Total Pageviews

Friday, January 15, 2016

பகுதி 4 – வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பொதுவாக பதட்டமான ஒரு சூழ்னிலையே நிலவி வந்தது. நான் குவாஹாத்தி போய்ச் சேர்ந்த சில மாதங்களிலேயே பொதுத் தேர்தல்கள் நடந்தன. அதுவரை ஒரு புரட்சி இயக்கமாக செயல்பட்டு வந்த ‘ஆஸு’ (AASU என்ற மாணவர்களின் அமைப்பு தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் கைவிட்டுவிட்டு பொதுத் தேர்தல்களில் ‘ஏ.ஜீ.பி’(AGP) என்ற அரசியல் கட்சியாக ஈடுபட்டது. அதுவரை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவ்வளவு கோபம். ஏ.ஜீ.பி அசுர மெஜாரிட்டியுடன் பதவிக்கு வந்தது. ப்ரஃபுல்ல குமார் மொஹாந்தோ மிக இள வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டசபை முழுவதுமே இளைஞர்கள். நேற்றைய மாணவர்கள் இன்றைய அரசர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருந்தது.

வங்கியின் பயிற்சிப் பள்ளி

எங்கள் வங்கியின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வங்கிப்பணியில் பயிற்சி கொடுக்க ஒரு வங்கிப் பயிற்சி பள்ளி திறக்கவேண்டியிருந்தது. அதுவரை அலுவலர்களை பயிற்சிக்கு கொல்கத்தாவுக்கே அனுப்ப வேண்டியிருந்தது. அதிக நாட்கள் பயணத்திலேயே வீணாகிப்போய்விடும். போக வர பயணச் செலவும், தங்குவதற்கானச் செலவும் அதிகம். எங்களிடமோ அலுவலர்களும் அதிகாரிகளும் கணக்காகவே இருந்தனர். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் கிளைகளில் வேலையும் மந்தமாகிவிடும். அதனால் பயிற்சிக்கு அனுப்புவதற்கே கிளை மேலாளர்கள் தயங்கினர். அதனால் குவாஹாத்தியிலேயே ஒரு பயிற்சிப் பள்ளி திறப்பது மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

பயிற்ச்சிப் பள்ளி தொடங்குவதற்கு இடத்தைத் தேடினோம். குவாஹாத்தியில் ஜூ ரோடில் சரியான இடம் கிடைத்தது. அந்த இடத்தின் சொந்தக்காரர் சட்டசபை அலுவலகத்தில் செயலராக பணி புரிந்து வந்தார். 

திடீரென்று ஒரு யோசனை. பயிற்ச்சிப் பள்ளியை திறப்பதற்கு முதலமைச்சரை அழைத்தாலென்ன என்று.

ஆனால் முதலமைச்சரை எப்படி சந்திப்பது? அவரோ புதியவர். மிகவும் பிஸியாக இருப்பவர். காலை வேளையில் சென்றால் முதலமைச்சரை எளிதாக சந்திக்கலாம் என்று எங்கள் பயிற்சிப் பள்ளியின் இடத்துக்கு சொந்தக்காரர் கூறினார்.

எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் போனோம். முதலமைச்சரின் வீட்டில் நுழைந்தோம். ஒரு செயலர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று அமர்த்தினார். ஒரு சில நிமிடங்களில் ப்ரஃபுல்ல குமார் மொஹந்தோ வரவேற்பரைக்குள் வந்தார். மிக எளிமையான, இளமையான தோற்றம். அவருடைய குறுந்தாடி மிகப் பிரபலம். அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த நோக்கத்தை எடுத்துக்கூறினேன். தன் செயலரிடம் எங்கள் முன்னரே கலந்தாலோசித்தார். உடனேயே தேதியையும் நேரத்தையும் கொடுத்தார். சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவா என்பவரையும் நாங்கள் அழைக்க இருப்பதாகக் கூறினோம். மிக்க மகிழ்ச்சி என்றார். அவர்கள் இருவரும் அப்பொழுது நல்ல நண்பர்களாக இருந்தனர். பின்னால், சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவாவையும் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குவதற்கு அழைத்தோம். உடனேயே ஒப்புக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் நடப்பது போல், எங்கள் பள்ளிக்கு முதலமைச்சர் வருவதற்கு முதல் நாள் அவசர அவசரமாக தார்ச் சாலை போட்டனர். வெற்றிகரமாக எங்கள் வங்கியின் பயிற்ச்சிப் பள்ளி அசாமில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு வங்கியின் மேலதிகாரிகளும் வந்திருந்தனர். வடகிழக்கு மானிலங்களில் பலம் பொருந்திய வங்கிகளாக இருந்த பாரத ஸ்டேட் வங்கி, யுனைடெட் வங்கி, யூ கோ வங்கிக்கு அடுத்த படியாக அசாமில் காலூன்றிய மற்ற வங்கிகளில் முதலாவதாக எங்களது வங்கியின் பயிற்சிப் பள்ளி அமைந்தது. அசாம் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு விவசாயத்துக்கும் சிறு தொழிலுக்கும் அதிக கடன் வசதி கொடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் வலியுறித்தினார். அசாமில் பொதுவாக எல்லா இடங்களிலும் வங்காளிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள்தான் அதிகம் படித்தவர்களாக இருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் கூட ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான தோட்டங்கள் வங்காளத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மார்வாரி சமூகத்தினருக்கே சொந்தமாக இருந்தது. ப்ளைவுட் தொழிற்சாலைகளும் அப்படியே. அரசாங்க உத்யோகத்தில் பெரும்பாலும் வங்காளிகள்தான். வியாபாரம் வங்காளிகளின் கையிலும் மார்வாரி சமூகத்தினர் கையிலும்தான் இருந்தது. கூலி வேலை செய்தவர்கள் பெரும்பாலும் பீஹாரிகள். அசாமியர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் ஏழைகளாகவும் இருந்தனர். அதனால் வங்காளிகளுக்கும் அசாமியர்களுக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்தது. தங்களது வாழ்வாதாரத்தை வங்காளிகள் பறித்துக்கொண்டு விட்டனர் என்றே பெரும்பாலான அசாமியர்கள் நம்பி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இன்னொரு நாள்

ஒரு நாள் காலை பத்தரை மணியிருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகம் குவாஹாத்தியில் பிரதான சாலையான ஜீ.என்.போர்டலாய் சாலையில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அதுதான் குவாஹாத்தியின் மௌண்ட் ரோடு. நாங்கள் எங்கள் அலுவலகத்தில் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சாலையில் மிதமான வாகனப் போக்குவரத்துதான் இருந்தது. அதனால் வாகனங்களின் சத்தம் அதிகமாக இல்லாமலிருந்தது.  

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது போலிருந்தது. ஏதோ வாகனத்தின் டயர்தான் வெடித்துவிட்டது என்று நினைத்து நாங்கள் அதிகமாக அந்த சத்தத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து பல வாகனங்கள் வேக வேகமான ‘சர், சர்’ என்ற சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பல போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகளின் இரைச்சல் எங்கள் அலுவலகம் முன்னே. என்னவோ ஏதோ என்று பதற்றத்தில் எங்கள் அலுவலகத்திலிருந்த பால்கனிக்கு விரைந்தோம்.

எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே யூ கோ வங்கியின் கிளை இருந்தது. அந்த வங்கியின் மேலாளரை ஒரு கொள்ளைக்காரக் கும்பல் சுட்டுத் தள்ளி வங்கியின் இரும்புப்பெட்டியிலிருந்து கணிசமான பணத்தையும் கொள்ளையடித்து நிமிடத்தில் ஓடிவிட்டனர்.  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்திருக்கிறது. வங்கியின் பல வாடிக்கையாளர்களும் மற்ற அலுவலர்களும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பட்டப்பகலில் இப்படி ஒரு துணிச்சலான கொள்ளை. கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்து மேலாளரிடம் துப்பாக்கியைக் காட்டியிருக்கிறார்கள். மேலாளர் அசையாமல் இருந்திருந்தால் அவரை கொள்ளைக்காரர்கள் விட்டுவைத்திருப்பார்களோ என்னவோ. அவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை அழுத்த முயற்சி செய்திருக்கிறார். சுட்டுவிட்டார்கள். வேறு யாருக்கும் பாதகம் ஏற்படவில்லை. சில லட்சம் ரூபாய் வங்கிக்கு நஷ்டம். மிகவும் சங்கடமாக இருந்தது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வங்கிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக உயர் மட்ட கூட்டம் நடந்தது. வங்கிகளுக்கு பல கடுமையான உத்திரவுகளை காவல் துறையினர் பிறப்பித்தனர். 

அவற்றையெல்லாம் அமல்படுத்த நடைமுறையில் பல சிரமங்கள் இருந்தன.

இருந்தும்…

ஒரு சில மாதங்களிலேயே யுனைடெட் வங்கியின் முக்கிய கிளையில் இன்னொரு பட்டப்பகல் கொள்ளை. வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்வதற்காக பணத்தை வங்கியின் பாதுகாப்பு வண்டியில் ஏற்றிகொண்டிருந்தனர். துப்பாக்கியேந்திய வீரர் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஒரு சில நிமிடங்களில் வண்டியில் ஏற்றப்பட்ட பல கோடி ரூபாய்கள் அடங்கிய பணப்பெட்டியுடன் கொள்ளையர்கள் மறைந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் சல்லடை போட்டு அரித்ததில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தொலைந்த பணத்தில் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

வங்கிகளை குறி வைத்து இப்படி அடிக்கடி கொள்ளைகள் அங்கங்கே நடந்து வந்தன. எவ்வளவோ முயன்றும் எல்லா வங்கிகளிலுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாகக் குறைவாகவே இருந்தன. நிர்வாகிகளை அலுவலர்கள் குறை கூறினர். பாதுகாப்பு உணர்ச்சியில்லாமல் செயல்படுவதாக அலுவலர்களை நிர்வாகிகள் குறை கூறினர்.


பொதுவாக வடகிழக்கு மானிலங்கள் எல்லாவற்றிலுமே இதே கதைதான். 

                                                       .... இன்னும் முடியவில்லை

No comments:

Post a Comment