Total Pageviews

Wednesday, May 30, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்: 2


 கட்டுப்பாட்டை பிறந்த குழந்தையிலிருந்து முதியோர் வரை யாரும் விரும்புவதில்லை. ஆனால், மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதுவாக எல்லோருக்கும் மேலோங்கி நிற்கிறது. 

    ‘நான் யார் வழியிலும் போக மாட்டேன். ஆனால், என் வழியில் மற்றவர்கள் வர வேண்டும்,’ என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக, பெற்றோர்கள் 

 தங்கள் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதைத்தான் பொதுவாக விரும்புகிறார்கள். ஆனால், கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ அல்லது இவர்களை அவர்கள் பெற்றோர்களோ கட்டுப்படுத்துவதை விரும்புவதில்லை. அதுவும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னாலேயே தனது சுதந்திரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அதே சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். 

   ஒரு குழந்தை தன் தாய் தந்தையர் என்ன செய்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கூர்மையாக கவனிக்கிறது என்பதை படித்தவர்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட புரிந்து கொள்வதில்லை. அல்லது அதை உதாசீனப்படுத்துகிறார்கள். 

     தன் குழந்தை எதை செய்வதை தான் விரும்பவில்லையோ அதை பெற்றோர் செய்யாமலிருத்தல் நல்லது. அல்லது தன் குழந்தை எதை செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ அதை அந்தப் பெற்றோரும் செய்து காட்டி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இது ஏன் பல பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை?

   இதை நான் எழுதுவதால் நான் இது போன்ற தவறை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. இந்தத் தவறை நானும் செய்திருக்கிறேன். இன்று வருந்துகிறேன்.


Sunday, May 27, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்:


இந்த உலகம் விந்தையானது. இயற்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் நம்மை திகைக்க, பிரமிக்க வைக்கக் கூடியது.

பிறப்பு – இறப்பு என்பது என்ன? செடிகளில் எப்படி, பூ பூக்கிறது? ஒரு சிறிய விதை எப்படி ஒரு செடியாகவோ அல்லது மரமாகவோ வளர்கிறது? நமது இருதயமும் நுரையீரலும் எப்படி ஒரு வினாடி கூட ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது? எங்கிருந்து அதற்கு அந்த சக்தி கிடைக்கிறது? தூங்கும் பொழுது நமக்கு என்ன ஆகிறது? எல்லாமே வியக்கக் கூடியதுதான்.

இதையெல்லாம் விட மனம் என்பது ஒரு படி மேல் பிரமிக்கக் கூடியது. மனம் என்பது மூளையா அல்லது அதற்கு அப்பாற்பட்டதா? மனம் எங்கே இருக்கிறது? அது எப்படி செயல்படுகிறது? எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றன?

இப்படிப் பல கேள்விகள்.

‘ஏன், ஏன்’ என்று கேட்கக் கேட்கத்தான் மனிதன் வளர்ந்திருக்கிறான். இயற்கையாக நடக்கும் பல விஷயங்களைப் பார்த்து வியந்து ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டு, தேடித் தேடி அலைந்து விடைகளை இன்னமும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி நானும் நான் பார்த்ததை, கேட்டதை, படித்ததைக் கண்டு வியந்து அல்லது திகைத்து எனக்குள்ளேயே இயற்கையாகத் தோன்றிய சில கேள்விகளைப் பற்றி எழுத விரும்புகிறேன். இது போன்ற கேள்விகள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.  நீங்கள் வியந்ததையும் (திகைத்ததையும்) உங்கள் கருத்துக்களாக எழுதுங்கள்.

அறிவு பூர்வமான கருத்துப் பரிமாற்றமாக இது இருக்கும் என்று நினக்கிறேன். குமாரசாமியைப் பற்றியும், வைகோவைப் பற்றியும்,, விஷாலைப் பற்றியும் நமது சிந்தனை சக்திகளை வீணடிப்பதை விட இது ஆக்க பூர்வமாக இருக்கும் என்று  நம்புகிறேன்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரே ஒரு வியப்பைப் பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன். பல வியப்புகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். முக்கியமானது, முக்கியமில்லாதது, முன்னுரிமை பெற்றது என்று இந்தப் பட்டியலில் எதுவுமில்லை. அதனால் முன்னுக்குப் பின் இருக்கலாம். ஆனால், முரணாக இருக்காது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமானது.

எனது வியப்புகளின் பட்டியல் இதோ…இன்றைய வியப்பு…

1. தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடும் பல பெற்றோர்கள் ஏன் ஒரு நல்ல பிள்ளையாக தன் தாய் தந்தையருக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை?


தொடரும்...

Monday, May 14, 2018

14.05.18 INSIDE EDGE: Amazon Prime Serial – ஒரு பார்வை


“BREATHE” என்ற மற்றொரு அமேசான் ப்ரைம் சீரியலைப் பற்றி என்னுடைய கருத்தை முன்னம் தெரிவித்திருந்தேன். INSIDE EDGE அதே ஃபார்முலாவைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட இன்னொரு ‘ஹாட்’ சீரியல். (அல்லது இதுதான் அண்ணனா என்று தெரியவில்லை.)

ஐ. பி. எல்-லைப் போல இந்தத் தொடரில் பி. பி. எல் (POWER PLAY LEAGUE) கிரிக்கெட் போட்டிகள். நிதி நெருக்கடியில் தவிக்கும் மும்பை மாவரிக்ஸ் பெண் உரிமையாளர் (அடிக்கடி புகைத்துக் கொண்டு) தன்னுடைய அணியைத் தக்கவைத்துக் கொள்ள இன்னொரு ‘ஃபைனான்சியரை’த் தேடுகிறார். அங்கே ஒரு வில்லன் உள்ளே நுழைகிறார். வில்லன் சொல்வதற்கெல்லாம் (பல குறுக்கு வழிகளுக்கு) விருப்பமில்லாமல் மும்பை மாவரிக்ஸ் உரிமையாளர் ஆடுகிறார். ஒவ்வொரு போட்டியும் ஃபிக்ஸ் ஆகிறது. மேட்ச் ஃபிக்சிங், ஸ்பாட் ஃபிக்சிங் இரண்டும் வெற்றிகரமாகச் செய்யப்படுகிறது. பெயர் தெரியாத கிராமத்திலிருந்து வரும், ஆனால், திறமையான, பந்து வீசும் ஓரு விளையாட்டு வீரரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருப்பமில்லாமல் அவருடைய கனவுகளை பகடையாக்கி மேட்ச் ஃபிக்சிங் நடக்கிறது. இதில் ஒன்றிரண்டு விளையாட்டு வீரர்களும் உடந்தை. ‘பெட்டிங்’ பன்னாட்டு அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய்க் கணக்கில் நடக்கிறது. இதில் நேர்மையான கேப்டன், ஏதோ ஒரு தவறை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் கோச் போன்ற பலர் பலியாகின்றனர். பெரிய கனவில் விளையாடும் தடாலடி பேட்ஸ்மேன் வாயு ராகவன் – இவருக்கு எல்லா (நல்ல) பழக்கங்களும் உண்டு – செக்ஸ், பாட், தண்ணீர், முன்கோபம், ஆத்திரம், இத்யாதி – ஒவ்வொரு மேட்சின் போக்கையும் மாற்றியமைக்கக் கூடியவர் – இவர்தான் இறுதி ‘PLAY-OFF’ –ல் கடைசி பலியாக வேண்டும். இவரும் மேட்ச் ஃபிக்சிங்கில் விழுந்தாரா, இல்லையா இதுதான் சஸ்பென்ஸ்.

விறுவிறுப்புக்குக் குறைவில்லை என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவேண்டும். ஆனால், சென்சார் போர்டு என்று தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருந்தால் அவர்களின் கத்திரியிலிருந்து இந்த சீரியல் தப்பித்திருக்குமா என்பது முக்கியமான கேள்வி. நெகடிவாகவும், குரூரமாகவும், செக்ஸ் சமாச்சாரங்கள் கொஞ்சம் தாராளமாகவும் இருந்தால்தான் ஒரு படமோ, சீரியலோ வெற்றியடைய முடியும் என்று யாரோ தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும். அதை முழுவதுமாக பின்பற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவில் வெளி வந்திருக்கும் பல வெற்றிகரமான சீரியல்களை பைத்தியம் போல தொடர்ந்து பார்க்கும், ஏங்கித் தவிக்கும் பல இளைஞர்களுக்கு (வயதான என்னையும் சேர்த்து) INSIDE EDGE சீரியல் நல்ல தீனி.

முடிவுரை: இந்த சீரியலையும் பார்த்த பிறகு இந்தியாவில் ஆண்டு தோறும் நடக்கும் ஐ. பி. எல் மேட்சுகளை, ஏதோ உண்மையில் போட்டி போடுகிறார்கள் என்று நம்பி வேறு வேலையே இல்லை என்பது போல பார்க்கும் லட்சக் கணக்கான மக்களைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.  லலித் மோதி ஓடி ஓளிந்த நாட்களுக்குப் பிறகு நான் ஐ. பில் எல் மேட்சுகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

Tuesday, May 08, 2018

08.05.18 அமெரிக்காவின் “காஸ்ட்கோ” ஸ்டோர்




அமெரிக்காவுக்கு குழந்தைகளை படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் அனுப்பி விட்டு அவ்வப்பொழுது அவர்களை பார்ப்பதற்கும் அவர்களுடன் அமெரிக்காவை சுற்றிப் பார்க்க விரும்பும் பெற்றோர்கள் இங்குள்ள இரண்டு பெரிய ஸ்டோர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒன்று ஐகியா (IKEA), மற்றது காஸ்ட்கோ (COSTCO). ஐகியா இப்பொழுது இந்தியாவுக்கும் வந்து விட்டது. மற்றது இன்னும் வரவில்லை. மற்ற ராட்சச ஸ்டோர்களான வால் மார்ட் பற்றி இப்பொழுது பொதுவாக இந்தியாவில் எல்லோருக்கும் தெரியும்.

“காஸ்ட் கோ” ஸ்டோரை நான் “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவில் என்றே அழைத்து வருகிறேன். அமெரிக்கா வந்து விட்டு “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவிலுக்கு போகாமல் இந்தியா திரும்புவது என்பது பெரிய பாவம். வாரம் தோறும் வெள்ளி/சனிக்கிழமை ஏதோ ஒரு கோவிலுக்கு போய் வருவது போல சனி/ஞாயிறு அன்று “காஸ்ட்கோ” அம்மாச்சி கோவிலுக்குப் போவது இங்கு வாழும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கும் (சர்ச்சுக்குப் போவது போல) ஓரு வாராந்திர வழக்கம்.

“காஸ்ட்கோ” வைப் பற்றி தெரியாவதவர்களுக்காக இந்த அறிமுகம்.

“காஸ்ட்கோ” ஒரு ராட்சச ஸ்டோர். அமெரிக்காவின் எல்லா பெரிய ஊர்களிலும் இதன் ஒரு கிளை கண்டிப்பாக இருக்கும். இங்கு சாதாரணமாக ஒரு அமெரிக்க வாழ்க்கைக்கு, குடும்பத்துக்குத் தேவையான எல்லா பொருட்களும் கிடைக்கும். பல இந்தியர்களும், ஆசியாவைச் சேர்ந்தவர்களும் இங்கே பொருட்களை பெரிய அளவில் வாங்க ஆரம்பித்ததால் இப்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கூட விற்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்துக்கு: இந்தியன் பாஸ்மதி அரிசி, தால் மக்கனி, (மெக்சிகன்) ரெடிமேட் சப்பாத்தி (டாட்டியா) இப்படிச் சில.
      ·         பொதுவாக நல்ல தரம் வாய்ந்த பொருட்களை மட்டுமே இங்கே விற்கிறார்கள். என்ன, எல்லா பொருட்களையும் பெரிய பெரிய பாக்கெட்டுகளில் அல்லது பல்க்காக ஒரு சில மாதங்களுக்கு வருவது போல விற்கிறார்கள்.
       ·         எல்லாப் பொருட்களின் விலையும் வெளி விலையை விட குறைவு. பொருட்களை விற்பவர்களிடம் தரம் பார்த்து மிக அதிக மொத்த அளவில் காஸ்ட்கோ வாங்குவதால் அவர்களுக்கு வெளியிடங்களை விட அடக்க விலை குறைவாகவே இருக்கிறது. காஸ்ட்கோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம்.
     ·         முக்கியமாக, வாங்கிய பொருள் பிடிக்காவிட்டால் (உணவுப் பொருட்களைத் தவிர்த்து) மூன்று மாதங்களுக்குள் திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய ஒரு வாட்சை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றிருக்கிறேன்) முகம் சுளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த வசதியை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை.
         ·         ஸ்டோர் அமைத்திருக்கும் விதம், பொருட்களை அடுக்கியிருக்கும் விதம் எல்லாமே ‘என்னை வாங்கு, வாங்கு’ என்று அழைப்பது போல இருக்கும்.
     ·         காஸ்ட்கோவின் உறுப்பினர்களாக சேருபவர்கள் மட்டுமே இங்கே பொருட்களை வாங்க முடியும். உறுப்பினர் அட்டையைக் காட்டினால்தான் உள்ளேயே விடுவார்கள். வருஷாந்திர உறுப்பினர் கட்டணம் உண்டு. ஒரு சில உறுப்பினர் வகையினருக்கு ‘கேஷ் பேக்’ எனப்படும் ‘வாங்கிய பொருளின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திருப்பிக் கொடுப்பது’ உண்டு. பதிவாக இங்கே பொருளை வாங்குவோர்க்கு இந்தக் ‘கேஷ் பேக்’ உறுப்பினர் கட்டணத்தை சரி செய்து விடும்.
        ·         காஸ்ட்கோவுக்கு வரும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வசதியாக கார் பார்க்கிங் வசதி உண்டு.

ஒரே ஒரு குறை. இந்த ஸ்டோருக்குள் போனால் தேவையோ இல்லையோ பல பொருட்களை வாங்கிக் குவிக்கும் (கெட்ட) பழக்கம் பொதுவாக எல்லோருக்கும் வந்து விடுகிறது.

இருந்தும் காஸ்ட்கோவின் வியாபார ‘மாடல்’ பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயனுள்ளதாகவே இருக்கிறது. அடுத்த முறை அமெரிககா வரும் பொழுது இதுவரை காஸ்ட்கோவுக்கு போனதில்லையென்றால் கண்டிப்பாகப் போய் வாருங்கள். உங்களுடைய திருப்திக்கு உத்திரவாதம்.

காஸ்ட்கோவின் வியாபார மாடலை என்னுடைய WHAT IF OUR DREAMS COME TRUE: AN UNCOMMON MEETING WITH LORD SIVA என்ற நாவலில் ஒரு இடத்தில் கதையின் ஒரு பாகமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

Friday, May 04, 2018

02.05.18 கோடை வந்து விட்டது: உன்னால் முடியும் தம்பி, தம்பி


கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்.

2007 ஜூன் மாதம். வெளிநாட்டில் வேலை பார்த்தது போதும் என்ற நினைப்போடு மீதமுள்ள காலத்தை ஒரு கிராமப்புற ஊரில் ஏதேனும் ஒரு சமூக சேவையில் ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு இரண்டே இரண்டு சூட்கேசுகளுடன் தென்காசியில் வந்திறங்கினேன். மனைவியின் நெருங்கிய ஒரு பேச்சுலர் ஆடிட்டர் சொந்தக்காரரைத் தவிர தென்காசியில் யாருடனும் அறிமுகம் கிடையாது.

முதன் முதலாக தென்காசியில் ஒரு பெரிய மெட்ரிக் பள்ளியின் முதல்வரை எனக்கு அந்த சொந்தக்காரர் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பொதுத்துறை வங்கியில் பெரிய பதவியை வகித்திருந்து, பின்னர் ஒரு வெளி நாட்டிலும் வேலை பார்த்து திரும்பியிருந்த காரணத்தினாலும், ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக பேச முடியும் என்ற காரணத்தாலும், மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டியதாலும் என்னை அந்தப் பள்ளியின் மாணவர்களுடன் ‘பெர்சனாலிடியை வளர்த்துக் கொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் வாரம் ஒரு முறை கலந்துரையாட அந்த பள்ளி முதல்வர் விழைந்தார்.

பேச்சோடு பேச்சாக தென்காசியில் ஐ. ஐ. டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஆண்டு தோறும் நடந்து வரும் தேர்வுக்கு கோச்சிங் செய்வதற்கு ஒரு சரியான அமைப்பு தென்காசியில் இல்லை என்றும், அப்படி ஒரு அமைப்பை உருவாக்கினால் தன் பள்ளியிலிருந்தே குறைந்தது ஒரு இருபது இருபத்தைந்து மாணவர்களை அந்த அமைப்பின் வகுப்புகளில் சேர்வதற்கு தன்னால் உறுதி செய்ய முடியும் என்றும் நம்பிக்கையோடு கூறினார்கள்.

