Total Pageviews

Friday, May 29, 2015

Things I liked about U.S.A/அமெரிக்காவில் எனக்குப் பிடித்த சில விஷயங்களைப் பற்றி:

முதலில் இன்று என்னை ஈர்த்த ஒரு செய்தியைப் பற்றி:

90,000 Indian students apply for US visa, 4,000 make the cut


அமெரிக்காவில் சென்று படிப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பித்த 90, 000 இந்திய மாணவர்களில் 4000 மாணவர்களுக்கு மட்டுமே விசா கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே, தற்பொழுது 103,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு, அமெரிக்க பொருளாதாரத்துக்கு இந்திய மாணவர்கள் மூலம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (19,800 கோடி இந்திய ரூபாய்) கிடைத்திருக்கிறது. தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி இரண்டுக்கும் இந்திய மாணவர்களிடையே பலத்த வரவேற்பு. அமெரிக்க கல்லூரிகளில் படிப்பதற்கு படிப்புக் கட்டணமாகவே ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும். தங்குவது, சாப்பாடு, மேற்படி செலவு தனி. விசா கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு போல. நூறு விதமான எதிர்பார்ப்புகள். பெற்றோர்கள் தங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவையும் விசாவுக்காக கணக்குப் பண்ணி காட்டியும், பல வங்கிகளுக்கு படிப்புக் கடனுக்காக ஏறி இறங்கியும் பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றம்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக் கழகங்கள் பல மாணவர்களுக்குப் படிப்பதற்கு நிதி உதவி செய்து வந்தனர். இப்பொழுது அதுவும் பெரும்பாலும் கிடையாது. தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் செலவு செய்ய பல மாணவர்கள் கேண்டீன், நூலகம், பரிசோதனைக் கூடங்கள் என்று பல்கலைக் கழங்கங்களைச் சேர்ந்த இடங்களில் இரவும் பகலுமாக வேலை செய்து கொஞ்சம் டாலர்கள் சம்பாதித்து ஓட்டிவிடுகிறார்கள். அதுவும் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை.

எப்படியோ கஷ்டப்பட்டு படித்து முடித்து விட்டால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை. ஆனால், இப்பொழுதெல்லாம் முன்பு போல அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்துவிடுவதில்லை. வேலை கிடைத்து விட்டால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் வாங்கிய கடனை அடைத்துவிடலாம். படிப்புக்காக செய்த செலவையும் மீட்டு விடலாம்.

இவ்வளவு கஷ்டங்களிருந்தும் பல மாணவர்களும் பெற்றோர்களும் அமெரிக்கா செல்லும் கனவை விடுவதில்லை.  பெரிய நம்பிக்கையோடு பல இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு வந்து படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். காத்திருக்கிறார்கள்.

காரணம், இங்கே அவர்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கைத் தரம். பெரிய பெரிய கனவுகளை நிறைவேற்றிக்கொடுக்கும் பூமியாக நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா இருப்பதினாலும்தான். திறமையிருந்தால் கண்டிப்பாக முன்னுக்கு வர முடியும் இங்கே. தகிடு தத்தங்கள் குறைவு. தினப்படி வாழ்க்கையில் அல்லல்களில்லை. வெளி நாடுகளிலிருந்து வரும் (எதிரி நாடுகளையும் சேர்த்து) மக்களின் திறமைகளை நன்கு பயன்படுத்தியே முன்னுக்கு வந்த நாடு அமெரிக்கா. ஒரு பெட்டிக்கு வெளியே சிந்தனையைச் செலுத்தக்கூடிய சுதந்திரம்.

நிற்க….

அமெரிக்காவில் எனக்குப் பிடித்தது என்பதைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுது இன்றைய செய்தித் தாள்களில் வந்த இந்த செய்தி என்னைத் தாக்கியது. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியதால் எழுதியிருக்கிறேன்.

அமெரிக்காவுக்கு அடிக்கடி வந்து போகும் பொழுதெல்லாம்  நமது இந்திய மண்ணை பிரிந்து வந்த சோகம் அடி மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும். தினப்படி பல சங்கடங்கள், அசௌகரியங்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

முதலாவது, இங்குள்ள பொது நூலகம். நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கும் இருக்கும் எனக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. நிறைய ஆங்கிலத் திரைப் படங்களும் பார்க்கலாம்.

இரண்டாவது, எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும் இங்கேயுள்ள இயற்கையான சுற்றுலா மையங்கள். ஊர் சுற்ற விரும்பும் எனக்கு இந்த மையங்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. சிகாகோ ஃபாக்ஸ் நதிக் கரையில் எடுத்த சில படங்களும் இங்கே:




மூன்றாவது, அதிக ஆள் அரவமில்லாத நடை பாதைகள், அடர்ந்த மரங்களூடே செல்லும் வழிப்பாதைகள். (Woods Trail) ஏரிகள். பூங்காக்கள். இங்கு வந்த பிறகு 50 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ஒட்டத் தொடங்கியிருக்கிறேன்.  நடக்கப் போவதைத் தவிர தினமும் சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவது வழக்கம். இன்றும் அப்படி ஒரு TRAIL வழியாகப் போனபோது எடுத்த சில புகைப்படங்கள் இதோ:






மனதுக்கும் அமைதியாக இருந்தது. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியது.

என்னுடைய பழைய பயணக்கட்டுரையைப் படிக்க:

http://neel48.blogspot.com/2014/07/our-trip-to-denver-colarado.html

Friday, May 22, 2015

எனது இசைப் பயணம்: கல்லூரி வாழ்க்கையிலிருந்து இன்னொரு பக்கம்

1968-ல் திருச்சி, செயிண்ட் ஜோஸஃப் கல்லூரியில் சேர்ந்ததைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். தரமான கல்வி, ஆரோக்கியமான மாணவர் விடுதி, ஆரோக்கியமான விடுதி உணவு, மிக அருகிலேயே உச்சிப் பிள்ளையார் மலைக்கோவில் எல்லாமே எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இவையெல்லாவற்றையும் விட வனிலா ஐஸ்க்ரீம் தலையில் ஒரு அழகான சிவப்பு நிற செர்ரி பழத்தை வைத்தது போல எனக்குக் கிடைத்த பெரிய பரிசு என்னவென்றால் ‘நியூ ஹாஸ்டலின்’ இசைக் குழுவோடு தொடர்பு.

நியூ ஹாஸ்டலில்’ நான்கு கட்டிடப் பகுதிகளில் எனக்குக் கிடைத்தது ‘டீ ப்ளாக் – மூன்றாம் மாடி’. விடுதியில் சேர்ந்த சில நாட்களிலேயே மாலை வேளைகளில் இனிமையான திரைப்படப் பாடல்களை ‘புல் புல் தாரா’வில் இசைக்கும் ஓசை காற்றில் மிதந்து வந்து என்னை ஈர்த்தது. பள்ளி நாட்களிலேயே திருநெல்வேலியில் எங்கே இன்னிசைக் கச்சேரி நடந்தாலும் அங்கே நான் ‘ஆஜராகி’யிருப்பேன்.  பல வாத்தியக் கருவிகளை கேட்கும் பொழுதெல்லாம் எனது நரம்புகள் துடிக்கும். எனக்கும் எதேனும் ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீவிர ஆசை இருந்தது. ஆனால், வீட்டில் வசதி போதாது. எனவே நிராசையுடன்  இசைக் கருவிகளை மற்றவர்கள் வாசிக்கும் பொழுது வாயில் ஈ புகுந்தது தெரியாமல் ரசித்துக்கொண்டிருப்பேன்.

இன்னிசை வந்த மற்ற ‘ப்ளாக்’ திசை நோக்கி ஓடினேன். அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த மாணவர் ‘புல் புல் தாரா’ வாசித்துக்கொண்டிருந்தார். அவர் அறை வாசலில் நின்றே அவரது வாசிப்பை ரசித்துக்கொண்டிருந்தேன். அவர் அறைக்குள் செல்லத் தயக்கம். வெகு நேரம் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததைப் பார்த்து என்னை உள்ளே அழைத்தார். ஜெயக்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘மிக அருமையாக ஒரு தேர்ந்த கலைஞர் போல வாசிக்கிறீர்கள்’ என்று அவரைப் பாராட்டினேன். ‘நியூ ஹாஸ்டலின்’ இசைக் குழுவின் ‘கேப்டன்’ என்றும் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். பி.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தார்.  இசையின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தைப் பற்றியும் என்னால் எந்தக் கருவியையும் கற்றுக்கொள்ள இயலாதது பற்றிய எனது ஆதங்கத்தையும் சொன்னேன். ‘அதற்கென்ன, என்னுடைய புல் புல் தாராவை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றார். இசைத்துறையில் எனக்கு ஒரு  நல்ல நண்பர் கிடைத்துவிட்டார் என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அதன் பிறகு அடிக்கடி அவரது அறைக்குச் செல்வேன். உரிமையுடன் அவரது புல் புல் தாராவை எடுத்து வாசிக்கப் பழகினேன். நியூ ஹாஸ்டல் இசைக்குழுவின் ஒத்திகைகளுக்கு என்னையும் அழைத்தார். என்னைப் போல் இன்னும் ஒன்றிரண்டு மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்.

எனக்கு ஏற்கெனவே மேஜை, கதவு, மரப்பலகை எல்லாவற்றிலும் கையால் கொட்டு போடும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே இருந்தது. ஒத்திகையின் போது ‘பாங்கோஸ்’ என்ற தோல் கருவியைக் கண்டேன். எடுத்து வாசிக்க வேண்டும் என்று ஆசை. ‘சும்மா, எடுத்து வாசிங்க’ என்று உற்சாகப்படுத்தினார் ஜெயக்குமார். அவ்வளவுதான்.  எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வெகு விரைவில் நன்றாக பாங்கோஸ் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அதே போல், தபேலா வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். எனக்கே ஆச்சரியம், இவ்வளவு விரைவில் கற்றுக்கொள்ள முடியுமா என்று.

நியூ ஹாஸ்டலின் இசைக் குழுவுக்கு அப்பொழுது முதல் ஒரு புதிய இசைக் கலைஞர் கிடைத்து விட்டார். அப்பொழுது முதல் நான் தான் தபேலா, பாங்கோஸ் மாஸ்டர்.

புல் புல் தாராவில் பல நுணுக்கங்களையும் ஜெயக்குமார் எனக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.  ‘ஓரு புல் புல் தாரா வாங்கிடுங்க, நீலகண்டன்,’ என்று ஜெயக்குமார் வலியுறுத்த ஆரம்பித்தார். ‘அடிக்கடி அவர் அறைக்குச் சென்று புல் புல் தாரா வாசிக்கப் பழகுவது அவருக்கு இடைஞ்சலாக இருக்கிறதோ’ என்று மனதில் நெருடல். ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் பார்த்து செலவு செய்த எனக்கு ‘முப்பது ரூபாய் செலவு செய்ய வேண்டுமே’ என்று கவலை.

இருந்தும், ஒரு தேர்வுக்குப் பின் கிடைத்த விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது மதுரையில் இறங்கிக்கொண்டேன். பாப்ளி பிரதர்ஸ் பிரபலமான நிறுவனம். தரமான இசைக் கருவிகளை விற்று வந்தனர். இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.  அங்கே முப்பது ரூபாய்க்கு நல்ல ஒரு புல் புல் தாரா வாங்கிகொண்டேன். ஒருவார விடுமுறையில் எந்நேரத்திலும் புல் புல் தாராவுடன் உட்கார்ந்திருந்தேன். கைகளின் வேகமும் துல்யமும் பழகப் பழகக் கூடியது. எனக்குத் தாங்க முடியாத பெருமை.

விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பியவுடன் நேரே ஜெயக்குமார் அறைக்கு சென்று அவரிடம்  நான் பழகியதை வாசித்துக் காட்டினேன். பொதுவாக உற்சாகப்படுத்திப் பேசும் ஜெயக்குமார் அன்று என்னவோ நான் வாசித்துக் காட்டியதை ஒரு பொருட்டாகக் கருதியதாகத் தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பேசி விட்டார்.  

எனக்கு ‘புஸ்’ என்று ஆகிவிட்டது. என் ‘ஈகோ’ பலமாக அடி வாங்கியது. எனக்கு வீறாப்பு. இன்னும் தீவிரமாக பயிற்சி செய்யத் தொடங்கினேன். என்னுடன் படித்த மற்ற விடுதி நண்பர்கள்  நான் புல் புல் தாராவுடன் எப்பொழுதும் காணப்படுவது பற்றி பல விதமாக கிண்டல் பண்ணத்தொடங்கினார்கள். ‘புல் புல் தாராவை’ கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற ஆசை என்னுள் இன்னும் தீவிரமாகியது.

கொஞ்சம் கொஞ்சமாக ஜெயக்குமாருக்கும் எனக்கும் விரிசல்கள் உண்டாகத் தொடங்கின. எல்லாம் ‘ஈகோ’ சமாச்சாரம்தான். ‘நான் நன்றாக வாசிக்கத் தொடங்கி விட்டேன்’ என்று அவர் பொறாமைப் படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம், இருந்தும் அவர் அளவுக்கு என்னால் வாசிக்க முடியவில்லையே என்றும் எனக்கு ஆதங்கம்.

இருந்தும் இசைக்கழுவில் ஒன்றாகவே செயல்பட்டோம். பல ஒத்திகைகளுக்குப் பிறகு ‘கல்லூரி நாள்’ விழாவின் போது, எங்கள் நியூ ஹாஸ்டலின் இசை நிகழ்ச்சிதான் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. அப்பொழுதுதான் வெளியிடப்பட்டிருந்த ‘சிவந்த மண்’ என்ற படத்திலிருந்து ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ என்ற பாடலை ரேடியோ ஆம்ப்ளிஃபையருடன் இணைக்கப்பட்ட புல் புல் தாராவில் அசாத்தியமாக ஜெயக்குமார் வாசித்தார். பாங்கோசில் நான் இருந்தேன். இன்னொரு மாணவர் (பெயர் மறந்து விட்டது) டிரம்ஸ் வாசித்தார். அந்த ஒரு பாட்டிலேயே எல்லா பாராட்டுக்களைப் பெற்று விட்டோம்.
ஜெயக்குமாருக்கும் எனக்கும் தொடங்கிய விரிசல் இன்னும் அதிகமாகியது. ஒரு முறை எங்களுக்குள் ஏற்பட்ட விவாதத்தில், நான் அவரிடம், “அடுத்த ஆண்டு நான்தான் நியூ ஹாஸ்டலின் இசைக் குழுவுக்குத் தலைமை வகிப்பேன். அப்பொழுது எனக்குக் கீழே குழுவின் ஒரு உறுப்பினராக நீ செயல்படுவாய்,” என்று சவால் விட்டேன்.

இன்னும் வெறித்தனமாக புல் புல் தாராவில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் புல் புல் தாராவுடனேயே என் நேரத்தை கழித்தேன்.

இடையில் ஒரு சமயத்தில் தெரிந்தவர்கள் யாரோ ஒருவர் கல்யாணத்தில் ‘ரிசப்சனில்’ சங்கீத நிகழ்ச்சி நடத்துமாறு எங்கள் இசைக் குழுவை அழைத்தார்கள். திருச்சி ‘அப்சரா’ வோ ஏதோ ஹோட்டல். ஒரு மணி நேரம் பல பாடல்களை வாசித்துக் காட்டினோம். நல்ல சாப்பாடு கிடைத்தது.

முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு படிப்புக்குள் நுழைந்தேன்.  ஒரே மாணவரையே மீண்டும் மீண்டும் இசைக் குழுத் தலைவராக நியமிப்பதில்லை என்று பொதுவாக ஹாஸ்டலில் விதியிருந்தது. நான் எதிர்பார்த்தபடியே, அந்த ஆண்டின் இசைக்குழுவின் கேப்டனாக என்னை வார்டன் நியமித்தார். எனக்கு மிகப் பெருமை.

ஜெயக்குமார் வருத்தப் பட்டிருப்பார் என்று தோன்றியது. இரண்டாம் ஆண்டில் எனக்கும் ஜெயக்குமாருக்கும் ‘ஏ ப்ளாக்கில்’ பக்கத்துப் பக்கத்து அறைகளில் இடம் எதேச்சையாக ஒதுக்கினர். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். எங்களிடையே இசையை மையப்படுத்தி நட்பும் இருந்தது. பொறாமயில் பனிப்போரும் இருந்தது.

இடையில் ஹார்மோனியம் வாசிக்கவும், கொஞ்சம் கொஞ்சம் டிரம்ஸ் வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். ஹாஸ்டலில் படித்த சீன நண்பர் ஒருவரிடம் கிடார் இருந்தது. விடுமுறையின் போது அவரிடம் கிடாரைக் கேட்டு வாங்கிக்கொண்டேன்.  பத்து நாள் விடுமுறையின் போது எங்கள் வீட்டில் கிடார் ஓசை எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தது. பயிற்சி செய்ய, செய்ய கிடாரையும் ஓரளவு வாசிக்க முடிந்தது.
ஆனால், எதையும் முறையாக நான் கற்றுக்கொள்ளாததால் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளாமல் போனேன்.

நியூ ஹாஸ்டல் இசைக் குழு தலைவருக்கு ஒரு சில விசேஷ சலுகைகள் இருந்தன. விடுதியில் தினமும் தேர்வு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாலை சுமார் நாலரை முதல் ஆறு மணி வரை விருப்ப நேரம். கட்டுப்பாடு கிடையாது. சில மாணவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். சிலர் அரட்டையடிப்பார்கள் ஹாஸ்டலின் கேளிக்கை பொழுதுபோக்கு அறையிலிருந்து திரையிசை ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருக்கும். இசைத்தட்டுக்களை வாங்கும் முன்னுரிமை விடுதியின் இசைக்குழுத் தலைவருக்கு உண்டு. திருச்சி பெரியகடை வீதியில் இசைத்தட்டுகள் விற்கும் ஒரு கடை உண்டு. அங்கு போய் இசைத்தட்டுக்கள் வாங்கிக்கொள்ளலாம். உதவி வார்டனிடம் முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும்.

இசைக்குழுவின் தலைவன் என்ற முறையில் எனக்கும் அந்த சலுகை இருந்தது. அந்த நாட்களில் பொதுவாக திரையிசையில் மெல்லிசை மன்னர்களான விஸ்வனாதன் – ராமமூர்த்தி இசை மட்டுமே எனக்குப் பிடிக்கும். இன்னொரு புகழ்பெற்ற கலைஞரான கே.வி.மகாதேவனின் இசை அவ்வளவாகப் பிடிக்காது. நான் எம்.எஸ்.சி படித்துக்கொண்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் சிவாஜி கணேசன் நடித்து விஸ்வனாதன் இசையில் வெளிவந்தன. அதனால் சிவாஜிப் படப் பாடல்களின் இசைத் தட்டுக்களையே அதிகமாக விரும்பி நான் வாங்கினேன். ஆனால், மற்ற மாணவர்கள் நடுவில் எம்.ஜி.ஆர் தான் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருடைய படங்களுக்கு அதே காலத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வந்த படங்களே அதிகம். அந்தப் படங்களின் இசைத் தட்டுக்களை நான் வாங்காமல் விட்டு விட்டேன்.

ஒரு மாலையில் நடராஜன் என்ற மாணவன் என்னிடம் பலமாக சண்டைக்கு வந்தான். அவன் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன். நான் இசைத் தட்டுக்கள் வாங்குவதில் பாரபட்சமாக  நடந்து கொள்வதாகவும் எம்.ஜி.ஆர் படப் பாடல்களை வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டினான். நானும் அவனிடம் காரசாரமாக பதில் கூறினேன். எங்களுக்குள்ளே வாக்குவாதம் தொடர்ந்ததன் எதிரொலி விடுதியின் உதவி வார்டன் வரை சென்றது. வேறு சில மாணவர்களும் நடராஜனைப் போலவே என்னைப் பற்றி உதவி வார்டனிடம் குறை கூறினர். வேறு வழியில்லாமல் ஒரு சில எம்.ஜி.ஆர் படப் பாடல் இசைத் தட்டுக்களையும் விருப்பமில்லாமல் வாங்கினேன். அன்று முதல் நானும் நடராஜனும் எலியும் பூனையையும் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம். அவர் என்னுடைய அறைக்கு அருகிலேயே தங்கியிருந்தது சண்டை போடுவதற்கும் வசதியாக இருந்தது.  

அந்த ஆண்டு ஹாஸ்டல் தினத்தன்று என் தலைமையில் இசை நிகழ்ச்சி. ஒரு மாதம் முன்னமேயே ஒத்திகையை தொடங்கி விட்டோம். ஹாஸ்டலின் எல்லைக்கருகே ‘கேன்டீன்’ கட்டிடத்தில் ஒத்திகை நடந்தது. அதற்கு விசேஷ அனுமதியுண்டு. ஒத்திகையின் போது தினமும் சூடான பால், பிஸ்கெட், கேக் கிடைக்கும்.  நிகழ்ச்சியின் தொடக்கமாக என் கற்பனையில் உதித்த ஒரு ‘டியூனை’ புல் புல் தாராவில் வாசித்தேன். எவ்வளவோ மறுத்தும் ஜெயக்குமார் ஹார்மோனியம் வாசித்தார். இரண்டும் ஒத்துப் போகவில்லை.  நிறைய ஒத்திகை பார்த்திருந்தும் சரியாக வரவில்லையே என்று எனக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தம். அப்பொழுது காட்டிக்கொள்ளவில்லை. பாலசுப்பிரமணியன் என்று மாணவன் பெயர் ஞாபகம். புதியதாக சேர்ந்திருந்தார். நன்றாகப் பாடக்கூடியவர். எங்களுடைய எஸ்.பி. பி என்று அழைப்போம். அவரும் அன்றைய நாட்களில் பிரபலமான எஸ்.பி.பியின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை நன்றாகப் பயிற்சி செய்திருந்தார். தபேலாவில் நான்.  பலமான அப்ளாஸ். நிகழ்ச்சி முடிந்தவுடன் உதவி வார்டனிடம் பணம் பெற்றுக்கொண்டு மெயின் கார்ட் கேட்டுக்கருகே ‘மாடர்ன் ஹோட்டலில்’ இசைக்குழுவுக்கு பார்ட்டி. எங்கள் இஷ்டத்துக்கு சாப்பிட்டோம்.

பிறகு தேர்வுகள் நெருங்கிவிட்டன. இசைக்குழுவை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிப்பதில் கவனம் செலுத்தினோம். அப்படியாக என் இசைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டமாக செயிண்ட் ஜோசஃப் கல்லூரியின் இரண்டு ஆண்டு வாழ்க்கை அமைந்தது மறக்க முடியாதது.

முக்கிய பின் குறிப்பு:
   1) என்னுடன் வலுவாக சண்டை போட்ட பொள்ளாச்சிக்காரரான மாணவன் நடராஜன்தான்  என்னுடைய படிப்பு முடிந்து தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில் எனக்கு நூறு ரூபாய் பணம் தானாகவே கொடுத்து உதவினார். நான் இன்னும் அவருக்கு அந்த நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர் தன்னுடைய விலாசத்தைக் கொடுக்கவில்லை. எங்கள் படிப்பும் முடிந்து பிரிந்து விட்டோம். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. மிக்க நன்றி.
       2) இளமைப் பருவத்தில் வீறாப்புகளுடன் ஈகோ காரணமாக பலருடன் சண்டை போட்டதை இன்றும் நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தேவையில்லாமல் ஈகோவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஈகோதான் எனக்கு என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தந்திருக்கிறது. அதே ஈகோதான் பல உறவுகளையும் அழித்திருக்கிறது. ஈகோவைத்தான் இன்னமும் விட முடியவில்லை. ஜெயக்குமார் நண்பர் இன்று எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் என்னை மன்னிக்கட்டும்.

      3) படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்த பிறகு புல் புல் தாரா என்னுடன் பல ஆண்டுகள் பயணம் செய்திருக்கிறது. ஆனால், கல்லூரி நாட்களில் கிடைத்த உற்சாகம் என்ன காரணத்தினாலோ பிறகு எந்த நேரத்திலும் கிடைக்கவில்லை. இசைப் பயிற்சியையும் தொடர முடியவில்லை. ஆனால், என்னால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை என் கல்லூரி வாழ்க்கை எனக்குக் காட்டியிருக்கிறது. வாழ்க்கைக்கு நன்றி.
**********************************************************************

   இது சம்பந்தமான என்னுடைய மற்ற கட்டுரைகளைப் படிக்க:       

  

        Remembering old MSV songs: 'Naan Kavingyanum illai'

         About my interests: Part I Music


Sunday, May 17, 2015

தெரிந்ததும் தெரியாததும்: ராக்கெட்

அறிமுகம்
நமக்குத் தெரிந்த பல பொதுவான விஷயங்களைப் பற்றி பல தெரியாத தகவல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே ‘இரும்பு’,’பருத்தி’,’அச்சு இயந்திரம்’ பற்றி எழுதியிருக்கிறேன். படிப்பவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எவ்வளவோ இருக்கிறது எழுத.

இன்றைய பகுதியில் நான் எடுத்துக் கொண்டது ‘ராக்கெட்’ பற்றி.

வான் ஹூவின் ராக்கெட்
வானத்தில் பறந்து விண்ணுக்குள் புகுந்து சந்திர மண்டலத்துக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கும் போக வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது.

சீனாவின் மிங் பரம்பரையினரின் ஆட்சியில் (கி.பி 1368 - 1644) வான் ஹூ என்ற அரசு அதிகாரிக்கு விண்மீன்களுக்குப் போக வேண்டும் என்று தீவிர ஆசை. கி.பி 9-ஆம் நூற்றாண்டிலேயே வெடிமருந்து சீனர்களால் கண்டு பிடிக்கப்பட்டிந்திருக்கிறது. விண்ணிலிருந்து உலகத்தை ஒரு பருந்துப் பார்வை காணவேண்டும் என்ற நோக்கத்தோடு திடமான ஒரு மூங்கில் நாற்காலியில் அவர் அமர்ந்து கொண்டார். வெடிமருந்து அடைக்கப்பட்ட 47 மூங்கில் குழாய்கள் இருக்கைக்கு அடியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் ‘ரெடி’யென்று கண்ணசைத்தவுடன் அவருடைய 47 உதவியாளர்கள் எல்லா குழாய்களுக்கும் நெருப்பு பற்ற வைத்தவுடன் பாதுகாப்பைத் தேடி ஓடினர். மிகப் பெரிய சத்தத்துடன் அந்தக் குழாய்கள் வெடித்து  பயங்கரமான புகை மண்டலத்தைத் தோற்றுவித்தது. சிறிது நேரத்துக்கு எதுவுமே புலப்படவில்லை. புகை மண்டலம் அடங்கியவுடன் வான் ஹூவைத் தேடினால் அவரைக் காணவில்லை. மேலே சென்று விட்டார். வானுக்குள் போவதற்கு மனிதனின் முயற்சிகளில் வான் ஹூவின் முயற்சிதான் பதியப்பட்ட சரித்திரத்தில் முதல் முயற்சி.

சீனர்கள் வெடிமருந்துகள் தாங்கிய அம்புகளையும், வெடிமருந்துகள் அடைக்கப்பட்டிருந்த மூங்கில் குழாய்களால் எய்தப்பட்ட அம்புகளையும் ஏவக் கற்றிருக்கிறார்கள். 1232-ல் மங்கோலியர்களுடன் ஏற்பட்ட போரில் அவற்றை பயன்படுத்தி எதிரிகளை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த ராக்கெட்டுகளை துல்லியமாக அனுப்ப இயலாததால், போர்க்களத்தில் எதிரிகளை மிரட்ட மட்டுமே இவை பயன்பட்டிருக்கின்றன. எதிரிகளை அழிக்க முடியவில்லை. சீனாவின் கடற்படை பல்முனை ராக்கெட்டுகளை பயன்படுத்தியிருக்கிறது. வெடி மருந்துகளைப் பற்றி மென்மேலும் தெரிந்துகொண்ட பின்பு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதிலும் பல முன்னேற்றங்களை சீனர்கள் கண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பொதுவாக சீனாவில் முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படாததால் ராக்கெட்டுகளைப் பற்றி முதன்முதலாக அறிந்திருந்தாலும் பிற்காலத்தில் சீனர்களால் ராக்கெடு துறையில் பெரிய முன்னேற்றத்தை காண முடியவில்லை.

ராக்கெட் தொழில்நுட்பம் சீனாவிலிருந்து மங்கோலியர்களுக்கும் பின்பு மங்கோலியர்கள் ரஷ்யாவையும் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் கைப்பற்றிய போது ஐரோப்பாவுக்கும் பரவியது. 1453-ல் துருக்கியின் கான்ஸ்டாண்டினோபிள் நகரைக் ஓட்டோமேன் அரசர்கள் கைப்பற்றியபோதும் இந்த ராக்கெட் தொழில்நுட்பம் ஐரோப்பாவுக்கு சென்றடைந்திருக்கிறது. அதன் பின்னரும் ராக்கெட்டுகள் பல போர்களில் ஒரு போர்க் கருவியாகவே பயன்பட்டு வந்திருக்கின்றன.

சர். ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்பு
அதே நேரம், ஐரோப்பாவில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர். ஐஸக் நியூட்டன்.

நியூட்டனின் கற்பனையில் தோன்றிய ஒரு ‘எண்ணப் பரிசோதனை’யில் (Thought Experiment) நமது பூமியின் வளிமண்டலத்தை (Atmosphere) விட சற்று உயரமான ஒரு மலையுச்சியிலிருந்து பக்கவாட்டை நோக்கி அமைந்திருக்கும் ஒரு பீரங்கியிலிருந்து ஒரு குண்டு வெளியேற்றப்பட்டால் என்ன  நடக்கும் என்று யோசித்தார். சுமாரான வேகத்தில் வெளிப்பட்டால் பூமியின் புவியீர்ப்பு விசையைத் தவிர வேறெந்த சக்தியும் இயங்காத நிலையில் அந்த குண்டு மலையுச்சியிலிருந்து கீழ் நோக்கிச் சென்று மலையடிவாரத்தில் விழும். குண்டு வெளிவரும் வேகத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த அது மலையடிவாரத்திலிருந்து சற்றுத் தள்ளித் தள்ளி விழத் தொடங்கும்.  நியூட்டனின் கணக்குப்படி ஒரு வினாடிக்கு 7.9 கி.மீ வேகத்தில் (அல்லது மணிக்கு 17500 மைல் வேகத்தில்) ஒரு குண்டு மலையுச்சியிலிருக்கும் அந்த  பீரங்கியிலிருந்து வெளிப்பட்டால், அந்த குண்டு தரையில் விழாமல் பூமிக்கு மேலேயே பறந்து கொண்டிருக்கும். ஏனென்றால், அந்த வேகத்தில் குண்டு கீழே விழும் வேகமும், பூமி (சூரியனைச் )சுற்றி வரும் சராசரி வேகமும் (Orbital Speed) ஒன்றாக இருக்கும். இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தினால் - அதாவது, வினாடிக்கு 11 கி.மீ அல்லது மணிக்கு 25000 மைல் வேகத்தில் - அந்த குண்டு பூமியில் புவியீர்ப்புவிசையைக் கடந்து வெளியேறிவிடும். அதாவது பூமிக்கு திரும்பவே திரும்பாது.

நியூட்டனின் ‘எண்ணப் பரிசோதனை’யின் விளைவாக அவர் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையின் விதிகளும் (Laws of Gravitation) அசைவியக்கத்தின் விதிகளும் தான் (Laws of Motion) சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் விண்வெளிப் பயணத்துக்காக ராக்கெட் செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டு

ஜூல்ஸ் வெர்னே மற்றும் ஹெச். ஜி. வெல்ஸ் அவர்களின் எழுத்துக்களால் உந்தப்பட்டு விண்வெளியை நோக்கிப் பயணிக்கும் எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல விஞ்ஞானிகளுக்குத் தோன்றியிருக்கிறது. அதில் முதன்மையானவர் ரஷ்யாவைச் சேர்ந்த கன்ஸ்டெண்டைன் சியோல்கோவ்ஸ்கி

போலந்த் நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் என்பவருக்கும்  மரியா என்ற ரஷ்ய பெண்மணிக்கும் பிறந்த கன்ஸ்டெண்டனுக்கு அவரது பத்தாவது வயதில் ஸ்கார்லெட் ஜுரம் வந்ததில் காது கேளாமல் போனது. அவரது 13-ஆவது வயதில் தாயார் காலமாகிப் போனார். இவரது காது கேளாமையைக் காரணம் காட்டி ஆரம்பப் பள்ளிகளில் இவரை சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் பெரும்பாலான இளமைக்காலத்தை வீட்டிலிருந்தே கழித்த இவருக்கு பல நல்ல நூல்களை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.  கணக்கு மற்றும் புவியியலில் அதிக ஆர்வம் காட்டத்தொடங்கினார். தனது 14-15 வயதிலேயே விண்வெளிப் பயணத்தைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். பின்னால், மாஸ்கோ பொதுநூலகத்தில் மூன்று ஆண்டுகளை கழித்த பொழுது நிகோலாய் ஃப்யோடோரோவ் என்ற அறிஞருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  நிகோலாயின் சிந்தனைகளில் வசப்பட்ட கன்ஸ்டண்டைன் மனித இனம் கவலையில்லாமல் இறப்பில்லாமல் வாழ வேண்டுமானால் விண்வெளியில் குடியேற்றங்கள் மூலமாகத்தான் அடைய முடியும் என்று நம்பத் தொடங்கினார்.

கன்ஸ்டண்டைனின் மூளையில் உதித்ததுதான் ராக்கெட்டை மேல் நோக்கித் செலுத்துவதற்கான சமன்பாடு (Rocket Equation). அதற்கு முன்பேயும் இந்த சமன்பாட்டை தனியாக இங்கிலாந்தில் வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தாலும் இந்த சமன்பாடு கன்ஸ்டெண்டைன் பெயராலேயே அவரை கௌரவிக்கும்படியாக அழைக்கப்பட்டு வருகிறது. 1895-ல் பாரீசில் கட்டப்பட்ட ஐஃபல் கோபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் போலவே விண்வெளிப் பயணத்துக்கு ஒரு படிக்கட்டு (Space Escalator) எப்படிக் கட்டுவது என்பதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். அவரது 19-ஆவது வயதில் தகப்பனாரின் கட்டாயத்தினால் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சியடைந்து ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

இவ்வளவுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவரது தனி வாழ்க்கையில் பல துன்பங்கள். 1902-ல் சிறிய வயதில் இவரது மகன் தற்கொலை செய்துகொண்டான். 1908-ல் ஒரு வெள்ளத்தில் இவரது முக்கியமான பல ஆராய்ச்சி எழுத்துக்கள் அழிந்து போயின. 1911-ல் புரட்சியில் ஈடுபட்டதற்காக இவரது மகள் கைது செய்யப்பட்டாள். இருந்தும், ஒரு சிறிய நகரத்தில் தனது காலத்தை கழித்தே அவரது சிந்தனையின் சக்தியினால் பல முக்கியமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்திருக்கிறார்.

கன்ஸ்டண்டைனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது ராக்கெட்டை முன்னோக்கி செலுத்துவதற்கு திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் வாயுவை பயன்படுத்துவது பற்றியும் அந்த வாயுக்களின் அதிக பட்ச வெளியேற்றும் சக்தி பற்றியதுமாகும். ரஷ்யாவுக்கு வெளியே இவரைப் பற்றி அதிகமாக பலர் அறிந்திருக்காவிட்டாலும் ரஷ்யாவுக்குள்ளே இவரது பெயர் பிரபலமாகியிருக்கிறது. பல விண்வெளிப் பயண ஆராய்ச்சிகளுக்கு இவரது சிந்தனைகள் பயன்பட்டிருக்கின்றன.

ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துக்களால் உந்தப்பட்ட இன்னொருவர் ராபர்ட் கோடார்ட் என்ற அமெரிக்கர். 200-க்கும் மேற்பட்ட காப்புரிமை பட்டயங்களைப் பதிவு செய்த அவரது முதலாவது கண்டுபிடிப்பு திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட், மற்றும் பல்முனை ராக்கெட்டுகளைப் பற்றியதானது. 1926-ல் மூன்று வினாடிகளில் 184 அடி உயரம் பறந்த ‘நெல்’ என்றழைக்கப்பட்ட இவரது ஒரு சிறிய ராக்கெட் இவருக்குப் பெயரைத் தேடித்  தந்தது. தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து  ராக்கெட் வடிவமைப்பில் பல மாறுதல்களைச் செய்து, பல மைல் உயரம் பறக்கக்கூடிய 36-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பியிருக்கிறார்.

கன்ஸ்டாண்டினைப் போலவே - ஆனால் அவரைப் பற்றி அறியாமலேயே - ஜூல்ஸ் வெர்னேயின் எழுத்துக்களால் 1920-களில் ஹெர்மன் ஒபெர்த் என்ற இன்னொரு விஞ்ஞானி, விண்வெளியில் பறப்பது பற்றி கனவு கண்டிருக்கிறார். ப்ரஷ்யா நாட்டு போர் மந்திரிக்கு முன்னே திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை விண்வெளியில் செலுத்திக் காட்டியிருக்கிறார்.

வெர்ன்ஹெர் வான் பிரௌண், ராக்கெட் சரித்திரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜெர்மன் விஞ்ஞானி. ஜெர்மனி நாட்டு விவசாயத்துறை அமைச்சரின் மகனான இவர் தனது 12-ஆவது வயதில்  நாஜி அரசால் ராக்கெட் மூலம் உந்தப்பட்ட அதி வேகமாகச் செல்லும் மோட்டர் கார்களைக் கண்டு வியந்து, அதைப் போலவே தானும் சாலையில் பல பொம்மைக் கார்களை ராக்கெட் மூலம் ஏவிவிட்டு வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்.

