Total Pageviews

Sunday, September 25, 2016

Our trip to Munnar - 22nd to 24th September 2016

I like traveling and sightseeing, a lot. Sometimes, I am obsessed with them. It annoys my wife, yet she had always put up with me and had given me a company. Commencing the 19th instant, my Kerala tour took me to Thiruvananthapuram to attend a relative’s 80th birthday, to Kottayam Thirunakkara Temple, to Ettumanoor, Kaduthuruthi, and Vaikom on the way to Ernakulam, and to Kalady from Ernakulam on the way to Munnar. After spending a day and a half at Munnar, I drove back to Tenkasi, via Theni on 24th.

We could reach Munnar only by around 2.00 PM on 22nd, driving from Ernakulam after stopping over at Kalady. The first day at Munnar was a bit disappointing when we went to see Rajamala and Iravikulam National Forest. They took us by a bus up to a point, from where one had to walk a kilometer. I couldn’t spot any wild animal on the trek. One could get a close view of the South India’s highest peak, Anamudi (2695 meters above MSL). Unlike Dhottapetta, where one could drive all the way up the hill, here at Anamudi, the peak stood as a solid rock at some distance.

The second-day drive on the Mattupatty direction was much more enjoyable. We stopped over at the Flower Garden, Photo Point (Tea Garden), Mattupatti Dam, Echo point and Top Station View Point. There used to be a ropeway from the Top Station down the hill for transporting tea consignments. One had to climb down, through the steps, some 125 meters to a View Point. We went only to the first stopover, skipping the other two as the climb-down and climb-up were quite steep.

On the third day morning, around 9.00 am we left Munnar in the Thekkady direction. This was, in my view, the most beautiful part of sightseeing in Munnar. We stopped at several places, the last being the Anaiyirankal Dam View Point. Thereafter, we drove up to Poo Parai, from where we took the detour to Theni, the other road leading to Thekkady. We could have as well gone to Thekkady, but called off any idea, hoping to reach Tenkasi, in time to see the Garuda Seva at the nearby Melapavoor during the night.

We thank Sri Amma Bhagavan for a wonderful trip and drive through Kerala. By and large, the roads were excellent, especially, the one from Munnar to Theni to Tenkasi.





















Here are some of the pictures taken during our trip to Munnar.

Tuesday, September 13, 2016

உணவு உற்பத்தியைப் பற்றி

14.09.2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் “ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி – 13” என்ற ஒரு கட்டுரைத் தொடரின் அந்த வாரப் பகுதியைப் படிக்க நேர்ந்தது. அடிப்படையில், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இன்றைய உணவுப் பொருட்களின் நச்சுத் தன்மையைப் பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஆனால், கட்டுரையை தந்திருக்கும் விதத்தைப் பற்றியும், அதில் கண்ட சில குறிப்பிட்ட கருத்துரைகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்ததில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் தோன்றின. அவற்றைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சி என்பது மனிதனின் அறிவு வளர்ச்சி. ஒவ்வொரு பொருளைப் பற்றியும் மனிதனின் அறிவு வளர வளர விஞ்ஞானம் வளர்வதாகக் கொள்கிறோம். அல்லது அறிவியல் வளர்ச்சி என்கிறோம்.
அறிவியல் வளர்ச்சி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது. அது எப்படி வேண்டுமானாலும் இயங்கலாம். அதைப் பயன்படுத்துபவர்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பற்றாக்குறைதான் தென்பட்டது. உணவுப் பண்டங்கள், எரிபொருட்கள், தண்ணீர், பால், மருந்து வகைகள், வேலை வாய்ப்புகள், இப்படி எதை எடுத்தாலும் தட்டுப்பாடுதான். பள்ளி நாட்களில் நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன். உணவு விடுதிகளைக் கூட வாரத்தில் ஒரு நாள் மூடி விடுவார்கள். எல்லாவற்றிற்கும் ரேஷன் கடைக்கு அலைய வேண்டியிருக்கும். ரேஷன் கொடுக்கும் தினத்தில் வீட்டிலுள்ள பெண்மணிகளுக்கும், வயதானவர்களுக்கும் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. ரேஷன் கடைகளில் அவ்வளவு கூட்டம் இருக்கும்.
மக்கள் தொகையோ பெருகிக்கொண்டே இருந்தது. குடும்பக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. தொத்து வியாதி என்பது சர்வ சகஜம். காலரா, வாந்தி பேதி, சிற்றம்மைக்கு பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. அரசாங்கத்திடமோ நிதி வசதி குறைவு. ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. பல நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கிறோம். அங்கே உண்ண முடியாத உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்து பொது மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்திருக்கிறோம். பசி, பட்டினி என்பது ரொம்ப சர்வ சாதாரணம். எல்லா ஊர்களிலும் எந்த பொது இடங்களிலும் நூற்றுக் கணக்கான ஏழைகள் பிச்சை எடுக்கும் அவலத்தைப் பார்த்திருக்கிறோம். ஏழ்மை தலைவிரித்தாடியிருக்கிறது.
முக்கியமாக, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மிகப் பெரிய பூதாகரமான பிரச்சினையாக இருந்தது. பட்டினியை விரட்டியடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசாங்கம் இருந்தது. உணவு உற்பத்தியை பெருக்கியே ஆக வேண்டும் என்ற நிலை. ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் பயிரில் கால் பங்குகூட நமது நிலத்தில் விளையவில்லை. வளர்ந்த நாடுகளில் மாடுகள் கொடுக்கும் பாலில் மிகச் சிறிய பங்கையே நமது மாடுகள் கொடுத்து வந்தன. மாடுகளையும், ஏரையும், சாணியையும் மட்டுமே நம்பியிருந்த நம்மால் எல்லா மக்களுக்கும் தேவையான அளவு உணவையோ பாலையோ கொடுக்க முடியவில்லை.
இயற்கை தானாக படைத்த  உணவை மட்டும் மனிதன் சாப்பிட்டு வந்த காலம் என்றோ மறைந்துவிட்டது. ஆதி காலத்தில் மனிதன் வெறும் வேட்டைக்காரனாகத்தான் இருந்தான். ஆனால், அவனது அறிவும், விழிப்புணர்வும் வளர்ந்து விவசாயம் செய்யக் கற்றுக்கொண்ட போது, காட்டை அழித்துதான் உணவை உற்பத்தி செய்ய முடிந்தது. உணவு படைக்கப்பட்ட காலம் போய் உற்பத்தி செய்யும் காலம் அப்பொழுதே தோன்றி விட்டது.
உணவு உற்பத்தியை பெருக்க காலம் காலமாக மனிதன் பல வழிகளில் முயன்று இருக்கிறான். 17-18-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொழில் நுட்பம் வெகு வேகமாக வளரத்தொடங்கிய போது பல புதிய இயந்திரங்கள், வேதிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயத்தில் உற்பத்தி பெருகத் தொடங்கியது.  ஒரு நிலப் பகுதியின் அடிப்படை வேதியத் தன்மையை அறிவியல் மூலமாகத் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல இயந்திரங்களையும் வேதிப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்த கண்டுபிடிப்புகள் நம் நாட்டுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்ந்தன. பழமையில் ஊறியிருந்த மக்கள் தொடக்கத்தில் இந்த மாற்றங்களை ஏற்க பல ஆண்டுகள் பிடித்தது. பஞ்சாப், ஹரியானா போன்ற ஒன்றிரண்டு மானிலங்கள் மட்டும் நவீன விவசாய முறைகளை துணிச்சலுடன் முயற்சி செய்து பார்த்து வெற்றி கண்டனர். பசுமைப் புரட்சி துவங்கியது. உணவுத் தட்டுப்பாடு குறையத் தொடங்கியது.
அதே நேரத்தில் குஜராத்தில் ஆனந்த் என்ற ஊரில் பால் உற்பத்தியை கூட்டுறவு முறையில் பெருக்கி வினியோகம் செய்யும் முறையை குரியன் என்பவர் துணிச்சலுடன் அறிமுகம் செய்து வெற்றி கண்டார். வெண்மைப் புரட்சியும் துவங்கியது.  எந்நேரத்திலும் பால்  கிடைக்கத் தொடங்கியது.
இந்த முன்னேற்றங்கள் எல்லாவற்றிலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருந்தன. விஷயம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். இருந்தும், உற்பத்தி பெருக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது நம் நாடு. எவ்வளவு காலம்தான் மற்ற நாடுகளின் கதவுகளைப் போய் தட்டிக்கொண்டிருப்பது. அதுவும் ஒரு வகையில் யாசகம் தானே!
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டத்தில் சில இக்கட்டான சூழ்னிலையில் சிக்கித் தவிக்கும்பொழுது எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் பலவாறாக இருக்கும். அதன் நன்மை தீமைகளை நாம் அனுபவித்தேயாக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
விவசாயத்தில் மட்டும்தானா நச்சுத்தன்மை கூடி விட்டது?  எல்லாவற்றிற்கும் வியாபாரிகளைப் பழிப்பானேன்?
விகடனில் இந்தக் கட்டுரையை எழுதியவர் பழங்காலம் போல நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோவா ஒவ்வொரு இடத்துக்கும் செல்கிறார். வாகனங்கள் எவ்வளவு பெருகி விட்டன. எவ்வளவு கரியமில வாயுவை நாம் உட்கொள்கிறோம்!
பேனா கொண்டு மரங்களை அழித்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கை வலிக்க இன்று எத்தனை பேர் எழுதுகிறார்கள். ஒரு கணினியிலோ, அல்லது மடிக் கணினியிலோ அல்லது அலை பேசியிலோதானே எதையும் எழுதுகிறோம் அல்லது குறித்துக்கொள்கிறோம். பயன்படுத்த முடியாத லட்சக் கணக்கான கணினிகளை தூக்கி விட்டெறிந்து விடுகிறோம். அதில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் அடங்கிய எண்ணற்ற உதிரிப் பாகங்கள் எவ்வளவு கேடு விளைவிக்கக் கூடும் என்பதை நாம் எங்கே முழுவதுமாக புரிந்து கொண்டிருக்கிறோம்?
ஆஹா, விண்வெளியை வென்றுவிட்டோம் என்று பீத்திக்கொள்கிறோம். இப்பொழுது நம் பூமியில் பல கழிவுகளை அழிக்க முடியாமல் திண்டாடுவதைப் போல இன்று விண்வெளியில் ஆயிரக்கணக்கான விண்கலங்கள் வெடித்துச் சிதறியோ அல்லது பயனற்றுப் போயோ வானத்தில் கழிவாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவைகளால் எவ்வளவு கேடு வரக்கூடும் என்று நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்காக விமானத்தில் பறக்காமல் இருக்க முடியுமா அல்லது செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பாமல்தான் இருக்க முடியுமா?
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மக்கள் நடத்தினார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால் எல்லோரும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள் என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றே நினைக்கிறேன். ஆரோக்கியமாக இருந்திருந்தால் ஏன் அவர்களது சராசரி ஆயுட்காலம் 50-60 வயதோடு நின்று விட்டது? இன்று இந்தியாவில் ஒரு நபரின்  சராசரி வயது 60-70க்கு மேல். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோருக்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய பென்ஷன் பணத்துக்கு அரசாங்கத்திடம் நிதி வசதியில்லை என்று செய்தி வந்தது. அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரம்பு அங்கே கூட்டப்பட்டது. அந்த நிலை இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் நம நாட்டுக்கும் வரலாம். அப்பொழுது என்ன செய்வது? சராசரி வயதைக் குறைக்க முடியுமா?
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிவியலின் முன்னேற்றத்தை தடுத்து  நிறுத்த முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. முன்னைவிட இன்னும் வேகமாகத்தான் முன்னேறிக்கொண்டிருக்கும். பின்  நோக்கிச் செல்வது ஒரு தீர்வாக முடியாது. முறையாக இன்னும் ஆராய்ச்சி செய்து இந்த அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் நச்சுத்தன்மையை எப்படிப் போக்குவது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் தீர்வாக முடியும். உதாரணத்துக்கு, மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் எரிபொருளை சேமிப்பதற்கு இன்னும் அதி தீவிரமாக ஆராய்ச்சி செய்து இயற்கையாக கிடைக்கும் காற்றிலிருந்து, கடல் அலைகளிலிருந்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று கண்டு பிடிக்கலாம். அதற்காக, எல்லோரும் பழங்காலம் போல வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுங்கள் என்று கூற முடியாது.
ஒரு நதியின் ஓட்டத்தை நாம் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது. அப்படிச் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அறிவியல் வளர்ச்சியும் அப்படித்தான்.


Sunday, September 11, 2016

5. லடாக் சுற்றுப் பயணம் – 5/6-ஆம் நாள் – பேங்காங் ஏரிக்கு விஜயம்

ஆகஸ்டு 11, 2016

எங்கள் லடாக் சுற்றுலாவின் 5-ஆம் நாள் காலையில் பேங்காங் ஏரிக்கு செல்வதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.  

லே ஊரிலிருந்து சுமார் 180 கி. மீ தொலைவில் 14270 அடி உயரத்தில் உப்புத் தண்ணீரைக் கொண்ட பேங்காங் ஏரி அமைந்திருக்கிறது. சுமார் 134 கி. மீ நீளமுள்ள இந்த ஏரியின் 20 கி. மீ தூரம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏரியின் ஒரு பகுதி திபெத் நாட்டுக்குள் வருகிறது.  சூரிய ஒளி பட்டு இந்த ஏரியின் நீர்  நீல நிறமாக அழகாகத் தோற்றமளிக்கிறது. உப்புத் தண்ணீரை கொண்டதாக இருந்தும் குளிர் காலத்தில் இந்த ஏரியின் நீர் முழுவதுமாக உறைந்துவிடுகிறது என்று கேள்விப்பட்டோம்.
உலகிலேயே மிக அதிக உயரத்தில் வாகனங்கள் செல்ல வசதியுள்ள பாதைகளின் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் சேங் லா (கணவாய்) 17688 அடி உயரத்தில் இந்த ஏரிக்குப் போகும் பாதையில் இருக்கிறது.  இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான இந்திய எல்லைப் பாதைகள் அமைக்கும் நிறுவனம் (INDIAN BORDER ROAD ORGANIZATION) இந்த பகுதிகளில் பாதைகளை அமைத்து சிறப்பாக பராமரித்தும் பாதுகாத்தும் வருகிறது.  பதட்டம் ஏற்படக்கூடிய இந்தியா – சீனா எல்லைப் பகுதி என்பதால் இந்திய ராணுவத்தினரை பல இடங்களிலும் காணலாம். பேங்காங் ஏரிக்கருகேயுள்ள இடங்களில் பல திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாகப் பேசப்படுவை ஆமீர்கான் நடித்த “3 இடியட்ஸ்” மற்றும் மணிரத்தினத்தின் ‘தில் ஸே” படங்கள். இந்த ஏரியை சுற்றியுள்ள மலைப் பகுதிகள் பல காட்டு மிருகங்கள் வசிக்கும் இடமாக இருக்கின்றன.

லே ஊரிலிருந்து  கிளம்பி அமைதியான சிந்து நதியின் கரையோரமாகவே கொஞ்ச தூரம் செல்ல வேண்டும்.
காரு என்ற இடத்தில் கட்டாந்தரை மலைகளுக்கு நடுவே அழகான, பசுமையான ‘சக்தி’ என்ற ஊர். காரு ஊரைத் தாண்டினால் சேங் லா வரை செங்குத்தாக மலையேற வேண்டும்.
பனிப்பாறைகளின் (AVALANCHE) சரிவு ஏற்படக்கூடிய குறுகிய பாதைகள் வழியாக காரை ஓட்டிக்கொண்டு செல்வது திகிலூட்டும் அனுபவம்.  பேங்காங் செல்லும் வழியில் பெரும்பாலான பகுதிகளில்  பாதை மிகச் சீராகவே இருந்தது. சின்னச் சின்ன மலை ஓடைகளைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. அந்த இடங்களில் ஏன் சிறிய பாலங்கள்  நம்மால் அமைக்க முடிவதில்லை என்பது எனக்குள் அடிக்கடி ஏற்படும் கேள்வி. சேங் லா தாண்டிவிட்டால் பேங்காங் ஏரி வரை ஒரே இறக்கம்தான். வழுக்கிக்கொண்டே போகவேண்டியதுதான். காரின் ப்ரேக் பக்காவாக இருக்க வேண்டும்.


போகும் வழியில் கழிப்பறைகளைக் காண்பது அரிது.  இருக்கும் ஒன்றிரண்டு பொதுக் கழிப்பிடங்களும் சரியான பராமரிப்பு இல்லாமல் மிகவும் அசிங்கமாகவே காணப்பட்டன.  சுற்றுப் பயணம் செய்யும் பெண்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்.

துர்புக் என்ற ஊரில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமாரான உணவை அளவோடு சாப்பிட்டு வயிற்றை ஓரளவு நிரப்பிக்கொண்டோம்.

போகும் வழியில் எல்லா இடங்களிலும் “ஜூலே” என்ற வாசகம் கொண்ட பலகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. “ஜூலே” என்றால் திபெத் மொழியில் ‘வணக்கம்’ என்று அர்த்தம் என்று ஓட்டுனர் கூறினார்.  நாங்களும் விளையாட்டாக எதிரே சந்தித்த பல வண்டிகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு ‘ஜூலே, ஜூலே” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டே ஜாலியாகச் சென்றோம்.  

பேங்காங் ஏரிக்குச் சென்றடையும் முன்னே சற்று தூரத்தில் அழகான ஒரு வெட்டவெளி பள்ளத்தாக்கில் எங்கள் வண்டியை நிறுத்தினோம். நான்கு பக்கங்களிலும் மலை.
ஒரு பக்கத்தில் அழகிய ஒரு சிறு நதி. சிறிதும் பெரிதுமாக பல பாறைகள். தேனீர் அருந்துவதற்கு ஒரு கூடாரக் கடை. ரம்மியமான இடம். சொர்க்க லோகமே கீழிறங்கி வந்தது போல இருந்தது.
சிறிது நேரம் அங்கேயே நின்று பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏரியை நோக்கி காரை செலுத்தினோம். மலையுச்சியிலிருந்து ஏரிக்கு இறங்கும் கடைசி இறக்கத்திலிருந்து நீல நிற ஏரியைப் பார்க்க முடிந்தது.
குறுகிய பாதையானதினால்  காரை நிறுத்தி புகைப்படம் எடுக்க முடியவில்லை.  


ஏரியை சென்றடைந்தபோது பலத்த சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருந்தது. ஏரிக் கரையின் மேடான பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் பல உணவு விடுதிகள். தேனீர் விற்கும் கடைகள். எல்லா கடைகளுமே தாங்கள்தான் “3 இடியட்ஸ்” படத்தின் ஏகபோக உரிமையாளர்கள் போல தங்கள் கடைகளை பற்றி விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேகமாக அடித்த காற்றில் கூடாரங்கள் எங்கே பறந்துவிடுமோ என்று எனக்கு பயம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

காற்றைத் தொடர்ந்து மழையும் வந்துவிட்டால் ஏரியில் பொழுதைக் கழிக்க முடியாது என்று பயந்து ஏரியை நோக்கி ஓடினோம்.  ஏரிக்கருகே ஒரு பலகையில் கரீனா கபூர் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருந்தாள்.  


ஏரிக்கரை இன்னொரு சொர்க்க லோகம் போலத் தோற்றமளித்தது. வெறும் வார்த்தைகளில் என்னதான் வர்ணித்தாலும் நேரில்  பார்ப்பது போல இருக்காது. அதனால் வர்ணிக்காமலே விட்டு விடுகிறேன். நாங்கள் பயந்தபடியே பலமாக மழை பிடித்துக்கொண்டது. கூடாரக் கடைகளுக்கு திரும்ப ஓடி வந்தோம். ஆனால், வெகு நேரம் மழை பெய்யவில்லை. சிறிது நேரத்திலேயே அடங்கிவிட்டது.  சூரியன் மீண்டும் பிரகாசமாக ஜொலித்தான்.

சாகச வீர பல இளைஞர்களும் இளைஞிகளும் (நூப்ரா பள்ளத்தாக்கு போலவே இங்கும்) மோட்டர் பைக் ஓட்டிக்கொண்டே லே ஊரிலிருந்து வந்திருந்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு “3 இடியட்ஸ்” படமாக்கப்பட்ட இடத்திற்கு யாசீன் ஓட்டுனர் எங்களை காரில் அழைத்துச் சென்றார். போவதற்குப் பாதையென்று சொல்லிக்கொள்ளும் படியாக எதுவுமில்லை. கூழாங்கற்கள் நிறைந்திருந்த, மேடும் பள்ளமுமாக அமைந்திருந்த வெட்டவெளிப் பாதை வழியே பல சிறிய நீரோடைகளுக்கூடேயே போக வேண்டியிருந்தது. எங்கேனும் கார் நின்று விட்டாலோ, டயர் பங்க்சர் ஆனாலோ என்னாவது என்று உள்ளூரக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மீண்டும் மழை வேறு பிடித்துக்கொண்டது. “3 இடியட்ஸ்” படமாக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். எங்களிடன் மழைக்கான  மேலுடை எதுவுமில்லாததால் நானும் என் மனைவியும் காரை விட்டு கீழிறங்கவில்லை. காரின் கண்ணாடி வழியே பார்ப்பதற்கு அந்த இடம் மிகவும் அழகாக இருந்தது.  

அங்கிருந்து மீண்டும் ஏரிக் கரையோரமாகவே இன்னொரு கரடு முரடான வெளியில் காரை ஓட்டிச் சென்று  நாங்கள் தங்கவேண்டிய கூடார விடுதியைச் சென்றடைந்தோம்.

ஆம், அன்று இரவு எங்களுக்கு கூடார வாசம்தான்.  ஏரிக்கரையிலேயே  நிறுவப்பட்ட கூடாரங்களையே விடுதி அறைகளாகக் கொண்ட பல விடுதிகள் அங்கே இயங்கிக்கொண்டிருந்தன.  சிமெண்டால் கட்டப்பட்ட ஒரே ஒரு அறை மட்டும்  உணவுக்கூடமாக செயல்பட்டு வந்தது. பல கூடாரங்களில் அதுவுமில்லை.  கூடாரங்கள் பார்ப்பதற்கு அழகாகவும், சுத்தமாகவும், மிகவும் நேர்த்தியாகவும் காணப்பட்டன. எளிதில் அணுக முடியாத தொலை தூரத்தில் இவ்வளவு வசதியுடன் கூடாரங்கள் அமைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியது.

நாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய பைகளை கூடாரத்தில் வைத்துவிட்டு வெளியே வந்தபொழுது எதிரே ஏரிக்கு மேலே மலைகளுக்கு முன்னே இரண்டு பிரம்மாண்டமான முழு வானவில்கள் தோன்றியிருப்பதைக் கண்டோம்.  
 நகர்புறங்களில் வெறும் கான்க்ரீட் கூரைகளையும் அழுக்கான பகுதிகளையுமே பொதுவாகப் பார்த்துப் பழகிய எங்களுக்கு இயற்கையான, பரந்த வெட்ட வெளியில் மிதமான குளிரில், ஏரிக்கருகே வானவில் நிறைந்து காணப்பட்ட வானத்தையும், சூரிய வெளிச்சத்தில் வண்ண வண்ணமாய் மின்னிய ஏரியின் நீரையும், ஏரிக்கு பின்னால் உயர்ந்து நிற்கும் மலைகளையும் இன்னொரு புறத்தில் மலையுச்சியில் இன்னும் உருகாத பனி உச்சிகளையும் பார்த்து மயங்கி நிற்கையில் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் என்று இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டோம்.


மேடான பகுதியில் அமைந்திருந்த கூடாரத்திலிருந்து கீழே ஏரிக்குச் செல்வதற்கு சரியான பாதையெதுவுமில்லை. அதனால், கொஞ்சம் அங்குமிங்குமாக தாவித் தாவி, தாண்டித் சென்று ஏரியை அடைந்தோம். அங்கே இன்னும் பல சுற்றுலா பயணிகள் நீருக்கருகே விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஏரியின் நீர் ஜில்லென்று இருந்தது.
  

இரவு உணவு பிரமாதமாக இருந்தது. வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் தேவையான உணவுப் பொருட்கள் வந்து சேருமாம். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அருமையான சூப், பருப்புக் குழம்பு, காய்கறிகள், சப்பாத்தி, அப்பளம், இனிப்புப் பண்டம், பச்சைக் காய்களில் ‘சலாட்’ என்று அசத்தினார்கள்.

மின்சார வசதியில்லாத  இடம். அதனால் ஜெனரேட்டர் கொண்டே கூடாரங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.  இரவு பதினொன்று மணிக்கெல்லாம் ஜெனரேட்டரை நிறுத்திவிட்டதால் எங்கும் இருட்டுதான்.
இருந்தும் நன்கு சாப்பிட்டுவிட்டு இரவு நன்றாகத் தூங்கினோம். ஏரிக்கருகே இருந்தும் அந்த உயரத்தில் அதிக குளிரில்லாதது எங்களுக்கு  நிம்மதியாக இருந்தது.  

வழக்கம் போல் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது.  கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன்.



சூரியன் ஏற்கெனவே வானத்தில் தோன்றியிருந்தான். ரம்மியமான, மனதுக்கு இதமான, அமைதியான, மிகவும் அழகான சூழ்னிலை. ஏரியின் நீர் சூரிய ஒளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. மீண்டும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.   உணவுக் கூடத்தை நோக்கி நடந்தேன். சூடான தேனீர் தயாராக இருந்தது. குளிப்பதற்கு வென்னீர்கூட ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடாரத்தில் குழாயில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. சூடான, அருமையான பூரி, ஸப்ஜி காலை உணவாகக் கொடுத்தார்கள்.  அங்கேயே இருந்துவிடலாம் போலத்தான் இருந்தது.


பேங்காங் ஏரியையும் அதை சுற்றியிருந்த இடத்தையும் விட்டு கிளம்புவதற்கு மனதேயில்லை. திரும்பி வரும் வழியில் பல இடங்களில் காரை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.




காட்டில் வாழும் காட்டெருமை, மர்மோட், மலையாடுகள் போன்ற ஒரு சில காட்டு மிருகங்களையும் பார்த்தோம்.
சேங் லா-வில் ராணுவ வாகனங்களின் மிகப் பெரிய  அணி வகுப்பு கீழே இறங்குவதற்குக் காத்துக்கொண்டிருந்தது. மடமடவென்று அவர்கள் கீழே இறங்கும் முன்னே நாங்கள் முந்திக்கொண்டோம். வழியில் லே எல்லையில் ஒரு பஞ்சாபி ஹோட்டலில் சுவையான பரோட்டாவை உண்டுவிட்டு எங்கள் அறைக்கு வந்து மதியம் நன்றாகத் தூங்கினோம்.


மாலையில் மார்க்கெட்டில் இன்னொரு பஞ்சாபி ஹோட்டலில் அருமையான மசாலா போட்ட தேனீர் குடித்தோம்.  மீண்டும் கடை கடையாக என்ன கிடைக்கிறது என்று வேடிக்கை பார்த்தோம். வழக்கம் போல இரவு உணவும் மிகவும் சுவையாக இருந்தது. அடுத்த நாள் மிக தொலை தூரத்துக்கு போகும் திட்டம் எதுவுமில்லையென்பதால் அன்று நன்றாகவே வயிறு முட்ட உண்டு, நன்கு தூங்கினோம்.                                               
மன்னிக்கவும். இன்னும் ஒரு கடைசிப் பகுதிக்கு காத்திருக்கவும்.






Sunday, September 04, 2016

4. லடாக் சுற்றுப் பயணத்தின் 3 மற்றும் 4-ஆம் நாள். நூப்ரா பள்ளத்தாக்குக்கு விஜயம்

09.08.16

இன்று நூப்ரா பள்ளத்தாக்குக்கு போவதாகத் திட்டம்

இமயமலையின் லடாக் மற்றும் கரக்கோரம் மலையுச்சிகளைப் பிரிக்கும் நூப்ரா பள்ளத்தாக்கு லே நகரத்திலிருந்து சுமார் 150 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. சிந்து நதியின் ஒரு கிளையான ஷியோக் நதியும் சியாச்சென் நதியும் சங்கமிக்குமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10000 அடி உயரத்தில் இந்தப் பள்ளத்தாக்கு உருவாகியிருக்கிறது. லே-யிலிருந்து இந்த இடத்துக்குப் போவதற்கு 18000 அடி உயரத்தில் உலகிலேயே மிக அதிக உயரத்தில் மோட்டர் வாகனங்கள் செல்ல வசதியுள்ள கார்டங் லா கணவாய் வழியாகச் செல்ல வேண்டும்.  லா என்ற வார்த்தை திபெத் மொழியில் கணவாயைக் (PASS) குறிக்கிறது.






டிஸ்கிட் இந்தப் பள்ளத்தாக்கின் முக்கியமான ஊர். இங்கிருந்து சற்று தூரத்தில் பல மைல்கள் நீளமான ஹண்டர் மணல் மேடுகள் (SAND DUNES) அமைந்துள்ளன.   இந்த ஒட்டகத்தின் மீது மணல் மேடுகளில் சவாரி செய்வதற்கு கால் மணி நேரத்துக்கு இருநூறு ரூபாய் வாங்குகிறார்கள்.  




முதுகில் இரண்டு முண்டுகள் கூடிய பாக்ட்ரியன் ஒட்டகங்கள் (BACTRIAN CAMEL) இங்கு பிரபலம். 


கார்டங் லா வழியாக நூப்ரா பள்ளத்தாக்கு வரை காரை ஓட்டிச் செல்லும் வழியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மலையடங்கிய நிலப்பரப்பில் ஏற்பட்ட பல நில அழுத்தங்களால் உண்டான செங்குத்தான இடுங்கிய பள்ளத்தாக்குகளை (CANYON) பார்த்துக்கொண்டே செல்வது மயிர்கூச்செரியும் அனுபவம்.

தூரத்தில் ஷியோக் நதி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இவற்றை பார்க்கும் பொழுது அமெரிக்காவில் அரிசோனா மானிலத்தில் இருக்கும் ‘கிரான்டு கேன்யான்’ (GRAND CANYON) இடுங்கிய பள்ளத்தாக்கும் கோலராடோ (COLARADO) நதியும்தான் ஞாபத்துக்கு வந்தது.  

டிஸ்கிட் ஊரில் ஒரு மலையுச்சியில் ப்ரம்மாண்டமாக ஒரு புத்த விஹாரம் அமைந்திருக்கிறது. அதன் மேல் சுமார் 100-அடி உயரமுள்ள மைத்ரேயரின் உருவச்சிலை. வெகு தூரத்தில் வரும்பொழுதே இந்த விஹாரமும் மைத்ரேயரின் உருவச்சிலையும் கண்ணுக்குத் தெரிகிறது.    அருகிலுள்ள பனாமிக் என்ற இன்னொரு இடத்தில் ஒரு வென்னீர் ஊற்று (HOT SPRING) இருக்கிறது. நேரப் பற்றாக்குறையினால் எங்களுக்கு அங்கே போக முடியவில்லை.  கில்ஜித்-பால்டிஸ்தான் என்ற இடத்தில் ஷியோக் நதியையொட்டி இந்திய-பாக்கிஸ்தான் எல்லை மிக அருகில் இருக்கிறது.  

லே-யிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் பாதை ஒரு 25-30 கி.மீ தூரத்துக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பாதை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த 25-30 கி. மீ தூரம் பயணம் செல்பவர்களின் முதுகை சரியாகப் பதம் பார்த்துவிடுகிறது. மற்றபடி இந்தப் பாதை மிக  நன்றாகவே இருந்தது.  பல இளைஞர்களும் இளைஞ்ஞிகளும் மோட்டர் பைக் ஓட்டிக்கொண்டு இந்தப் பள்ளத்தாக்குக்கு வருகிறார்கள்.

நதிக்கரையோரத்தில் மிகக் குறைந்த வசதிகளே கொண்ட ஒரு கூடாரத்தில்தான் அன்று தங்கவேண்டும்.  இப்படிப் பல கூடாரங்களை அமைத்தே ஒரு சில விடுதிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.



கூடாரத்தில் இரவைக் கழிப்பது என்பது இதுவரை வாழ்க்கையில் நாங்கள் அனுபவிக்காத ஒன்று. மிகவும் எதிர்பார்ப்புடனும் மனக் கிளர்ச்சியுடனும் ‘HIMALAYAN DESERT CAMP’  என்ற அந்த ஹோட்டலை அடைந்தோம்.  ஹோட்டலை அடைந்து அந்தக் கூடாரங்களையும், அவற்றின் எடுப்பான அமைப்பையும், உள்ளே நேர்த்தியான வசதிகளையும் பார்த்தபொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.   கூடாரம் அமைந்திருந்த திறந்த வெட்டவெளி, தூரத்தில் கொஞ்சமாகத் தெரிந்த நதி, ஒரு சில பறவைகளின் பாட்டுக்களைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்காத அமைதி, இதமான குளிர், வில் அம்பு எரியும் வீர சாகச விளையாட்டுக்களுக்கு (ARCHERY) வசதி, கால் பந்து மைதானம், டேபிள் டென்னிஸ் விளையாட உள்ளரங்கம், வரிசையாக அமைந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கூடாரங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அருமையான இரவு உணவு எல்லாமே மிக அம்சமாக எங்களை அசத்தியது. இரவு 9 மணிக்கு அங்குமிங்குமாக வானத்தில் காணப்பட்ட ஒரு சில நட்சத்திரக் கூரைக்கு அடியில் திறந்த வெளியில் மரக்கட்டைகளை எரித்து (CAMP FIRE) அதைச் சுற்றி சுற்றுப் பயணிகள் அமர்ந்திருக்க இருவர் கிடார் இசைக்கருவியுடன் பாட ஆரம்பிக்க…ஆஹா, சொர்க்கமே பூமிக்கு வந்துவிட்டது போல இருந்தது. கண்காணாத, எளிதில் சென்று வர முடியாத ஒரு அத்வானக் காட்டில் இவ்வளவு வசதிகளா என்று ஆச்சரியப்படோம். 

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் சற்று கூடுதல் வசதிகொண்ட ‘LUXURY’ வகை கூடாரம் ஒதுக்கப்பட்டது.

நூப்ராவில் கூடாரத்தில் தங்கியது மிக இனிமையான, புதுமையான அனுபவம். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கே தங்க மாட்டோமா என்று ஒரு ஏக்கம் மனதில் ஏற்பட்டது. தொலைபேசியில்லை. அலைபேசியில்லை. இயற்கையான சூழ்னிலை. மிதமான குளிர். மனதை சாந்தப்படுத்த அருமையான இடம்.  மேல்நாட்டுக்காரர்கள் பலர் இங்கேயே ஒரு சில நாட்கள் தங்கியிருந்து பல மலைப் பகுதிகளுக்கு நடந்தே (TREKKING) சென்று வருகிறார்கள்.   நேரத்தை  நிதானமாக,  மெதுவாக ஓட்டுகிறார்கள். விசாரித்துப் பார்த்ததில் ஒரு நாளைக்கான கூடார வாடகை சுமார் 8000 ரூபாய் மட்டுமே. ‘ஆம் ஆத்மி’களுக்கு கண்டிப்பாக சரிப்பட்டு வராது.


 ‘அங்கேயே இருக்க முடியவில்லையே’ என்ற மன வருத்தத்துடன் அடுத்த நாள் காலை டிஸ்கிட் புத்த விஹாரத்துக்குச் சென்று விட்டு நூப்ரா பள்ளத்தாக்கை விட்டுக் கிளம்பினோம்.




லே திரும்பி வந்த பிறகு ஒரு நாள் முழுவதும் எனக்கு முதுகு வலி. இருந்தும் நூப்ரா அனுபவம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் முதுகு வலியை அதிகமாக பொருட்படுத்தவில்லை.

அதைத் தவிர, அடுத்த நாள் நாங்கள் மிக அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த பேங்காங் ஏரிக்கு செல்லவேண்டும் என்ற உணர்வுடன் அருமையான இரவு உணவை அளவோடு உண்டு தூங்கச் சென்று விட்டோம்.