Total Pageviews

Monday, May 29, 2017

28.05.17 ஓடி ஓடி தியேட்டருக்குப் போய் பார்த்த படம்

28.05.17

பதினோறு மணியாயிடுச்சு…பதினொண்ணு இருபத்தைஞ்சுக்குப் படம். இன்னிக்கு ஞாயிறு.  தியேட்டர்ல கூட்டம் வேற இருக்கும். தியேட்டரை கண்டுபிடிச்சு போய் சேரச்சே லேட் ஆயிடும். சீக்கிரம் கிளம்புங்க,” என்று மனைவி விரட்டிய பிறகு சுறுசுறுப்பாகி கிளம்பி விட்டேன்.

பையன் அவனுடைய காரைக் கொடுத்து விட்டான். வழியையும் சொல்லி விட்டான். அங்கங்கே வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகையைப் பார்த்துக் கொண்டு காரின் வேகத்தை அங்கங்கே சமப்படுத்திக்கொண்டு பையன் சொன்ன வழியில் சரியாகச் சென்று தியேட்டர் வாசலில் நிறுத்தி விட்டேன். கார் நிறுத்துமிடத்தில் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நல்ல கூட்டம் இருக்கும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு வேக வேகமா தியேட்டருக்குள் நுழைந்தோம்.

மணி 11.20. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் எங்களுக்கு முன்னே ஒரே ஒரு குடும்பம் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே தொங்கிக் கொண்டிருந்த மின் பலகையில் நாங்கள் பார்க்க வந்த படத்தின் பெயரைக் காணோம். ஒரு வேளை வலையில் பார்த்த செய்தி தவறாக இருக்குமோ என்று ஒரு பதைபதைப்பு.

நாங்கள் பார்க்க வந்த படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கத்துக்கு வேகமாக ஓடினோம். ஆரம்ப சீனை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.  

1 முதல் 9 வரையுள்ள அரங்கங்கள் வலது பக்கம். 10 முதல் 16 வரை இடது புறம். ஆம். அந்தக் காம்ப்ளெக்சில் 16 அரங்கங்கள். எங்களுடையது 11-ஆவது அரங்கம்.

அரங்கத்தின் நுழைவாயிலில் யாரும் எங்களை செக் செய்யவில்லை. உள்ளே விளம்பரப் படங்கள் தொடங்கி விட்டன. ‘அப்பாடா, படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை,’ என்று ஒரு நிம்மதி.

அரங்கத்தில் அரையிருட்டு. கடைசி வரிசையில் தெற்கிந்திய இளம் தம்பதிகள் இரண்டு பேர். மூன்றாவது வரிசையில் வடக்கிந்திய குடும்பத்திலிருந்து ஒரு நாலு பேர். எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் அரங்கத்தில் மொத்தம் எட்டு பேர். சுமார் முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கம். எப்படித்தான் இவர்களுக்கு கட்டுப்படியாகிறதோ தெரியவில்லை.

“ஆஹா, நமக்காகவே ஸ்பெஷல் ஷோ போலிருக்கு” என்று நினைத்துக் கொண்டேன்.

விளமபரப் படங்கள், வரக் கூடிய படங்களுக்கான ட்ரெயிலர்கள் எல்லாமாக ஒரு பத்து நிமிடங்கள் ஓடின. படம் ஆரம்பிப்பதற்கான ஸ்லைடு போட்டாகி விட்டது. இருட்டில் தடவிக்கொண்டு இன்னும் ஒரு ஐந்தாறு பேர். ஆக மொத்தம் அரங்கத்தில் 13-14 பேர்.

டைட்டில் போட்டாகி விட்டது. “பாகுபலி 2 – முடிவு” ஹிந்தி டப்பிங் படம்.

சுமார் 2 மணி 50 நிமிடங்கள் இடைவெளிக்காகக் கூட நிறுத்தாமல் ஓடியது. முடிவும் போட்டாகி விட்டது. படத்தில் இணைந்த பல இத்யாதிகளின் பெயர்கள் வரிசையாக வேகமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இடையே ஒரு சிறிய டயலாக், “மஹேந்திர பாகுபலியின் பையன் தான் வருங்காலத்தில் மகிஷ்மதியின் மன்னராக வருவானா?” என்று. அதற்கு பதில் டயலாக். “அந்த சிவனைத் தவிர யாருக்குத் தெரியும்?” என்று. பூடகமாகச் சொல்கிறார்களோ, “பாகுபலி 3” வருமா, வராதா என்று அந்த சிவனுக்குத்தான தெரியும் என்று.

“பாகுபலி 2 – முடிவு” - படம் ரேட்டிங் 60% - கம்ப்யூட்டர்கள் நன்றாக நடித்திருக்கின்றன.

முடிவுரை: இந்தப் படம் ரிலீசாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தீவிர விருப்பம் நேற்று வரை எனக்கு வரவில்லை. சும்மா இல்லாமல் என் பையன் நேற்று, “ நாளைக்கு லீவு நாள்தான். நீங்கள் இரண்டு பேரும் வேண்டுமானால் பாகுபலி 2 படத்தை பார்த்து விட்டு வாருங்கள். உங்கள் ஒபினியனைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் நாங்கள் இருவரும் போய் வருகிறோம்,” என்று கூறி விட்டான்.

இன்னொரு மாதம் பொறுத்திருந்தால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வலையில் இதைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். (பணம் கொடுத்து வைத்திருக்கிறோம் சில வலைத் தளங்களுக்கு. ஓசியில் இல்லை) தியேட்டரில் பார்த்து 1500 கோடி இலக்கை எட்டுவதற்கு எங்களாலான காணிக்கையை கொடுத்து வந்துவிட்டு ஜன்ம சாபல்யம் தீர்ந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


பின் குறிப்பு: பாகுபலி 1-ஐ வலையில் தான் (நல்ல பிரதி) ஒரு மாதம் முன்பு பார்த்திருக்கிறேன்.  நன்றாக இருந்தது. Technically Superb. 2 is a continuation of the same trend with minor differences.

Sunday, May 28, 2017

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு ....

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு எல்லோருமே எழுத்தாளராகி விட்டார்களோ என்று தோன்றுகிறது. முக நூலைத் திறந்தால் பக்கம் பக்கமாக ஓடுகிறது பதிவுகள். இதைத் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் வேறு. பலருக்கும் நூற்றுக்கணக்கான முகநூல் நண்பர்கள். யார் எழுதியதைப் படிப்பது, பார்ப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினை.

அதிலும், மடிக் கணினி ஒரு விதமாகவும், ஐ-ஃபோன் ஒரு விதமாகவும், ஐ-பேட் ஒரு விதமாகவும் பலருடைய பதிவுகளைக் காட்டுகின்றன. செட்டிங்க்ஸில் இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு பதிவையும் படிப்பவர்களின் – அதுவும் முழுவதுமாகப் படிப்பவர்களின் – எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று தெரிகிறது. வெறும் பொழுது போக்குக்காக மட்டும் முக நூலா? கருத்துக்களைச் சொல்வதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் இல்லையா? மாற்றுக் கருத்துக்களை ஒரு மரியாதையுடன் சொல்லவும் ஏற்கவும் முடியுமா? எல்லாவற்றையும் ட்விட்டரில் இருப்பது போல இரண்டு வரிகளில்தான் சொல்ல வேண்டுமா? 

முன்பெல்லாம் காசு கொடுத்து பத்திரிகைகள் வாங்கும் பொழுது ஏதோ நமக்குப் பிடித்த ஒன்றிரண்டு பத்திரிகைகளை மட்டும் வாங்குவோம். விரும்பி படிக்கவும் செய்வோம். எல்லாப் பத்திரிகைகளும் இலவசமாக தினம் தினம்  நமது வீட்டு வாசலில் கிடந்தால் எத்தனை பத்திரிகைகளை திருப்பிப் பார்ப்போம்? அந்த நிலைதான் இன்றைய முக நூல் வாசம் என்று தோன்றுகிறது.


எழுதுபவர்கள் ஏராளம். படிப்பவர்கள் வெகு சிலர் என்ற நிலையில் முக நூலில் இன்னமும் எழுதி வருவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? ஓன்றும் புரியவில்லை.

Saturday, May 27, 2017

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

கடந்த வாரம் Harvard’s Graduate School of Education-ன் Dean-ஆகப் பணிபுரிந்த James E. Ryan என்பவர் எழுதிய “Wait, What? And Life’s Other Essential Questions” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் Bronnie Ware என்ற ஒரு நர்ஸ் எழுதிய The Top Five Regrets of the Dying என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மரணத் தறுவாயில் இருக்கும் பல நோயாளிகளைப் பராமரித்து வந்த Bronnie Ware அந்த நோயாளிகளின் மிகப் பெரிய வருத்தங்கள் என்ன என்பதை கேட்டறிந்து அதைப் பற்றியே ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் இருக்கும் பலரும் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வருத்தம் என்று குறிப்பிட்டிருப்பது எது என்று தெரிந்தால் எல்லோரும் ஆச்சரியப்படக்கூடும்.

ஒரு பொருளை அடைய விரும்பி அதை அடைவதற்கு வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு சிறிய முயற்சியைக் கூட ஆரம்பித்து வைக்கவில்லை என்பதுதான் அவர்களின் மிகப் பெரிய வருத்தம். இது எவ்வளவு பெரிய உண்மை என்பது கொஞ்சம் யோசித்தால் தானாகத் தெரியவரும்.

நாம் எல்லோரும் பல பொருட்களுக்கு, பல சிறிய அல்லது பெரிய குறிக்கோளுக்கு ஆசைப்படுகிறோம். ஆனால், அதை அடைவதற்காக என்ன முயற்சி செய்தோம் என்று பார்த்தால் பொதுவாக எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டோம். வெறும் ஏக்கத்தோடேயே வாழ்க்கையை ஓட்டியிருப்போம். மற்றவர்கள் அதே பொருளை அல்லது இலக்கை அடையும் பொழுது அவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் பட்டிருப்போம் அல்லது குற்றம் குறை கண்டிருப்போம். இது என்னால் இயலாது என்று முயன்று பார்க்காமலேயே அல்லது முயற்சிக்க ஆரம்பிக்காமலேயே முடிவுக்கு வந்திருப்போம். அல்லது பல காரணங்கள் காட்டி நம்மால் ஏன் இயலவில்லை என்பதை நியாயப்படுத்தியிருப்போம். வெளி உலகத்தை, மற்றவர்களை, நமது சூழ்னிலைகளைக் குற்றம் கூறியிருப்போம்.