1934-ல் முனைவர் பட்டத்துக்கு இவர் தயாரித்த அறிக்கைகளை தேசியப் பாதுகாப்பு குறித்து 1960-வரை ரகசியமாகவே வைத்திருந்தனர்.  நாஜி அரசாங்க ராணுவத்துக்காக Vengeance Weapon 2 என்ற ஏவுகணையை தயாரித்து செலுத்திக்காட்டியிருக்கிறார். அதன் பிலிம் சுருளைப் பார்த்த ஹிட்லர் 31 வயதேயான இவரை ஒரு பேராசிரியராக்கி கௌரவித்தார்.  இவர் தயாரித்த ஏவுகணை ராக்கெட் V2 குறிக்கோளை துல்லியமாகத் தாக்காவிட்டாலும் எதிரிகளை பலமாக அச்சுறுத்தியது. இங்கிலாந்தையும் பெல்ஜியம் நாட்டின் ஆண்டெவெர்ப் நகரத்தையும் நாஜி படைகள் தாக்கும்பொழுது 9000-க்கும் மேற்பட்ட சாதாரண மக்களை இவரது V 2 ராக்கெட் கொன்றிருக்கிறது. 1945-ல்  நட்பு நாடுகளின் படைகள் ஜெர்மனியை சூழ்ந்துகொண்டபோது ரஷ்யர்களிடம் சரணடையப் பிடிக்காமல் அமெரிக்க துருப்புக்களிடம் வேண்டுமென்றே சரணடைந்தார். மிகவும் தேடப்பட்ட எதிரி விஞ்ஞானியாகக் கருதப்பட்டு, அமெரிக்கப் படைகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவராக இருந்த வான் பிரௌன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு மறுவாழ்வு கொடுக்கப்பட்டு டெக்சஸ் நகரத்தில் அமெரிக்காவுக்காக விஞ்ஞானியாக பணியாற்றினார்.

அமெரிக்காவின் முன்னேற்றத்தில் வான் பிரௌன் போன்ற பல வெளிநாட்டுக்காரர்களின் பங்கு மிக முக்கியமானது. எதிரியாக இருந்தாலும் கூட தங்கள் நாட்டின் நலனுக்காக பல வெளிநாட்டுக்காரர்களுக்கு குடியுரிமை அளித்து வளர்ந்த நாடு அமெரிக்கா.

விண்வெளிப் பயணத்தில் போட்டி
இரண்டாம் உலகப் போரில் ஒரே பக்கத்தில் சேர்ந்திருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்  நாடுகளின் கூட்டை முறித்து வென்றாலும் போர் முடிவடைந்த பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (ரஷ்யாவுக்கும்) கடுமையான பனிப்போர் துவங்கியது. இரண்டு நாடுகளுமே விண்ணில் ஏவக்கூடிய ‘பலிஸ்டிக் மிசைல்ஸ்’ (Ballistic Missiles) ஏவுகணைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. அணுசக்தி ஆயுதங்களைக் குவிக்கத் தொடங்கின. இந்த ஏவுகணைகள் மூலம் ஒருவருக்கொருவர் மற்ற நாட்டின் குறிப்பிட்ட நகரங்களைத் தாக்கக்கூடிய வலிமையைக் கொண்டிருந்தனர். இரு நாடுகளுமே செயற்கைக் கோள்களை விண்ணில் பறக்கவிடும் திட்டங்களை அறிவிக்கத் தயாராகினர்.

ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்தைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைத் தயாரிப்பதில் அமெரிக்காவை விட சோவியத் யூனியன் தீவிரமாக இருந்தது. செர்கேய் கோரோலோவ் என்பவர் அமெரிக்காவிடம் இருந்த ராக்கெட்டுகளை விட சக்தி வாய்ந்த V 7 என்ற ராக்கெட்டை தயாரித்தார். அக்டோபர் 4, 1957-ல் கடற்கரையில் விளையாடும் பந்து அளவும், ஒரு வளர்ந்த மனிதனின் எடையும் (84 கிலோ) கொண்ட ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது குறைந்த உயரத்தில் ஸ்புட்னிக் 1, 90 நிமிடமே பூமியை சுற்றி வந்தாலும் உலகமே ரஷ்யர்களின் விஞ்ஞான வளர்ச்சியைக் கண்டு பிரமித்து நின்றது.

அமெரிக்கர்களுக்கு பெருத்த அவமானம்.  உடனே செயலில் இறங்கினார்கள். அவர்களும் Vanguard  செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தினார்கள். ஆனால், விண்ணில் ஒரு சில வினாடிகளே பறந்த அந்த செயற்கைக் கோள் வெடித்துச் சிதறியது. வான் ப்ரௌண் தலைமையில் இன்னொரரு குழு அதி தீவிரமாக செயல்பட்டது. ஜனவரி 31, 1958-ல் ஐந்து கிலோ எடையேயுள்ள Explorer 1 செயற்கைக் கோளை வெற்றிகரமாக பூமியைச் சுற்றிவர அமெரிக்கா விண்ணில் பறக்கவிட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர், அமெரிக்காவின் ஒரு முக்கிய கல்வி நிறுவனமான M. I. T-யின் தலைவராக இருந்த ஜேம்ஸ் கிலியன் என்பவரை தனது விசேஷ காரியதரிசியாக விஞ்ஞானத் துறைக்கு நியமித்தார். அக்டோபர் 1, 1958-ல் NASA நாசா என்ற விண்வெளிக் கழகத்தை அமைதியான வழிகளுக்காக ஐசன் ஹோவர் நிறுவினார். 340 மில்லியன் டாலர் பட்ஜெட்டுடனும், 8200 அலுவலர்களுடனும்  ‘நாசா’ தன் வேலைகளை ஆரம்பித்தது. இருந்தும் காலப் போக்கில் நாசாவின் பட்ஜெட் பல மடங்கு குறைந்து விட்டது. சோவியத் யூனியனும் பல நாடுகளாக உடைந்து விட்டது.  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்த சில ஆண்டுகளுக்குள்ளேயே சந்திரனில் மனிதனை இறக்க வேண்டும் என்ற ஆசைகள் இரு நாடுகளுக்கும் பலவீனப்பட்டுப் போயின.

முடிவுரை
அமெரிக்க, ரஷ்ய அரசாங்கங்கள் விண்வெளியில் பறக்கும் எண்ணங்களை வெகுவாகத் துறந்து விட்டாலும் ஒரு புதிய அத்தியாயம் ‘விண்வெளி சுற்றுலா‘ என்ற பெயரில்  பல தனி மனிதர்களுடையே வேறூன்றத் தொடங்கியிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வியாபாரமாக மாறும் என்று நம்புகிறார்கள். 
அது ஒரு தனிக்கதை.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம்…….


இந்தக் கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இதே போன்ற என்னுடைய மற்ற கட்டுரைகளைப் படிக்க:





Wednesday, May 13, 2015

Friday, May 08, 2015

ஃப்லிம் ஷோ மற்றும் பிளாஞ்செட்– பள்ளி வாழ்க்கையிலிருந்து இன்னொரு பக்கம்

ஃப்லிம் ஷோ பற்றி

நான் எட்டாவதோ ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம் என்று நினைக்கிறேன்.  திருநெல்வேலி அம்மன் சன்னதித் தெரு. எங்கள் வீட்டுக்கு எதிர் புறமாக புதியதாக ஒரு குடும்பம் குடியேறியது. அந்தக் குடும்பத்தின் தலைவர் மறைந்த திரு. சுப்பிரமணியன் வேலூர் பக்கத்திலிருந்து திருநெல்வேலிக்ரு அருகிலிருக்கும் பேட்டை ஐ.டி.ஐக்கு மாற்றலாகி வந்திருந்தார். பெரிய குடும்பம். மூன்று பையன்கள், இரண்டு பெண்கள். பெண்களில் ஒருவள் எங்களுக்கு ஒன்றிரண்டு வயது பெரியவள், மற்றவள் ஐந்து வயதுக்கும் கீழே. பெரிய பையன் வெங்கடேசன் என்ற டேச்சு என் வகுப்பு, ஸ்ரீனிவாசன் இரண்டாவது ஒன்றிரண்டு வயது சிறியவன். மூன்றாவது ராம்குமார் என்று ஞாபகம்.