உடனேயே அதற்கான முயற்சியில் இறங்கினேன். திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் இருந்த என்னுடைய பழைய நண்பர்கள், பழைய கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் நல்லெண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியர்கள் இப்படி பலரைத் தொடர்பு கொண்டேன். லாப நோக்கில்லாத என்னுடைய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க அவர்களில் பலரும் தயாரானார்கள். ஒரு நல்ல முயற்சி, அதுவும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக என்பதனால் பாடம் எடுத்தால் ஃபீஸ் எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் எவரும் கவலைப் படவில்லை.

ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார். தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை இப்படிப் பல இடங்களிலிருந்து மூத்த கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பள்ளியாசிரியர்கள் என்று ஒரு 12 பேர் கொண்ட ஒரு டீம் கோச்சிங் வகுப்புகள் நடத்தத் தயார். ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்புக்கு ரூபாய் 250 மற்றும் போக வர பஸ், டிரெயின் சார்ஜ் செலவு அவ்வளவுதான் செலவு. வகுப்புகள் நடத்த இடம் இலவசமாகக் கொடுக்க ஒருவர் தயாராக இருந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள். ஒரு மாணவரின் சேர்க்கைக்கு ஆண்டுக்கு கட்டணம் ரூபாய் 6000; இரண்டு ஆண்டுகளுக்கு வகுப்புகள். வெறும் 12000 ரூபாயில் தரமான கோச்சிங்.

நான் தொடர்பிலிருந்த பள்ளியின் மாணவர்களுக்கு கௌன்சலிங் செய்வதற்காக என்னுடைய நெருங்கிய நண்பர், ஐ. ஐ. டியில் எம். டெக் படித்து திருவனந்தபுரம் இஸ்ரோவில் ஜெனரல் மேனேஜர் பதவியில் இருந்த ஒரு நண்பரும் அவருடைய மூத்த அதிகாரி ஒருவரும் (அவரும் ஐ. ஐ. டியில் படித்துப் பட்டம் பெற்றவர்) எனக்காக சிரமம் பார்க்காமல் தென்காசி வரை வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

2007-ல் தென்காசியில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஐ. ஐ. டி, ஐ. ஐ. எம் போன்ற கல்வி நிறுவனங்களைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். தென்காசியிலிருந்த மற்ற பள்ளி மாணவர்களுக்காகவும் தனியாக நான் கௌன்சலிங் வகுப்புகள் தினப்படி நடத்தினேன்.

ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த முயற்சி பெரும் ஏமாற்றத்துடன் முடிந்தது. மாணவர்களிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் ஐ. ஐ. டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு கோச்சிங் வகுப்புகளில் சேர எந்த வரவேற்பும் இல்லை. ஒரு மாதம் முடிந்தது. மொத்தம் மூன்றே மாணவர்கள் இறுதியாக வகுப்புகளில் சேர்வதற்குத் தயாராக இருந்தார்கள். என்னுடைய கன்னி முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது.

ஆனால் தோல்வியிலும் ஒரு நல்லது நடந்தது. என்னுடைய எல். என். சேரிடபிள் டிரஸ்ட் உருவானதற்கு அந்தத் தோல்வியான முயற்சிதான் அடிக்கோல். நானும் என் மனைவியும் மட்டுமே இந்த டிரஸ்டின் டிரஸ்டிகள். எங்கள் டிரஸ்ட் ஆவணத்தின் முதல் குறிக்கோளே ஐ. ஐ. டி/ ஐ. ஐ. எம்/ ஐ. ஏ. எஸ்/ மருத்துவப் படிப்பு இப்படி பல நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதுதான். இன்று வரை எங்களது முதல் குறிக்கோள் நிறைவேறவில்லை.

வியாபாரத்தனமாக எங்களால் எதையும் யோசிக்க முடியாததால் இன்றைய மார்க்கெட்டில் இருக்கும் போட்டியுடன் நாங்கள் மோத முயற்சிக்கவில்லை.

சரி, இப்பொழுது விஷயத்துக்கு வருகிறேன்.

மத்யமர் என்பது நல்லெண்ணம் கொண்ட நடுத்தர வர்க மனிதர்களின் ஒரு சமூக வலைதள கூட்டமைப்பு. இந்த அமைப்பின் மேற்பார்வையில் ஐ. ஐ. டி/ ஐ. ஐ. எம்/ ஐ. ஏ. எஸ்/ நீட் - மருத்துவப் படிப்பு இப்படி பல  நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய ஒரு கோச்சிங் அமைப்பு ஏழையான, அரசுப் பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவர்களுக்காக ஆரம்பித்தால் என்ன?

அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் விதம் 12 மாதங்களுக்கு 12000 ரூபாய் (அல்லது அதற்கு மேலும்) நன்கொடையாகத் தர நான் தயாராக இருக்கிறேன். ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் மத்யமரில் ஒரு 50 பேர் ஒன்று சேர்ந்தால் ஆண்டுக்கு குறைந்தது 6 லட்சம் ரூபாய் சேர்க்கலாம். பாடங்களைச் சொல்லிக் கொடுக்க நல்லெண்ணம் கொண்ட ஆசிரியர்களை, கல்லூரி விரிவுரையாளர்களை அணுகலாம். நினைத்தால் கண்டிப்பாக முடியும். ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முதலில் முயன்று பார்க்கலாம். கிராமப்புற, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். இலவசமாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால், இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மக்கள் மரியாதை கொடுப்பதில்லை. இதனால் குறைந்த கட்டணத்தில் – உதாரணத்துக்கு மாணவர் ஒருவருக்கு மாதம் நூறு ரூபாய் கட்டணம் என்ற கணக்கில் – இந்த வகுப்புகளை நடத்தலாம். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் வியாபார ரீதியில் பணம் கொடுக்க வேண்டியிருக்காது.

ஒரு வேளை இந்த அமைப்பின் வரவு செலவுகளில் துண்டு விழுந்தால் மேலும் நன்கொடை உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது வெளியிலோ பெற்றுக் கொள்ளலாம். இந்த அமைப்பை ஒரு சேரிடபிள் டிரஸ்டாக பதிவு செய்து பொறுப்பான ஒரு சில மத்யமர் உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடத்தலாம். அது போன்ற டிரஸ்ட்டுக்கு 80 G வருமான வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம். (என்னுடைய டிரஸ்டுக்கும் நான் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், பொதுவாக என்னுடைய சொந்தச் செலவிலேயே என்னுடைய டிரஸ்டை நடத்துகிறேன்)

மேலும் இதைப் பற்றி விரிவாக யோசித்துப் பார்க்கலாம். என்ன சொல்கிறீர்கள்?

02.05.18 கோடை வந்து விட்டது


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் வந்து விட்டால் போதும். செய்தித் தாள்களில் நாம் வழக்கமாக காண்பது:

1.     ஏர்கண்டிஷனர்கள் விளம்பரங்கள்
2.     ஐ. ஏ. எஸ்/ஐ. ஐ. டி/ஐ. ஐ. எம், மற்றும் சமீபத்தில் கட்டாயமாகிவிட்ட நீட் தேர்வுகளுக்கு கோச்சிங் வகுப்புகளுக்கான விளம்பரங்கள்
3.     பெரிய மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுத்தார்கள் என்பதை பறைசாற்றும் விளம்பரங்கள்.

ஒரு காலத்தில் சொகுசுப் பொருளாகப் பார்க்கப்பட்டு  மேல்தட்டு மக்களே பயப்படும் அளவுக்கு வரி விதிக்கப்பட்ட ஏர்கண்டிஷனர்கள் இன்று அத்தியாவசியத் தேவையாகி விட்டன. மார்க்கெட்டில் கடும் போட்டி. பல வித யுத்திகளை – வட்டியில்லாத கடன் வசதி, அதிரடி விலை குறைப்பு, போனஸ் கூப்பன்கள், கியாரண்டி இப்படி பல – கையாண்டு பொருளை விற்க வேண்டியிருக்கிறது. செய்தித் தாள்களில் பல முழுப் பக்கங்களை இந்த விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன.

