Total Pageviews

Friday, February 05, 2016

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 D – ஷெக்கெல்ட்டனின் கதை

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 D – ஷெக்கெல்ட்டனின் கதை

ஜேம்ஸ் கெயிர்டில் பயணம்

இறுதியில் ஏப்ரல் 24, 1916 அன்று எலிஃபென்ட் தீவில் மீண்டும் பனி சூழ்ந்துகொள்வதற்கு ஒரு நாள் முன்னம் ஜேம்ஸ் கெயிர்ட் படகில் ஷேக்கெல்ட்டன் தலைமையில் வொர்ஸ்லி, க்ரீன், மேக்னீஷ், மேக்கார்த்தி மற்றும் வின்சென்ட் என்ற ஐந்து பேரும் எலிஃபென்ட் தீவில் தங்கிவிட்ட தங்கள் குழுவினரை மீட்பதற்கு ஏற்பாடு செய்ய அந்தத் தீவை விட்டு வெளியேறினர்.

அந்தப் படகுப் பயணம்தான் சரித்திரத்தில் மிக அபாயகரமானதும், வியக்கக்கூடியதும், நம்ப முடியாததுமான ஒரு பயணமாக அமைந்தது.

ஒரு நாளைக்கு 60 முதல் 70 மைல் வரை பதட்டமான கடலில், கடும் குளிரில் தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த வசதியுமில்லாமல் அந்த அறுவர் பயணம் செய்தனர். ரீயிண்டர் மான்களின் தோலினால் செய்யப்பட்ட நான்கு பைகள் தூங்குவதற்கு இருந்தன. அந்தத் தோல் பைகளின் முடிகள் தண்ணீர் பட்டு, பட்டு உதிர்ந்ததில் பயனற்றுப்போயின. மேலும் அந்த முடிகள் படகின் பம்புகளை அடைத்துக்கொண்டதில் படகில் உட்புகுந்த தண்ணீரை வெளியேற்றுவதிலும் தடங்கல்களை ஏற்படுத்தின.

மேலும், படகோ கனமில்லாதது. தண்ணீரில் சரியாக மிதந்து செல்லவேண்டுமானால் எடை சேர்க்க வேண்டும். அதனால், அவர்கள் சேகரித்திருந்த கருங்கட்டைகளையும், அதிக கனமான பொருட்களையும் அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருந்ததுபருவநிலையும் மாறிக்கொண்டே இருந்தது. கடும் புயல் காற்று வீசியது. வெட்ப நிலை குறையும் பொழுதெல்லாம் படகை சுற்றி வெளியேயும், உள்ளேயும் மீண்டும் பனிக்கட்டிகள் சேர்ந்துகொண்டு படகின் கனத்தைக் கூட்டின.  இருக்கும் கருவிகளை வைத்தே அந்த பனிக்கட்டிகளை உடைத்து வெளியே வீசினார்கள். படகைக் காப்பாற்றும் பொருட்டு இன்றியமையாத பொருட்களிலிருந்தும் கனமானவைகளை கடலில் வீசி எறிந்து விட்டார்கள். உதிரியாக வைத்திருந்த பல கனமான துடுப்புகள், தூங்கும் படுக்கைகள் கடலுக்குள் வீசியெறியப்பட்டன. குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது.

ஒரே ஒரு ஆறுதல். அவர்கள் எடுத்துச் சென்ற ஒரு பழைய அடுப்பின் உதவியோடு நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சூடான உணவு தயாரித்துக்கொள்ள முடிந்தது.

பதட்டமான கடலில் போகும் வழியில் ஒரு இடத்தில் பலத்த அலைகளுக்கு நடுவே படகு ஒரு ஆழ் குழியில் விழுந்து விட்டது. அத்தோடு படகு அதிகமாக ஆடாமல் இருப்பதற்காக அதில் கட்டி விடப்பட்டிருந்த கனத்த கான்வாஸ் துணிகளாலான கடல் நங்கூரமும் கடலில் சென்று விட்டது.

நரம்புகளை பாதிக்கக்கூடிய பனிக்கடி ஷேக்கெல்டன் குழுவினரை பயங்கரமாக தாக்கியது. அந்த பருவநிலையில் படகை செலுத்துவதும் கடினமாக இருந்தது.

ஏழாவது நாள் மேகங்கள் விலகி சூரியன் வெளியே வந்தான். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து வொர்ஸ்லி 380 மைல்கள் கடந்து வந்திருப்பதாக கணக்கிட்டார்தென் ஜியார்ஜியாவுக்கு பாதி தூரம் வந்தாகிவிட்டது. அவசரம் அவசரமாக நனைந்திருந்த எல்லா உடைகளையும், மற்ற பொருட்களையும் வெயிலில் உலர வைத்தனர். பனிக்கட்டியின் அடர்த்தியும் குறைந்திருந்தது. பார்ப்பாய்ஸ் போன்ற 
கடல்வாழ் இனங்களும் வெளிவரத் தொடங்கியிருந்தன

மே, 1916

மே 5, பதினோறாவது நாள். ஷேக்கெல்டன் கப்பலை செலுத்திக்கொண்டிருந்தார். தீடிரென்று கடல் அலைகள் கொந்தளித்தது போல் இருந்தது. நேரெதிரே ஒரு ராட்சச அலை வந்து கொண்டிருந்தது. தன்னுடைய 26 ஆண்டு அனுபவத்தில் அது போன்ற பெரிய அலையை அவர் பார்த்ததில்லைகடல் பொங்கிக்கொண்டிருந்தது. ‘கடவுளே, காப்பாற்று ஒரு உரக்க பிரார்த்தனை செய்தார்.

ஒரு சில நேரம் ஒரே ஸஸ்பென்ஸ். என்ன நடக்குமோ என்று.  

வெள்ளை நுரை கொண்ட கடல் அலைகள் எங்கும் தெரித்தன. ஒரு ஷாம்பெயின் பாட்டிலிலிருந்து அதன் கார்க் எப்படி துடித்து வேகமாக வெளியே வருமோ அதுபோல அவரின் படகு அந்த ராட்சச அலையின் சீற்றத்தில் தூக்கி எறியப்பட்டது.

ஆனால், என்ன ஆச்சரியம் படகு தப்பி விட்டது.

பாதிப் படகில் தண்ணீர் புகுந்து கடலில் மிதந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. படகில் எது கையில் கிடைத்ததோ அதை பயன்படுத்தி உயிரை கையில் பிடித்துக்கொண்டு தண்ணீரை வெளியேற்றினர்இறுதியில் படகு பிழைத்தது.

மே 7, பதிமூன்றாவது நாள் வொர்ஸ்லி மீண்டும் கணக்குப் பண்ணிப் பார்த்ததில் தென் ஜியார்ஜியாவின் வடமேற்கு முனைக்கு அதிக பட்சமாக இன்னும் நூறு மைல்கள் தூரமே இருக்கும் என்று கண்டுகொண்டார்.

மே 8, பதினான்காவது நாள் படகில் மிதந்துகொண்டே உதவிக்குக் ஆட்களைத் தேடினர். கடல் பறைவகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறக்கத் தொடங்கின. மதியத்துக்கு பிறகு தரை தென்பட்டது.

ஏழே நாட்களில் தென் ஜியார்ஜியாவுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்ற அவர்கள் கணக்கு பொய்யானது.

புதிய சவால்கள்

படகை தரைக்குக் கொண்டு செல்வது இன்னொரு பெரிய சவாலாக அமைந்தது. ஆழமில்லாத பகுதிகளில் செங்குத்தான பாறைகள் (REFFS) எங்கும் காணப்பட்டன. தரைப்பகுதிக்கு மிக அருகிலிருந்தும் அவர்களால் தரையைத் தொடமுடியவில்லை. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலையில் அடுத்த நாள் காலை வரை காத்திருந்தனர்.
மறு நாள் காலை மீண்டும் பருவ நிலையில் மாற்றம். பலமான காற்று வீசி புயலாக மாறியது. மீண்டும் கடலுக்குள் படகு தள்ளப்பட்டு தரை கண்களை விட்டு விலகியது. மதியத்துப் பின் அலைகளால் மீண்டும் கரையோரம் தள்ளப்பட்டனர். மீண்டும் ஆழமில்லாத பாறைகள் வரவேற்றன. மாலை வரை அப்படியே படகு ஊசலாடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நம்பிக்கை இழக்கலாயினர்.

மாலையில் மீண்டும் காற்றின் வேகமும் திசையும் மாறியது. அதன் வேகம் குறையத் தொடங்கியது.

மே 10-ஆம் தேதி காற்றின் வேகம் மிகவும் குறைவாக இருக்கவே தரையில் அன்று தரையில் எப்படியும் இறங்கிவிட வேண்டும் என்ற முடிவுடன் இறங்குவதற்கு சரியான இடத்தை தேடினர். கடலடிப் பாறைகள் அச்சுறுத்தினபல முறை போராடிய பின்பு இறுதியில் இருட்டும் வேளையில் ஒரு சிறிய தோப்பு கண்ணில் பட்டது. துருப்புகளை வேகமாகத் தள்ளினர். பாறைகளுடன் மீண்டும் மோதல். ஒரு பெரிய கடலலை படகை உள்ளே பிடித்துத் தள்ளியதில் படகு தரையைத் தொட்டது.


அப்படியாக தென் ஜியார்ஜியாவின் கிங் ஹாக்கன் குடா என்ற இடத்தில் காலெடுத்து வைத்து விட்டனர்.    ஃப்ராங்க் வொர்ஸ்லியின் படகை செலுத்தும் திறமையினாலும் ஷேக்கெல்டனின் மன உறுதியினாலும் அந்த அறுவர் குழு ஒரு பெரிய போராட்டத்தை கடலில் நடத்தி கரை சேர்ந்தனர். வழியில் நான்கு முறை மட்டுமே வொர்ஸ்லியால் சூரியனைக் கண்டுகொள்ள முடிந்தது. ஏப்ரல் 26, மே 3, 4 மற்றும் 7. மற்ற நாட்களில் பெரும்பாலும் இருட்டுக்குள்ளேதான் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. குத்து மதிப்பாக ஒரு நேர் கோட்டை வரைந்துகொண்டு அதன் வழியாகவே படகை செலுத்தி வந்திருக்கின்றனர்

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

முந்தைய பகுதிகளுக்குச் செல்ல:




No comments:

Post a Comment