அவர்கள் வந்த நாட்களிலிருந்தே எங்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிவிட்டனர். முக்கியமாக டேச்சு என்னுடைய நெருங்கிய நண்பன். பல முறை சேர்ந்தே பாடங்களைப் படிப்போம். அவன் கணக்கில் கொஞ்சம் வீக். அவனுக்கு கணக்கில் உதவ அவன் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டார்கள். பல முறை அடிக்கடி நானும் அவனும் அவன் வீட்டு மாடியில் தரையில் சாக் பீசை பயன்படுத்தியே கணக்குகளைப் போட்டுக்கொண்டிருப்போம். இரண்டாவது பையன் ஸ்ரீனிவாசன் நன்றாகப் படிப்பான். பிற்காலத்தில் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிக்கனம் என்றால் அந்தக் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்க வேலையென்றாலும் வருமானம் என்னவோ மிகக் கம்மிதான். ஏழு பேர் மூன்று வேளை சாப்பிட வேண்டுமே. மாலை நேரங்களில் திருமதி. சுப்பிரமணியன் (பெயர் மறந்து விட்டது) எங்கள் தெருவிலிருந்த எல்லா குழந்தைகளுக்கும் நல்ல ஸ்லோகங்களை தினமும் சொல்லிக்கொடுப்பார்கள். வரலட்சுமி விரத பூஜை தவறாமல் அனுஷ்டிப்பார்கள்.

திரு. சுப்பிரமணியன் ஐ.டி.ஐயில் வேலை பார்த்ததால் பல டெக்னிகல் சமாச்சாரங்களைத் தெரிந்து வைத்திருந்தார். சிறு வயதில்  நாங்கள் எல்லோருமே சினிமா பித்து பிடித்து அலைந்திருக்கிறோம். நான் பல சினிமாப் படங்களை முதல் வாரத்திலேயே பார்த்து விடுவேன். ஆனால், அவர்கள் வீட்டில் பொதுவாக எந்தப் படத்துக்கும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். ஆனாலும் சினிமாவைப் பற்றிய பேச்சு மட்டும் தினமும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

“நாம் ஏன் ஃப்லிம் ஷோ போடக்கூடாது?” என்று ஒரு நாள் திரு.சுப்பிரமணியன் எங்களைக் கேட்டார்.

“வீட்டிலேயே திரைப்படமா? எப்படி முடியும்?”

முடியும் என்றார். திரு.சுப்பிரமணியன் அவர்கள்தான் தொழில் நுட்ப வல்லுனர் ஆயிற்றே. அட்டையில் ஒரு சிறிய பெட்டி தயார் செய்தார். கடையிலிருந்து கைப்பிடியோடு கூடிய பூதக்கண்ணாடி வாங்கி வந்தோம். அதன் கைப்பிடியை ரம்பம் கொண்டு அறுத்தெடுத்தார். அட்டையால் பூதக்கண்ணாடி நிற்கக்கூடிய ஒரு குழலையும் தயார் செய்தார். அட்டைப் பெட்டியில் அந்தக் குழலை செருகும் அளவுக்கு பெரிய துளை போட்டார். குழல் துளைக்குள் செருகப்பட்டது. நூறு வாட்ஸ் மின்சார பல்ப் அட்டைப்பெட்டிக்குள்ளே நிறுத்து வைக்கப்பட்டது. ப்ரொஜக்டர் பெட்டி தயார்.

டவுண் வாகையடி முக்கில் ஒரு கடையில் ஃப்லிம் ரோல்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஃப்லிம் துண்டாகவோ அல்லது சிறிய ரோலாகவோ கிடைக்கும். தியேட்டர்களில் ப்ரொஜக்டரில் படம் ஓட்டும் பொழுது அடிக்கடி ஃப்லிம் ரோல் துண்டு பட்டுவிடும். அப்பொழுது ஆப்பரேட்டர் அதை ஒட்டி, மீண்டும் ப்ரொஜக்டரில் செருகி ஓட்ட வைப்பார். அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் வெட்டிவிடவும் வேண்டியிருக்கும். அந்தத் துண்டுகளைத்தான் அந்தக் கடையில் விற்று வந்தார்.  எல்லாம் ஐந்து பைசா சமாச்சாரம்தான். ஆனால், அந்த ஐந்து பைசாவுக்கு ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்குத் தேவையான கீரை வாங்கிவிடுவார்கள். அதனால் ஐந்து பைசா என்பதும் பெரிய சமாச்சாரம்தான்.

ஃப்லிம் துண்டுகளை சேகரிப்பது அந்தக் காலத்தில் (1950களில்) பல சிறுவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. அதில் ஒரு நடிகரையோ, நடிகையையோ பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த காலம். சில சமயம் தியேட்டரில் ஓடும் படத்தில் இல்லாத காட்சியின் ஃப்லிம் கூடக் கிடைக்கும். அதைப் பற்றி பெரிய சர்ச்சையே நடக்கு,ம்.

அப்படியாக ஃப்லிம்களை சேகரித்து, அந்த ஃப்லிம் துண்டுகளை தாங்குவதற்கு வாக்காக இன்னொரு அட்டையில் அதற்கேற்றாற் போல பாக்கெட் தயார் செய்தோம். ஒவ்வொரு ஃப்லிம் துண்டாக ப்ரொஜக்டர் பெட்டியின் முன் பக்கத்தில் பூதக்கண்ணாடியைத் தாங்கும் குழலுக்குப் பின்னே நாங்கள் கொடுத்திருந்த இடைவெளி வழியாக செலுத்த வேண்டும். மின் விளக்கின் ஒளி பூதக்கண்ணாடியின் மூலமாக ஃப்லிம் துண்டின் பிம்பங்களை சுவரில் பெரியதாகத் தெரியவைக்கும். முதல் முயற்சி ஓரளவுதான் வெற்றி. கொஞ்சம் ஏமாற்றம்தான். அவ்வளவு தெளிவாக சுவரில் பிம்பங்கள் தெரியவில்லை.

பூதக்கண்ணாடிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். ஐந்து ஆறு பூதக்கண்ணாடிகளைக் கொண்டு முயன்ற பொழுது படங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஃப்லிம் துண்டுகள் குவியத் தொடங்கின. அட்டைப் பெட்டிக்கு பதிலாக மரத்தினாலான பெட்டியை திரு.சுப்பிரமணியன் ஐ.டி.ஐயில் மரப் பலகைகளை வெட்டி தயார் செய்து கொண்டு வந்தார். சனி, ஞாயிறன்று எங்களுக்கு வேறு வேலை கிடையாது. ‘ஃப்லிம் ஷோ’ தான் எங்களுக்கு மிகப் பெரிய பொழுது போக்கு.

பிளாஞ்செட் பற்றி

திரு.சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு பிளாஞ்செட் என்று அழைக்கப்பட்ட ‘இறந்தவர்களின் ஆவியுடன் பேசும்’ பலகையை பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஒரு பலகையில் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களையும் ஒவ்வொரு கட்டமாக எழுதி வைத்திருப்பார்கள். ஐந்தாறு வயதே ஆன அவர்களது கடைசிப் பெண் குழந்தையைத்தான் பயன் படுத்திக்கொள்வார்கள். அந்தப் பலகையின் முன்னே அந்தச் சிறுமி தன் ஆள் காட்டி விரலை ஒரு சிறிய வட்டத் தகடின் மீது வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வாள். திரு.சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்தில் இறந்து போன ஒருவரின் ஆவியை கண்ணை மூடி அழைப்பார்.  பின்பு கண்களைத் திறந்தபடியே கேள்விகளைக் கேட்பார். பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். சிறுமி கண்ணை மூடிய நிலையிலேயே இருப்பாள். தானாகவே மெதுவாக அந்த வட்டத் தகடு நகரத் தொடங்கும். ஒவ்வொரு எழுத்தாக நகரும். உடன் உடனேயே எழுதி வைத்துக்கொள்வார். ஒரு இடத்தில் விரல் நகருவது நின்று போகும். பதில் வந்து விட்டது என்று அர்த்தம். காகிதத்தில் எழுதி வைத்ததை சேர்த்துப் படித்துப் பார்த்தால் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கும். அந்த சிறுமிக்கு ஆங்கிலம் தெரியாது. கேள்விக்குப் பதிலும் தெரியாது. ஆனால், எப்படி சரியான பதில் வருகிறது என்பது புரியாது. இதைப் பல முறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லையென்றால் சில சமயம் விரல் நகராது. சில சமயம் விரல் கன்னா பின்னாவென்று அர்த்தமில்லாமல் சுற்றும். சில சமயம் ‘முட்டாள்தனமான கேள்வி கேட்கக்கூடாது’ என்று கூட பதில் வரும்.

அருகில் குடியிருந்த பலர் கூட இந்தப் பிளாஞ்செட்டை நம்பிக்கையோடு அணுகியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த சிறுமியைத்தான் பெரும்பாலும் உட்காரச்சொல்வார்கள். அந்த ஆவியுடன் அந்த சிறுமிக்குத் தான் சரியான தொடர்பு கிடைக்கிறது என்று சொல்வார்கள்.

எங்களுக்கு பதில்கள் தெரிந்த சில கேள்விகளுக்கும் பிளாஞ்செட் சரியான பதிலைக் கொடுக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கும் இது எப்படு சாத்தியம் என்று. எதிர்காலத்தைப் பற்றி, பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பதில் கொடுக்கும். தொடர்ந்து பல மாதங்கள் பிளாஞ்செட்டைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை அந்த சிறுமிக்கு மிகக் கொடுமையான் ஜுரம் வந்தது. மிகவும் அவஸ்தைப் பட்டுப் போனார்கள். அப்பொழுது அவர்கள் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அவர்கள் பிளாஞ்செட்டை பயன்படுத்துவதை முழுவதுமாக நிறுத்தி விட்டார்கள். விஞ்ஞான மயமான உலகத்தில் இப்படியும் நடக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்பதை இன்றும் என்னால் நம்ப முடியவில்லை.


அந்தக் குடும்பம் இருந்த வரை எங்களுக்கு போர் அடிப்பது என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தோம். மறைந்த திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நன்றி. இரண்டு மூன்று வருடங்களிலேயே மீண்டும் மாற்றலாகிச் சென்று விட்டனர். எங்களுக்கும் தொடர்பும் அற்றுப் போய்விட்டது. என்னுடைய நெருங்கிய நண்பன் வெங்கடேசன் என்கிற டேச்சுவைப் பற்றி அதன் பிறகு தகவல் எதுவுமில்லை. ஒரே ஒரு முறை மதுரையில் பின்னால் ஒரு நாளில் ஸ்ரீனிவாசனை கோவிலில் சந்தித்தாக ஞாபகம். அப்பொழுது அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டேச்சு ஏதோ ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதாக கூறினார். 

Friday, April 24, 2015

End 'sarpanch-pati' culture in panchayats: Modi

End ‘sarpanch-pati’ culture in panchayats: Modi

Things have come to such a pass in our country that a Prime Minister needs to openly point out what disease we suffer from. Look at some of the basic lessons Mr.Modi had talked about:       

    1.       “End ‘sarpanch-pati’ culture in panchayats – the practice of husbands of women sarpanches exercising undue influence.” We are all aware that in many panchayats, municipalities and even municipal corporations, – especially those constituencies reserved for women - where a woman is the president, chairman, or mayor, her politically active husband is the true power center and she is otherwise, simply a ‘dummy.’ This has become the culture in our place.
   
     2.       “There must be a mindset of ‘gaurav’ and ‘samman’ towards our villages.” We all know that in most panchayats, municipalities and municipal corporations the president, chairman or mayor is only an agent of the political party on whose support he or she came to power and the person takes every care to repay his or her debt to those who supported him or her for the position. In the process, he or she also enjoys the pecuniary benefits of the position. Very few have self-respect. Nor they command any respect from others except from the coteries who function as their agents.
   
     3.       Leadership role for the elected village representatives to alleviate poverty and promote education. Is there any true leadership in the grass-root level? Will the more powerful leaders allow the local leadership to grow? We are a centrally directed country.

    4.       The problem of school dropouts and the role panchayat can play in arresting it. I do not know how many times the panchayat presidents visit the schools under their jurisdiction. If they had been visiting, wouldn’t our school’s condition and functioning have become better?

    5.       “Think about what you can achieve in the next five years for your village. Do they really think for the village?

    6.        “Has Panchayats in our country ever thought that there should be no poor left in our country? If one village brings out five persons out of poverty in a year, what a big change will come in the country?” There is a management dictum. “If you want to eat an elephant, eat it bit by bit.” Small drops make an ocean. Why are the panchayat presidents not thinking about it?

   7.       “Special attention to be given to education of children and their vaccination.” The national campaign for washing hands well among school children was really a well thought out one, though symbolic. The need to educate the children on hygiene and cleanliness is very important.

    8.       Sarpanches should take a lead in organizing meetings of all working and retired government employees belonging to a particular village once in a while and ensuring community participation to bring about a turnaround in a village in all respects.” This is a very significant advice and observation. There are many educated and retired people and housewives who, I am sure, would be willing to volunteer their services to benefit the school children. How many government schools are willing to take their help and allocate time for them? The knowledge and skills of many retired people is many times wasted in watching television, movies, chit-chat, or simply baby-sitting (though this becomes important in some homes). Why not the panchayats or municipalities use their knowledge and skill for the benefit of the children and youth?

     9.       “The panchayats should motivate all government officials to spend at least one hour a week with the school children.” Will the government servants be interested or will the schools be willing to allow time, in the midst of various pressures for time.

    10.   “Many of these measures don’t need financial support from the government.” Very True. But, what is the reality? The only things the panchayats, municipalities and municipal corporations focus on are the ‘so-called development’, where budget and money are involved because that is where the grapevine really lies. More developmental projects, more money, more contractors and so on. Try even once, to obtain a permission to build a house, obtain electricity and water connection to your house without having to pay anything extra, over and above the government fixed charges. We all know the truth. We stay helpless. We have become notorious for electing the same corrupt people, election after election.

    11.   “We will not be able to develop our villages as long as we do not have a feeling of respect and pride towards themwe have to motivate people, provide leadership….This requires a firm resolve rather than any budgetary provision.” –We need to have self-respect and respect towards our village, our town, out state and our nation. What are we doing about this?

All the observations, advices from Mr.Modi are quite simple, but very profound. To translate them into actions, he needs the cooperation from everyone. No one is going to like him, if he decides to take the whip. We need to change our conditioning. It is really gratifying to note that Mr.Modi has made very pertinent points that should rather have been the norm than some exception.


Maybe, whatever he has observed, they are already happening in some villages. They must be exceptions than the rule. 

Saturday, April 18, 2015

Pre-release of my stories from my forthcoming book of short stories

Dear FB friends:

I have successfully written and self-published four of my books. Two of them are collections of short stories and the other two are novels. My short stories have the basic objective of reaching young readers from middle school upwards, towards helping them develop their personality for their success in life. I have embarked upon my third book of short stories and I would like to release some of my stories, to get readers’ views and opinions.

I know reading as a habit has not died completely and there are still avid readers everywhere. I look to them to help me refine my writing by offering their comments on my stories. This would also help my stories become purposeful towards the objective I have in my mind.

The themes I have currently chosen for my book are:
        1.       It is all about your attitude
        2.       It is all about your beliefs
        3.       It is all about the choices you make
        4.       It is all about your determination
        5.       It is all about your self-esteem
        6.       It is all about your strengths
        7.       It is all about your energy and enthusiasm
        8.       It is all about your vision
        9.       It is all about what you love to do
       10.   It is all about your awareness
       11.   It is all about your perceptions
       12.   It is all about your dreams

The target readers for the new set of stories are students of higher secondary schools and colleges, though every youngster can read them and be benefitted.


or
copy and paste the following link
http://www.tnneelakantan.com/interests/writing/my-short-stories-it-is-all-about-your-beliefs/