Total Pageviews

Saturday, December 03, 2016

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

04.12.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் என்னை பாதித்த இரண்டு விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே எழுதிவிட்டேன். அதில் முதலாவது திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலத்தைப் பற்றியது. இரண்டாவது உயர்ந்த மதிப்புள்ள ரூபாய் தாள்களை செல்லாததாக்கி விட்டதைப் பற்றியும், கையிலேயே பணமாக வைத்திருந்தால் அதனுடைய நன்மைகளைப் பற்றியுமாகும்.

வழக்கமாக நாங்கள் சென்று வரும் ஆயுர்வேத மருத்துவரிடம் ஒரு நாள் சென்றிருந்தோம். சமீபத்தில் அவர் தன்னுடைய ஒரு சிறிய இடத்தில் பல மூலிகைச் செடிகளையும், பலவிதமான பூச்செடிகளையும் பயிரிடத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். இன்றைக்கு மூலிகைச் செடிகள் கிடைப்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கிறது. அதனால், அலோப்பதி மருந்துகளை விட ஆயுர்வேத மருந்துகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது. ஏழைகளுக்கு ஆயுர்வேதிக் மருந்து கட்டுப்படியாகாது என்ற நிலை. அவருடைய அந்த நல்ல முயற்சியைப் பாராட்டினோம். நாங்களும் தென்காசிக்கு வந்த புதிதில் இது போன்று ஒரு தோட்டம் அமைக்கவேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தோம். ஆனால், அன்றே நிலத்துக்கு அதிக விலை கேட்பது போலத் தோன்றியதால் நாங்கள் வாங்கவில்லை.  ஆனால், பத்து ஆண்டுகளில் தென்காசி சுற்றுவட்டாரத்தில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. அன்றே வாங்கியிருக்கலாம். இன்று பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலொழிய  நிலம் வாங்க முடியாது என்ற நிலை. அதனாலேயே ஒரு பள்ளி துவக்குகின்ற எங்கள் திட்டமும் கைவிடப்பட்டது.

கடந்த வாரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிராமணர் ஒருவரின் சதாபிஷேகத்துக்குச் சென்றிருந்தோம். தெருவை அடைத்து பந்தல் போட்டு, மிகவும் அழகாகப் பந்தலையும் அலங்காரம் செய்து, ஊர் முழுவதையும் அழைத்து அவரது பிள்ளைகளும் பெண்களும் சதாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அந்தப் பெரியவர் அந்த ஊர் கோவிலிலே வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் அவருக்கு நன்கு பரிச்சயம். சதாபிஷேகம் முடிந்து சாப்பாட்டுக்கு நீ முந்தி நான் முந்தி என்று கூட்டம். சாப்பாட்டு பந்தியில் பிராமணர், பிராமணர் அல்லாதவர் எல்லோரும் அருகருகேயே அமர்ந்து சாப்பிட்டனர். யாருக்கும் அது ஒரு குறைபாடாகத் தெரியவில்லை. உண்மையான சமத்துவபுரத்தை அங்கே நான் கண்டேன். அடிப்படையில் எல்லோரும் எந்த ஜாதி, மத, இன பேதமில்லாமல்தான் ஒருவருக்கொருவர் பழகி வருகிறார்கள் – அரசியல்வாதிகள் தலையிடாதவரை என்று தோன்றியது.

இங்கே இலஞ்சி – குற்றாலம் ரோட்டில் ‘ஓம் பிரணவ ஆச்ரமம்’ என்ற பெயரில் ஒரு குழந்தைகள் இல்லமும் முதியோர்கள் இல்லமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை நடத்தி வரும் திரு விஸ்வனாதன் – ட்ரௌபெட் தம்பதிகள் (ஆம், அந்தப் பெண்மணி ஆஸ்த்ரியா நாட்டைச் சேர்ந்தவர்) மிகச் சிரத்தையுடன் நடத்தி வருகிறார்கள். இருவரும் சத்ய சாயிபாபாவின் பக்தர்கள். எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாட்கள், எங்கள் பெற்றோரின் திதி நாட்களில் அந்த ஆஸ்ரமத்தில் தங்கியிருப்போருக்கு அன்னதானம் வழங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஊரில் இருந்தால் அந்த தினத்தில் நாங்களும் அங்கேயே சென்று சாப்பிடுவோம். இங்கும் அப்படித்தான். எந்த ஜாதி, மத, இன பேதமில்லாமல் எல்லோரையும் நன்கு கவனித்து வருகிறார்கள். அந்த தம்பதிகளின் தன்னலமற்ற சேவை பாராட்டுக்குரியது.

இந்த வாரம் வங்கியில் பணம் எடுக்கப் போனபோது புதிய ஐநூறு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பெற்றன. புதிய நோட்டுக்கள் கண்ணுக்கு அழகாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்வதால் எண்ணுவதற்கு நேரமாகிறது. பொதுவாக பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளில் பெரும்பாலும் அதிக கூட்டமோ, வரிசையோ காணவில்லை.

