Total Pageviews

Wednesday, March 13, 2019

13.03.19 பயம்


பய (அச்சம்) உணர்ச்சி இல்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உணர்சி உயிரனங்களுக்கு தங்கள் தற்காப்புக்காகக் கிடைத்த வரப் பிரசாதம். ஒரு ஆபத்து தோன்றுகின்ற போது இந்த பயமும் தோன்றுகிறது. இந்த பய உணர்சி மட்டும் இல்லையென்றால் உயிரனங்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு பயம் தோன்றும் பொழுதுதான் தன்னை பாதுகாத்துக் கொள்ள போரிடும் தன்மை உருவாகும் அல்லது அந்த ஆபத்தை விட்டு விலகி ஓடத் தோன்றும். ஆங்கிலத்தில் இதை “FIGHT OR FLIGHT RESPONSE” என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ஆபத்து  நிஜமாக இருந்தால் ஏற்படக்கூடியது பயம். ஆனால், ஒரு ஆபத்து இருப்பது போலவோ அல்லது ஆபத்து வரும் என்று நினைத்தோ பயப்படுவது ஒரு கவலையை, பதட்ட நிலையை (ANXIETY) உருவாக்கும். பயமும் இந்தப் பதட்டமும் பல நேரங்களில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே இருக்கும்.

எதற்காகப் பயப்படுகிறோம் என்பது ஆளாளுக்கு வேறுபடக் கூடும்.  நான் பார்த்த வரையில் மூன்று வகையான பரவலான அச்சங்கள் 
முக்கியமானவை.
        ·         எதிர்காலத்தைக் கண்டு பயம் (Fear of the Future)
        ·         தெரியாததைக் கண்டு பயம் (Fear of the Unknown)
        ·         இழப்பைக் கண்டு பயம் (Fear of Loss)

அளவுக்கு மீறிய அச்சம் வரும் பொழுது அதை ஆங்கிலத்தில் “phobia” என்றழைக்கிறார்கள். ஃபோபியாக்கள் பல வகை. உதாரணத்துக்கு:
        ·         அக்ரோ ஃபோபியா – உயரத்தைக் கண்டு பயம்
        ·         க்ளாஸ்ட்ரோ ஃபோபியா – நெரிசலான இடங்களைக் கண்டு பயம்
        ·         அகோரா ஃபோபியா – வெட்ட வெளியைக் கண்டு பயம்
        ·         அரக்னோ ஃபோபியா – சிலந்தி வகைகளைக் கண்டு பயம்

ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டு சூழ்னிலைகளில்தான் பயம் தோன்றுகிறது.

முதலாவது, ஏதோவொன்று நம்மிடம் இருக்கிறது அல்லது இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை இழந்து விடுவோமோ என்று பயம்.

இரண்டாவது, ஏதோவொன்றை நாம் வெறுக்கிறோம். அதை நாம் விரும்புவதில்லை. அது இப்பொழுது  நம்மிடம் இல்லை. அது, நம்மிடம் வந்து விடுமோ (அல்லது தொற்றிக் கொண்டு விடுமோ) என்று பயம்.

இப்படியும் சொல்லலாம்.  நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை நாம் நேசிக்கிறோம். அதை இழந்து விடுவோமோ என்று பயம். அல்லது ஏதோ ஒன்றை நாம் விரும்பவில்லை, நேசிக்கவில்லை. அது நம்மிடம், நமக்கு வந்து விடுமோ என்று பயம்.

என்னிடமும் அப்படி ஒரு பயம் பல ஆண்டுகளாக குடிகொண்டிருந்தது. Anticipatory fear என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “முன் பயம்” என்று சொல்லிக் கொள்ளலாம். ஓரு பிரச்சினை வரும் பொழுது என்னென்னவெல்லாம் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்று மனதில் கற்பனை பண்ணிக்கொண்டு பயப்படுவது. அதனால் ஏற்படும் ஒரு பதட்ட நிலை. கவலை.

சரி, இந்தப் பயத்தை எப்படிப் போக்குவது?

பல பெரியவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த, கற்றறிந்த முறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். நான் எப்படி என் பயத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறேன் அல்லது அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் பற்றி எழுத விருப்பம். இது எனது அடுத்த பதிவில் நீங்கள் படிக்கலாம்.

அதற்கு முன்…

பயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்களுக்கு பயம் இருந்திருக்கிறதா? பதட்ட நிலையைக் கண்டிருக்கிறீர்களா? அதை எப்படி போக்கிக் கொண்டீர்கள்? ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவம் மற்ற பலருக்கு நல்ல பாடமாக இருக்கக் கூடும். அப்படி ஒரு பயம் அல்லது பதட்டம் தனக்கு இருக்கிறது என்பதைத் தெரியாமல் கூட பலர் இருக்கலாம். அல்லது தெரிந்தும் வெளியே சொல்லத் தயங்கி மனதுக்குள்ளேயே வைத்திருந்து அவதிப் படலாம். அவர்களுக்கு நாம் கற்றுக் கொண்ட முறைகள் பயன்படலாம். முக்கியமாக இளைய சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இதைப் பற்றி நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்குளைச் சொல்லக்கூடாது?

இரண்டு  நாட்களில் என்னுடைய வழி முறைகளை அலசலாம்.

No comments:

Post a Comment