Total Pageviews

Wednesday, November 30, 2016

Sulochana Mudaliar Bridge at Tirunelveli across the river Tamirabarani

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலிக்கு சென்று வந்தேன். பாளையங்கோட்டை செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை கடந்து சென்றேன். அன்றோடு (27.11.16) அந்தப் பாலத்துக்கு 174 வயதாகியிருப்பதாக முத்தாலம் குறிச்சி காமராசு அவர்களின் முக நூலில் படித்தேன்.

நான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த காலத்தில் அந்தப் பாலம் வழியாக பல முறை நடந்து சென்றிருக்கிறேன்.  நாங்கள் வசித்தது திருநெல்வேலி டவுணில். என் அப்பாவும் பெரியப்பாவும் பாலத்தின் ஒரு புறம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்திருந்த நீதிமன்றத்தில் எழுத்தர்களாக (க்ளெர்க்காக) வேலை பார்த்து வந்தார்கள். (இப்பொழுது அந்த வளாகம் பாளையங்கோட்டைக்கு மாற்ற்ப்பட்டு விட்டது) ஒரு சில ஆண்டுகளில் அவர்கள் இருக்கையும் எதிரெதிரேயே இருந்தது. ஒரு சில நாட்களில் என் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துகொண்டு போவேன்.  நீதிமன்ற வளாகத்தில் ஒரு கேன்டீன் உண்டு. என் பெரியப்பா பெரும்பாலும் அங்கேதான் மதிய உணவைக் கழித்துக்கொள்வார். நான் எப்பொழுது போனாலும் அந்த கேன்டீனிலிருந்து வடை, அல்வா, ரவா கேசரி வாங்கிக் கொடுப்பார். அதற்காகவே அங்கே பல முறை சென்றிருக்கிறேன். கேன்டீனிலிருந்து சுவையான உணவு தயாராகிக் கொண்டிருக்கும் நறுமணம் காற்றில் எப்பொழுதும் மிதந்து கொண்டிருக்கும். கலெக்டர் அலுவலகமும் அந்த பகுதியிலேயே அமைந்திருந்தது. ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் பொழுது தூரத்தில் பனிமூட்டங்களுக்கூடே ரயில் பாலத்தையும் பார்க்கலாம்.

ஆற்றின் கரை கொக்கிரகுளம் பகுதியில் பெரிய மேடாக உயர்ந்து நிற்கும். பக்கவாட்டில் ஓங்கி வளர்ந்த மரங்கள். பார்ப்பதற்கு அருமையாகவும், குளுமையாகவும் இருக்கும். பரந்தவெளியில் குளிர்ந்த காற்று எப்பொழுதும் சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். ஆற்றின் மறுபுறம் (இன்றும் போல) அன்றும் பன்றிகளின் கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கு நடுவே எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருப்பார்கள். பல வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருப்பார்கள். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டும் இருப்பார்கள். இப்படி என் எண்ணங்கள் அந்தப் பாலத்தைக் கடந்து செல்லும்பொழுது வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.

என்னுடைய இந்த நினைவுகளையே என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETINGWITH LORD SIVA”  என்ற நாவலில் கதையின் கதாநாயகன் அந்த ஆற்றுப்பாலத்தை கடந்து வரும்பொழுது அனுபவித்ததாக எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்திலிருக்கும் பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன். நீங்களும் படித்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Chapter 35

As I stepped out of the District Collector’s office, I remembered Ambalam, the mendicant at Papanasam who shared with me the gory stories about the flash floods in the river Tamirabarani. My accidental meeting him eventually led to my long stay at Papanasam for seven years and we ended up, eventually, building water dams, to prevent flash floods in those hilly Podhigai regions. 

As I walked along the raised banks of the river Tamirabarani at Kokkirakulam where the District Collector’s office was housed in Tirunelveli, I passed by the offices and courts of the district and sessions judges. A cool wind was blowing crisscrossing the river, carrying with it a pleasant aroma from the court canteens that prepared very delicious halwa and vadai. From the elevations, I looked at the serene river below, flowing down quietly. I had heard that the river Tamirabarani never dried up in its history. At the far end behind me, I could see the silhouette of the railway bridge and a train passing over. Thanks to the British, India today had railways, bridges, and canals. On the other bank of the river, several pigs were scavenging for food even while dhobis were busy washing clothes beating them on small rocks. Buffaloes and bullocks were getting a cool bath in the river alongside the people. I walked along the more-than-half-a-century-old Sulochana Mudaliar bridge across Tamirabarani. I remembered someone telling me that several decades back, the philanthropist Sulochana Mudaliar built this bridge, entirely out of his personal wealth, to help villagers cross the river. The bridge was made of stones, brick and mortar and had stood firm over the years. Later, when the government wanted to lay a new wider bridge across the river, they couldn’t break any of the then existing structures. So they had to change their plan and the design and be satisfied with just widening the already existing bridge, by erecting additional pillars to support them. I reached the central bus stand at Tirunelveli Junction and took a bus to Papanasam where I went straight to my Lord’s temple.