துணி எடுக்க ஒரு கடைக்குப் போயிருந்தோம். ஏனோ என்னுடைய ஒரு டெபிட் கார்டை அந்த மெஷின் ஏற்றுக்கொள்ளவில்லை. நெட்வொர்க் பிரச்சினை என்றார் அந்தக் கடைக்காரர். ‘என்ன சார், பணமே கிடைக்காத இந்த நாட்களில் என்னென்னவோ காரணம் கூறி கார்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களே என்று அவரிடம் கோபப்பட்டுக்கொண்டேன். ஆனால், அவர் கூறிய பதில் என்னை வியக்க வைத்தது. உயர்ந்த மதிப்புள்ள ரூபாய் தாள்களை செல்லுபடியாகாமல் செய்ததை வரவேற்றுப் பேசிய அவர் மெஷின் மூலமாக பணம் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் பல நன்மைகளைப் பற்றி எனக்கு லெக்சர் கொடுத்தார். அதிர்ஷ்டவசமாக என்னுடைய இன்னொரு வங்கியின் டெபிட் கார்டை அந்த மிஷின் ஏற்றுக்கொண்டது. ஒரே வங்கியை முழுவதுமாக நம்பியிருக்கக் கூடாது என்ற நான் ஏற்கெனவே எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மோடி அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்தை ஏய்ப்பவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறை இறுக்கிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கேஸ் சிலிண்டருக்கு, ரேஷன் கார்டுக்கு, வங்கிக் கணக்குக்கு, பொருட்கள் வாங்குவதற்கென்று ஒவ்வொன்றாக ஆதார் கார்டை கட்டாயப்படுத்துகிறது அரசாங்கம். எனக்கு எந்த மானியமோ அல்லது இலவசப் பொருட்களோ கொடுக்க வேண்டாம் என்று எப்பொழுதோ எழுதிக் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் கேஸ் இணைப்புக்கும் என்னுடைய வெள்ளை ஹானர் ரேஷன் கார்டுக்கும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். கேஸ் இணைப்புக்கு இந்த ஃபார்மாலிடியை இந்த வாரம் முடித்தாகிவிட்டது. 

டில்லியில் மாணவர்களின் ஒரு பெரிய கூட்டத்தில் என்.டி. டி.வி புகழ் ஆர்னாப் கோஸ்வாமியின்  கலந்துரையாடலை யூடியூப்பில் பார்த்தேன். இந்தியாவில் என்னென்ன ஊழல்களை மீடியா துணிவுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார். மீடியாவில் வேலை பார்ப்பதற்கு நிறைய துணிவு வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னார். மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். கூடிய சீக்கிரத்தில் மோடியுடன் ஐக்கியமாகி விடுவார் என்று மீடியாக்கள் எழுதுகின்றன.

தென்காசிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாலி பால் விளையாட்டில் பிராந்திய அளவில் முதலிடம் பெற்றதாகக் கேள்விப்பட்டேன். அதுவும் பல மெட்ரிக்குலேஷன் பள்ளிகளையும் தோற்கடித்து. அதுவும் பள்ளி சீருடை அணிந்தே விளையாடியிருக்கிறார்கள். அவர்களுக்கென்று விளையாடுவதற்கு வசதியான ட்ராக் பேண்ட், டீ ஷர்ட், ஷூ எதுவுமில்லாமல். இதை தற்செயலாக எங்கள் தெருவில் வசிக்கும் அந்தப் பள்ளியின் பி.டி மாஸ்டர் சொல்லக் கேட்டேன். அடுத்த நாளே அந்த விளயாட்டு வீரர்களுக்கு நல்ல ட்ராக் பேண்ட், டீ ஷர்ட் வாங்கிக் கொடுப்பதாக அறிவித்தேன். இந்த ஆண்டுக்கான போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டுக்கு என்னுடை அறிவிப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக அந்தப் பள்ளி தீர்மானித்தது. அந்தப் பள்ளியில் காலை அசெம்ப்ளி நேரத்தில் என்னை வரவழைத்து ஒரு சில நிமிடங்கள் பேசச் சொன்னார்கள். எப்பொழுதும் போல மாணவர்களிடையே பேசுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், புத்தகங்கள் படிப்பதை ஒரு பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்வதின் அவசியத்தைப் பற்றியும், ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சியின்  அவசியத்தைப் பற்றியும் சுருக்கமாக பேசி முடித்தேன். அடுத்த ஆண்டும் இந்தப் பள்ளி மாணவர்கள் வாலி பால் போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்புகிறேன். எனக்கு பொருளாதார வளத்தையும் கொடுத்து, நல்ல தர்ம சிந்தனையையும் கொடுத்த ஸ்ரீஅம்மா பகவானுக்கு நன்றி.


                                                                        மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment