபந்தனை போட்டு விடுவேன் “இலக்கணம் சம்பந்தமாக என்னிடம் கேள்விகள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியவும் தெரியாது,” என்று. ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பது எனது நம்பிக்கை. நாம் எல்லோரும் தமிழில் பேசக் கற்ற பிறகுதான் பின்னர் பள்ளியில் தமிழ் இலக்கணத்தைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்டிருப்போம்.  அமெரிக்காவில் வசிக்கும் என் மூன்று வயதுப் பேரன் ஆங்கிலத்தில் பிளந்து தள்ளியிருக்கிறான். இவ்வளவுக்கும் ஐந்து வயது வரை அவன் பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் தன் அண்ணனுடன் பேசிப் பேசியே ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டான்.

நன்றியுரை

    ஆங்கிலத்தில் எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தூண்டிய (மறைந்த) திரு. ஆர். வி (ஐ. பி. எஸ்) அவர்களுக்கும், என்னைப் பல அங்கிலப் பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி ஊக்குவித்த ஜான்ஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் (மறைந்த) திரு. வேதசிரோன்மணி அவர்களுக்கும், என்னை ஒரு பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தி ஊக்குவித்த பாரத் முதல்வர் திருமதி. காந்திமதி, உதவி முதல்வர் திருமதி உஷா, தாளாளர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும், என்னை ஒரு ஆங்கில ஆசிரியராகக் காண்பித்த (மறைந்த) திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு இன்றும் மானசீக நண்பர்களாக இருக்கும் பல ஆங்கில எழுத்தாளர்களுக்கும் நன்றி. 

&&&&&

Thursday, April 15, 2021

14.04.2021 நம்பிக்கைகள் (BELIEFS)

 14.04.2021 நம்பிக்கைகள் (BELIEFS)

சுயமுன்னேற்றத்துக்கு (SELF DEVELOPMENT) ஒருவரது நம்பிக்கைகள் மிக மிக முக்கியம். ஒருவர் தன்னைப் பற்றி, தன் திறமைகளைப் பற்றி, தன் எதிர்காலத்தைப் பற்றி, தன் அவமானங்களைப் பற்றி, தன்னுடைய வெற்றி தோல்விகளைப் பற்றி, இப்படிப் பலவற்றைப் பற்றியும் நாம் என்ன கருத்து, என்ன விதமான நம்பிக்கைகளை வைத்திருக்கிறார் என்பது அவரது முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது.  

இதை எனது சொந்த அனுபவத்திலேயே கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தந்தைக்குக் கிடைத்த வருமானம் வீட்டில் ஆறு வயிறுகளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் எப்பொழுதுமே வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட்தான். எதுவும் நினைத்த மாத்திரத்தில் நடந்து விடாது. கிடைத்து விடாது.

பள்ளிக்கூட பருவங்களில் பல இளைஞர்களைப் போல நானும் கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். அந்த வயதில் நான் பார்த்த அளவில் பல பணக்காரர்களின் சிந்தனைகள், நடத்தைகள், கொள்கைகள் மேல் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. பார்த்துப் பார்த்து செலவு பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்த எங்கள் குடும்பத்தையும் பல பணக்காரர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பணக்காரர்கள் மீது எனக்குக் கோபம் அதிகமாகியது. எல்லா பணக்காரர்களுமே மோசமானவர்கள் என்ற கருத்து என் மனதில் பதிந்து விட்டது. அதனால் பணத்தின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. என்னிடம் பணம் இருந்திருந்தால் நானும் மற்ற பணக்காரர்கள் போலத் தானே நடந்துகொண்டிருப்பேன் என்று நினைத்துப் பார்ப்பேன். அதனால், பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை என்னை அறியாமல் என் மனதில் தீவிரமாகத் தோன்றவில்லை.

ஆனால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடித்தேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான் முன்னேற வேண்டுமென்றால் நிறையப் படித்தால்தான் முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். நிறையப் படித்தால் பெரிய பதவிகளை அடையலாம். புகழை அடையலாம். பட்டங்களை அடையலாம். செல்வாக்கை அடையலாம் என்று நம்பினேன். அதனால், என்னுடைய முழு கவனத்தையும் என் படிப்பின் மீது செலுத்தினேன். தந்தையின் விருப்பத்தையும் மீறி மேல்படிப்புக்குச் சென்று சொந்தக் காலிலேயே  நின்று படிப்பை முடித்தேன். படித்து முடிப்பதற்கு முன்பேயே வங்கியில் வேலை கிடைத்து விட்டது. அதுவும் அதிகாரியாக. வங்கியில் பெரிய பதவி அடைய முடியும் என்று நம்பினேன். அதைத்தான் பெரிய வெற்றியாகக் கருதினேன்.

வங்கிப் பணியில் பல முன்னேற்றங்களைக் கண்டேன். சாதாரண அதிகாரியாக சேர்ந்த நான் 25 ஆண்டுகளில் வங்கியின் துணைப் பொதுமேலாளர் பதவி வரை பார்த்து விட்டேன். சுமார் 25000 ஊழியர்கள் வேலை பார்க்கும் பொதுத்துறை வங்கியில் சுமார் 30 உயர்ந்த பதவிகளில் ஒன்று. பதவியோடு பல வசதிகள், நல்ல பெயர், செல்வாக்கு எல்லாம் வந்தது. ஆனால், செல்வம் மட்டும் என்னை விட்டு விலகியே நின்றது.

ஆம், பெரிய பதவியில் இருந்தாலும் என் கையில் பணம் மட்டும் இல்லை. வருகிற ஊதியம் எங்கள் நால்வருக்குப் போதுமானதாக இல்லை வங்கியில் இருந்த 25 ஆண்டுகளும் ஒவ்வொரு மாதமும் பழையபடியே துண்டு பட்ஜெட்தான். வங்கி வேலையில் நம்மை மயக்கி வலையில் சிக்கவைக்கும் சந்தர்ப்பங்களை கவனமாக ஒதுக்கி வாழ பகீரதப் பிரயத்தனம் செய்தேன்.  

தொடர்ந்துகொண்டிருந்த பணப் பற்றாக்குறையினால் வங்கி வேலையை உதறித்தள்ளி விடலாம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். வங்கியில் உதவிப் பொதுமேலாளர் பதவியில் இருக்கும்போது என்னுடைய தாயாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகப் போனது. மருத்துவமனையிலும் வீட்டிலும் என்று மாறி மாறி ஆறு மாதங்களை கழித்தார். அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் தாயாரை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வர மருத்துவமனைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. என் கையிலோ பணம் இல்லை. ஒரு பெரிய தேசிய வங்கியில் உதவிப்பொது மேலாளர் பதவி வகித்த என்னிடம் பத்தாயிரம் ரூபாய் கையில் இல்லை. என் வங்கியின் சேர்மனிடம் சென்று பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அவமானமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. அவரும் பெரிய மனது பண்ணி வங்கியிலேயே எனக்கு பத்தாயிரம் ரூபாய் விசேஷக் கடனாகப் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

என் குழந்தைகளும் வளர்ந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? பணம் வேண்டாமா? அதுதான் என் கையில் இல்லையே! என்னிடம் இருந்ததெல்லாம் வங்கிக்கடனால் கிடைத்த ஒரு வீடு மட்டுமே.

வங்கி வேலையில் எனக்கு எல்லா வசதிகளும் இருந்தன. பதவி, செல்வாக்கு, வசதியான நல்ல வீடு, ஓட்டியோடு கூடிய கார், தொலைபேசி, விமானத்தில் பயணம் செய்யும் சிறப்புரிமை, நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் சலுகை, எங்கே போனாலும் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது விமான நிலையத்திலிருந்தோ இறங்குவது முதல் மீண்டும் ஏறும் வரை என்னை கவனிப்பதற்கு வங்கி அதிகாரிகள், மேலாளர்கள்…

இப்படி எல்லா வசதிகள் இருந்தும், என் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குத் தேவையான பண வசதி இல்லை என்ற போது எனக்கு வெறுப்பாக இருந்தது. பணம் மட்டும் எனக்கு ஏன் கிடைப்பதில்லை என்ற நினைப்பு என்னை வாட்டி எடுத்தது.

அந்த நேரம் பார்த்து உதவிப் பொதுமேலாளர் பதவியிலிருந்து துணைப் பொதுமேலாளர் பதவிக்கு தேர்வுகள் நடக்கும்போது என்னை ஏனோ விட்டு விட்டார்கள். வங்கியை விட்டு வெளியேறி என்னுடைய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பு தலை தூக்கியது.  நாளாக, நாளாக, அந்த எண்ணம் வலுத்து வந்தது.

ஒரு சமயத்தில் வங்கி வேலையை உதறித் தள்ளிவிட்டேன். ஒரு சில தனியார் கம்பெனிகளில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். எதுவும் சரியாக வரவில்லை.

அந்த நேரம் பார்த்து என் இளைய சகோதரன் துபாய்க்கு வரும்படி அழைத்தான். நானும் அங்கே சென்று பல முயற்சிகளுக்குப் பிறகு ஒரு பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தில் முதலீடு மற்றும் உயிர் காப்பீட்டின் நிதி ஆலோசகராக பணியில் சேர்ந்தேன். நான் வகித்த பதவிகளுக்கும் அனுபவித்த வசதிகளுக்கும் இந்த வேலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

இருந்தும் நியாயமாக, நாணயமாக பணம் சேர்க்க வேண்டும், என் குழந்தைகளை வெளிநாடு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்ற நினைப்பில் வெறித்தனமாக உழைத்தேன்.

என் உழைப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தது. இருந்தும் நான் தேடிய, எனக்குத் தேவைப்பட்ட அளவு பணம் என் கைக்கு வரவில்லை. எனக்கு ஏமாற்றம் தான். எனக்குப் புரியவில்லை. என்னிடம் நிதி, முதலீடுகளைப் பற்றிய அறிவு இருக்கிறது, பேச்சுத் திறமை இருக்கிறது, வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது என்று தெரிந்திருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் என் மேல் பெரு மதிப்பு வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் என்னால்  நான் ஆசைப்பட்ட அளவு பணம் சேர்க்க முடியவில்லை.

விரக்தியை என்னால் மறைக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சூழ்னிலையில் ஒரு நாள் காலையில் துபாயில் என் அலுவலகத்தில் என் கிளை மேலாளர் – இரான் நாட்டைச் சேர்ந்தவர் - எதேச்சையாக என்னைக் கடந்து போகும்போது என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

கிளை மேலாளர்: ‘நீங்கள் என்ன கார் ஓட்டுகிறீர்கள்?”

நான்: “நான் இப்பொழுது கார் ஓட்டுவதில்லை.”

கி. மே: “ஓ, அப்படியா, என்ன கார் ஓட்ட விரும்புகிறீர்கள்?”

நான் (கொஞ்சம் திமிராக): “நான் கார் ஓட்ட விரும்பவில்லை.”

துபாயில் என்னுடன் வேலை பார்த்த பெரும்பாலான ஆலோசகர்கள் சொந்தத்தில் ஒரு கார் வைத்திருந்தனர். மார்கெட்டிங், வாடிக்கையாளர் மீட்டிங் என்று பல இடங்களுக்கு அலைவதற்கு வசதியாக இருக்கும். மேலும், துபாயில் கார் வைத்திருப்பது செல்வத்தின் அடையாளம். அதிலும் என்ன மாதிரி கார் வைத்திருக்கிறோம் என்பது மிக முக்கியம்.

கி. மே: “ஏன், ஏன்?”

நான்: “சொந்தத்தில் கார் வைத்திருப்பதை வெறுக்கிறேன். மேலும் எனக்கு வேறு அவசியத் தேவைகள் இருக்கின்றன.”

கி. மே: “நீலகண்டன், என்னுடன் என் அறைக்கு வருகிறீர்களா?”

அது ஒரு வேண்டுகோள் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவருடன் அவர் அறைக்குச் சென்றேன். அறைக் கதவைச் சாத்தினார்.

கி. மே: “நீலகண்டன், இன்று நான் உங்களுடன் பேச்சை எடுத்தது எதேச்சையாக இல்லை. நான் சிறிது காலமாகவே உங்களை, உங்கள் தொழில் வளர்ச்சியைக் கவனித்து வருகிறேன். உங்களின் முந்தைய தொழில் வாழ்க்கையை ஓரளவு அறிவேன். நல்ல பெரிய பதவியில் இருந்திருக்கிறீர்கள். நிறையப் படித்திருக்கிறீர்கள். சந்தை நிலவரத்தைப் பற்றி, நிதி மேலாண்மையைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறீகள். நன்றாகப் பேசுகிறீர்கள். கடுமையாக உழைக்கிறீர்கள். எல்லாம் இருந்தும் ….”

அவர் முடிக்க நினைத்ததைப் பற்றி நானே மனதில் போட்டுக் குழம்பிக்கொண்டிருந்த சமயம் அது.

“எல்லாத் தகுதிகள் இருந்தும் என்னால் ஏன் அந்தத் தொழிலில் ஒரு சிலரைப் போல பெரிய வெற்றிகளை காண முடிவதில்லை?’

அவர் சொல்ல நினைத்ததை நானே சொல்லி முடித்து விட்டேன்.

கி. மே: “ஏன் என்ற காரணம் உங்களுக்கு புரியவில்லையா?” என்று ஆரம்பித்து என்னுடன் என்னுடைய சரித்திரத்தைப் பற்றி விவரமாக கேள்வி மேல் கேள்விகளாகத் துளைத்தெடுத்தார்.

இறுதியில் அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:

“நீலகண்டன். உங்களுக்குப் பணத்தின் தேவை நிறைய இருக்கிறது. ஆனால் நீங்கள் பணத்தை வெறுக்கிறீர்கள். பணக்காரர்களை வெறுக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பது பாவம் என்று நினைக்கிறீர்கள். ஒரு பொருளை அடையவேண்டுமானால் அதன் மீது தீராத பற்றுதல் இருக்க வேண்டும். காதல் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது உங்களிடம் வரும். நீங்கள் பதவியை, புகழை, செல்வாக்கை, அதிகாரத்தை…இவற்றையெல்லாம் நேசித்திருக்கிறீர்கள். தீவிரமாக விரும்பியிருக்கிறீர்கள். அவையெல்லாம் உங்களை வந்தடைந்திருக்கின்றன. ஆனால், பணத்தை மட்டும் வெறுத்திருக்கிறீர்கள். அதனால் அதுவும் உங்களை விட்டு விலகிப் போயிருக்கிறது. நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உங்களை அடையாமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. பணத்தைப் பற்றிய கருத்துக்களை பணக்காரர்களைப் பற்றிய நம்பிக்கைகளை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று?”

கனத்த இதயத்துடன் அவர் அறையை விட்டு வெளியேறினேன். அவர் சொன்னது என்னைப் புரட்டிப் போட்டது. என்னைத் தோலுரித்துக் காட்டியது போலிருந்தது. பணத்தைப் பற்றிய என்னுடைய நம்பிக்கைகள், கருத்துக்கள் எனக்கே எதிரியாகப் போய்விட்டது என்பதை என்னால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என் கிளை மேலாளருடன் நடந்த பேச்சுக்களைப் பற்றி அடுத்த சுமார் மூன்று மாதங்கள் மீண்டும் மீண்டும் என் மனதில் போட்டுக் குழம்பிக்கொண்டிருந்தேன். மெதுவாக, அவர் சொன்னதின் அர்த்தம் மனதில் ஒரு புது ஒளியைத் தோற்றுவித்தது. கொஞ்சமாக பணத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். என் தேவைகளுக்கு மட்டுமில்லாமல் நானும் ஒரு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திக்கொண்டேன்.

பணத்தைப் பற்றிய நம்பிக்கைகள், கருத்துக்கள் என்னுள் மாற மாற என்னுடைய நிதி நிலைமையும் முன்னேற்றத்தைக் காண ஆரம்பித்தது. நிறைய புதிய பெரிய வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். என்னுடைய வியாபாரம் பெருகியது. நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே பணம் சேர்க்க முடிந்தது. இன்று என்னுடைய சொந்தப் பணத்திலிருந்து தாராளமாக பல நல்ல காரியங்களுக்கு, ஏழைகளுக்கு, படிப்பதற்கு, மாணவர்கள் முன்னேற்றத்துக்கு என்று ஆண்டு தோறும் கவலைப்படாமல் செலவு செய்ய முடிகிறது.

எனக்கென்று தேவைப்படாவிட்டாலும் இன்று நான் பணத்தைத் தீவிரமாக காதலிக்கிறேன்.  நியாயமாக, நாணயமாக பணம் சேர்கிறது. பலருக்கும் பயன்படுகிறது. எனக்கு உண்மையைப் புலப்படுத்திய அந்தக் கம்பெனியின் கிளை மேலாளருக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

நம் எதிர்காலம், முன்னேற்றம் எல்லாம் நமது நம்பிக்கையில் தான் இருக்கிறது.

பி.கு: என்னுடைய சொந்த அனுபவத்தையே ஒரு கதையாக SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT - BOOK 1 என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன். விருப்பப்பட்டவர்கள் www.pothi.com என்ற வலையில் வாங்கிப் படித்துப் பார்க்கலாம். தென்காசியில் ஒரு சில பள்ளிகளில் இந்தப் புத்தகத்தை பள்ளி மாணவர்களின் கூடுதல் வாசிப்புக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

Monday, April 12, 2021

12.04.2021 “ஸாரி”

 12.04.2021 “ஸாரி”

வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. அதில் மற்றவர்கள் காயப்படும்போது அதை உணர்ந்து அதற்காக வருந்துவது மேன்மையானது. நாம் காயப்படும்பொழுது நம்மை காயப்படுத்தியவர்களை உண்மையாகவே மன்னிப்பது தெய்வீகத் தன்மை.

தவறுகளே செய்யாதவர்கள் கிடையாது. அப்படித் தவறுகள் செய்யும்பொழுது தவறு செய்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்வது நமக்கும் மற்றவர்க்கும் நல்லது. நாம் தவறு செய்யும்போது மற்றவர்கள் காயப்பட்டிருப்பார்களெனில் அதை உணர்வது அவசியம். நமது அஹங்காரம் அதற்குத் தடையாக இருக்கும். தவறை எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டோம். மற்றவர்கள் காயப்பட்டிருப்பதை உணரவும் மாட்டோம். அதற்கும் முதிர்ச்சி வேண்டும். அப்படி நமது சொல்லால், செயலால் மற்றவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தவுடனேயே ஒருவர் செய்யக்கூடிய குறைந்த பட்சக் காரியம் காயப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்பதுதான்.

மீண்டும் ஒரு சொந்த அனுபவத்தையே எழுதுகிறேன்.

நான் வங்கியில் வேலை பார்த்து வந்தபோது சென்னையில் ஒரு கிளையில் மேலாளராக பணி புரிந்து வந்த சமயம். 1980-களின் ஆரம்ப ஆண்டுகள். ஒரு நாள் கிளையின் பரபரப்பான காலை நேரம். பல வாடிக்கையாளர்களின் கூட்டம் கிளை முழுவதும் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தது.

கிளையில் பல பணியாளர்கள் பெண்கள். பெண் ஊழியர்கள் பொதுவாக வாடிக்கையாளர்களை நன்றாகவே கவனித்துக்கொள்வார்கள். வேலையிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தேவையில்லாத வெட்டிப்பேச்சு இருக்காது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார்கள். வேலை முடிந்து விட்டால் வீட்டிற்குக் கிளம்பி விடுவார்கள். மேலதிகாரியிடம் பொதுவாக இணக்கமாகவே இருப்பார்கள். கொஞ்சம் அதிக சலுகைகளை எடுத்துக்கொண்டாலும் வேலையில் குறியாக இருப்பார்கள்.

இதுதான் என்னுடைய பொதுவான அனுபவம்.

இருந்தும் …

அந்தக் கிளையில் ஒரு பெண் ஊழியர் வேறு ஒரு கிளையிலிருந்து மாற்றலாகிப் புதியதாகச் சேர்ந்திருந்தார். வேலையில் கெட்டிக்காரர். சுறுசுறுப்பாக வேலைகளை ‘மட மட’ வென்று முடித்து விடுவார். என்ன, அவரிடம் நாம் எதுவும் பேச முடியாது. தூக்கி எறிந்து பேசி விடுவார். ஒரு காரியத்தை செய்ய முடியாது என்றால் முடியாதுதான். ஆம், மேலதிகாரியின் உத்தரவை அவர் விருப்பப்பட்டால் மட்டுமே செய்வார்.

ஒரு சமயம் அவர் செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியத்தை செய்து முடிக்கவில்லை. எனக்கு அதிகாரிகளிடமிருந்து புகார் வந்திருந்தது. அவர்கள் சொல்லியும் கேட்கவில்லை. அவர் அந்த வேலையை முடிக்காததால் வேறு சில வேலைகள் தொங்கலில் நின்றன.

அந்தக் காலை வேளையில் பரபரப்பான சூழ்னிலையில் என்னிடம் மீண்டும் புகார் வந்த போது என்னால் பொறுக்க முடியவில்லை. நேராக அந்தப் பெண் ஊழியரிடம் போய் ஏன் அந்த வேலையை நீங்கள் முடிக்கவில்லை என்று கேட்டு விட்டேன்.

அந்தப் பெண் ஊழியரும் வெகு காட்டமாக அந்த வேலையை தன்னால் செய்ய முடியாது என்று முகத்தில் அறைந்த மாதிரி பதில் கொடுத்தார். நான் அசந்து விட்டேன்.

கிளையில் ஒன்றிரண்டு பேரைத் தவிர எல்லோருமே இளைஞர்கள். சராசரி வயது முப்பது இருக்கலாம். இள ரத்தம். பலரும் சீக்கிரமே உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நானும் அதற்கு விதி விலக்கல்ல.

எனக்கும் கோபம் தலைக்கு மேல் ஏறியது. கோபத்தில் கடுமையாக ஆங்கிலத்தில் அவரிடம் மட மடவென்று பேசித் தீர்த்தேன். என்னுடைய குரல் ஓங்கியிருந்தது. எல்லா வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள், அதிகாரிகள் எல்லோரும் கவனிக்க வங்கிக் கிளையின் விசாலமான மெயின் ஹாலில் நட்ட நடுவில் நின்றுகொண்டு கோபம் அடங்காமல் தொடர்ந்து பல நிமிடங்கள் கிளையில் மற்ற அலுவலர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் என்னுடைய கோபத்தை வெளிக்காட்டி எல்லோர் காதிலும் விழும்படியாகக் கத்தித் தீர்த்தேன். மேலதிகாரிகளின் நியாயமான உத்தரவுகளை யார் மதிக்காவிட்டாலும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன்.

கிளை முழுவதும் திடீரென்று ஒரு மயான அமைதி.

பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நான் அப்படிக் கத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

இந்த சமயத்தில் இன்னொரு விஷயத்தை இங்கே நான் சொல்ல வேண்டும். அந்தக் காலங்களில் வங்கி ஊழியர்களின், அதிகாரிகளின் யூனியன் மிக மிக அதிகாரம் கொண்டதாக இருந்தது. பொதுவாக, ஒரு சில இடங்களைத் தவிர, யூனியனைக் கண்டு பயந்து பயந்து வேலை பார்த்த சமயம். யூனியனில் நிறைய ஈடுபாடு கொண்டிருந்தவர்களைக் கையில் போட்டுக்கொண்டால்தான் அலுவலர்களிடம் வேலை வாங்க முடியும். அவர்களை முறைத்துக்கொள்ளப் பொதுவாக எந்த அதிகாரியுமே தயங்கினர். சமயத்தில் சிறு சிறு விஷயங்கள் கூடப் பெரிதாகி வேலை நிறுத்தம் வரைப் போய்விடும். வேலை நிறுத்தம் நடந்தால் பிரச்சினை மேலதிகாரிகளுக்குப் போய்விடும். அவர்கள் அதை விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களும் அதே யூனியன் அதிகாரிகளிடம் சமரசத்துக்குத் தாஜா செய்யவேண்டியிருக்கும். மேலதிகாரிகளும் யூனியன் தலைவர்களுடன் மோதல் போக்கை விரும்பியதில்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழ்னிலையில் நான் என்னுடைய கோபத்தை அப்படி உரக்க எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்தியது கிளையில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

புயலுக்கு முன்னேயும் அமைதி. அதிர்ச்சியில் அமைதி.

நான் நிதானப்பட்டவுடன் என் அறைக்குத் திரும்பி விட்டேன். அடுத்த ஒன்றிரண்டு மணி நேரம் கிளை வேலைகள் ஏதோ எதுவுமே நடக்காதது போல ஓடியது.

மதிய உணவு இடைவேளை வந்தது. நான் என் அறையில் இருந்தேன். திடீரென்று கிளையின் எல்லா ஊழியர்களும் ஒவ்வொருவராக என் அறையில் கூடத் தொடங்கினர்.

எனக்குப் புரிந்து விட்டது என்ன நடக்கப் போகிறது என்று.

அதே சமயம் அன்றைய சமாச்சாரத்தை நினைத்து ஒரு வருத்தம் என் மனதிலும் ஏற்கெனவே தோன்றியிருந்தது. அந்த ஊழியரின் தவறாகவே இருந்தாலும் நான் அந்தப் பெண் ஊழியரிடம் அவ்வளவுக் கடுமையாகக் கோபமாகப் பேசியது தவறு என்ற நினைப்பு இருந்தது. “சரி, மாலை வேளையில் தனியாக அந்த ஊழியரைக் கூப்பிட்டுப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்ற நினைப்பில் இருந்தேன்.

ஆனால், மதிய உணவு வேளையிலேயே எல்லா ஊழியர்களும் என் அறையில் என்னை சூழ்ந்து கொண்டவுடன் அவர்கள் எதற்காக என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்பதைக் காட்டும் வகையில் அவர்கள் வாய் திறப்பதற்கு முன்னே நானாகவே முந்திக்கொண்டு அவர்களிடம், “நீங்கள் எதற்காக இங்கே கூடியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இன்று நடந்தது முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று. யார் மீது தவறாக இருந்தாலும் நடந்ததற்கு நான் உங்கள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் அவ்வளவுக் கடுமையாக எல்லோர் முன்னிலையிலும் அந்த ஊழியரைக் கடுமையான வார்த்தையில் பேசியிருக்க வேண்டாம். அவர்கள் மனம் புண்பட்டிருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அதனால், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சாரி. இனி உங்கள் இஷ்டம். என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ செய்யுங்கள்,” என்று கூறி முடித்தேன்.

மீண்டும் ஒரு மயான அமைதி.  என்னுடைய இந்த வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும். ஒரு மேலதிகாரி வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் ‘சாரி’ சொன்னதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, கிளை ஊழியரின் பிரதிநிதி, “ஸார், என்னவெல்லாமோ உங்களிடம் கேட்க வேண்டும் என்று உங்கள் அறைக்குள் வந்தோம். ஆனால், நீங்கள் இப்படி ஒரேயடியாகக் கீழிறங்கி மன்னிப்புக் கேட்டு விட்டீர்கள். நாங்கள் என்ன சொல்வது? இனிமேல், எங்களைத் திட்டுவதாக இருந்தால் தனியாக உங்கள் அறையில் கூப்பிட்டுத் திட்டுங்கள். கேட்டுக்கொள்கிறோம். இப்படிப் பலர் முன்னிலையில் திட்டாதீர்கள். அவ்வளவுதான்,” என்று கூறியபின் மற்றவர்களை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.

எல்லோரும் அமைதியாகக் கலைந்து போய் விட்டனர்.

ஒரு பெரிய புயலை எதிர்பார்த்த எனக்கும் ஏமாற்றம்தான். புயலை எதிர்கொள்ள மனதளவில் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன். ‘புஸ்’ என்றாகி விட்டது.

‘சாரி’ என்ற வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது. உடனே இல்லாவிட்டாலும், என்றுமே நான் ‘சாரி’ சொல்வதற்குத் தயங்கியதில்லை. அது என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி. அது பல புயல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

‘சாரி’ சொல்வதற்கு மனம் வேண்டும். யார் தவறு செய்தார்கள் என்பது முக்கியமில்லை. மனித உறவுகள் முக்கியம். உறவுகளைக் காப்பாற்ற ‘சாரி’ மிகவும் உதவும். மற்றவர்கள் மன்னிக்கிறார்கள், மன்னிக்கவில்லை அது ஒரு கணக்கே இல்லை. ‘சாரி’ என்ற வார்த்தை எதிராளியை நிராயுதபாணியாக்கி விடும் வல்லமை கொண்டது.

எதைக் கொண்டு வந்தோம். எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம். எதற்குப் பகை?

பின் குறிப்பு: அதே கிளையில்  நான் அந்தக் கிளையை விட்டு வந்த பிறகு அடுத்த கிளை மேலாளர் ஒரு யூனியன் பிரதிநிதியை கோபத்தில் “அறையை விட்டு வெளியே போ” என்று சொன்னதற்கு அந்தக் கிளையில் சுமார் பத்து நாட்களுக்கு வேலை நிறுத்தம் நடந்தது. யூனியன் தரப்பிலும், அதிகாரிகள் சங்கத்திலும் எதிர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்துப் பிரச்சினைப் பெரியதாகி வங்கியின் துணைப் பொதுமேலாளர் தலையிட்டுப் பிரச்சினையை இரண்டு பக்கமும் சுமுகமாக முடிக்க வேண்டியிருந்தது.

அந்தப் பொது மேலாளர், “முந்தைய கிளை மேலாளர் இதே போன்ற ஒரு சூழ்னிலையில் சாரி சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். அது ஏன் இப்பொழுது நடக்கவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்,” என்று கூறியதாக மற்றவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டேன்.

Sunday, March 28, 2021

23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

 23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

மீண்டும் ஒரு சொந்த அனுபவத்தைப் பற்றியே எழுதுகிறேன்.

2000-ஆம் ஆண்டு என் மகளும், அதே ஆண்டில் படிக்கச் சென்ற என் மகனும் அமெரிக்காவிலேயே வேலை பார்த்து வந்ததினால் நானும் என் மனைவியும் அங்கே அடிக்கடி சென்று வருவது ஒரு வாடிக்கையாகி விட்டது.

அப்படி அங்கே போன ஒரு சமயம் - 2004-05-ஆம் ஆண்டு என்று நினைவு - என் மகன் டெட்ராய்ட்டில் வேலை பார்த்து வந்தான். நாங்கள் போயிருந்த சமயம் என் தம்பியும் எங்களுடன் ஒரு சில நாட்களைக் கழிப்பதற்கு சிகாக்கோவிலிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு டெட்ராய்ட் வந்திருந்தான்.

ஒரு வார இறுதியன்று  நான், என் மனைவி, என் தம்பி என் மகன் நால்வரும் என் மகனின் காரில் அருகிலுள்ள (சுமார் 60 மைல் தொலைவு) போர்ட் ஹ்யூரான் (PORT HURON) என்ற இடத்துக்குச் சுற்றிப்பார்க்கத் தீர்மானித்துக் கிளம்பினோம். அந்த இடத்துக்கு நான் செல்வது இரண்டாம் முறை.

போர்ட் ஹ்யூரான் மிக அழகான இடம். அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பாலத்தைக் கடந்தால் கனடா நாடு வந்து விடும். நீல நிறத்தில் ஓடும் செயின்ட் க்ளேர் ஆற்றுக்கு (ஹ்யூரான் ஆறு) குறுக்கே “ப்ளூ வாட்டர் ப்ரிட்ஜ்” என்றழைக்கப்பட்ட பாலம் கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 6109 அடி நீளம் (சுமார் 1.8 மைல்). ஆற்றின் குறுக்கே 922 அடி நீளம். கடல் போலத் தோற்றமளிக்கும் தெளிந்த நீர் ஏரி (Fresh Water Lake). உப்புத் தண்ணீர் இல்லை. ஆற்றையொட்டி அழகான பூங்கா, நடைபாதை, தரைதட்டிய கப்பல் ஒன்றின் அருங்காட்சியகம். ஒரு நாள் பொழுதை அமைதியாகக் கழிக்கச் சிறந்த இடம். எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட.

ஆற்றின் அருகே இரண்டு மணி நேரத்தை ஜாலியாகக் கழித்து விட்டு அங்கிருந்து போர்ட் ஆஸ்டின் என்ற இன்னொரு இடத்துக்குப் போவதற்காகக் கிளம்பினோம்.