என்னுடைய “WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA” நாவலைக் கண்டிப்பாக படித்துப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக பிடிக்கும். இந்தப் புத்தகம் www.pothi.com என்ற வலைதளத்தில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகம்தான். குறைக்க முடியவில்லை. ஏனென்றால் PRINT ON DEMAND என்ற அச்சடிக்கும் முறையில் ஒவ்வொரு புத்தகமாகக் கூட அச்சடித்துக் கொடுக்கிறார்கள். ஆஃப்செட்டில் அச்சடிக்கப்படுவதில்லை.

Tuesday, November 22, 2016

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு



கடந்த வாரம் முழுவதும் எங்கே திரும்பினாலும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாததின் தாக்கத்தைப் பற்றியே இருந்தது. பல இடங்களில் சகஜ நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. சராசரி மக்களுக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அந்த அளவு பணம் பொதுவாக கிடைத்துக் கொண்டிருந்தது என்றுதான் தோன்றுகிறது. அடிமட்ட மக்களுக்கு அதுவும் கிராமப் புற மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வங்கிகளின் சேவையை அதிகமாக பயன்படுத்தாதவர்களுக்கு சில சங்கடங்கள் இருந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வரவேண்டும் (inclusive banking) என்ற அரசாங்கத்தின் அடிப்படை எண்ணம் மோடி ஆட்சி வந்த பிறகு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தூங்கியவர்கள் இப்பொழுது அவஸ்தைப் படுகிறார்கள். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அடிமட்ட ஏழை மக்கள் தான்.

இருந்தும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற மோடியின் அறிவிப்பிற்குப் பிறகு பொதுவாக எந்த வங்கியிலும் ரகளை நடக்கவில்லை. (பல அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன போலத் தோன்றுகிறது) ஒரு சில சங்கடங்களுக்கிடையே பெரும்பாலான மக்கள் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும், கீழ்மட்ட மக்களிடையே கொஞ்சம் தேவையில்லாத பீதி இருப்பதும் தெரிகிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் எதிர்மறையாக கருத்துக்களையே பரப்பி வருவதாகத் தெரிகிறது.

தங்கள் வங்கிக் கணக்குகளை பதுக்கல்காரர்களுக்கு வாடகைக்கு கொடுத்த பல சாமானிய மக்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பணப் பரிமாற்றத்துக்கு விரல்களில் மை வைக்க ஆரம்பித்த பிறகு பல வங்கிகளில் நீள வரிசைகள் மறைந்துவிட்டன.

வட இந்தியாவில்தான் அதிகமான எதிர்ப்புகள் இருப்பது போலத் தோன்றுகிறது. அங்கேதான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் போலும். முக்கியமாக பின் தங்கிய மானிலங்களான உ.பி, பிஹார் போன்ற இடங்களில். அங்கேதான் படிக்காதவர்களையும், ஏழைகளையும் வைத்து அரசியல் செய்வது இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாமல் போனதிலிருந்து பல எதிர்க் கட்சிகளுக்கு ஏழை பாழைகள் மீது அதீதமாக கருணை பொங்கி வழிகிறது. பா.ஜ.க அரசாங்கத்தை அடி, அடியென்று அடிப்பதற்கு இன்னொரு ஆயுதம் அவர்கள் கையில் கிடைத்திருக்கிறது. வழக்கம் போல நாடாளுமன்றம் செயல்படாமல் செய்திருக்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க பாராளுமன்றத்தை வேறு பல காரணங்களுக்காக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இனி எதிர்காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தொடரும் என்று  நம்புவோமாக.