ஆனால், வயதான பிறகு நிதானமாக யோசிக்கும் பொழுது  வாழ்நாள் முழுவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்த தருணத்தில் முயற்சி செய்வது என்பது பல காரணங்களுக்காக உண்மையிலேயே முடியாததாக இருக்கலாம். அல்லது தாமதமாக இருக்கலாம். மரணம் நெருங்கி விட்டால் வேறொன்றும் செய்ய இயலாமல் நம்மை நாமே வருத்திக்கொண்டு துன்பப்படுகிறோம்.

ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குறிக்கோளுக்கு ஆசைப்பட்டால் அதைப் பற்றி ஏதேனும் செய்ய வேண்டும். எவ்வளவுதான் மனதுக்குள் திட்டம் தீட்டினாலும், அதைப் பற்றி ஆலோசித்தாலும், பேசினாலும், எழுதினாலும் செயலில் இறங்காமல் ஒரு காரியமும் நிறைவேறாது. நாம் எடுக்கும் செயல் சரியாக வரும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால், செயலில் இறங்காமல் அந்தக் காரியத்தை நோக்கி நாம் நகரவும் மாட்டோம். குட்டை போல ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்போம். ஒரு ஆறு போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது எங்கேயும் நிற்காது. எத்தனை தடுப்புகள் வந்தாலும் அதை தாண்டியோ, தன் பாதையை மாற்றியோ பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். அது போலத் தான் நாமும் எதற்கு ஆசைப்பட்டாலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

முதலில் ஆசைப்பட்டதை நோக்கி செயலில் இறங்க வேண்டும். அதற்காக எதையும் யோசிக்காமல் செயலில் இறங்க வேண்டும் என்ற அர்த்தமில்லை. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். ஆனால், சிந்திப்பதை மட்டுமே ஒரு செயலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. செயலிலும் இறங்க வேண்டும். ஆயிரம் மைல் தூரப் பயணமானாலும் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.

ஓரளவு சிந்தித்து, திட்டமிட்டு செயலில் இறங்க வேண்டும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும். இலக்கையல்ல.

“சிந்தித்துப் பார்த்து செயலை மாற்று, தவறு சிறிதாய் இருக்கையில் திருத்திக்கோ” என்று ஒரு கவிஞர் திரைப்படத்தில் பாடியிருக்கிறார். எவ்வளவு உண்மை!

ஒரு குறிக்கோளை அடைவது அல்லது ஆசைப்பட்டதை அடைவது என்பது ஒரு முடிவு அல்ல. ஒரு செய்முறைதான். Achieving what one desires is not an end by itself. It is just a process in life. It is the process that makes life interesting, and not the end by itself. இந்த செய்முறைதான் வாழ்க்கையை இனிதாக்குகிறது. முடிவு அல்ல.

இன்றைய மாணவர்களும், சிறுவர்களும், இளைஞர்களும் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். நீங்கள் எதற்கேனும் ஆசைப்பட்டால் அதைப் பற்றிய ஏதேனும் ஒரு செயலில் இறங்குங்கள். Take the first step. Make the Beginning.

இதை நானும் என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மரணத் தறுவாயில் இந்த விஷயத்தில் மட்டுமாவது எனக்கு எந்த வருத்தமும் இருக்காது என்பதை  நிச்சயமாக நம்புகிறேன்.


அப்படியானால் வேறு விஷயங்களில் வருத்தமிருக்குமா என்று கேட்டால்….இந்தக் கணம் என்னுடைய கடைசி மூச்சுக்கான சமயமாக இருந்தால்… கண்டிப்பாக 5 வருத்தங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அவை என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Monday, May 22, 2017

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

2015-ல் வெளி வந்து தேசிய விருது பெற்ற, பல திரைப்பட விழாக்களில் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னமேயே பங்கு கொண்ட ஒரு தமிழ் படம். நேற்று எதேச்சையாக கண்ணில் பட்டது. பார்த்தேன்.

ஒரு (குறும்புக்காரன் என்று தெரிந்து கொள்ளாத) ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவனை ஆசிரியை அவனுடைய இடக்கான குறும்புப் பேச்சுக்காக வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து விடுகிறாள். மாணவன் மயங்கிக் கீழே விழுந்து தலையில் அடி. பள்ளியினர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்சினையாகிவிடும் என்று பயந்து அந்த ஆசிரியை மெர்லினை கொஞ்ச நாட்களுக்கு அவளுடைய கணவருடன் தலைமறைவாக இருக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். மாணவனுடைய நிலைமை மோசமாகி கோமா நிலைக்கு சென்று விடுகிறது.

ஒரு பள்ளி மாணவனை ஆசிரியை அடிக்கலாமா அடிக்கக் கூடாதா? பெரிய சர்ச்சை. ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை பெரிதாக்க முயற்சிக்கின்றனர். விசாரணை நடக்கிறது.

