Total Pageviews

Wednesday, May 30, 2018

22.05.18 என்னை வியக்க வைக்கும் (திகைக்க வைக்கும்?) விஷயங்கள்: 2


 கட்டுப்பாட்டை பிறந்த குழந்தையிலிருந்து முதியோர் வரை யாரும் விரும்புவதில்லை. ஆனால், மற்றவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதுவாக எல்லோருக்கும் மேலோங்கி நிற்கிறது. 

    ‘நான் யார் வழியிலும் போக மாட்டேன். ஆனால், என் வழியில் மற்றவர்கள் வர வேண்டும்,’ என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக, பெற்றோர்கள் 

 தங்கள் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதைத்தான் பொதுவாக விரும்புகிறார்கள். ஆனால், கணவனை மனைவியோ அல்லது மனைவியைக் கணவனோ அல்லது இவர்களை அவர்கள் பெற்றோர்களோ கட்டுப்படுத்துவதை விரும்புவதில்லை. அதுவும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னாலேயே தனது சுதந்திரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அதே சுதந்திரத்தை குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். 

   ஒரு குழந்தை தன் தாய் தந்தையர் என்ன செய்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கூர்மையாக கவனிக்கிறது என்பதை படித்தவர்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட புரிந்து கொள்வதில்லை. அல்லது அதை உதாசீனப்படுத்துகிறார்கள். 

     தன் குழந்தை எதை செய்வதை தான் விரும்பவில்லையோ அதை பெற்றோர் செய்யாமலிருத்தல் நல்லது. அல்லது தன் குழந்தை எதை செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ அதை அந்தப் பெற்றோரும் செய்து காட்டி ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இது ஏன் பல பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை?

   இதை நான் எழுதுவதால் நான் இது போன்ற தவறை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. இந்தத் தவறை நானும் செய்திருக்கிறேன். இன்று வருந்துகிறேன்.


No comments:

Post a Comment