இவ்வளவு ரகளையிலும் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ரொம்பவும் அடக்கி வாசித்து வருகிறார். ஓரளவு நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று முனைபவர்களில் அவரும் ஒருவர் என்று நான் நம்புகிறேன். துணிச்சலாக மதுவிலக்கை அமல் படுத்தியிருக்கிறார். ஆனால், லாலுக் கட்சியுடன் கூட்டணிதான் நெருடலாக இருக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தில் தென்காசி வருவதற்கு நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே நின்றிருந்துவர் பழைய ஒரு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விருதுநகருக்கு ஒரு டிக்கட் கேட்டார். டிக்கெட் பத்து ரூபாய்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். டிக்கெட் கௌண்டரில் இருந்த பெண்மணி எந்த எதிர்ப்பும் சொல்லாமல் டிக்கெட்டையும் கொடுத்து மீதிப் பணத்தையும் நூறும் பத்துமாகக் கொடுத்தார்.  விருதுநகருக்கு டிக்கெட் வாங்கியவர் கண்டிப்பாக விருதுநகருக்கு பயணப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். யாருக்கு உதவி செய்யவோ அல்லது கமிஷனுக்காகவோ 500 ரூபாயை மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் நான் எழுதி வெளியிட்ட “THE PATH” என்ற கதைப் புத்தகத்தின் முதல் பிரதி www.pothi.com-லிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது. புத்தகத்தின் அட்டை மிக நன்றாக வந்திருந்தது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தென்காசி சுந்தரம் பிரஸ் ப்ரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி. THE PATH நூலை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

                                                            … மீண்டும் சந்திக்கலாம்.



Sunday, November 13, 2016

13.11.16 இந்த வார நாட்குறிப்பு

13.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் இரண்டு பெரிய பூகம்பங்கள் வெடித்ததில் வேறெதுவும் மனதில் ஓடாமல் வாரம் கழிந்தது. எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களானாலும் அதைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது.
முதலாவது, 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் அன்றிரவு 12 மணிக்கு மேல் செல்லுபடியாகாது என்ற பிரதமர் மோடியின் 8-ஆம் தேதி புதன் கிழமை இரவு 8 மணி அறிவிப்பு. அன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அந்தச் செய்தியையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் மோடி அவர்கள். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகள். கணக்கில் வராத 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களாக பதுக்கி வைத்திருந்த பண முதலைகள் அன்றிரவு 12 மணிக்குள் எப்படி தங்களிடம் உள்ள தாள்களை மாற்றுவது என்று புதுப் புது உத்திகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 9—ஆம் தேதி (இந்திய நேரம்) வெளி வந்த பொழுது டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது பலருக்கு இரண்டாவது அதிர்ச்சி. அவரை எதிர்த்து நின்ற ஹிலாரிக்கு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கர்கள், மெக்சிகர்கள், அமெரிக்க பெண்மணிகள், வேற்று நாடுகளிலிருந்து அமெரிக்கா குடிபுகுந்தவர்கள், இப்படி பலருடைய ஆதரவு மட்டுமில்லாமல் வெளியுறவுச் செயலராகப் ஒபாமாவின் கீழ் 4—ஆண்டுகள் பணி புரிந்த அனுபவம் வேறு. இவையெல்லாவற்றையும் மீறி அரசியலில் நேரடி அனுபவம் எதுவுமில்லாத ட்ரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக அளவில் பலரை உலுக்கியது.

பிரதமரின் அறிவிப்பு பற்றி வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு முழு விவரம் தெரிந்துகொள்வதற்கு தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தேன். பிரதமரின் உரை முடிந்த பிறகு எல்லா சேனல்களிலும் அவர் அறிவிப்பைப் பற்றிய செய்திகளும் அதைச் சார்ந்த விவாதங்களும் தான் ஓடிக்கொண்டிருந்தன.  

நான் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல விரும்பியது புதிய தலைமுறையின் ரங்கராஜ் பாண்டேயின் கருத்தரங்கத்தைப் பற்றி. பிரதமரின் அறிவிப்பின் முக்கியமான பகுதிகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறித்தி சொன்னாலும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விதம் மொத்தத்தில் எதிர்மறையாக இருப்பது போலவே தோன்றியது.

