Total Pageviews

Thursday, September 11, 2014

பெர்ஸனாலிடி வளர்ச்சி: பகுதி 7A: வெற்றிப் பாதைக்கு ஏழு விதமான பெர்ஸனாலிடிகள்

2. திடமான நோக்கமுடைய பெர்ஸனாலிடி

குறிக்கோள் மட்டும் இருந்தால் போதுமா? போதாது. அதை நிறைவேற்றும் உறுதியான, திடமான நோக்கமும் வேண்டும். குறுகிய காலத்திலேயே குறிக்கோளை காற்றில் விட்டுவிட்டால் எப்படி?

இந்தக் குறிக்கோளை அடைவதற்கு எனக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. என்னால் அடையமுடியும் என்கிற தீவிர நம்பிக்கை வேண்டும்

முதலில் நமது குறிக்கோளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நமது குறிக்கோளை கொட்டை எழுத்தில் எழுதிவைத்து தினமும் நம் கண் முன்னே படும்படியாக வைத்திருக்க வேண்டும். குறிக்கோளை அடைவதினால் ஏற்படப்போகும் நன்மைகளைப் பற்றியும், உங்களுக்கு  ஏற்படும் மனத் திருப்தியைப் பற்றியும், சந்தோஷத்தைப் பற்றியும், பெருமையைப் பற்றியும் மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதாகவே கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

“3-2-1” என்கிற பயிற்ச்சியை இதற்கு நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆழ்ந்த நிலைக்குப் போய் உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறி விட்டதாகவே கற்பனை செய்து பார்த்து அதில் கிடைக்கும் நிம்மதியை, சந்தோஷத்தை அனுபவியுங்கள். இது மிகவும் முக்கியமான பயிற்சி. பலரின் கற்பனைகளில் உதித்ததுதான் ஆகாய விமானம், தொலைபேசி, ராக்கெட், இன்டெர்னெட்…எல்லாமே.
·    
  •        உங்கள் குறிக்கோளின் மீது உங்களுடைய தீராத காதல், 
  •    தை அடைய உங்களுக்கு தகுதி இருக்கிறது, உங்களால் முடியும் என்ற நம்பிக்கை, 
  •       அது நடந்து முடிந்துவிடும் என்ற உங்களது எதிர்பார்ப்பு

இந்த மூன்றும்தான் உங்கள் வெற்றிக்கு அடிகோல். இந்த மூன்றும்தான் உங்களுக்கு சுய நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும், சுய மரியாதையையும் உண்டாக்குகிறது.

“ஒரு மனிதனுக்கும் வாழ்க்கையில் அவன் அடைய விருப்பப்படும் பொருளுக்கும் நடுவே நிற்பது என்னவென்றால் முயற்சி செய்வதற்கான அவனுடை மனத்திண்மையும் விருப்பப்பட்டதை அடைவோம் என்கிற தீவிர விசுவாசமும்தான்.” என்று வெற்றிகண்ட ரிச்சர்ட் எம் தேவோஸ் என்ற அமெரிக்க தொழிலதிபர் கூறியிருக்கிறார்.

அடுத்த படி, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுவது. இதை பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும், அந்தந்த துறையில் சிறந்து விளங்குபவர்களிடமும், ஆசிரியர்களிடமும், உற்ற நண்பர்களிடமும் கலந்தாலோசித்தும் தீர்மானிக்கலாம்.

அடுத்ததாக, திண்ணத்தில் வழுவாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிப்பது. தினமும் அதிகாலை நேரத்தில் எழுந்தவுடன் இந்த உறுதியை 3-2-1 பயிற்சி செய்து ஆழ்நிலையிலிருந்து எடுப்பது நல்ல பயனைத் தரும்.

அடுத்ததாக வருவது, திட்டத்தை செயல்படுத்துவது. திட்டமிட்டபடி செயலாற்றுவது.  நடவடிக்கைகள் எடுப்பது. செயல்களில்லாமல் பலன்களில்லை. இது கலி காலம். ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பலன் உண்டு. அதை அனுபவித்தேயாக வேண்டும்.
செயல்கள் எப்படி இருக்கவேண்டும்?
  •          ஆக்க பூர்வமாகவும்,
  •         தொடர்ச்சியாகவும்,
  •         விடா முயற்சியுடன் கூடியதாகவும்,
  •         கொள்கை மாறாததாகவும் இருக்க வேண்டும்.

எதிர்பாராத தடங்கல்கள், சவால்கள் வரலாம். திட்டத்தை திருத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள நேரிடலாம். பின்னடைவுகள் நேரிடலாம். இடையூறுகளைக் கண்டு மனம் தளரலாம். இதையெல்லாம் மீறி நமது செயல்களை, முயற்சிகளைத் தொடர வேண்டும். முடிவின் மீது நம்பிக்கை வைத்தால் எதுவுமே தடங்கலாகத் தெரியாது. இதற்கும் 3-2-1 பயிற்சியைச் செய்யலாம்.

உங்கள் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கனவு காணுங்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நடந்து முடித்துவிட்டதாகவே கனவு காணுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் உண்டு.

எவ்வளவுதான் நமது விருப்பங்களின் மீது தீவிரப் பற்றுதலுடன், நாம் விடாமுயற்சி செய்தாலும் நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எல்லாவற்றையும் ஏதோ ஒரு நியதிப்படி நடத்திக் கொண்டிருக்கிறது. என்பதையும், அந்த சக்தியை மீறி எதுவும் நடக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அந்த அருள் நமக்கு கண்டிப்பாக வேண்டும். 
அந்த அருள் இல்லாமல் வெற்றியில்லை.

அந்த அருளை எளிதாகப் பெறுவது எப்படி?

அதற்கு, முக்கியமான வழி உங்கள் பெற்றோர்களின் ஆசிகளைப் பெறுவதுதான்.. பெற்றோர்களிடம் உங்களுக்கு கோபமோ, வருத்தமோ, காயமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. அதேபோல உங்கள் பெற்றோருக்கும் உங்கள் மேல் எந்தக் கோபமோ, வருத்தமோ, காயமோ குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. எதாக இருந்தாலும் உங்கள் பெற்றோரை மன்னித்துவிட வேண்டும். அதே போல, யாருடைய தவறாக இருந்தாலும் உங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுவிடவேண்டும். அவர்கள் மனம் புண்படக்கூடாது. அவர்கள் ஆசியுடனேயே நீங்கள் எதையும் செய்ய வேண்டும். அவர்களை மீறி செய்யக்கூடாது. அவர்கள் தான் நமக்கு இந்த வாழ்வை கொடுத்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

3-2-1 பயிற்சியில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள சில மாதிரி வாசகங்கள்:

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் (என்னுடை நிலைமை முன்னேறிக் கொண்டிருக்கிறது) அல்லது (என் வாழ்க்கையில், என் முயற்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்).”

“என்னால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. இன்னொருவரால் செய்ய முடியும் என்றால், அந்தக் காரியத்தை என்னாலும் செய்யமுடியும்.”

“என் விருப்பங்களுக்கு நான் தகுதியானவன். என் விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும். அதற்காக நான் விடா முயற்சியுடன் உழைக்கவும், என் தகுதிகளையும், திறமைகளையும், ஆற்றல்களையும், அறிவையும், வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். என் முயற்சிகள் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“எனக்கு என்னுடைய குறிக்கோள் மிக முக்கியமானது. அதை அடைய எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

“மற்றவர்களின் எதிர்மறைக் கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை. என் குறிக்கோளில் நான் உறுதியாக நிற்கிறேன்.”

‘தடைகளை தடங்கல்களாக எடுத்துக்கொள்ளாமல், சவாலாக ஏற்று அந்த தடைகளை நீக்குவதற்கான வழி முறைகளை எப்பொழுதும் தேடிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

“எனக்கு ………… ….…… பற்றிய பயம் இருந்தது. ஆனால், பயம் என்பது நிஜம் அல்ல. உண்மை எனக்கு விளங்கிக்கொண்டிருக்கிறது. அதனால், அந்த பயம் என்னை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறது.”

எல்லா வாசகங்களும் நிகழ்காலத்தில் இருப்பது அவசியம். (எதிர்காலம் என்பது நமது கற்பனையில்தான் இருக்கிறது. நிகழ்காலம் என்பது மட்டும்தான் நிஜம்.)

இந்தப் பயிற்சியை நான் நடத்தும் பெர்ஸனாலிடி வகுப்புகளில் மாணாக்கர்களுக்கு நடத்திக் காட்டியிருக்கிறேன். நல்ல பலனைத் தந்திருப்பதாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். நீங்களும்தான் முயற்சி செய்து பாருங்களேன்………………….

(என்னடா, “3-2-1” என்ற யுக்தியைப் பற்றி அடிக்கடி என் கட்டுரையில் எழுதுகிறேனே என்று நீனைக்கிறீர்களா?. அதற்குக் காரணம் இருக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.)

                                                                                                                                       தொடரும்………….

No comments:

Post a Comment