Total Pageviews

Friday, September 26, 2014

பகுதி 7: வெற்றிப் பாதைக்கு ஏழு விதமான பெர்ஸனாலிடிகள் 2. திடமான நோக்கமுடைய பெர்ஸனாலிடி………. யின் தொடர்ச்சி

என்னடா, “3-2-1” என்ற யுக்தியைப் பற்றி அடிக்கடி என் கட்டுரையில் எழுதுகிறேனே என்று நீனைக்கிறீர்களா?. அதற்குக் காரணம் இருக்கிறது

நமது செயல்பாடுகளில் பெரும்பாலானவை தன்னிச்சையாக  நமது ஒத்துழைப்பு இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கின்றன. கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் கூட, நமது கை உணவை சரியாக வாய்க்குத்தான் எடுத்துக்கொண்டு போகும். நமது மூச்சு, உணவு ஜீரணம், தூக்கம், இரத்த ஓட்டம், மலஜலம் கழிப்பது போன்ற எல்லாமே தானாகவே யாரோ பொருத்தி வைத்த ஒரு ப்ரோகிராமின் படி ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது.
அதே போல மனதின் எண்ணங்களும் நமது ஆழ்மனதில் பதிந்துவிட்ட சில அபிப்பிராயங்கள், சில நினைவுகளின் தாக்கல்கள், வலிகள், காயங்கள், மகிழ்ச்சிகளின் அடிப்படையிலேயே தன்னிச்சையாக அமைகின்றன. அதாவது ஒரு உணர்வுள்ள விழிப்பு நிலையிலிருந்து தோன்றுவதில்லை. கோபம், பயம், தற்காப்பு, பொறாமை, துக்கம் போன்ற பல உணர்ச்சிகள் தாமாகவே, நீங்கள் முயலாமலேயே எழுகின்றன. நீங்கள் கோபப்பட வேண்டும் என்று நினைத்து கோபம் எழுவதில்லை. பயப்பட வேண்டும் என்று நினைத்து பயம் தோன்றுவதில்லை. தானாகவே ஒரு சில விசையின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் நம்மை அறியாமலேயெ பல காரணங்களினால் பதிந்துவிட்ட கருத்துக்களின் தூண்டுதலால் எழுகின்றன. ஆழ்மனதில் பதிந்த எண்ணங்களின் வேகத்தை, உறுதியைப் பொருத்து நமது எண்ணங்கள் அமைகின்றன எண்ணங்களின் உறுதியைப் பொறுத்து செயல்கள், எதிர் வினைகள் அமைகின்றன.

ஆழ்மனதில் பதிந்துவிட்ட நினைவுகளின் தாக்கத்தினால் நம்மை அறியாமலேயே ஏற்படும் பயம், தற்காப்பு, கோபம், பொறாமை, துக்கம், எதிர்மறை கருத்துக்கள், எதிர்மறை உள் உரையாடல்கள் போன்ற உணர்ச்சிகளை, விழிப்பு நிலையிலிருந்து மாற்றுவது மிக மிகக் கடினம். முடியாதென்று கூட சொல்லலாம். ஆனால், நம்மை ஆழ் நிலைக்கு எடுத்துக்கொண்டு போய், அந்த நிலையிலிருந்து பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது உண்மை தானாகவே புலப்படுகிறது. அந்த ஆழ்  நிலையிலிருந்து எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதில் அதிக சிரமம் இருக்காது. இது மனோதத்துவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மூளை வேறு. மனம் வேறு. மூளை மண்டையில் இருக்கிறது. மனம் உடம்பு முழுவதும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு உயிர்அணுவுக்கும் மனம் இருக்கிறது. தியானம் செய்தல், பிரார்த்தனை, ஹிப்னோடிசம், மெஸ்மெரிஸம் போன்ற மனதை வயப்படுத்தும் முறைகள் மூலம் ஆழ்மனதிலிருந்து தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள்.