பிரதமரே தன்னுடைய உரையில் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்குவதால் தற்காலிகமாக பல இடைஞ்சல்கள் சாதாரண மக்களுக்கு நேரலாம், இருந்தாலும் பொதுவான நாட்டு நன்மையை உத்தேசித்து மக்கள் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சாதாரண பொது மக்களை நிச்சயம் பாதிக்கும் என்று தெரிந்தும் பொது மக்கள் பாராட்டாத அப்படிப்பட்ட ஒரு முடிவை பொதுவான நாட்டு நலன்களுக்காக – முக்கியமாக இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிய வேண்டும் என்ற நோக்கத்தோடு - துணிந்து மோடி எடுத்திருக்கிறார். ஒரு உண்மையான தலைவர் தன் தொண்டர்கள் விரும்பும், பாராட்டும் முடிவுகளை மட்டும் எடுக்காமல் அவர்களுக்கு எது நல்லதோ அந்த முடிவை அவர்கள் விரும்பாவிட்டாலும் எடுப்பார். அப்படித்தான் மோடியும் செயல்பட்டிருக்கிறார்.

ஆனால், பல்வேறு இடங்களில் தேடித் தேடி மக்களின் பிரச்சினைகளை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது வேண்டுமென்று எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவதற்காகவே காட்டியது போல இருந்தது. அதே போல அடுத்த இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் எல்லோரும் அவதிப்படுவது போலவே மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் கேள்விப்பட்ட வரையிலும் பல இடங்களில் பொது மக்கள் மோடியின் அறிவிப்பை பல கஷ்டங்களிடையே சரியான முறையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  வங்கிகளிலும் எந்தப் பிரச்சினையும் செய்யாமல்  நெடு நேரம் காத்திருந்து வங்கிகளோடு ஒத்துழைத்திருக்கிறார்கள். வங்கியில் பணி புரிபவர்களும் வங்கிக்கு வந்திருந்த எல்லாரையும் நல்ல முறையில் கவனித்து முடிந்த அளவு உதவி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் தொலைக்காட்சியில் காட்டவில்லை. எப்படிக் காட்டுவார்கள்? இந்த தொலைக்காட்சி சேனல்கள் எல்லாமே பல பெரிய பண முதலைகளுக்குச் சொந்தமானதுதானே.

மோடி அரசின் முடிவால் நிச்சயமாக பலருக்கு கஷ்டங்கள் இருந்திருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். மறுக்க முடியாது. ஏனென்றால் எனக்கே கஷ்டம் இருந்திருக்கிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளம் வந்தபோது எவ்வளவு மக்கள் அவஸ்தைப் பட்டார்கள் என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு எங்கேயோ போய் ஒளிந்துகொண்டதை எத்தனை பேர் இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த சமயம் சென்னையை சுற்றி மின்சாரம் கிடையாது. தண்ணீர் கிடையாது. போக்குவரத்து கிடையாது. பால் கிடையாது. எத்தனையோ கஷ்டங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

1991-ல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம் கொடுக்க நமது நாட்டில் அன்னியச் செலவாணி இல்லை. அப்பொழுது இருந்த பிரதமர் சந்திரசேகர் அரசாங்கமும் (ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. வெங்கிடரமணனும்) துணிந்து இந்தியாவிலிருந்த தங்கத்தை இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும் அடகு வைக்க முடிவெடுத்தது நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றியது. ஆனால், தங்கத்தை அடகு வைத்தபோது இதே போலத்தான் நாட்டு மக்கள் (பல அறிவு ஜீவிகள் என்று படிக்கவும்) ‘தங்கத்தை அடகு வைப்பதா?’ என்று கொதித்தெழுந்தனர்.

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு பல இடங்களில் சாதாரண பொதுமக்கள் பீதியடைந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தோன்றியது. பிரதமரின் அறிவிப்பு வந்த உடனேயே எல்லோரும் இரவு ஒன்பது – பத்து மணிக்கு மேல் பெட்ரோல் பங்க்குகளுக்கு கூட்டம் கூட்டமாக விரைந்திருக்கிறார்கள்.  குழந்தைக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் வாங்க முடியவில்லை என்று ஒரு சில தாய்மார்களின் அழுகை. சாப்பாட்டுக்கு கையில் இருக்கும் 500 ரூபாய்த் தாளைப் பயன்படுத்த முடியவில்லை என்று பலருக்கு கோபம், இப்படிப் பலரின் எதிர்மறை வெளிப்பாட்டையே மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளின்  நோக்கமே எதிர்மறையாக இருந்தது போலத் தோன்றியது. பணத்தை பதுக்கி வைத்திருந்த பலர் நகைக் கடைகளுக்கு ஓடி இரவு 12 மணி வரை பல நகைக் கடைகள் திறந்திருந்ததை எந்தச் சேனலும் காட்டியதாகத் தெரியவில்லை. எப்படிக் காட்டுவார்கள்?

பொறுப்புள்ள செய்தி நிறுவனமாக இருந்திருந்தால் பிரதமரின் அறிவிப்பின் நல்ல அம்சங்களை, அதன் நோக்கத்தை, அதனால் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களைப் பற்றி பாசிடிவ்வாகவும் காட்டியிருக்கலாம். என்று எனக்குத் தோன்றியது.

9-ஆம் தேதி புதன் கிழமை காலை 9;15 மணிக்கு பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்வதற்காக கம்யூட்டரை திறந்து வைத்துக்கொண்டு ‘திக் திக்’ என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது படி மார்க்கெட் விழுந்தது. மும்பை பங்குச் சந்தை 1600 புள்ளிகள் விழுந்தது. கம்ப்யூட்டர் திரை முழுவதும் ரண களமாக சிவப்பு  நிறத்தை காட்டிக்கொண்டிருந்தது. வைத்த கண் மாறாமல் ஒரு அரை மணி நேரம் பார்த்திருந்தேன்.  நான் எதிர்பார்த்தது போல பல பங்குகள் மீண்டும் ஏறத் தொடங்கின. 9.15க்கு நான் ஒரு லட்சம் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் அந்த அரை மணி நேரத்தில் 20-லிருந்து 25-ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்திருக்கலாம். என்ன செய்வது 9.15-க்கு அந்த தைரியம் வரவில்லையே!

கம்ப்யூட்டர் திரை இப்பொழுது ND TV-யில் அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிய ப்ரணாய் ராயின் கணிப்பு மற்றும் கருத்தரங்கத்துக்குத் தாவியது. ஹிலாரிக்கும் ட்ரம்புக்கும் இடையே ஓட்டு எண்ணிக்கை இடைவெளி முப்பதுக்கும் மேல் என்ற அளவில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடைவெளி குறையாமல் கூடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ட்ரம்ப் 248 எண்ணைத் தொட்டுவிட்டார். சரி, இனிமேல் மீதமிருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் ஹிலாரி வென்றாலொழிய அதிபர் கனவை அவர் மறந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தால் ட்ரம்ப் 270-இலக்கைத் தாண்டியிருந்தார். அவருடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட பென்ஸ் வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களில் ட்ரம்ப் அவருடைய பரிவாரங்களுடன் (முக்கிய ஆதரவாளர்களும் பின் தொடர) மேடைக்கு வந்து ஒரு ராஜ நடை போட்டார். இந்த முறை அமெரிக்க தேர்தலில் 231 மில்லியன் வாக்காளர்களில் 133 மில்லியன் வாக்காளர்களே (அதாவது 57.6% சதவிகிதம்) தங்கள் ஓட்டை பதிவு செய்திருந்தனர்.  மீதி வாக்காளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன இரண்டு போட்டியாளர்களையும் பிடிக்கவில்லையா? ஓட்டு சதவிகிதம் கூடியிருந்தால் முடிவு எப்படி இருந்திருக்கும்? ஓட்டு பதிவு செய்தவர்களின் விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு. இவ்வளவுக்கும் அங்கே அதிபர் தேர்தலுக்கு சுமார் 46 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தேர்தலுக்கு முன்னேயே பதிவு செய்திருந்தனர்.

நான் எழுதி வெளியிட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வதற்காக இந்த வாரத்தில் ஒரு நாள்  ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு புத்தகத்தின் விலை நூறு ரூபாய் என்று நிச்சயித்திருந்தேன். இந்த ஆண்டு இது வரை சுமார் 15 பள்ளிகளில் என்னுடைய புத்தகத்தை 100 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.  பள்ளி மாணவர்களின் பயனுக்காக வாங்கும்பொழுது சுமார் 30 சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுத்து வருகிறேன். ஆனால், நான் சென்ற பள்ளியின் முதல்வர் என்னுடன் என் புத்தகத்தை வாங்குவதற்கு விலையில் பேரம் பேசினார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் தீர்மானமாக அந்த பள்ளி முதல்வரிடம் கூறினேன், “பள்ளிகளுக்கு என்னுடைய புத்தகத்தை இலவசமாக அன்பளிப்பாக கொடுப்பதில்லை. எல்லா பள்ளிகளிலும் 100 ரூபாய் விலை கொடுத்தே வாங்கிக்கொண்டிருக்கின்றனர். எல்லா முதல்வர்களிடமும் நான் சொல்லியிருக்கிறேன். என் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். என் புத்தகம் உங்கள் எதிர்பார்ப்புக்கு வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என்று. அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.” அப்படிச் சொன்ன பிறகும் அந்த முதல்வர் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் 250 ரூபாய் தருவதாகச் சொல்லிப் பேரம் பேசினார். நான் இறுதியாகச் சொன்னேன், “மன்னிக்க வேண்டும், என்னுடைய புத்தகத்தை விற்பதற்காக நான் பேரம் பேச விரும்பவில்லை,” என்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் அந்தப் பள்ளியை விட்டு வெளியேறி விட்டேன். ஒரு தொழில் வல்லுனரின் புத்தகத்தை வாங்கிக்கொள்வதற்கு இப்படியும் ஒரு பள்ளியில் பேரம் பேசுவார்களா என்று எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு தொழில் வல்லுனருக்குரிய மரியாதையை அவருக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும், அவருடன் பேரம் பேசக்கூடாது என்று நினைப்பவன் நான். யாருடன் கணக்கு வழக்கு நான் வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த நிகழ்வு முன் கூட்டியே காட்டிக் கொடுத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.


                                    …அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்.

Saturday, November 05, 2016

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் எதுவுமில்லை.

சிறு கதைகள் அடங்கிய ஒரு புதிய புத்தகம் தமிழில் எழுத வேண்டும் என்பது இந்த வாரத்தின் தீர்மானம். என் சிறு வயதிலிருந்தே துப்பறியும் கதைகளையும், வீர சாகசங்களைப் பற்றிய கதைகளையும் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, தமிழ்வாணனின் ‘துப்பறியும் சங்கர்லால்’ ஜாவர் சீதாராமனின் ‘உடல், பொருள், ஆனந்தி’, வீர விஜயன் என்ற தொடர் சித்திரக் கதை (எழுதியவர் பெயர் ஞாபகமில்லை). பின்னர் ஆங்கிலத்தில் ஏர்ல் ஸ்டேன்லி கார்டனர் எழுதிய பெரி மேசன் நாவல்கள், ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், சாண்டில்யனின் பல சரித்திரக் கதைகள், கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படி எத்தனையோ கதைப் புத்தகங்களைப் படித்து ‘நானும் இது போல ஒரு கதாசிரியராக முடியுமா’ என்று ஏங்கியது உண்டு. இன்று ஆகியிருக்கிறேன். இது வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், இரண்டு முழு நீளக் கதைப் பத்தகங்களையும், பொது அறிவுக்கான ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

ஆனால், இது வரை நான் எழுதி வெளியிட்டதெல்லாம் ஆங்கிலத்தில்தான். தமிழிலும் என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன். ‘கூட்டணி’ என்ற தலைப்பில் ஒரு முழு நீள கதையை எழுதி வைத்திருக்கிறேன். இதை எழுதி ஒரு பத்து ஆண்டுகளாகியிருக்கும். அரசியலைப் பற்றியது. ஒரு நல்ல நோக்கத்தோடு இரண்டு எதிரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து எழுதியிருக்கிறேன். இதில் பல புதுமையான  நிகழ்வுகள் நடப்பதாகவும் எழுதியிருந்தேன். வெளியிட ஏனோ தைரியம் வரவில்லை. பல சர்ச்சைகளை உண்டாக்கலாம் என்று ஒரு பயம்.  நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்த ஒரு சில பகுதிகள் இன்று உண்மையாகவே நடந்தேறியிருக்கின்றன போலத் தோன்றுகிறது. எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடாமல் இன்று ஒரு எழுத்தாளன் பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. ‘ஏதோ, கற்பனைக் கதை தானே’ என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் விட்டு விடுவதில்லை.

நேற்று அமெரிக்காவில் நடந்ததாக ஒரு செய்தி படித்தேன். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் களம் மிகவும் சூடாகி என்றும் இல்லாத அளவு தனிப்பட்ட முறையில் எதிர்த்து நிற்கும் வேட்பாளரைப் பற்றி கேவலமான பேச்சுக்கள், குற்றச்சாட்டுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதில் கலந்து கொண்ட ராணுவ உடையணிந்த ஒருவர் குடியரசுக் கட்சியின் கொடியைத் தூக்கிப் பிடித்துக் காட்டியிருக்கிறார். உடனேயே கூட்டத்தில் எல்லோரும் அவரைத் திட்டி கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். (நம்மூராக இருந்தால் அவருக்கு உதை விழுந்திருக்கும்) கூட்டத்தில் ஒரே அமளி. ஒபாமாவால் பேச முடியவில்லை.

