Total Pageviews

Friday, March 10, 2017

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

06.03.17 உறவுகளைப் பற்றி – நாம் விளையாடும் 6 விளையாட்டுக்கள்

நமது உறவுகள் சீராக இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது அஹங்காரமே என்று முன்னால் எழுதியிருந்தேன். அந்த ‘தான்’ என்ற நினைப்புதான் நம்மை மற்றவர்களுடன் பல நேரங்களில் ஒத்துப் போக விட மாட்டேன் என்கிறது. எவரையுமே, எந்தப் பொருளையுமே, எந்தச் சூழ்னிலையையுமே ‘தான்’ என்ற நிலையிலிருந்துதான் சீர் தூக்கிப் பார்க்கிறோம். அதனால், மற்றவர்களின் நிலையை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் நிலையிலிருந்து அவர்களை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

எப்படியோ, நாம் எல்லோரும் (பொதுவாகச் சொல்லப் போனால்) 6 விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறோம்.
            1.     “நான் சரியாகத்தான் இருக்கிறேன்” (I am okay)
            2.     “நீதான் சரியில்லை” (You are not okay)
           3.     மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம் அல்லது மற்றவர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கிறோம் (We dominate or remain dominated)
           4.     நம்மைப் பற்றி நாமே (தகுதிக்கு மீறி) பறைசாற்றிக் கொள்கிறோம். (We project our image)
     5.     நம்மை, (நம்முடைய எண்ணங்களை, சொற்களை, செயல்களை) தற்காத்துக் கொள்கிறோம். தாங்கிக் கொள்கிறோம். (We defend)
        6.     உண்மையான நம்மை வெளியே தெரிந்து விடாமல் இருக்க முகமூடி போட்டுக்கொள்கிறோம். அதாவது நடிக்கிறோம். (We masquerade)

     (இதை ஸ்ரீஅம்மா பகவானுடன் இருந்த நாட்களில் கற்றுக் கொண்டதுதான்.)

இந்த ஆறு விளையாட்டுக்களையும் நாம் ஏதோ கணக்குப் பண்ணி விளையாடுவதில்லை. தானாகவே, நம்மை அறியாமலேயே நடக்கிறது.

எல்லாமே ‘தான்’ என்ற நினைப்பிலிருந்து உருவானதுதான். பிறந்த குழந்தைக்கு ‘தான்’ என்ற அறிவோ உணர்வோ கிடையாது. சுமார் 1 வயது வரும் பொழுதுதான் அந்த உணர்வு தொடங்குகிறது. வயது ஏற ஏற சுமார் 18 வயது வரை இந்த ‘தான்’ என்ற உணர்வு வளர்ந்து கொண்டே இருக்கிறது. சிறு பிராயத்தில் இந்த ‘தான்’ என்ற உணர்வு இல்லாததால்தான் எவ்வளவு திட்டினாலும், சண்டை பிடித்தாலும், அடித்தாலும் சிறு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அம்மா, அப்பா, மற்ற பெரியோர்களை நாடுகின்றனர். சற்று நேரத்துக்கு முன்பு அழுதது கூட மறந்து விடும். எவ்வித களங்கமோ, பகையோ, கோபமோ இருக்காது. பழையதை மறந்து வழக்கம் போல சகஜமாக நம்முடன் பழகும். அதே சிறுவன்/சிறுமி சற்று வளர்ந்த பிறகு – 10 – 12 வயது என்று வைத்துக்கொள்ளுங்களேன் – கொஞ்சம் சத்தம் போட்டாலே அதற்கு சுருக்கென்று இருக்கும். எதிர்க்கும். கோபம்   நீடிக்கும். ஏனென்றால், அதன் ‘தான்’ காயப்படுகிறது தெரிந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து – 15 -18 வயதாகி விட்டால் போதும் – நம்மை எதிர்த்தே பேசும், நம்முடன் சண்டைக்கு வரும். இப்பொழுது அந்த சிறுவன் சிறுமிக்கு தன்னைக் காயப்படுத்தி விட்டனர் என்ற முழு உணர்வு இருக்கும். பெற்றோரைப் பிடிக்காது. நண்பர்களைப் பிடிக்காது. விரோதமாகச் செயல்படுத்தத் தூண்டும். இப்படி பல விதமாக நடந்து கொள்ளும்.

ஒரு சிறிய கற்பனை உரையாடல் மூலம் இந்த 6 விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்:

இரண்டு  நண்பர்கள். ராம் – ஷ்யாம். பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஷ்யாமுக்குத் தெரிவிக்காமல் ராம் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போட்டு அவனுக்கு வேலையும் கிடைத்து விடுகிறது. அந்தத் தகவலை கொஞ்சம் தாமதமாகவே ஷ்யாமுக்குத் தெரிவிக்கிறான்.
ராம் – “ஷ்யாம், எனக்கு ஓ.என்.ஜி.சி-யிலே இன்ஜினியர் வேலை கிடைச்சுருக்கு.”
ஷ்யாம் – “அப்படியா, நீ அப்ளை பண்றதா சொல்லவேயில்லையே. இவ்வளவு நெருங்கிய நண்பனாயிருந்து என்னடா இப்படி பண்ணிட்ட?”
ராம் – “சொல்லியிருக்கலாம்தான். ஆனால், உனக்குத்தான் வெளியூரிலே போய் வேலை பார்க்கறதுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியே.”
ஷ்யாம் – “ நீ முன்னமேயே சொல்லியிருந்தா கண்டிப்பாக நானும் அப்ளை பண்ணியிருப்பேன்.  நீ இப்படிப் பண்ணுவேன்னு எதிர்பார்க்க வில்லை.”
ராம் – “சொல்லியிருந்தா நீயே என்னை அப்ளை பண்ண விடாம தடுத்திருப்பாய். உன்னை மீறி என்னால எதுவும் செஞ்சிருக்க முடியாது. இந்த வேலையும் எனக்குக் கிடைச்சிருக்காது.”
ஷ்யாம் –“என்னடா, இப்படிச் சொல்லிட்டே. நான் உன்னோடு ஒரு நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கேன். நீதான் என்னை இப்படி காலை வாரி விட்டு விட்டாய்.”
ராம் – “இல்லை. இந்த வேலைக்குச் சேர ஒரு பரிட்சை எழுதணும். அதுலே maths-ம் statistics-ம் தரௌவா தெரிஞ்சிருக்கணும். உனக்குதான் statistics பிடிக்காதே?”
ஷ்யாம் – “ஆதனாலென்ன, நான் முயற்சியாவது பண்ணியிருப்பேனே. நீ உதவி செய்திருக்க மாட்டாயா?”
ராம் – “எப்படிடா முடியும். நானே அதற்காக ஸ்பெஷல் கோச்சிங்க்கு போக வேண்டியிருந்தது.”
ஷ்யாம் – “ஓஹோ, கோச்சிங் வேறயா…அதுவும் எனக்குச் சொல்லவேயில்லை. துரோகி டா நீ?”
ராம் – “எவ்வளவு கஷ்டமான பரீட்சை தெரியுமா. நீ எழுதியிருந்தா பாஸ் பண்றதே ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும், தெரிஞ்சுக்கோ.”
            ஷ்யாம் – “ஓ, என்னுடைய குறையை சுட்டிக் காட்டுகிறாயா?”
            ராம் – “அப்படியில்லை. நான் உண்மையான நிலையைத்தான் சொன்னேன்…நீ ஒண்ணும் கவலைப் படாதே. உனக்கும் நல்ல வேலை கிடைக்கும். நான் உனக்காக ப்ரார்த்திக்கிறேன்.” ( நண்பனை சமாதானப் படுத்த வேண்டிய நிலை)
ஷ்யாம் – (உள்ளுக்குள் மிக வருத்தப் பட்டாலும்) “சரி, சரி… நான் maths-ல் ரொம்ப ஸ்ட்ராங் – போன வாரம்தான் ஒரு கல்லூரியில் என்னை விரிவுரையாளராகச் சேர்த்துக்க தீர்மானிச்சிருக்காங்க. உள்ளூரிலேயே வேலை. நிறைய டியூஷன். கை நிறைய காசு. உனக்குத்தான் தெரியுமே. கணக்கு சொல்லிக்கொடுப்பதற்கு இங்கே சரியான ஆளேயில்லையே…எங்கப்பா எனக்கு கல்யாணத்துக்குப் பெண் கூட பார்த்து வருகிறார். நல்ல பெரிய இடம்…சரி, இதையெல்லாம் உனக்குச் சொல்லி உன் மனசைக் கெடுப்பானேன்…வேலைக்குச் சேரும் போதாவது எங்கிட்ட சொல்லிவிட்டுப் போவாயா?”
ராம் – (மனதுக்குள்) (இவனும்தான் எங்கிட்ட ஓப்பனா சொல்லவேயில்லையே…கல்லுளி மங்கான்) “கண்டிப்பாகடா. சொல்லாம போவேனா!”

கற்பனை உரையாடலாக இருந்தாலும் இரண்டு நண்பர்கள் கூட தங்கள் தங்கள் நிலையிலிருந்து தங்களை, தங்களின் செயல்களை தற்காத்துக் கொள்கிறார்கள், வேஷம் போடுகிறார்கள், மற்றவரை குறை சொல்கிறார்கள், தங்களையே உயர்த்திப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

கானடாவைச் சேர்ந்த எரிக் பெர்னே என்பவர் மனோதத்துவ முறையில் இதை அணுகி GAMES PEOPLE PLAY என்ற புத்தகத்தில் மிக அருமையாக அலசியிருக்கிறார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பழகும் பொழுது மூன்று விதமான நிலைகளிலிருந்து செயல்படுவதாக அவர் சொல்கிறார். முதலாவது ‘பெற்றோர்’ என்ற ஆதிக்கம் பண்ணும் நிலை. இரண்டாவது ‘முதிர்ந்தவர்’ என்ற ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் நிலை. மூன்றாவது ‘குழந்தை’ என்ற மற்றவரை சார்ந்து நிற்கும், ஏங்கும் நிலை.

இதையும் ஒரு கற்பனை உரையாடலின் மூலமாக புரிந்து கொள்ளலாம்:

மனைவி – “என்னங்க...எப்பப் பார்த்தாலும் மொபைல் ஃபோனில் ஏதோ வெட்டியா பார்த்துக்கிட்டே இருக்கீங்க…எனக்கு சுத்தமா பிடிக்கலை…நீங்க பார்க்காத போது அந்த ஃபோனையே தூக்கி விட்டெறிஞ்சிடலாம் போல வருகிறது. (பெற்றோர் – குழந்தை நிலை)
கணவன் – “என்னை என்ன வெட்டியா எல்லாம் செஞ்சுகிட்டிருக்கேன்னு சொல்லிறியா…” (பெற்றோர் நிலை)
மனைவி – “நான் அப்படியா சொன்னேன்…எனக்காக கொஞ்ச நேரம் செலவிடச் சொன்னா…அதுக்காக இப்படிக் கோபப்படுறீங்களே…” (குழந்தை நிலை)
கணவன் – “அதுக்காக, உன் வாய்க்கு வந்த படி பேச முடியுமா?” (பெற்றோர் நிலை)
மனைவி – “அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்…சரி, கொஞ்ச   நாட்களுக்கு நான் உங்க கூட பேசவேயில்லை, சரிதானே…உங்க இஷ்டம் போலச் செய்யுங்க…” (குழந்தை நிலை)
கணவன் – “அப்படி இல்லைம்மா… எனக்கு ஆபீசுலே நிறைய ப்ரஷர்…ஏதோ கொஞ்ச நேரம் வாட்ஸாப்பிலே ஃப்ரெண்ட்ஸ் கூட சேட் பண்ண ஒரு ரிலீஃபா இருகேன்னுதான்…அதுக்காக…என் கூட பேச மாட்டேன்…அப்படியெல்லாம் சொல்லாதேடா…” (குழந்தை – முதிர்ந்தவர்)
மனைவி – “நீங்க உங்க ஃப்ரெண்ட்சோட தாராளமா பேசிக்கோங்க…நான் ஒண்ணும் தடை சொல்லலை…ரொம்ப நேரம் அந்த ஃபோனையே பார்த்துக்கிட்டு இருந்தா கண்ணுக்கும் நல்லதில்லையே…அந்தக் கவலைதான் எனக்கு…” (முதிர்ந்தவர் – குழந்தை – பெற்றோர்)


அதாவது பல நேரங்களில் ஒருவருக்கொருவருடன் நமக்கிருக்கும் உறவை பெற்றோர் என்ற ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்தோ அல்லது மற்றவர்களை நாடியிருக்கும் ஒரு குழந்தையில் நிலையிலிருந்தோ செலுத்துகிறோம். (மனதளவில்) முதிர்ச்சியடைந்த ஒருவரின் நிலையிலிருந்து அணுகும் பொழுது மட்டுமே உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன. புரிதலும் ஏற்படுகின்றன. ஆனால், இந்த மூன்று நிலைகளிலிருந்தும் தான் பொதுவாக நம் உறவுகளை அணுகுகிறோம். அதனால் நமது உறவு முறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 

No comments:

Post a Comment