சில்வா ஜோஸின் 3-2-1 என்ற பயிற்சி உங்களை ஆழ்மனதுக்கு எடுத்துச்சென்று பல எதிர்மறை எண்ணங்களை நீக்கவும், உறுதிமொழி எடுப்பதற்கும், உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளவும் பயனுள்ளதாக அதை தொடர்ந்து பயின்றவர்கள் கூறுகிறார்கள்நானும் தொடர்ந்து பயிற்சி செய்து நல்ல பலனைத் கண்டிருக்கிறேன். அதனால்தான் 3-2-1 என்ற பயிற்சியைப் பற்றி அடிக்கடி சொல்கிறேன். செலவில்லாத ஒரு பயிற்சி. ஏன் செய்து பார்க்கக்கூடாது.

அடுத்த பெர்ஸனாலிடி வகைகளைப் பற்றி இனி பார்ப்போம்

3.சுயமரியாதையுள்ள பெர்ஸனாலிடி

உங்களைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பெர்ஸனாலிடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். உங்கள் குறை, நிறைகளுடன் எவ்வளவு தூரம் உங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பல போராட்டங்கள். பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக மிருகங்களிலிருந்து நமக்கு வந்த தற்காப்பு உணர்ச்சி காரணமாக, நம்முடைய உண்மயான தோற்றத்தை மறைத்துக்கொள்ள முகமூடி போட்டுக்கொள்கிறோம். மற்றவர்களைக் குறை கூறுகிறோம். இல்லாத ஒரு உருவத்தை இருப்பதுபோல மற்றவர்களுக்கு காட்டிக்கொள்கிறோம். ‘நான் சரிதான், நீதான் சரியில்லைஎன்று நாடகமாடுகிறோம்.

நம்மை நாமே ஏற்றுக்கொள்வதுமில்லை, நேசிப்பதுமில்லை. நம்மில் பலருக்கு  நம்மையே பிடிப்பதில்லைநம் தோற்றத்தை, எண்ணங்களை, குணங்களை, நடையுடை பாவனைகளை, செயல்களை, பழக்க வழக்கங்களை, வெறுக்கிறோம். மாற்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஆனால் மாற முடியவில்லை. அதனால் கோபப்படுகிறோம். ஆழ் மனதில் ஏற்பட்ட சில காயங்களின் தாக்குதலினால், ஒரு விதமாக சிந்திக்கவோ, செயல்படவோ பழகிக்கொண்டு விட்டோம். அந்தப் பழக்கத்தை விடவும் முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. அதனால் கோபம். அந்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டுகிறோம். நம்மை விட மேலான நிலையில் இருப்பதாக நாம் நினைக்கும் சிலரை வெறுக்கிறோம்.

நம்மை நாமே வெறுக்கிறோம். நம்மை நாமே மறுக்கிறோம். இதுதான் பலரது உண்மை. ஆனால் வெளியே தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டோம்.

இருக்கிற நிலையை ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏற்றுக்கொண்டால்  
  • நமது போராட்டம் நின்றுவிடும்
  • நமது செயல்களால் ஏற்படும் பலன்களுக்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்கி விடுவோம்
  • நமது எண்ணங்களை, செயல்களை, ஆராயத் தொடங்கிவிடுவோம். நமது எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் எப்படி நம்மையும், மற்றவர்களையும் பாதிக்கின்றன என்பது நமக்குப் புரிய வரும். நம் எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள் நமக்கு உதவவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்
  • நம்மை நாமே மாற்றிக்கொள்ள தயாராகி விடுவோம். மற்றவர்கள் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் இல்லையென்றால், நம்மை நாமே மாற்றிக்கொண்டுவிட்டால் மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் உறவுமுறை சீரடையத் தொடங்கிவிடும். உதவிகள் தானாகவே, கேட்காமலேயே வரும்
  • மற்றவர்களுக்கும் நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மாறத் தொடங்கிவிடும்
  • நம்மை நாமே மதிக்கத் தொடங்கி விடுவோம். சுய மரியாதை உயரும். நமக்குள் ஒரு பெருமை தோன்றத் தொடங்கும். மகிழ்ச்சி உண்டாகும்
  • மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்வதை நிறுத்துவீர்கள்
  • தன்னுறுதியில் நின்று செயல்படத் தொடங்குவீர்கள்

பாருங்கள் எவ்வளவு நன்மைகள் உண்டாகின்றன. இந்த நிமிடமே உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கலாமே!

                                                                    தொடரும்…………………..