Total Pageviews

Wednesday, December 13, 2017

14.12.17 - இன்றைய சிந்தனை - கஷ்டமும் நஷ்டமும்

14.12.17 இன்றய சிந்தனை

அவ்வப்பொழுது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதும் கஷ்ட நஷ்டங்கள் வருவதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் சகஜமாக நடப்பதுதான். 

ஒரு சில நல்ல காரியங்கள் நமக்கு நடக்கும் பொழுது நாம் யாரும் ‘இது ஏன் எனக்கு வந்து சேர்ந்தது?’ என்று பொதுவாகக் கேட்பதில்லை. எந்த விதத்தில் அதற்கு நாம் தகுதியானோம், அல்லது அதைப் பெற்று மகிழ்வதற்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிப்பதில்லை.

ஆனால், அதே சமயம் ஒரு பொருளை இழந்து விட்டாலோ – பல சமயம் அது ஒரு சிறிய அற்பப் பொருளாக இருந்தால் கூட – மிகவும் மனம் வருத்தப் படுகிறோம். சமயத்தில் ஒடிந்து போய் விடுகிறோம். பலரை குறை சொல்கிறோம். நம்மையே நொந்து கொள்கிறோம். ஏன், இறைவனிடத்தில் கூடக் குற்றம் காண்கிறோம்.

ஒரு பொருளை இழக்கும் பொழுது அது நம் கையை விட்டுப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால், போய் விட்டது. விட்டுத் தொலைவோம் என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு பத்ரினாத் சென்றிருந்த சமயம் வரும் வழியில் ரிஷிகேசத்தில் ஒரு கடையில் விலை உயர்ந்த ஒருமுக ருத்ராட்சம் ஒன்று வாங்கினேன். அதை எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருந்தால் அதன் காந்த சக்தியால் பல நோய்கள் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த ருத்ராட்சத்தின் தரத்துக்கு உத்திரவாதமும் அந்த கடைக்காரர் எழுத்து மூலம் கொடுத்திருந்தார்.

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் திடீரென்று நான் கவனித்தேன். என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றில் கட்டிய வெள்ளிக் கம்பியிலிருந்து அந்த ருத்ராட்சம் எங்கோ விழுந்து விட்டிருக்கிறது. எப்பொழுது என்று தெரியவில்லை.  அதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பு வரை அந்த ருத்ராட்சம் கழுத்தில் இருந்ததைப் பார்த்த ஞாபகம் இருந்தது. நான் வழக்கமாக கழட்டி வைக்கும் இடத்திலெல்லாம் தேடிப் பார்த்தேன். அந்த ஒன்றிரண்டு நாட்களுக்கு நான் சென்ற இடங்களிலெல்லாம் கேட்டுப் பார்த்தேன்.

எங்கும் கிடைக்கவில்லை.

திடீரென்று எனக்குத் தோன்றியது. பத்ரினாத்துக்குப் போகும் பொழுது ருத்ராட்சம் வாங்கி அணிய வேண்டும் என்று எந்த நினைப்பும் எனக்குத் தோன்றியதில்லை. எதேச்சையாக வாங்கியதுதான். நவரத்ன கற்கள் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் அந்தக் கடைக்குப் போன பொழுது சரியான நவரத்ன கல் எதுவும் எங்களுக்குக் கிடைக்காத பொழுது எதேச்சையாக ருத்ராட்சத்தை வாங்கினேன்.

அந்த ருத்ராட்சம் எனக்கு வர வேண்டிய வேளை… வந்தது.

இப்பொழுது என்னை விட்டுப் போக வேண்டிய வேளை. ..போய் விட்டது.
அது என் கழுத்தில் இருக்கும் வரை எனக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதைச் செய்தது. அதனுடன் நான் பிறக்கவில்லை. அதனுடன் நான் போகப் போவதுமில்லை.

இடையில் வந்தது. இடையில் போய் விட்டது. ஒரு ரயில் பயண நண்பர் போல.
‘விடு’ என்று விட்டு விட்டேன். இப்பொழுது மனதில் எந்த சலனமுமில்லை. எந்த சங்கடமுமில்லை.

கடந்த சில வருடங்களில் இது போல ஒரு சில நஷ்டங்களை – பெரியதும் சிறியதுமாக - நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏனோ எனக்கு இதே போல எண்ணங்கள்தான் வந்திருக்கின்றன. பெரிய மன வருத்தம் எதுவும் என்னிடம் தங்கவில்லை. இறைவனுக்கு நன்றி.


(காஞ்சிப் பெரியவருடன் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றி இன்று முகநூலில் ஒருவர் எழுதியதைப் படித்ததன் தாக்கம் இந்தப் பதிவு.)

No comments:

Post a Comment