இறுதியில், சர்ஜரிக்குப் பிறகு மாணவன் பிழைத்து விடுகிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே ஏற்பட்ட ஒரு முளைக் காயத்தினால்தான் அப்படி மயங்கி விழுந்தான். ஆசிரியை அடித்தது ஒரு விபத்து. அவள் அடித்ததினால் மயங்கி விழவில்லை என்பது நிரூபணம் ஆகிறது. ஆனால், ஆசிரியை தன் தவறை வெளிப்படையாக ஊடகங்கள் முன்னே ஒப்புக்கொள்கிறாள். ‘ஒரு மாணவனை வளர்ப்பதற்குத்தான் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அந்த மாணவனை தன்னுடைய பிள்ளையாக நினைத்து அவனை திருத்தி, நல் வழிப்படுத்தி அவன் வளர்ச்சிக்கு உதவுவதுதான் ஒரு ஆசிரியையின் கடமை,” என்று சொல்லி தன் தவறை ஒப்புக்கொள்ள்கிறாள்.

ஒரு சமூகப் பிரச்சினையை மிகவும் ஜாக்கிரதையாக இயக்குனர் பிரம்மா கையாண்டிருக்கிறார். ஆரம்பத்தில் படம் மெதுவாகப் போவது போல உணர்ந்தாலும் மாணவன் அடி வாங்கி கீழே விழுந்த பிறகு விறுவிறுப்பாகப் போகிறது. பல இடங்களில் மனதைப் பிசைகிறது. முக்கியமாக, ‘சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா’ பாடலை பல காட்சிகளோடு இணைத்துக் காட்டும் இடங்களில் கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.


படத்துக்கு எல்லா நடிகர்களும் புதியவர்கள். கதா நாயகி ராதிகா பிரசித்தா பல மேடை நாடகங்களை எழுதி, இயக்கி நடித்தும் இருக்கிறார்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தோன்றுகிறது. படத்தில் வரும் எல்லா கதாப் பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கொஞ்சம் சினிமாத்தனத்தை தவிர்க்க முடியாமல் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் தேசிய விருது பெறுவதற்கு மிகவும் தகுதியான ஒரு படம். படத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுக்கள். 

Sunday, May 21, 2017

19.05.17 கடந்த வார நாட்குறிப்பு: ஓசியில் படிக்க வேண்டிய ஒரு கற்பனை பத்திரிகைக் குறிப்பு

19.05.17 கடந்த வார நாட்குறிப்பு: ஓசியில் படிக்க வேண்டிய ஒரு கற்பனை பத்திரிகைக் குறிப்பு

என்னுடைய முந்தைய பதிவில் வேறொரு முக்கியமான விஷயம் பற்றி தனியாக எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அது இதுதான். துக்ளக் பத்திரிகையில் முன்னெல்லாம் அடிக்கடி வந்து கொண்டிருந்த ‘ஓசியில் படிக்க வேண்டிய ஒரே (கற்பனைப்) பத்திரிகை’யில் வரும் செய்தி வகையைச் சேர்ந்தது இது.

மோடி அவர்கள் தனது முக்கிய மெய்காப்பாளரை தனியாக அழைக்கிறார்.

“எனக்கு ஒரு இடத்துக்குப் போக வேண்டும். இந்த விஷயம் உன்னைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. நீயே வண்டியை ஓட்ட வேண்டும்.”

“ஐயா, நீங்க எது சொன்னாலும்  நான் செய்யத் தயார். ஆனா, இப்படி தனியா பாதுகாப்பு இல்லாமல் போய் ஏதேனும் தப்புத் தண்டா நடந்ததுன்னா…,” மெய்காப்பாளருகே கால்கள் நடுங்கின.

உடனே ஒரு தனது லெட்டர் பேடை எடுத்து மடமடவென்று மோடி எழுதுகிறார். “இந்தா, இதை வச்சுக்கோ. எது நடந்தாலும் அதற்கு  நான் மட்டுமே பொறுப்புன்னு அதிலே எழுதியிருக்கிறேன்,” என்று கூறி அந்த கடிதத்தைக் கொடுக்கிறார்.

“நடு இரவுக்குப் பிறகு கிளம்பணும். உன்னுடைய காரை ரெடி பண்ணி வச்சுக்க…”

“என்னுடையா காரா,” மெய்காப்பாளார் தயங்குகிறார். அவரால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

நடு இரவு தாண்டி விட்டது. மெய்காப்பாளர் தன் காரை மோடி அவர்களின் வீட்டிற்கு பின் வாசலில் தயார் நிலையில் வைத்து காத்திருக்கிறார். சிறிது நேரத்தில் மோடி அவர்கள் கீழே இறங்கி வருகிறார். அவருடன் அமித் ஷாவும் வருகிறார். மெய்காப்பாளருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. ஏதோ ஒரு பெரிய விபத்து நடக்கப் போகிறது என்பது போல ஒரு நடுக்கம்.

வண்டி டில்லியைத் தாண்டி வெளியே ஒதுக்குப் புற ஒரு கிராமத்தில் ஒரு பண்ணை வீடு முன்னே போய் நிற்கிறது. அங்கே இன்னொரு பெரிய கார் ஏற்கெனவே நின்று கொண்டிருக்கிறது. 

மோடியும் அமித் ஷாவும் காரை விட்டிறங்கி வீட்டுக்குள்ளே போகிறார்கள்.
வீட்டினுள்ளே சோனியா காந்தி அவர்களும், ராகுல் காந்தி அவர்களும் மோடிக்காக காத்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள்.

“தனியாக சந்திக்கணும்னு உங்ககிட்டேர்ந்து ஃபோன் வந்தவுடன் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம்,” என்றார் ராகுல் காந்தி.

“ஒரு முக்கியமான விஷயம். அதை நேரடிய பேசிடலாம்னு நினைச்சேன்,” என்றார் மோடி. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு அமித் ஷாவுக்கு கண் சாடையால் ஏதோ சொல்கிறார்.

“சரி, நேரே விஷயத்துக்கு வந்து விடுகிறேன் … இந்த மானிலக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள், சமூகக் கட்சிகள், சுயேச்சைகளுடைய தொந்திரவு தாங்க முடியலை. அவங்களோட தினப்படி ப்ளாக்மெயில் தாங்க முடியலை. அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதைப் பத்திதான்…,” என்றார் அமித் ஷா.

“உங்க பிரச்சினை எவ்வளவோ தேவலை. யாரோ ஒருத்தர்தான் மிரட்டிக்கிட்டிருக்காரு. நாங்க அந்த வலியை ஒரு பத்து வருஷமா எப்படி தாங்கிக்கிட்டு தினம் செத்திருக்கோம் தெரியுமா? பாவம் சிங் சார். அந்தக் கட்சிங்களால எங்களுக்கு வெறும் கெட்ட பெயர்தான். எல்லாத்துலேயும் ஊழல். பொறுத்துக்கறதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய முடியலை,” என்றார் ராகுல்.

சோனியா அமைதியாக, ஆனால், கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். மோடி அதிரடியாக ஏதோ செய்யப் போகிறார் என்பது மட்டும் நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

“மானிலக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள், சுயேச்சைகள் எல்லாரையும் ஒழிச்சுக் கட்டிடணும்னு முடிவுக்கு வந்திருக்கிறோம், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்குத் தெரியணும்,” என்றார் அமித் ஷா.

“எங்களுக்கும் ஆசைதான். ஆனா, அவங்கள்ளாம் இல்லாம எங்களுக்கு இப்பல்லாம் ஓட்டு விழறதில்லையே. அவங்களை நம்பித்தானே நாங்களே தேர்தல்ல இறங்கறோம். எங்க கட்சியை மட்டும் எடுத்துக்கிட்டா எங்களுக்கேளேயே பல கட்சிகள் எங்களை ஆட்டிப் படைக்கின்றன. நீங்க என்ன ஐடியா வச்சிருக்கீங்க,” என்றார் ராகுல்.

“சரி, வெளிப்படையாகவே பேசிடறேன். இப்ப இருக்கற பார்லிமெண்ட்டைக் கலைச்சிடறோம். எல்லா மானில அரசாங்கங்களையும் ஒரே நேரத்தில வீட்டுக்குப் போகச் சொல்லிடறோம். ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிட்டா போறும்.”

ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் விட்டெறிஞ்ச மாதிரி சோனியாவுக்கும், ராகுலுக்கும் பூமி கீழே அதிர்ந்தது.

“அய்யய்யோ … எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பவரும் போயிடுமே … இப்ப தேர்தல் வந்தா … ஏற்கெனவே எங்க பாத்தாலும் ‘மோடி, மோடி’ன்னு பாட்டுப் பாடறாங்க …” என்று முதன் முதலாகப் பதறிப் பேசினார் சோனியா.

“அதுதான் இல்லை. இந்த ஒரு மூவிலே ஒரே நேரத்தில ரெண்டு மாங்காயைத் தட்டறோம்,” என்றார் அமித் ஷா.

“எப்படி?” என்றார் ராகுல்.

“இப்ப, மத்திய அரசாங்கத்தையும், எல்லா மானில அரசாங்கங்களையும் கலைச்சுட்டு எல்லா இடங்களுக்கும் உடனேயே தேர்தல் வைக்கப்போறோம்,”

“திரும்பவும் தேர்தலா? ஏற்கெனவே எங்க கஜானா காலியாகிக்கிட்டிருக்கு. மோடி வேற ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டையெல்லாம் செல்லாததாக்கி பல இடங்கள்லே ரெய்டு நடத்தி பதுக்கி வச்ச பணத்தையெல்லாம் முடக்கி வச்சிட்டாரு.”

“அதைப் பத்தி, நீங்க கவலைப் படவேண்டாம். தேர்தலுக்கு செலவையெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்,”

“நீங்களேவா….”

“அதாவது, அரசாங்கமே பாத்துக்கும்னு சொல்ல வர்றோம்,”

“ஓ … தேர்தல் நடத்திறதுலே எங்களுக்கென்ன லாபம்?”

“நாங்க என்ன பண்ணப் போறோம், வர்ற தேர்தல்ல தனியாகவே நிக்கப் போறோம். யாரு கூடவும் கூட்டணி கிடையாது. நீங்களும் அது மாதிரி தனியாகவே நிக்கணும்,”

“ஐயய்யோ, எதுக்கு இந்த விஷப் பரிட்சை?”