கொஞ்ச தூரம் வந்தவுடனேயே “கனடாவுக்குப் பாலம்” என்ற பெரிய பெயர் பலகையைக் கண்டோம்.

“ஆஹா, பாலத்தை அருகிலிருந்து பார்க்கலாமே? இன்னும் அழகாக இருக்குமே!’ என்று எங்களில் யாரோ ஒருவர் தூண்டில் போட, “Why not?” என்று அந்தப் பாலத்துக்குச் செல்லும் ஒரு சரிவுப்பாதையில் (Ramp) மேலே காரை விட்டோம். ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு எங்களில் யாருக்கும் வரவில்லை.

“After all, பாலத்தைப் பார்த்து விட்டு திரும்பிவிடப் போகிறோம்,” என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தோம்.

ஆனால், அந்த சரிவுப்பாதையில் காரைத் திருப்புவதற்கு வழியில்லை. சரிவுப்பாதை நேராக பாலம் தொடங்கும் இடத்துக்கு அருகே எங்களை கொண்டு சென்றது. அங்கே மட்டும் ஒரு சில கான்க்ரீட் தடுப்புகளும், போலீஸ் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு ஒரு சிறிய தற்காலிகத் தடுப்பும் இருந்தது.

எங்கள் காருக்கு எதிரே சுமார் 500 அடி தூரத்தில் பாலம். பாலத்துக்கு முன்னே ஒரு சிறிய பூத். வேறு ஈ, காக்கை கண்ணில் படவில்லை.

காரை அங்கேயிருந்து திருப்பிவிடலாம் என்று பார்த்தால், திருப்புவதற்கு எந்த வழியும் இல்லை. நாமாகப் போய் அந்தத் தற்காலிக தடுப்பை நம்ம ஊரில் செய்வது போல எல்லாம் எடுக்க முடியாது. மாட்டிக்கொள்வோம். சரி, பூத்துக்குச் சென்று அங்கிருப்பவரிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தோம்.

அப்பொழுதாவது, அங்கேயே காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கி நடந்து சென்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து விட்டால் காரை விட்டு இறங்க மாட்டார்கள். காரிலிருந்தபடியே ஜன்னலை இறக்கித் தான் விசாரிப்பார்கள்.

அந்தத் தவறை என் மகனும் செய்தான். எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு வரவில்லை. இளம் கன்று பயம் அறியாது.

மேலும் அமெரிக்காவில் பல இடங்களில் சுதந்திரமாக, தைரியமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம், எந்த அதிகாரியிடமும் பேசலாம். அதிகாரிகள் உதவியாகவே இருப்பார்கள். யாரும் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொதுவாகக் கண்டுகொள்ளாத நாடு. 2001-ல், World Trade Center –ஐத் தகர்த்தெறிந்த பிறகு நிலைமை பலவாக மாறியிருக்கிறது.

காரை நேரே அந்த பூத் அருகே என் மகன் எடுத்துச் சென்று விட்டான். கார் போகும் பாதையும் குறுகிக்கொண்டே போனது. இரண்டு கார்கள் போகும் அளவே ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தது.

பூத் அருகே சென்று அங்கே இருந்த அதிகாரியிடம் என் மகன் கேட்டான். “நாங்கள் எப்படித் திரும்பிப் போவது?” என்று.

கேள்விகளை எப்பொழுதும் சரியாகக் கேட்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை.

“நேராகச் சென்று ஒரு லூப் அடித்துத் திரும்பி வாருங்கள்” என்று விட்டார்.

வேறு கேள்விகளை நாங்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சரியான பதில் கிடைத்திருக்குமோ என்னவோ?

காரை நேராகப் பாலத்துக்குள் எடுத்துச் சென்று விட்டான். நாங்கள் கடந்து வந்தது அமெரிக்க எல்லை என்ற பிரக்ஞையே எங்கள் யாருக்கும் இல்லை.

பாலத்தின் அழகை, தூரத்தே தெரிந்த ஏரியின் அழகை, பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே பாலத்தை கடந்து முடிந்து விட்டோம்.

பாலத்தின் அடுத்த பக்கம் காரைத் திருப்புவதற்கு எந்த வசதியும் இல்லை. பாதை ஒரு பெரிய கட்டிடத்தையொட்டி எடுத்துச் சென்றது. ஒரு பக்கத்திலிருந்து ஒரு அதிகாரி எங்கள் காரை நிறுத்தச் சொன்னார். காரை நிறுத்தினோம். காரை ஓரமாக எடுத்து வரச் சொன்னார்.

“Your papers, please” என்றார் அதிகாரி.

அப்பொழுதுதான் மண்டையில் ‘பொட்’ என்று ஓங்கி சுத்தியலால் தட்டியது போல இருந்தது.

“This is Canada,” என்றார் அதிகாரி.

நாங்கள் புரிந்து கொண்டோம். சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அமெரிக்க எல்லையைக் கடந்து கனடா நாட்டுக்குள் வந்து விட்டோம் என்று.

என் மகனிடம் கார் ஓட்டும் உரிமம் இருந்தது எடுத்துக் காட்டினான். அந்த சமயத்தில் அவன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான H1 விசாவில்தான் இருந்தான். அமெரிக்காவில் நிரந்தரமாகக் தங்கும் உரிமை (PERMANENT RESIDENTS/US GREEN CARD HOLDERS) பெற்றவர்களும் அமெரிக்க குடிமக்களும் சுதந்திரமாக பாஸ்போர்ட் மட்டும் காட்டி கனடாவுக்குள் உள்ளே நுழையலாம். மற்றவர்களிடம் விசா இருக்க வேண்டும். இல்லையென்றால் கனடாவுக்குள் நுழைய முடியாது.

“Where is your visa?”

எங்களுடைய ஆவணங்களைக் கேட்டார். என்னிடமும் என் மனைவியிடமும் எங்கள் பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே வைத்திருந்தோம். ஒரிஜினலை நாங்கள் பொதுவாக வெளியில் எடுத்துச் செல்வதில்லை. எங்கேனும் தொலைந்துவிடுமோ என்று பயம்.

“Where is the original?” என்றார். பேந்தப் பேந்த முழித்தோம்.

என் தம்பியிடம் அவனுடைய கார் ஓட்டும் உரிமத்தின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே இருந்தது. அவனும் ஒரிஜினலைக் கொண்டு வரவில்லை.

“You know, you are trying to enter Canada illegally without any papers?” என்றார் அதிகாரி.

எனக்கும் என் மனைவிக்கும் உடலெல்லாம் வியர்த்தது. என் மகன் நடந்ததை விவரித்தான். நாங்கள் கனடாவுக்குச் செல்வதற்காக வரவில்லை. அந்தப் பாலத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்புவதாகத்தான் இருந்தோம். ஆனால், திரும்புவதற்கு வழியில்லை. மேலும் பாலத்தின் அந்தப் பக்கத்தில் இருந்த பூத்தில் அமர்ந்திருந்த அதிகாரி எங்களைப் பாலத்தை கடந்து லூப் எடுத்து திரும்புங்கள் என்று கைகாட்டி விட்டு விட்டார். எங்களுக்கு இந்தப் பக்கம் கனடா நாடு என்ற பிரக்ஞை இல்லை. தவறு செய்து விட்டோம் என்று விவரித்தான்.

என் மகனும் ‘நெர்வசாக’ இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. என் தம்பியும் எங்கள் நிலையை எடுத்துச் சொல்ல முயற்சி செய்தான்.

எங்கள் நால்வரையும் அலுவலகத்துக்குள்ளே அழைத்துச் சென்றனர். எங்களிடம் இருந்த நகல்களையும் என் மகனின் ஓட்டுனர் உரிமத்தையும் உள்ளே எடுத்துச் சென்று விட்டனர். மாட்டிக்கொண்ட திருடர்கள் போல நாங்கள் ஒரு பெஞ்சில் உள்ளம் பதைபதைக்க உட்கார்ந்திருந்தோம்.

ஒன்றிரண்டு முறை வேறு சில அதிகாரிகள் வந்து எங்களை விசாரித்தனர். நாங்கள் செய்த தவறை ஒத்துக்கொண்டோம். ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்தால் கூட ஒரு மாதிரியாக தைரியமாகச் சமாளிக்கலாம். ஆனால், ஒரிஜினல் எங்களிடம் இல்லை.

அவர்கள் எங்களை கைது செய்துவிடுவார்களோ என்று பயம் வேறு பிடித்துக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரம் எங்களைத் தவிக்கவிட்ட பிறகு ஒரு அதிகாரி எங்களிடம் தனித்தனியாக ஒரு காகிதத்தைக் கொடுத்து கையெழுத்து கேட்டார்.

“எங்களுக்கு வேறு வழியில்லை … எங்கள் நாட்டிற்குள் சட்டத்தை மீறி நுழைய முனைந்ததாகக் கூறி உங்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும் … உங்களைப் பார்த்தால் அப்பாவியாகவும் இருக்கிறது. இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு நீங்கள் திரும்பிப் போகலாம் …” என்றார்.

அந்தப் படிவத்தில், நாங்கள் கனடாவில் குடியுரிமை கேட்டதாகவும் எங்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அதிகாரியின் முகத்தைப் பார்த்தோம். “இது எங்களுடைய அமெரிக்க விசாவில் பிரச்சினையாகுமே” என்றோம்.

“வேறு வழியில்லை…” என்றார்.

ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு நாங்கள் எல்லோரும் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்தோம்.

“திரும்பப் போகும்போது அமெரிக்க எல்லையில் பிரச்சினை வருமா?” என்று அந்த படிவத்தை சுட்டிக்காட்டிக் கேட்டோம்.

“அதை அவர்கள் சொல்வார்கள் … நீங்கள் போகலாம்.” என்று சொல்லி எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட எல்லா காகிதங்களையும் திரும்பக் கொடுத்துவிட்டு எங்கள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

எங்கள் எல்லோருக்கும் ‘திக், திக்.’ ரத்தம் கொதித்துக்கொண்டிருந்தது. காரில் ஏறி மீண்டும் ப்ளூ வாட்டர் பிரிட்ஜின் அழகைக்கூட ரசிக்க முடியாமல் பாலத்தைக் கடந்து அமெரிக்க எல்லைக்கு வந்து விட்டோம்.

இங்கேயும் எங்களை நிறுத்தி வைத்து விட்டார்கள். நாங்கள் நடந்ததை முழுவதும் சொன்னோம். கனடா எல்லையில் அதிகாரிகள் கொடுத்த காகிதத்தையும் காட்டினோம். எங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோம். ஒரிஜினல் காகிதங்கள் எடுத்து வராமல், பாலத்தைப் பார்க்கும் ஆசையில், அமெரிக்க எல்லையில் ஒரு பூத் ஏஜெண்ட்டிடம் சரியான தகவலைப் பெற்றுக்கொள்ளாமல் கனடாவுக்குள் நுழைந்து திரும்பி வந்ததை எடுத்துச் சொன்னோம்.

எங்களை உட்கார வைத்து விட்டு, எங்களுடைய காகிதங்களை உள்ளே எடுத்துச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வந்தார்.

“Look, நீங்களெல்லாம் வெளிநாட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கோ அல்லது சுற்றிப் பார்பதற்கோ வந்தவர்கள். ஒரு வெளிநாட்டில் இருக்கும்போது எல்லா நேரத்திலும் உங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட், விசா காகிதம், ஓட்டுனர் உரிமம் எல்லாமே உங்களுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அண்டை நாடுகள் எல்லைப் பக்கம் சுற்றும்போது அவசியம். அது இல்லாமல் இப்படிச் சுற்றுவது சட்டப்படி குற்றம். இங்கேயும் உங்களை கைது செய்யலாம். ஆனால், உங்களைப் பார்த்தால் அப்பாவியாகத் தான் இருக்கிறீர்கள். அதனால், இந்த முறை உங்களை உள்ளே போக விடுகிறேன். இது போல மீண்டும் தவறு செய்யாதீர்கள். All the best.” என்று சொல்லி எங்களை விட்டு விட்டார்.

அவருக்கு நன்றி கூறி “தப்பித்தோம், பிழைத்தோம்” என்று கடவுளுக்கும் நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டோம்.

கடவுள் கிருபையால் வேறு எந்தத் தொந்திரவும் எங்களுக்கு இருந்ததில்லை.

படித்தவர்களாக இருந்தும் முட்டாள்தனமாக நடந்துகொண்டோமே என்று எங்களை நாங்களே கடிந்துகொண்டோம்.

என்னதான் மனதில் ஒரு நடுக்கம் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு ஆஸ்டின் போர்ட்டைப் பார்க்காமல் போகக்கூடாது என்று அங்கும் சென்று பெயரளவுக்குப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம்.

இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டது அது முதன் முறையல்ல.

Friday, March 19, 2021

19.03.2021 நானும் பரீட்சைகளும்

 19.03.2021 நானும் பரீட்சைகளும்

சிறிய வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் மாணவனாக நான் இருந்து வந்திருக்கிறேன். பள்ளி நாட்களிலும் சரி கல்லூரி நாட்களிலும் சரி வகுப்பில் முதல் இடத்தில் (தவறிப்போனால், இரண்டாம் இடத்தில்) எப்போதும் இருந்திருக்கிறேன். அந்தப் பெருமை, இறுமாப்பு இன்று வரை எனக்கு உண்டு.

ஆனால், நான் ஒரு புத்திசாலி என்று என்னைப் பற்றி என்றும் நினைத்தது கிடையாது. கடுமையாக உழைக்கத் தயாராக இருப்பவனாகவே என்னைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் படித்த ஒரு சில மாணவர்கள் என்னை விட அதிக புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள்.

அனுபவம் 1

அது போன்ற ஒரு நிலையில் - நான் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ - சரியாக நினைவில்லை – படிக்கும் நேரம் திருநெல்வேலி டவுணில் எங்கள் தெருவில் ஒரு ஹிந்தி டீச்சர் இருந்தார். நன்றாகச் சொல்லிக்கொடுப்பார். குடும்பப் பெண்மணி. பல மாணவர்களை தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தி வந்த பரீட்சைகளுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து தயார் செய்து அனுப்பி வந்தார். அவரிடம் நான் ஹிந்தி கற்றுக்கொள்வதற்குச் சேர்ந்தேன்.

நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற முறையில் ‘ப்ராத்மிக்’ என்ற முதல் நிலை பரீட்சையைத் தாவி இரண்டாம் நிலையில் இருந்த ‘மத்யமா’ பரீட்சையை நேராக எழுதலாம் என்று அந்த டீச்சர் கருதினார்.  

நானும் ஒத்துக்கொண்டேன். என்ன, கொஞ்சம் கூடுதலாகக் கடினமாக உழைக்க வேண்டும்.

நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணமும் உண்டு.

எங்கள் தெருவில் இருந்த ஒரு தொடக்கநிலைப் பள்ளியில் நான் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். நல்ல பள்ளிக்கூடமாக இருந்தும் ஏனோ அந்தப் பள்ளிக்கு “ஊசை வடைப் பள்ளி” என்ற ஒரு பட்டப்பெயர் நிலவி வந்தது. அந்தப் பள்ளி என்னை இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு உயர்த்தி அனுப்பியது. அதாவது இரட்டை உயர்த்தல். (Double promotion). மிகவும் அரிதாக இது போல அன்றெல்லாம் வழக்கம் இருந்து வந்தது.

அப்படிக் கிடைத்த இரட்டை உயர்த்தலால் பின்னால் எஸ். எஸ். எல். சி பரீட்சை எழுதும்போது எனக்கு பரீட்சை எழுதும் வயதுக்கான தகுதி இல்லை என்பது போல ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மாதங்கள் கணக்கில் நான் தப்பித்து விட்டேன்.

இரட்டை உயர்த்தல் பெற்ற மாணவன் என்ற இறுமாப்பும் எனக்கு சிறிய வயதிலிருந்தே இருந்து வந்தது. அதனால், அபரிதமான தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. பரீட்சையில் தோல்வி என்பது எனக்குக் கிடையாது என்ற இறுமாப்பும் இருந்தது.

அதனால், நேராக ஹிந்தி பிரச்சார சபாவின் மத்யமா பரீட்சை எழுதுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. பரீட்சைக்கு என்னைத் தயார் செய்துகொண்டு எழுதினேன்.

Straight pass…

எனக்கு மீண்டும் பெருமிதம். அதே பெருமையில் அடுத்த பரீட்சையான ராஷ்ட்ர பாஷா பரீட்சையை எழுதினேன். நன்றாகத்தான் படித்திருந்தேன். எழுதியிருந்தேன்.

ஆனால், நான் வெற்றி பெறவில்லை. முதன் முறையாகத் தோல்வியைத் தழுவினேன். பெரிய அவமானமாக இருந்தது.

“சீச்சி, இந்தப் பழம் புளிக்கும்” என்று ஹிந்தி பரீட்சைகளையே உதறித் தள்ளினேன். அதன் பின்பு ராஷ்ட்ரபாஷா பரீட்சையை மீண்டும் எழுத முயற்சிக்கவில்லை. என்னுடைய இறுமாப்பு இடம் கொடுக்கவில்லை.

அதன் பிறகு நான் எஸ். எஸ். எல். சி பரீட்சையில் மதிப்பெண்கள் வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.

பி. எஸ். சி இளநிலை பட்டதாரி படிப்பில் மாவட்டத்தில் “D” (DISTINCTION – 75% AND ABOVE) பெற்ற இரண்டு மாணவர்களில் நான் ஒருவனாக இருந்தேன்.

பின்னர், திருச்சியில் செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் எம். எஸ். சி படித்து முதல் வகுப்பில் பாஸ் செய்தேன். பல்கலைக் கழகத்தின் அறிவிக்கப்படாத தர வரிசையில் நான்காம் இடத்தில் இருந்ததாக அதிகாரமற்றத் தகவல்கள் எனக்குக் கிடைத்தன.  

அனுபவம் 2

அதற்கடுத்து, வங்கியில் 1970-ல் அதிகாரியாக சேர்ந்தவுடன் மீண்டும் ஒரு பரீட்சைக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. CAIIB என்ற ஒரு வங்கித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் என் சம்பளத்தில் ஒரு படி (increment) – மாதத்துக்கு முப்பது ரூபாய் – கிடைக்கும் என்று ஒரு விதி இருந்தது. அந்த முப்பது ரூபாய் அன்று எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஒவ்வொரு அதிகாரியும் கண்டிப்பாக அந்த CAIIB பரீட்சையை விரைவில் பாஸ் செய்யவேண்டும் என்று வங்கியும் எதிர்பார்த்தது.

CAIIB பரீட்சையில் இரண்டு பகுதிகள். ஒவ்வொன்றிலும் ஐந்து பாடங்கள் - தாள்கள். CA படிப்பது போன்று மிகவும் கடினமான பரீட்சை CAIIB பாஸ் செய்வது அவ்வளவு சுலபமில்லை. தேர்வு விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது.  நான்கில் ஒருவரே பாஸ் செய்து வந்தனர் என்று நினைவு.

என்னுடன் வேலை பார்த்து வந்த கௌரிசங்கர் என்ற நல்ல நண்பர் – என்னை விட வயதில் மூத்தவர் - என் அண்ணனைப் போல நான் கருதும் இனிய நண்பர் – வங்கியில் சேருவதற்கு முன்பாக திருச்சியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தவர் – என்னை நன்றாக ஊக்குவித்தார்.

நானும் சரி, கௌரிசங்கரும் சரி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்கள். வங்கித் தொழிலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தும் குடும்ப நிலையைக் கருதியும், கூடுதல் வருமானத்திற்காகவும், எதிர்காலத்தில் பதவி உயர்வுகளையும் மனதில் கொண்டும் வங்கியில் சேர்ந்தவர்கள். என்னைப் போல மேலும் பலர் அன்று இருந்தனர்.

நானும் கௌரிசங்கரும் கோயம்புத்தூரில் ராஜா வீதிக்கு அருகில் ஒரு லாட்ஜில் ஒரே அறையில் தங்கி வந்தோம். இருவரும் தினமும் மாலை வேளைகளில் அந்த லாட்ஜின் மொட்டை மாடிக்குச் சென்று CAIIB பரீட்சைக்குத் தயார் செய்தோம். அதற்காக, பயிற்சி வகுப்புகள் எதிலும் சேரவில்லை. நன்றாகவேத் தயார் செய்தோம். புரியாத கடினமான பாடங்களையும் எப்படியோ புரிந்துகொண்டு தயார் செய்தோம். கௌரிசங்கர் நல்ல புத்திசாலி. கல்லூரியில் விஞ்ஞானத்தில் படித்திருந்தாலும் எப்படியோ புதிய பாடங்களை என்னை விட நன்றாக, எளிதாகப் புரிந்து கொண்டவர். என் சந்தேகங்களுக்கு அவரே எனக்கு குரு.

பொதுவாக, பலரும் பாடம் பாடமாக எழுதித்தான் CAIIB பரீட்சையை எழுதி வந்தார்கள். ஆனால், நாங்கள் இருவரும் CAIIB பரீட்சையில் முதல் பகுதியில் எல்லா 5 தாள்களையும் ஒரே முயற்சியில் பாஸ் செய்யத் தீர்மானித்து உழைத்தோம்.

CAIIB முதல் பகுதி 5 தாள்களையும் ஒரே முயற்சியில் எழுதினோம். ஆவலுடன் பரீட்சை முடிவுகளுக்குக் காத்திருந்தோம். முடிவுகளும் வந்தன.

இருவரும் ஒரே முயற்சியில் CAIIB பரீட்சையின் முதல் பகுதியில் பாஸ்.

வானத்துக்கும் பூமிக்கும் என்று குதித்தேன். மிகப் பெரிய வெற்றி. எங்களுடன் வேலை பார்த்த பலருக்கு எங்கள் மேல் பொறாமை. முதலாவது ஊக்கப் படி முப்பது ரூபாய் எனக்குக் கிடைத்தது. பெரு மகிழ்ச்சி.

அதே சூட்டில், இரண்டாம் பகுதிக்கும் தயார் செய்யத் தீர்மானித்தோம். எல்லாப் பாடங்களுமே எங்களுக்கு முற்றிலும் புதியதான பாடங்கள். புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தது என்பதால் ஐந்து தாள்களையும் ஒரே தவணையில் எழுதும் விஷப் பரீட்சை வேண்டாம் என்று தீர்மானித்து இரண்டு தவணைகளாக எழுத முடிவெடுத்தோம். முதல் தவணையில் மூன்று தாள்களை முயற்சித்தோம். என்னென்ன பாடங்கள் என்பது இப்பொழுது மறந்து விட்டது.

கடினமாக உழைத்து CAIIB பரீட்சையின் இரண்டாம் பகுதியின் மூன்று பாடங்களுக்கான தாள்களை எழுதினோம். முடிவுகளுக்காக ஒரு மூன்று மாதம் காத்திருந்தோம். அதீத தன்னம்பிக்கையோடு, மீதமிருந்த இரண்டு தாள்களுக்கும் தொடர்ந்து தயார் செய்ய ஆரம்பித்தோம். தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தோம்.

முடிவுகளும் வெளியாயின. மூன்று பாடங்களில் Commercial Law பாடத்தில் 49 மதிப்பெண்கள் பெற்று நான் தோல்வியுற்றேன். குறைந்த பட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

துவண்டு விட்டேன். இரண்டாம் முறையாக பரீட்சையில் ஒரு தோல்வியைச் சந்தித்தேன். கௌரிசங்கர் வெற்றி பெற்று விட்டார்.  

அதிர்ஷ்டவசமாக, கௌரிசங்கர் ஊக்குவித்ததால் மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் மீதமுள்ள மூன்று பாடங்களுக்கான (தோல்வியடைந்த பாடத்தையும் சேர்த்து) பரீட்சைக்குத் தயார் செய்யத் தொடங்கினேன். மீண்டும் கடினமாக உழைத்துப் படித்தேன். பரீட்சையையும் எழுதினேன்.

ஆனால், மீண்டும் அதே Commercial Law பாடத்தில் 48 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்றேன். பரீட்சையில் தோல்வியின் தாக்கத்தை உணர்ந்தேன். அந்தப் பரீட்சை மிது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

“இனி இந்தப் பரீட்சையை நான் எழுத மாட்டேன். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும். எனக்கு ஒத்து வராதது. மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் எந்தப் பலனும் இல்லை,” என்ற முடிவுக்கு வந்தேன்.

அந்த நேரத்தில் நானும் கௌரிசங்கரும்  கோயம்புத்தூர் கிளையிலிருந்து பிரிந்து விட்டோம். வெவ்வேறு கிளைகளுக்குச் சென்று விட்டோம். ஒரு வேளை நாங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்திருந்தால் நான் மீண்டும் முயற்சித்திருப்பேனோ என்னவோ?

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு CAIIB பரீட்சையை மீண்டும் தொடர நான் முயற்சிக்கவில்லை. ஒரு வேளை முயற்சித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேனோ என்று தெரியாது அதனால் அடுத்த சுமார் நான்கு ஆண்டுகளுக்கு எனக்குக் கிடைக்கவிருந்த ஊக்கப் படியும் கிடைக்காமல் போனது.

இடையில் எனக்குத் திருமணம் ஆனது. ஓரு குழந்தையும் பிறந்தது. வீட்டின் செலவுக்கும் அதிக பணம் தேவைப்பட்டது.

1976-ல் என் மனைவிதான் என்னிடம் பேச்சை எடுத்தாள். விட்டுப்போன அந்த Commercial Law பாடத்தை மீண்டும் படித்து எழுதி முடித்து விட்டால் இன்னொரு முப்பது ரூபாய் சம்பளம் உயருமே, நீங்கள் ஏன் எழுதக்கூடாது என்று என்னைக் கேட்க ஆரம்பித்தாள்.

இருதலைக் கொள்ளியாகத் தவித்தேன். என் தன்மானமும் அகம்பாவமும் என்னை விட்டுப்போன ஒரு பாடத்தில் பரீட்சையை எழுதி முடிக்கத் தடுத்தன. ஆனால், முப்பது ருபாய் மாதா மாதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற நப்பாசை ஒரு பக்கம் என்னை இழுத்தது.

எதற்கும் இருக்கட்டும் என்று பரீட்சைக்கு பதிவு செய்வதற்கான பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், பரீட்சைக்குப் படிக்கவில்லை.

என் மனைவி என்னை தொந்திரவு செய்ய ஆரம்பித்தாள். படிக்காமல் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று என்னை துளைத்து எடுத்தாள்.

பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த சமயம்.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. Commercial Law பாடத்துக்குத் தேவையான Bare Act சட்டப் புத்தகங்களை மட்டும் எடுத்து வைத்து சட்டங்களை மட்டும் ஒரு பார்வை பார்த்து ஓட்டினேன். விவரமான விளக்கங்கள் எதையும் படிக்கவில்லை.

குருட்டு தைரியத்தில் மீதமிருந்த ஒரே பாடத்தின் - Commercial Law-வின் - பரீட்சையையும் எழுதி முடித்தேன். முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று உதாசீனமாக இருந்தேன்.

முடிவுகளும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளி வந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. 51 மதிப்பெண்கள் பெற்று நான் பாஸ் செய்திருந்தேன்.

தோற்றாலும் 48 அல்லது 49 மதிப்பெண்கள். வெற்றி பெற்றாலும் – சரியாக தயார் செய்யாவிட்டாலும் 51 மதிப்பெண்கள். அந்தப் பரீட்சையைப் பற்றி நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று அந்த நாட்களில் எனக்குப் புரியவில்லை.

அடுத்த முப்பது ரூபாய் ஊதிய உயர்வும் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.

அனுபவம் 3

காலம் 1997 – 2006. வங்கியை விட்டு வெளியேரி நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் நிதி ஆலோசகராகப் பணி புரிந்த காலம்.

2000-ஆண்டு என் மகள் அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டாள். என் மகனும் இன்ஜினியரினிங் முடித்து விட்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று படித்து அங்கு அவனுக்கும் வேலை கிடைத்து விட்டது. நானும் மனைவியும் மட்டும் துபாயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் அமெரிக்கா சென்று வந்தோம். பல இடங்களுக்குச் சுற்றினோம். எனக்கும் அமெரிக்காவில் குடிபுகுந்து விடலாம் என்ற நப்பாசை தோன்றத் தொடங்கியது.

ஆனால், அமெரிக்கா சென்று வேலை பார்க்க வேண்டுமென்றால் அதற்கான படிப்புத் தகுதி வேண்டும். அதனால் பென்சில்வேனியா மானிலத்தில் இருந்த பிரபலமான ப்ரையன் மார் பல்கலையில் CHARTERED FINANCIAL PLANNER (CFP) பட்டத்துக்குத் தகுதி பெறும் ஆரம்ப பாடங்களுக்கு தொலைவழிக் கல்வியில் சேர்ந்து கொண்டேன்.

இதுவும் நமது CA போன்று கடினமான பரீட்சைதான். ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் CFP பரீட்சை எழுத தகுதியுடையவன் ஆவேன். என்னுடைய 56-57-ஆவது வயதில் விழுந்து விழுந்து தயார் செய்து ஒவ்வொரு பாடமாக பரீட்சை எழுதினேன். எல்லாம் கம்ப்யூட்டர் வழி ஆன்லைனில் பரீட்சை எழுத வேண்டும். ஒவ்வொன்றிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன்.

அதனால் CFP பரீட்சை எழுதுவதற்குத் தகுதியுடையவன் ஆனேன். அதற்குத் தேவையான பதிவுகளையும் முடித்துக்கொண்டேன். அமெரிக்காவில் சென்று எழுத வேண்டும். ஆனால், நான் முதலில் தகுதித் தேர்வுகள் எழுதியது போல கம்ப்யூட்டர்கள் முலம் அல்ல, பேப்பர் – பென்சில் பரீட்சை.

நன்றாகவே தயார் செய்திருந்தேன். ஏற்கெனவே வங்கியில் பணி புரிந்திருந்ததால் புதிய பாடங்களைப் புரிந்து படிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை. அதுவும் அமெரிக்க சட்டமுறைகள், விதிமுறைகளைப் பற்றிப் படிக்க வேண்டும்.

இருந்தும் எனக்கு ஒரு குறைபாடு தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தது. வருகிறது. ஏதோ ஒரு காரணத்தால் எனக்கு விரல்கள் நடுக்கம் (HAND TREMOR) 1988-89-களில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக்கொண்டு வருகிறது. அதனால், என்னால் வேகமாக எழுத முடியாது. பேப்பரில் பென்சில் பேனாவை வைத்தால் கை நடுங்கத் தொடங்கிவிடும். மருத்துவ ரீதியாக இதை சரி செய்வது கடினம் என்று  நரம்புயியல் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். A KIND OF DISCONNECT BETWEEN BRAIN ANS FINGERS. FINGERS UNABLE TO COPE WITH THE SPEED OF MY MIND.

CFP பரீட்சையையும் எழுதினேன். என் கை விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. வேகமாக என்னால் பரீட்சை எழுத முடியவில்லை. அதனால் எனக்கு எல்லா கேள்விகளுக்கு பதில் எழுதி முடிக்க முடியவில்லை. ஒரு மாதிரியாக எழுதி முடித்தேன். இறுதியில் RANDOM MARKING தான் பண்ண முடிந்தது.

இந்தப் பரீட்சையிலும் நான் பாஸ் செய்யவில்லை. பரீட்சைகளில் என்னுடைய மூன்றாவது தோல்வி. என் குறைபாடுகள் எனக்குத் தெளிவாகத் தெரிந்ததினால் ஒரு மாதிரியாக மனதை ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டேன்.

அதே அமெரிக்க பல்கலையில் இன்னும் மூன்று பாடங்களுக்கான தேர்வு எழுதினால் எனக்கு CHARTERED FINANCIAL CONSULTANT (CFC) என்ற பட்டம் கிடைத்திருக்கும். ஆனால், மீண்டும் எழுத எனக்கு மனம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

முடிவுரை

இருந்தும் என் அஹம்பாவத்திற்கும் இறுமாப்புக்கும் எல்லையே இல்லை என்பதை இன்று நான் உணர்கிறேன். அதனால், நான் திருந்திவிட்டேன் என்று பொருளில்லை.

நான் ஒரு முடியாத ஒரு WORK IN PROCESS .

முழுமையை, நிறைவைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

“பூர்ணமத: பூர்ணமித; பூர்ணாத் பூர்ணம் உதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே |

ஒம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி ஹி ||”