இன்றயை ஆங்கில ‘தி ஹிந்து’வில் முதல் இரண்டு பக்கங்களை ஆகாஷ் மெடிக்கல்/ஐ.ஐ.டி/ஜே.ஈ.ஈ குழுமமும் மற்றொரு முழு பக்கத்தை ஸ்ரீசைதன்யா குழுமமும், கடைசி முழுப் பக்கத்தை நாராயணா குழுமமும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். இது போல இன்னும் எத்தனை செய்தித் தாள்களில் வந்திருக்கிறதோ தெரியவில்லை. யாரிடமிருந்து இந்த விளம்பரங்களின் செலவை இந்த நிறுவனங்கள் வசூலிக்கப் போகின்றன? எத்தனை பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளைச் இந்த கோச்சிங் வகுப்புகளில் பல்லாயிரக் கணக்கில் பணம் அடைத்து சேர்ப்பதற்கு வசதியிருக்கும்? வசதியில்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்?

என்னுடைய கவலை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றியது.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? அவர்களில் பலர் தனியார் பள்ளிகளில் சென்று அந்தப் பள்ளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இதே தேர்வுகளுக்குக் கோச்சிங் வகுப்புகள் நடத்துகிறார்கள் அல்லது மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் நினைத்தால் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களை இந்தத் தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாதா? அல்லது அவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா? அரசாங்கத்தால் எத்தனை கோச்சிங் மையங்களைத் தொடங்க முடியும்? அப்படியே துவக்கினாலும் காலப் போக்கில் சரிவர செயல்படுமா? அல்லது இன்றைய அரசுப் பள்ளிகளைப் போல செயல்படுமா?

இன்று இரண்டாம் வகுப்பிலிருந்தே கோச்சிங், டியூஷன் என்று போய்க் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களுக்குத் தான் அழுத்தம் அதிகமாகிறது. இருந்தாலும் போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் வேறு வழி என்ன இருக்கிறது? குழந்தை பிறந்த நேரத்திலிருந்தே பெற்றோர்கள் அவர்களை மருத்துவர்களாக்க வேண்டும், பொறியியல் வல்லுனர்களாக்க வேண்டும், பெரிய ஐ. ஏ. எஸ் அதிகாரிகளாக்க வேண்டும், வெளி நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
            
        இதில் ‘மத்யமர்’ பிரிவில் ஒரு உறுப்பினராக இருக்கும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதையே ஒன்றிரண்டு நாட்களாக யோசித்து வரும் எனக்கு ஒரு உள்கருத்து தோன்றியது. அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்.  

Tuesday, May 01, 2018

01.05.18: A writer’s grumble


Most book lovers from India know Mr. Chetan Bagat, a popular writer of fiction and non-fiction. In my search to know how Indian authors in English write books I have read his few books too. Not only his, but a few other Indian authors too. While I am happy and proud that an Indian author like Chetan Bagat gets an attention and distinction of being roped in for a six-books-million dollar deal, a number of writers must be feeling left out high and dry in the market.

A couple years ago, I had read in a book titled: “Gutenberg to Zuckerberg” about how the invention of printing technology during the 14th/15th century disrupted the whole world of knowledge and how the subsequent invention of internet deepened this disruption in immeasurable ways. One of the important unintended outcomes with the onset of internet, among other things, is that more and more people read and write. Write, importantly. Writers, of all grades, varieties, standards have sprung up everywhere and these writers are craving for attention from others. The present day social media like Facebook, WhatsApp etc., gives some satisfaction to these writers. Yet, the attention like the one Chetan Bagat and a few other writers got is a matter of envy for most writers, including me.

I know for sure many write well – as decently as some of the today’s writers or maybe, even better. The problem is: When will these writers get some attention from the larger readers, big publishers, media, etc.?

I also have a feeling that for most writers, as they write more and more, they start grinding the same or similar stuff again and again and what they write is less and less interesting to read. I have seen this happening to writers like David Baldacci, Dan Brown, and maybe, Chetan Bhagat too in the recent days. Whereas, in the earlier years, I have read almost all the novels written by Earl Stanley Gardner, Arthur Hailey, Irving Wallace, Leon Uris, Jeffrey Archer and the likes and I loved every one of them and read them with the same interest similar to the one when I read their first book.

Most small time writers who wish to become popular do not have the kind of marketing skills, PR contacts, Literary Agents, Media friends to take their writings to light. And their writings languish forever. I think the days of writing ads a job for the sake of earning money are gone. Today, more people write to gain attention, popularity, and acceptance of their worldviews. There are few agencies to recognize the hard work of such small time writers.

Will we be recognized at all in our lifetime, I don’t know. I am a writer too.

Am I jealous?