“தனித்தனியா நின்னா நம்ம ரெண்டு கட்சிக்கும் உண்மையான என்ன பலம் இருக்குன்னு தெரிஞ்சு போகும். நம்ம ரெண்டு கட்சியில யாருக்கு அதிக சீட் கிடைச்சிருக்கோ அவங்க ஆட்சி அமைக்கட்டும். நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னா ஆட்சி அமைக்கறதுக்கு நாங்க உங்களை சப்போர்ட் பண்றோம். நாங்க ஜெயிச்சா நீங்க எங்களை சப்போர்ட் பண்ணுங்க.”

“அப்ப, ஏகப்பட்ட ஜாதிக் கட்சிங்க, மானிலக் கட்சிங்க, சுயேச்சைங்க எல்லாம் என்னாகும்?”

“தேர்தல் வந்து ஆட்சி அமைச்ச உடனே ஒரு சட்டம் கொண்டு வந்து விடுவோம். ஒரு பத்து சதவிகிதமாவது ஓட்டு வாங்கலைன்னா அந்தக் கட்சியையெல்லாம் செல்லாதுன்னு … அதுகளை கலைச்சிடணும்னு.”

“ம்ம்,” அதற்கு மேல் இந்த விபரீத திட்டத்தின் விளைவுகளை ராகுலுக்கும் சோனியாவுக்கும் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை. ‘இதில என்ன விஷமம் இருக்குன்னு’ ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,

மீண்டும் அமித் ஷாவே சொல்கிறார்,”இதனால என்ன ஆகும்னா, மத்த கட்சிங்க எல்லாம் ஒண்ணு உங்க கட்சியோடையோ அல்லது எங்க கட்சியோடையோ இணைஞ்சுடுவாங்க. எப்படி நடந்தாலும் அதுக்கு நாங்க தயாரா இருக்கோம். எல்லாக் கட்சிகளும் உங்களோடையோ அல்லது எங்களோடையோ சேர்ந்ததுக்கப்புறம் யாருக்கு மெஜாரிட்டி இருக்கோ அவங்க ஆட்சி அமைக்கலாம்.  இதனோட முக்கிய விளைவு நாட்டில இந்தக் குட்டிக் குட்டிக் கட்சிகள்லாம் உங்களையும் எங்களையும் மிரட்டற வேலையெல்லாம் முடிஞ்சு போயிடும். யாருடைய தயவுமில்லாமல் நீங்களோ அல்லது நாங்களோ மாத்தி மாத்தி ஆட்சிக்கு வரலாம். உங்களுக்கும் இது நல்லதுதானே…ஒரு ஆட்சியில இருக்கிற ஓட்டைகளைக் காட்டி அடுத்த கட்சி பவருக்கு வந்திடலாம். ரெண்டு பேருக்கும் கொள்கைகள் என்னவோ ஒரே மாதிரிதானே இருக்கு. நாட்டில அதிக பட்சம் மூணு கட்சிதான் இருக்கும். உங்களுக்கும் நல்லதுதானே,”

“எங்கம்மா பிரதம மந்திரியாக முடியாதே?”

“ஏன் முடியாது. அதுக்கு நாங்க ஆட்சேபிக்க மாட்டோம். அவங்கதான் இந்திய அன்னையாகி எவ்வளவோ வருஷமாயிடுச்சே … அவங்க இப்ப அக்மார்க் அசல் இந்தியன்தானே?”

“அப்ப முன்ன சொன்னதெல்லாம்?”

“என்ன ராகுல் … உங்களுக்கு எல்லாமே விளக்கமாச் சொல்லணுமா … பாருங்க … உங்க ஆட்சில நீங்க கொண்டு வந்த எத்தனையோ சட்ட திட்டங்களை நாங்க ஏத்து நடத்தலையா? முன்னால அதையெல்லாம் நாங்க எதிர்த்தாலும், இப்ப அதையே நாங்க எங்களுடைய கொள்கையா வச்சுக்கலையா … அதை மாதிரிதானே?”

கொஞ்சம் யோசித்து விட்டு சோனியா அவர்கள் புன்முறுவலித்தார். முதன் முதலாக வாய் திறந்தார். “மோடிஜி, நீங்க எப்படி சூப்பர் திட்டம் போட்டு பிரதமர் ஆனீங்கன்னு இப்ப எனக்குப் புரியுது … என்ன ப்ரில்லியன்ட்  மூளை உங்களுக்கு … உங்ககிட்ட நான் நிறைய கத்துக்கறதுக்கு இருக்கு. உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்க ஐடியாவுக்கு எங்களுக்கு பரிபூர்ண சம்மதம்,” என்று ராகுலை கேட்காமலேயே அங்கே யார் தலைவர் என்பதை காட்டாமல் காட்டிக்கொண்டார் சோனியா.

‘ரொம்ப நன்றி. நீங்க இந்த ஐடியாவுக்கு சம்மதிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். இந்திய நாட்டுக்காக நீங்க என்னல்லாம் தியாகம் பண்ணியிருக்கீங்க. நீங்க நீடுழி வாழ்க,” என்றார் மோடி. இந்தப் பக்கம் யார் தலைவர் என்பது அமித் ஷாவுக்கு நன்றாகத் தெரியும்.


