Total Pageviews

Saturday, November 05, 2016

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் எதுவுமில்லை.

சிறு கதைகள் அடங்கிய ஒரு புதிய புத்தகம் தமிழில் எழுத வேண்டும் என்பது இந்த வாரத்தின் தீர்மானம். என் சிறு வயதிலிருந்தே துப்பறியும் கதைகளையும், வீர சாகசங்களைப் பற்றிய கதைகளையும் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, தமிழ்வாணனின் ‘துப்பறியும் சங்கர்லால்’ ஜாவர் சீதாராமனின் ‘உடல், பொருள், ஆனந்தி’, வீர விஜயன் என்ற தொடர் சித்திரக் கதை (எழுதியவர் பெயர் ஞாபகமில்லை). பின்னர் ஆங்கிலத்தில் ஏர்ல் ஸ்டேன்லி கார்டனர் எழுதிய பெரி மேசன் நாவல்கள், ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், சாண்டில்யனின் பல சரித்திரக் கதைகள், கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படி எத்தனையோ கதைப் புத்தகங்களைப் படித்து ‘நானும் இது போல ஒரு கதாசிரியராக முடியுமா’ என்று ஏங்கியது உண்டு. இன்று ஆகியிருக்கிறேன். இது வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், இரண்டு முழு நீளக் கதைப் பத்தகங்களையும், பொது அறிவுக்கான ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

ஆனால், இது வரை நான் எழுதி வெளியிட்டதெல்லாம் ஆங்கிலத்தில்தான். தமிழிலும் என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன். ‘கூட்டணி’ என்ற தலைப்பில் ஒரு முழு நீள கதையை எழுதி வைத்திருக்கிறேன். இதை எழுதி ஒரு பத்து ஆண்டுகளாகியிருக்கும். அரசியலைப் பற்றியது. ஒரு நல்ல நோக்கத்தோடு இரண்டு எதிரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து எழுதியிருக்கிறேன். இதில் பல புதுமையான  நிகழ்வுகள் நடப்பதாகவும் எழுதியிருந்தேன். வெளியிட ஏனோ தைரியம் வரவில்லை. பல சர்ச்சைகளை உண்டாக்கலாம் என்று ஒரு பயம்.  நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்த ஒரு சில பகுதிகள் இன்று உண்மையாகவே நடந்தேறியிருக்கின்றன போலத் தோன்றுகிறது. எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடாமல் இன்று ஒரு எழுத்தாளன் பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. ‘ஏதோ, கற்பனைக் கதை தானே’ என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் விட்டு விடுவதில்லை.

நேற்று அமெரிக்காவில் நடந்ததாக ஒரு செய்தி படித்தேன். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் களம் மிகவும் சூடாகி என்றும் இல்லாத அளவு தனிப்பட்ட முறையில் எதிர்த்து நிற்கும் வேட்பாளரைப் பற்றி கேவலமான பேச்சுக்கள், குற்றச்சாட்டுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதில் கலந்து கொண்ட ராணுவ உடையணிந்த ஒருவர் குடியரசுக் கட்சியின் கொடியைத் தூக்கிப் பிடித்துக் காட்டியிருக்கிறார். உடனேயே கூட்டத்தில் எல்லோரும் அவரைத் திட்டி கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். (நம்மூராக இருந்தால் அவருக்கு உதை விழுந்திருக்கும்) கூட்டத்தில் ஒரே அமளி. ஒபாமாவால் பேச முடியவில்லை.

கோபம் கொண்ட ஒபாமா தன் குரலை எழுப்பி கூட்டத்தை கடிந்துகொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீங்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள். முதலாவதாக, இங்கே குடியரசுக் கட்சியின் கொடியை பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு வயோதிகர். அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்துவிடவில்லை. அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவருடைய வயதுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.

இரண்டாவதாக, நாம் ஒரு சுதந்திர அமெரிக்காவில் வாழ்கிறோம். இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை வெளியிட சுதந்திரம் இருக்கிறது. அந்த முதியவர் தன் கருத்தை ஒரு கொடியைத் தூக்கிக் காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

மூன்றாவதாக அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் அமெரிக்கா நாட்டுக்காக போராடிய வீரர். அவரை நாம் மதிக்க வேண்டும்.

கடைசியாக,  நீங்கள் எல்லோரும் வெறுமனே கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு (ஜனநாயகக் கட்சிக்கு) ஓட்டுப் போடுங்கள்.”

இப்படி ஒபாமா பேசி முடித்த போது பலத்த கரகோஷம். ஒபாமா ஒரு நல்ல தலைவர். அவர் பேசியது போல இங்கே எத்தனை அரசியல்வாதிகளால் பேச முடியும்? அது மட்டுமல்லாமல் சமயோஜிதமாக இக்கட்டான ஒரு சூழ்நிலையை தன் கட்சிக்கு சாதகமாக தன் சகிப்புத் தன்மையை வெளிக்காட்டி மாற்றிக்கொண்டார்.

அதே சமயம், ‘உன்னுடைய சுதந்திரத்தின் எல்லை என் மூக்கு  நுனி வரைதான்’ என்றும் நம்புவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே எவ்வளவு தூரம் நமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம் என்பது எனக்கு புரியாததால் என் கதையை பத்திரமாக சிறையில் அடைத்துவிட்டேன். இன்று நாட்டில், முக்கியமாக, தமிழ் நாட்டில் நடக்கும் பல அவலங்களைப் பார்த்து மனதில் வருத்தப்பட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. வெறும் பார்வையாளனாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு கதைப் புத்தகம். “நான்கு பாதைகள்” என்ற தலைப்பில். இதுவும் எழுதி ஒரு பத்து ஆண்டுகள் இருக்கும். தமிழ் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் அதிகமாக கிடைக்காத நாட்களில் ஒரு நண்பர் கொடுத்த ஏதோ  ஒரு எழுத்தைப் பயன்படுத்தி எழுதி முடித்திருந்தேன். ஆனால், என் கம்ப்யூட்டரை மாற்றிய பின்பு ஏனோ அந்த எழுத்தை பயன்படுத்த முடியவில்லை. இரண்டு, மூன்று கம்ப்யூட்டர்கள் மாற்றியதில் அந்த கதையின் ஃபைல் திறக்க முடியாமற் போயிற்று. கஷ்டப்பட்டு பாதி வரை எழுதி முடித்தது வீணாகப் போய்விட்டது. இன்றும் எனக்கு தமிழ் தட்டெழுத்து தெரியாததால், ‘அழகி’ என்ற ஒரு எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியே எழுதி வருகிறேன்.

இப்பொழுது நான் எழுதத் தொடங்கிய ‘துப்பறியும் சங்கர்’ என்ற சிறு கதைகளின் தொகுப்பு ஒரு பள்ளி மாணவனைப் பற்றியது. சங்கர் ஒரு காவல் அதிகாரியின் மகன். பள்ளியில் படிக்கும்  நாட்களிலேயே துப்புத் துலக்குவது அவனது பொழுதுபோக்கு. இதை மையமாகக் கொண்டு என்னுடைய முதல் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் ஒரு துப்பறியும் கதை எழுதியிருந்தேன். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைப் போன்று தமிழிலும் தொடரலாமே என்ற நினைப்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். எழுதி முடிக்க நேரமாகலாம். அவ்வப்பொழுது எனது இணையதளத்தில் வெளியிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.  நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தால்தான் என்னுடைய எழுத்துக்களை அவ்வப்பொழுது சரி  செய்துகொள்ளவும் முடியும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம்.

No comments:

Post a Comment