கோபம் கொண்ட ஒபாமா தன் குரலை எழுப்பி கூட்டத்தை கடிந்துகொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீங்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள். முதலாவதாக, இங்கே குடியரசுக் கட்சியின் கொடியை பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு வயோதிகர். அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்துவிடவில்லை. அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவருடைய வயதுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.

இரண்டாவதாக, நாம் ஒரு சுதந்திர அமெரிக்காவில் வாழ்கிறோம். இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை வெளியிட சுதந்திரம் இருக்கிறது. அந்த முதியவர் தன் கருத்தை ஒரு கொடியைத் தூக்கிக் காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

மூன்றாவதாக அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் அமெரிக்கா நாட்டுக்காக போராடிய வீரர். அவரை நாம் மதிக்க வேண்டும்.

கடைசியாக,  நீங்கள் எல்லோரும் வெறுமனே கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு (ஜனநாயகக் கட்சிக்கு) ஓட்டுப் போடுங்கள்.”

இப்படி ஒபாமா பேசி முடித்த போது பலத்த கரகோஷம். ஒபாமா ஒரு நல்ல தலைவர். அவர் பேசியது போல இங்கே எத்தனை அரசியல்வாதிகளால் பேச முடியும்? அது மட்டுமல்லாமல் சமயோஜிதமாக இக்கட்டான ஒரு சூழ்நிலையை தன் கட்சிக்கு சாதகமாக தன் சகிப்புத் தன்மையை வெளிக்காட்டி மாற்றிக்கொண்டார்.

அதே சமயம், ‘உன்னுடைய சுதந்திரத்தின் எல்லை என் மூக்கு  நுனி வரைதான்’ என்றும் நம்புவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே எவ்வளவு தூரம் நமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம் என்பது எனக்கு புரியாததால் என் கதையை பத்திரமாக சிறையில் அடைத்துவிட்டேன். இன்று நாட்டில், முக்கியமாக, தமிழ் நாட்டில் நடக்கும் பல அவலங்களைப் பார்த்து மனதில் வருத்தப்பட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. வெறும் பார்வையாளனாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு கதைப் புத்தகம். “நான்கு பாதைகள்” என்ற தலைப்பில். இதுவும் எழுதி ஒரு பத்து ஆண்டுகள் இருக்கும். தமிழ் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் அதிகமாக கிடைக்காத நாட்களில் ஒரு நண்பர் கொடுத்த ஏதோ  ஒரு எழுத்தைப் பயன்படுத்தி எழுதி முடித்திருந்தேன். ஆனால், என் கம்ப்யூட்டரை மாற்றிய பின்பு ஏனோ அந்த எழுத்தை பயன்படுத்த முடியவில்லை. இரண்டு, மூன்று கம்ப்யூட்டர்கள் மாற்றியதில் அந்த கதையின் ஃபைல் திறக்க முடியாமற் போயிற்று. கஷ்டப்பட்டு பாதி வரை எழுதி முடித்தது வீணாகப் போய்விட்டது. இன்றும் எனக்கு தமிழ் தட்டெழுத்து தெரியாததால், ‘அழகி’ என்ற ஒரு எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியே எழுதி வருகிறேன்.

இப்பொழுது நான் எழுதத் தொடங்கிய ‘துப்பறியும் சங்கர்’ என்ற சிறு கதைகளின் தொகுப்பு ஒரு பள்ளி மாணவனைப் பற்றியது. சங்கர் ஒரு காவல் அதிகாரியின் மகன். பள்ளியில் படிக்கும்  நாட்களிலேயே துப்புத் துலக்குவது அவனது பொழுதுபோக்கு. இதை மையமாகக் கொண்டு என்னுடைய முதல் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் ஒரு துப்பறியும் கதை எழுதியிருந்தேன். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைப் போன்று தமிழிலும் தொடரலாமே என்ற நினைப்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். எழுதி முடிக்க நேரமாகலாம். அவ்வப்பொழுது எனது இணையதளத்தில் வெளியிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.  நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தால்தான் என்னுடைய எழுத்துக்களை அவ்வப்பொழுது சரி  செய்துகொள்ளவும் முடியும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம்.