ட்ரிங், ட்ரிங் …………… அட சட் …………… சரியான நேரம் பார்த்து கனவு கலைந்து விட்டது.

Sunday, May 14, 2017

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

ஒவ்வொரு வாரமும் எனக்கேற்படும் அனுபவங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களையும் பதிய வேண்டும் என்றுதான் இந்தப் பகுதியை ஆரம்பித்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒவ்வொரு வாரமும் எழுதுவதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதன் பின்னணியைப் பற்றி ஒரு சில வரிகள்:

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு நேரகுழந்தை கவனிப்பு.’ (Baby Sitting). அது போக கிடைக்கும் சிறிது நேரத்தில் என்னுடைய கவனத்தை எனக்குப் பிடித்த ஒரு சில விஷயங்களில் சிதறவிட்டு விடுகிறேன். கீ போர்ட் வாசிக்கக் கற்றுக் கொள்வது, புத்தகங்கள் வாசிப்பது, கதை, கட்டுரை எழுதுவது, இந்திய பங்குச் சந்தையில் வாங்கி விற்பது, உடற் பயிற்சி.. இப்படியாக பல மரம் பார்த்தவனாக இருப்பதால் ஒரு மரத்தையும் முழுமையாக வெட்ட முடியாமல் நிற்கிறேன்.

ஒரு குறு நாவல் தமிழில் எழுதி முடித்திருக்கிறேன். இன்னமும் வரைவு வடிவத்தில்தான் இருக்கிறது. ஒரு முறையாவது சரி பார்த்த பிறகு நண்பர்களுக்கு அந்த நாவலை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.

47 ஆண்டுகளுக்கு பிறகு நான் கல்லூரியில் படித்த கெமிஸ்ட்ரியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எடுத்துக் கொண்ட தலைப்பு: “அணுவுக்குள்ளே” (Inside the Atom). Quantum Mechanics இப்பவும் எனக்குப் புரியவில்லை. அணுவைப் பற்றி நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதலாமா என்றும் எண்ணம்.

பவர் பாண்டி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டம் அதிகமில்லாத மனதைத் தொடும் படம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு தனுஷுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த வார இறுதியில் தென்னிந்திய நொறுக்குத் தீனிகள் வாங்க வேண்டும் என்று அருகாமையிலிருக்கும் (சுமார் ஐந்தரை கி.மீ தூரம்) இந்தியன் ஸ்டோர்ஸுக்கு சைக்கிள் மிதித்து சென்று வந்த பிறகு முதுகுத் தண்டின் கீழ் புறம் பிடித்துக் கொண்டதில் இரண்டு நாள் முழு நேர ஓய்வு. நான் வாங்கி வந்த தின் பண்டங்களுக்காக டாக்டருக்கு ஐம்பது டாலர்கள் தண்டம் கட்டும் படியாகி விட்டது. என்ன செய்வது நாக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
சென்ற வாரம் The Fourth Industrial Revolution என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு பலர் பாராட்டு தெரிவித்திருப்பது எழுத்தாளன் என்ற முறையில் திருப்தி. சந்தோஷம்.

கடந்த வாரம் படித்த செய்திகளில் என்னை ஈர்த்தவை சில.

முதலாவது,

செய்தி: Uttar Pradesh government considering 'no school bag' Saturdays in schools
உத்திரப் பிரதேசத்தில் பள்ளிகளில் சனிக் கிழமையன்று புத்தகச் சுமையை பள்ளிக்குத் தூக்கிப் போக வேண்டிய அவசியமில்லாத ஒரு முறையை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். நல்லதுதான். பல மெட்ரிக் பள்ளிகளில் வாரம் ஒரு நாள் co-curricular activities-க்கு ஒதுக்கியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, வழக்கமான பாடங்களைத் தவிர்த்து இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே, மற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் மாணாக்கர்களை ஈடுபடுத்துகிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்றைய மாணவர்களுக்கு, சிறிய வகுப்புகளிலிருந்தே critical thinking, analytical ability, communication skill, interpersonal skill, language skill, creative thinking போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே போல சிறு வயதிலிருந்தே இன்டெர்னெட்டிலிருந்து தகவல்கள் சேகரித்து அதை ஒரு சிறிய presentation –ஆகக் கொடுக்கப் பழக்க வேண்டும். தான் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல பழக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சொந்த முனைப்பு வளரும்.

இரண்டாவது,
செய்தி: Now, each block to get generic med store
ஒவ்வொரு கிராம வட்டாரத்திலும் ஜெனரிக் மருந்துக் கடைகளை மத்திய அரசு திறக்க உத்தேசித்திருக்கிறது. ஒரு புதிய மருந்தை ஆராய்ந்து கண்டு பிடித்து, அதை பரிசோதனைக்குள்ளாக்கி, அரசாங்க அங்கீகாரம் பெற்று சந்தைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. பல  நூறு கோடி டாலர் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைக் கொண்டுவந்த பின்பு செலவு செய்த பணத்தையும் அதன் மேல் தனக்கு வேண்டிய லாபத்தையும் சம்பாதிக்காமல் என்ன செய்யும்? அதில் தவறு எப்படிக் காண முடியும்? இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் அந்த மருந்தை பயன்படுத்தும் பொழுது முதலீடு செய்த பணத்தையும் லாபத்தையும் நிச்சயமாக ஒரு சில ஆண்டுகளில் மீட்டு விடலாம். அதன் பிறகு எல்லாமே லாபம்தான். அப்படிப்பட்ட சமயத்திலாவது மருந்து விலையைக் குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஒவ்வொரு கம்பெனியும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் மார்க்கெட்டிங் செய்யும் பொழுது நிறைய லாபம் அடைய முயற்சிக்கிறார்கள். ஜெனரிக்கான மருந்துகளை விற்றால் அவ்வளவு லாபம் கிடைக்காது. பொது மக்களுக்காக வட்டாரம் தோறும் ஒரு ஜெனரிக் மருந்துக் கடையை ஆரம்பிக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. ஆனால், அரசே வியாபாரம் செய்யத் துவங்கினால் உருப்படாது.

அடுத்தது,
செய்தி: தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தடங்கலில்லாமல் எல்லா இடங்களிலும் மின்சார வசதி கிடைக்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் இன்றைக்கு எதுவுமே இயங்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலவிய மின் கட்டுப்பாடு, மின் தடை வரலாறு காணாத அளவு இருந்தது. பலர் கடும் தொல்லைக்கு ஆளாகினர். புதிய தொழில்கள் வேறு மானிலங்களுக்குச் சென்று விட்டன. தொழிலதிபர்கள் தமிழ் நாட்டைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. எப்பொழுதும் மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததால் தமிழ் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் உதய் திட்டத்தில் பல மானிலங்கள் சேர்ந்த பின்னும் தமிழ்நாடு முரண்டு பண்ணியது. சமீபத்தில் தான் சேர்ந்து கொண்டது. வரும் காலத்திலாவது தமிழ் நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். 85000 கோடி ரூபாய் கடன் எப்படி உதவப் போகிறது என்று பார்ப்போம்.

அடுத்ததாக
செய்தி: அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்..க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே..செங்கோட்டையன் பேட்டி
அமைச்சரின் ஒப்புதல் படி இது வரை தமிழகத்தில் பாடத் திட்டங்கள் சி.பி.எஸ். பாடத் திட்டத்துக்கு நிகராக இருந்ததில்லை என்பதை தெளிவாக்குகிறது. அதாவது சி.பி.எஸ்.இயின் உயர்ந்த தரம் தமிழகத்தில் இல்லை என்பதை நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது சரி செய்தால் நல்லதுதான். இனி மேலாவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யும்.

இறுதியாக..
செய்தி: The lowdown on the directive to RBI on bad loans
பல வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக மாறி வாராக் கடன்கள் அபாயகரமாக ஏறிக்கொண்டே இருக்கின்றன. 1990-களில் என்று ஞாபகம். இது போன்றே ஒரு நிலை நீடித்தது. வாராக் கடன்களால் பல வங்கிகள் திண்டாடிக் கொண்டிருந்தன. இந்த  வாராக் கடன்களால் பல வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ, கோர்ட், பணி நீக்கம், தண்டனை, ஜெயில் என்று அவதிப் பட்டிருக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் கொடுக்கும் நியாயமான அதிகாரிகளுக்கு கொடுக்கும் கடன் திரும்ப வருமா, வராதா என்று என்றுமே ஒரு பதட்டம்தான்

Past performance is not a guarantee for future என்று மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு விளம்பரத்தில் போடுகிறார்கள். அது போலத் தானே வங்கிக் கடன்களும். ஓரு மனிதரின், அல்லது ஒரு நிறுவனத்தின் பழைய ரெக்கார்டுகளைப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணிப்பும் செய்துதான் கடன் கொடுக்கிறார்கள். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால் அந்த அதிகாரியின் பாடு திண்டாட்டம்தான். கடன் கொடுப்பதில் பல அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்

இந்த வாராக் கடன்களைப் பற்றி நடுவில் கொஞ்ச காலம் அதிகமாக யாரும் பேசவில்லை. எல்லா வங்கிகளும் வாராக் கடன்களை கணிசமாக குறைத்து விட்டதாக பறைசாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது மீண்டும் அது பற்றிய பரபரப்பு தலை தூக்கியிருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்க அனுமதி கொடுக்கும் பொழுதே அப்பொழுதெல்லாம் கை நடுங்கும். இன்றைக்கு பல நூறு கோடி ரூபாய் கடன்கள் சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிறது

அன்றைக்கு consortium என்ற முறை இருந்தது. ஒரு நிறுவனத்துக்கு பல வங்கிகள் இணைந்து கடன் கொடுக்கும் பொழுது எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இந்த நல்ல வழி முறை இடையில் கைவிடப்பட்டது. ஒரு நிறுவனம் எத்தனை வங்கிகளிடம் வேண்டுமானாலும் கடன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. வங்கிகளின் வழிமுறைகளை  நான் மறந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கு நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.

இறுதியாக..

அட, இன்னுமா முடிக்கவில்லை.


ஆமாம். ஒரே ஒரு கனவைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அதைத் தனியாக இன்னும் ஒரு சில நாட்களில் எழுதுகிறேன்.