Total Pageviews

Thursday, September 18, 2014

Back to Tenkasi: A Progress Report: திரும்பிப் பார்க்கிறேன்.

தென்காசியைப் பற்றி என் வலைப்பதிவில் எழுதியதை பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தப் பதிவின் மூலமாக வெளி நாடுகளில் வசிக்கும் ஓரிருவரின் நட்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்து வருகிறது.

ஆகஸ்டில் அமெரிக்காவிலிருந்து தென்காசி திரும்பியவுடன், இங்கு நான் கவனித்ததை எழுதியிருந்தேன். எனக்கு நானே புலம்பிக்கொள்வதற்குப் பதிலாக வலைப்பதிவில் கொட்டித் தீர்த்துவிட்டேன்.

தென்காசி பெரிய கோவிலைச் சுற்றியிருக்கும் ரதவீதிகளில் மூன்றில் மட்டும் சிமெண்ட் ரோடு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு போட்டார்கள். பல இடங்களில் சிமென்ட்டுக்கு பதிலாக கற்கள்தான் தெரிகின்றன. தெற்கு ரதவீதி இன்னும் குண்டும் குழியுமாக இருக்கிறது என்று எழுதினேன். தினமலர் செய்தித்தாளிலும் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். என்ன ஆச்சரியம்!. இந்த வாரத்தில் மீதிப் பகுதிக்கும் மடமடவென்று தார் ரோடு போட்டுவிட்டார்கள். ஆஹா, வலையில் நாம் எழுதியதற்கு இப்படி ஒரு நல்ல பலனா என்று யோசித்தேன். பிறகு தான் தெரிந்தது. உள்ளாட்சித் இடைத் தேர்தல்கள் செப்டம்பர் பதினெட்டாம் தேதி நடைபெறப் போகிறது என்று, அதனால்தான் இவ்வளவு அவசரம் அவசரமாக ரோடு போட்டிருக்கிறார்கள். அதனால், அடிக்கடி ஏதேனும் தேர்தல்கள் நடப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.. இல்லையென்றால் எப்படி இருக்குமோ தெரியாது.

இரண்டாவதாக, குற்றாலத்தில் அருவியில் குளிக்கப் போயிருந்தேன். தண்ணீர் மிதமாகவே இருந்தது. சுற்றியுள்ள இடமும் முன்னைவிட சுத்தமாகவே இருந்தது. ஒன்றிரண்டு பேர் மட்டும், இன்னமும் சோப்புத் தேய்த்துக் குளிக்கிறார்கள். அரசாங்கம், நீதி மன்றம் என்ன செய்தால் என்ன. மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி இல்லையென்றால், மக்கள் ஒழுங்காக இல்லையென்றால் என்ன செய்ய முடியும். கிராமப்புறத்து மக்களுக்கு நகர்புற, நவீன வசதிகளும் வேண்டியிருக்கிறது. ஊறிப்போன அவர்களுடைய பழைய மனப்பான்மையையும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை 

இதற்கு இன்னொரு உதாரணம். தென்காசியில் ஒரு டிராஃபிக் சிக்னல் அருகே நின்று பார்த்தால், கொசுப்படை போல சாரை சாரையாக இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள். பயமுறுத்துகின்றன. யாரும் மிதி சைக்கிள் பயன்படுத்துவதில்லை. பல இடங்களுக்கு சீக்கிரம் போய் சேருவதற்கு வாகன வசதி தேவைதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்சு கொடுப்பதற்கு முன்னால், விதி முறைகளைப் பற்றி சரியாகச் சொல்லிக்கொடுக்கிறார்களா என்று தெரியாது. விதி முறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை சரி பார்ப்பதும் கிடையாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஓரிரு இடங்களில் காவல்காரர் வெறும் பார்வையாளராகத்தான் நிற்கிறார். அவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. மக்கள் விதிமுறைகளை காற்றில் விட்டுவிடத் தீர்மானித்துவிட்டால், யார்தான் என்ன செய்யமுடியும். இருபது அடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளை, பி.வி.சி பைப்புகளை சர்வ சாதாரணமாக காவல்காரர் முன்னமேயே மோட்டர் சைக்கிளில் பின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். ஒரு சிறிய தவறு போதும், பெரிய விபத்து நடப்பதற்கு. மோட்டர் சைக்கிளை இஷ்டத்துக்கு எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவார்கள். நாம் எதுவும் கேட்டுவிடக்கூடாது.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். அது ஒழுக்கத்துக்கும், விதி முறைகளை பின்பற்றுவதற்கும், நேர்மையாக இருப்பதற்கும் கூட, பொருந்தும். ‘மக்களாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் எதையும் திருத்த முடியாது’ என்று பாடிக்கொள்ள வேண்டியதுதான்.

மூன்றாவதாக, பத்து பன்னிரண்டு வயதுள்ள பல சிறுவர்கள் கூட பல சிறிய ரோடுகளில் ஸ்கூட்டர், மோட்டர் பைக் ஓட்டுகிறர்கள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களே இந்த விதி மீறலுக்கு உறு துணையாகவும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது நமது சிறுவர்களும் இளைஞர்களும் கெட்டுப்போவதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கலாமா?.


பல பெரிய நகரங்களில் வாழ்ந்துவிட்டு, பிடிக்காமல் தென்காசியைத் தேடி ஓடி வந்திருக்கும். ஒரு நண்பர் முன்பு என்னிடம் சொல்லியிருக்கிறார் “சார், இதையெல்லாம் மனசுல போட்டுக்காம, பொருட்படுத்தாம இருந்தாத்தான் நம்மால நிம்மதியா இருக்க முடியும்.” சரியான வார்த்தை. என்னுடைய ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக சென்ற வாரம் டாக்டரைப் பார்த்தபோது கூறினார். பல விஷயங்களை மனதில் போட்டுக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment